Thursday, December 19, 2013

கோவை மெஸ் - JMS சர்பத், திண்டுக்கல்

                    திண்டுக்கல்லில் பிரியாணி சாப்பிட ஒரு கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது எதேச்சையாக ஒரு கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கலர் கலர் பாட்டில்களைப் பார்க்கவும் அட......... சர்பத் கடை....
              சிறுவயது ஞாபகங்களை கிளற ஆரம்பித்தது.எங்க ஊர் பெட்டிக்கடையில் ஒரு அலுமினிய ட்ரே இருக்கும் அதுல கொஞ்சம் தண்ணி இருக்கும்.பாட்டில்லாம் வரிசையா வச்சி இருப்பாங்க.எலுமிச்சம் பழம் தண்ணில மிதந்துட்டு இருக்கும்.பாக்கெட்ல இருக்கிற காசைத் தடவிப்பார்த்துக்கிட்டே கடைக்காரன் கிட்ட சர்பத் போடச் சொன்னால் போதும் அப்படியே ரொம்ப ரசிச்சு ருசிச்சு செய்வாங்க...ஒரு பெரிய பூப்போட்ட கிளாசை எடுத்து கொஞ்சமா தண்ணீர் ஊத்தி கழுவி வச்சி அதுல அரை எலுமிச்சம் பழத்தை கைல பிழிஞ்சி.....இல்லேனா மரக்கட்டையில் வைச்சு ஒரு அமுக்கு அமுக்கி சாறு ஊத்துவாங்க.அப்புறம் மூணு இல்லன்னா நாலு ஸ்பூன் நன்னாரி சர்பத்தை அளந்து அளந்து  ஊத்தி தெர்மோகோல் பெட்டியில் இருக்கிற பெரிய ஐஸ் கட்டியை கைல எடுத்து கரண்டில ரெண்டு தட்டு தட்டுவாங்க...ஐஸ் உடைஞ்சு தூள் தூளாகும் போது அது தெறித்து நம்ம மூஞ்சில படும் போது செமயா சில்லுனு இருக்கும்.டம்ளரை எச்சில் ஊற பார்த்துகிட்டே இருப்போம். ஐஸை கிளாஸ்ல போட்டு பானைத் தண்ணீர் ஊத்தி கரண்டில ஒரு கலக்கு கலக்கும் போது சில்வர் கரண்டியும் கண்ணாடி கிளாஸும் ஒண்ணு சேர்ந்து ஒரு சவுண்ட் கொடுக்கும் பாரு.... ஒரு லயமா.......ஆகா....அது இன்னும் நம்ம ருசி உணர்வுகளை தூண்டிவிடும்...
                அந்த கிளாஸ்ல வாங்கும் போதே ஆட்டோமேடிக்கா வாய் திறக்க ஆரம்பிச்சிடும்...  ஜில்லுனு கொடுப்பதை வாங்கி கொஞ்ச கொஞ்சமா அதன் சுவையை உணர்ந்து குடிக்கிற போது அந்த நன்னாரி வாசம் நம்ம வாயிலயே நிக்கும்.உள்ளுக்குள் இறங்குற குளிர்ச்சி நமக்கே தெரியும்... ..அம்புட்டு டேஸ்டா இருக்கும்.வெயிலில் அலைந்து திரிந்து வரும் போது சர்பத் கடையைப் பார்த்தா போதும் கால்கள் தன்னாலே அங்கு போகும்.சில்லுனு குடிச்சு தொண்டையை நனைச்சாத்தான் அடுத்த வேலை ஞாபகத்திற்கு வரும்.

            அப்படித்தான் அன்னிக்கு பால்ய கால நினைவுகளை அசைபோட்டபடியே வண்டியை ஓரங்கட்ட சொன்னபோது இருடா.... பிரியாணியை முடிச்சிட்டு வருவோம் அப்புறம் சாப்பிடலாம் என்று சொன்ன நண்பனை ஏறெடுத்து பார்த்துவிட்டு...கண்டிப்பா சாப்பிடனும் மச்சி...என்று சொல்லிவிட்டு அங்க போய் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு சொன்னபடியே வந்து சேர்ந்தோம் சர்பத் கடைக்கு...
JMS  சர்பத் கடை... சின்ன கடை...வரிசையாய் நன்னாரி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.சொந்த தயாரிப்புதான்.ஒரு பெரியவர்தான் கடைக்கு சொந்தக்காரர்.பேச்சுக்கொடுத்தபடியே சர்பத் போட சொன்னோம்...


சிறுவயதில் நேரில் கண்ட அதே முறை தான்.கொஞ்சமும் மாறவில்லை.எல்லாம்  கலந்து டம்ளரில் தருகிறார்...சுவை அப்படியே இருக்கிறது நன்னாரி சர்பத் கொஞ்சம் கூட மாறவில்லை...விலைவாசி ஏறினாலும் இன்னமும் ஐந்து ரூபாய்க்கு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.கண்ணாடி பாட்டில் 700 மிலி 43ரூபாய், பிளாஸ்டிக் பாட்டில் 55ரூபாய் என்கிற விலைவாசி போர்டும், சர்பத்துக்கு சக்கரவர்த்தி என்கிற அடைமொழியோடு இருக்கிற போர்டும் சர்பத் கடையை வெளியுலகிற்கு பறை சாற்றுகின்றன.மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கின்றன.ஏழை மற்றும் நடுத்தரமக்கள் விரும்பிக்குடிக்கிற பானமா இருக்கு அங்க..
இதே மாதிரி எலுமிச்சை, நன்னாரியோட சோடா ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு குடிச்சா இன்னும் டேஸ்டா இருக்கும்..
திண்டுக்கல்லில் பிரியாணி மட்டுமல்ல இந்த சர்பத் கடையும் ரொம்ப பேமஸ் தான்...கடைவீதிக்கு வாங்க...சர்பத் சாப்பிடுங்க..நன்னாரி உடம்புக்கு குளிர்ச்சி தரும்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்  



16 comments:

  1. இதையும் மனதில் குறித்துக் கொண்டேன்
    (தனபாலன் நீங்களும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் )
    நல்ல வித்தியாசமான சர்பத் கடையை
    அருமையாக படத்துடன் பகிர்வு செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்....

      Delete
  2. என்னிடம் சொல்லாமல் சென்றதை வன்மையாக கண்டிக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்...நீங்க தான் உங்க வண்டியில் பறக்கறீங்களே...கூப்பிட கூப்பிட செம வேகமா போறீங்க...

      Delete
  3. சர்பத்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். எங்கிட்டாவது தள்ளுவண்டில பார்த்தால் வாங்கி குடிக்க ஆசை. ஆனா, அசிங்கப்பட்டுக்கிட்டு வந்துடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. தள்ளுவண்டியில் இருக்கிறதெல்லாம் குடிக்காதீங்க...எல்லாம் கலர் பவுடர்....தனியா பெட்டிக்கடையில் வைத்து இருந்தால் நன்னாரி சர்பத் என்றிருந்தால் மட்டுமே செல்லுங்கள்...

      Delete
  4. நன்னாரி சர்பத் போல பதிவும் இனிப்பு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...நண்பரே...

      Delete
  5. superb Brother ...

    பழைய நினைவுகளை மீட்டிய பதிவு . சர்பத் தயாரிப்பதை பார்த்து பின் சாப்பிடுவது தான் எனக்கு ரெம்பப்பிடிக்கும் . ஸ்ட்ராவ தூக்கி போட்டுட்டு கடசி சொட்டு வரைக்கும் குடிப்பேன் .... அப்டி குடிச்சு முடிச்சாலும் , அடடா அதுக்குள்ளார முடிஞ்சுடுச்சேன்னு இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி...சுப்பு.....பழைய நினைவுகள் எப்பவும் இனிப்புதான்...

      Delete
  6. பழைய நினைவுகள்.....

    நிறைய சர்பத் குடித்திருக்கிறேன். இன்னமும் நம் ஊரில் சில இடங்களில் கிடைக்கிறது எனும் போது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்....எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது...இனி கோடை காலம் ஆரம்பிக்கப்போகுது..அப்ப இன்னும் அதிகமா இருக்கும்,

      Delete
  7. தாங்கள் குறிப்பிட்டகடை திண்டுக்கல் பெரிய கடை வீதியில் உள்ளது.“நானும் பல முறை அவற்றை அருந்தி சிலாகித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....