Wednesday, September 22, 2021

மீன்குறிப்புகள்

     

            நான் எப்பொழுதும் கோவையில் மீன் வாங்குவதில்லை.பல வருடங்களுக்கே முன்பே வாங்குவதை நிறுத்திவிட்டேன்.எப்பொழுதாவது உறவினர்கள் நண்பர்கள் வருகையின் போது அவர்களின் விருப்பத்திற்கேற்ப மீன் வாங்குவது வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே.அதுவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறையில் சனிக்கிழமை அன்று பிரஷ்ஷாக ( அதுவும் ஓரிரு நாட்கள் பழையது தான் சாத்தனூர் அணையில் இருந்து வருவது ) வரும் டேம் பாறை மீன் மட்டுமே வாங்குவது.அது கொஞ்சம் நன்றாக இருக்கும்.ஆனால் கேரளா மற்றும் தூத்துக்குடியில் இருந்து வருபவை பெரும்பாலும் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் பிடிபட்டவை.கேரள மத்தி மீன் மட்டும் ஒரு சில நாட்களில் கொஞ்சம் பிரஷ்ஷானது போல வரும்.அதுவும் பெரும்பாலான நாட்களில் சொதப்பி விடும்.

        குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்து இருப்பதினால் நன்கு கெட்டியாக இருக்கும்.அது கோவை வந்து மார்க்கெட்டில் தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வரும் போது கொஞ்சம் இளகி இருக்கும்.அதுவரையில் ஐஸ்கட்டிகளோடு இருக்கும். மீன்கடையில் எடை போட்டு வெட்டி வீட்டிற்கு வந்து தண்ணீரில் கழுவினால் போதும் மீன் சதை அப்படியே உடையும்.கடையில் வெட்டும் போதே கொஞ்சம் நேக்காக வெட்டி அனுப்பி விடுவர்.

        இங்கு மீன் வெட்டுபவர்களும் சரியில்லை.விண்வெளிக்கு ராக்கெட் விடுவதை போல் மீனை வெட்டித் தருவர்.வாங்கும் ஒரு கிலோ மீனில் 400 கிராம் காலி ஆகிவிடும்.மீன் தலையை கன்னா பின்னா வென்று வெட்டுபவர்களை கண்டால் கோபம் தலைக்கேறும்.விதியே என்று நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சுத்தம் செய்ய கழுவினால் மீன் சதை வேறு தானாக உதிரும்.மீனின் நாற்றமும் பாசான் நாற்றத்தைப் போல ஒரு மாதிரி வாடை அடிக்கும்.வட்டவடிவ துண்டுகள் போடப்பட்ட மீன்களில் முட்கள் தனியாய் வரும்.

        நெத்திலி சங்கரா போன்ற மீன்களில் முட்கள் வேறு தனியாய் பிரிந்து பூரான் போன்று இருக்கும். எத்தனை நாள் பழசான மீனோ என்று எண்ணியபடியே மீனில் மசாலாக்கள் சேர்த்து குழம்பும் பொரிச்சதுமாக சாப்பிட்டு விடுவது.துணைக்கு வேறு தமிழக அரசு சப்போர்ட் செய்வதால் பசி ருசி அறியாது என்பதை போல காலி ஆகி விடும்.காசு கொடுத்து வாங்கிய பண்டம் அல்லவா.நீண்ட நாட்கள் ஆன மீனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இங்கு வாங்குவதை தவிர்த்து விடுகிறேன்.அதுமட்டுமல்ல நமது ஊரில் காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு துள்ள துள்ள வரும் ஜிலேபி, கெண்டை, அவுரி மீன்களையே சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு இங்கிருக்கும் மீன்கள் ஏனோ பிடிப்பதில்லை.நாங்களே ஆற்றில் தூண்டில் போட்டோ, வலை விரித்தோ, கைகளிலோ மற்றும் இரவு நேரத்தில் மீன் வேட்டைக்கு சென்று பிடித்து விட்டு வரும் மீன்கள் எப்போதும் ருசியாகவே இருந்திருக்கின்றன.

            இறந்த மீனின் செவுளை பார்த்தால் ரத்தச்சிகப்பில் இருக்கும்.ஆனால் இங்கு வரும் மீன்களோ நிறமற்ற செவுள்களாக இருக்கிறது.அந்த அளவுக்கு நாட்பட்டதாக இருக்கிறது.கடல் மற்றும் ஆறு இருக்கும் ஊரில் இருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.மிகவும் பிரெஷ்ஷான மீன்களை உண்டு வாழ்கின்றனர்.

            மற்ற ஊர்களில் உள்ளவர்கள் எங்கிருந்தோ வரும் மீன்களை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.பார்மலின் எனும் ஒரு திரவத்தை வேறு தெளித்து விடுகிறார்கள்.சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ஏழு டன் மீனில் பார்மலின் தெளித்திருப்பதை கண்ட அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர்.இங்கேயும் அது இருக்கலாம்.உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.மீனில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன.அதற்கு ஆசைப்பட்டு உடலுக்கு தீங்கு தரும் பழைய மீன்களை சாப்பிட்டு வருகிறோம்.

#மீன்குறிப்புகள்    


இன்னும் கொஞ்சம்...

Monday, January 4, 2021

கரம் – 40

ஆச்சரியம்:

        சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.


         நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.

வாவ்…..வாட் எ ஐடியா சேட்ஜி…..

அதிசயம் :

கோவை  கவுண்டம்பாளையத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.ஹவுசிங் யூனிட்டில் ஆரம்பித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வரைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பாலம் பணி கொஞ்சம் ஆமை வேகத்தில் நடந்தது.இப்பொழுது மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தூண்கள் அமைக்கும்  பணி அனைத்தும் முடிந்து இப்பொழுது இரு தூண்களுக்கு இடையில் செண்ட்ரிங்க் அடித்து உத்திரம் (BEAM ) அமைப்பதற்காக கான்கீரீட் வேலை நடக்கிறது.இப்பொழுது வரை 6 பில்லர்கள் வரை பீம் வேலை முடிந்து விட்டது.மற்றவை ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.பாலம் கட்டுமான பணி முடிய எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.அதற்குள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும்.அதனால் தான் என்னவோ சீக்கிரம் பில் பாசாக வேண்டி கட்டிக்கொண்டிருக்கும் பாலத்திற்கு அம்மா பெயிண்ட் ...சாரி...பச்சை கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கின்றனர்.




பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.

கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.

முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....

சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.

அனுபவம் :

                      கரூர் செல்லும் போது வெள்ளக்கோவில் பகுதியில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினோம்.கடைக்காரரிடம் டீ சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கோலி சோடா..உடனே டீ யை கேன்சல் செய்து விட்டு கோலி சோடாவினை எடுத்து பெருவிரலை உள்ளே விட்டு ஒரு அழுத்து அழுத்தினால் கேஸ் பீச்சி அடிக்க,கோலி குண்டு உள்ளே போக, பாட்டிலில் இருந்த கலரின் வாசம் வெளிவந்து மூக்கை துளைக்க, எடுத்து வாயில் வைத்து குடிக்க, சிறுவயதில் கோலி சோடா குடித்த ஞாபகங்கள் வந்து போனது.கலரின் இனிப்பும், கேஸ் நிறைந்த தண்ணீரும் நாவினை நனைத்து சுவை நரம்புகளை நடனமாட வைத்து தொண்டைக்குள் இறங்கி வயிற்றினை நிரப்பியது.சிறிது நேரத்திலேயே கலரின் வாசத்தோடு பெரிய ஏப்பத்தினை கொடுக்க மனம் ஆனந்தமானது.கோலி சோடா குடிக்கும் போது சீக்கிரம் தீராமல் இருக்க பாட்டிலை திருப்பி, கோலிக்குண்டினை பாட்டிலில் உள்ள அந்த அடைப்பினில் குண்டினை வைக்காது, குண்டுடன் கலரை உறிஞ்சி குடிக்கும் போது இருக்கிற ஆனந்தம் இருக்கே  அதை அனுபவித்தால் தான் தெரியும்.அவ்வப்போது கோலி குண்டு பாட்டிலில் உரசி உரசி ஒரு சத்தம் வரும் பாருங்க...கேட்க அது அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.



                    இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

 


இன்னும் கொஞ்சம்...

Friday, January 1, 2021

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2021 HAPPY NEW YEAR

கடந்த வருடம் 2020 உலக மக்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கி பொருளாதாரத்தையே ஆட்டி படைத்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்திய கொரோனோ எனும் கிருமி தந்த பலத்த பாதிப்புகள்  மிக மோசமானவை.இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நிறைய பேர் மீளவே இல்லை.சராசரி மனிதனில் ஆரம்பித்து மிகப்பெரிய கம்பெனி வரை கடுமையான பாதிப்புகள் இதனால்.

இதற்கு நானும் விதிவிலக்கல்ல.மிகப் பெரிய பொருளாதார பாதிப்பினை தந்து விட்டு சென்றிருக்கிறது.கிட்டத்தட்ட 10 மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்து, விவசாய பணியிலும் ஈடுபட்டு, தேங்காய், எண்ணெய், போன்ற பொருட்களை விற்று எப்படியோ உயிரை தக்க வைத்து கொண்டது தான் இந்த வருடத்தின் சாதனை.

என்னால் முடிந்த வரையில் கொரோனோ காலத்தில் நிறைய பேருக்கு பசி ஆற்றி இருக்கிறேன்.உதவும் எண்ணத்தினை கொஞ்சம் அதிகரித்து வைத்திருக்கிறது கொரோனோ.

ஆனாலும் 2020 என்ற ஒரு வருடம் ஒன்று இருந்ததையே மறக்க நினைக்கிறேன்.எப்படி இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே தொலைந்து போனது போல, இந்த வாழ்க்கை பயணத்தில் 2020 என்கிற வருடமே இல்லை என்கிற நினைக்கிற அளவிற்கு வைத்து விட்டது.

இந்த வருடத்தில் நிறைய இழப்புகள், பொருளாதார பாதிப்புகள், நண்பர்களின் உதவி, உறவினர்களின் அலட்சியம், சில பேர்களின் துரோகம், கந்துவட்டி காரர்களின் கொடுமை என அனைத்தையும் இந்த கொரோனோ காட்டிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில பேர் பொருளாதார பாதிப்பில் இருந்து கொஞ்சம் மீள கை கொடுத்தார்கள்.ஆபிஸ், குடோன், வீட்டு உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் எனது பணியாட்கள் என அனைவரும் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தனர்.அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவுடன் அவர்களுக்கு உரியதை செய்து விடவேண்டும்.



இனி வரும் இந்த 2021 புத்தாண்டில் அனைத்து பொருளாதார சரிவுகளையும் மீட்டெடுத்து புதிதாய் வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டும்.

ஜீரோவில் இருந்து ஆரம்பித்தேன்.இருவது வருடங்களுக்கு பின் மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.இனி உழைப்பதற்கு ஏற்ற காலம் குறைவு என்றாலும் மிகவும் நல்ல ஆயுளையும், ஆரோக்கியத்தையும் குறைவில்லாமல் தரக்கூடிய ஆண்டாய் இந்த 2021 இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.


என் தளம் வந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் ஆரோக்கியமும் நல்ல வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.


நேசங்களுடன்

ஜீவானந்தம்








இன்னும் கொஞ்சம்...