Monday, November 30, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி, பகுதி - 1

திருப்பதி பயணக்கட்டுரை:

                   அடாது மழையிலும் விடாது பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நீண்டு செல்லும் இரு கம்பிவேலிகளுக்கு இடையில் மழையின் சாரலில் நனைந்தும், நனையாமலும் சென்று கொண்டிருந்தோம்.செல்லும் வழியில் 300 ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என இரு வழிகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் பிரிக்கப்படுகின்றனர்.அங்கு நமது டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுப்பப் படுகின்றனர்.அங்கும் நம்மை சோதனை செய்கின்றனர்.வெகு தூரம் சென்று கொண்டிருந்தோம் வளைந்தும் நெளிந்தும்.....ஓரிடத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நின்று கொண்டிருக்க, அங்கிருந்து எங்களின் பயணம் வெறும் அங்குலமாக மாறியது.நாங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது கோவிந்தா....... கோவிந்தா என்கிற கோஷம் அதிர ஆரம்பித்தது....செல்லும் வழியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான அறைகள் நிறைய இருக்கின்றன.கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தி வைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

                                     சென்று கொண்டிருக்கும் வரிசையில் ஆங்காங்கே பாதுகாப்பு சோதனை வளையங்கள்.பக்தர்கள் இன்னும் கூடுதலாக சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர்....கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தோம்.கடைசியாய் எம்பெருமான் வீற்றிருக்கும் மண்டபத்தில் நுழைய ஆரம்பித்தோம்.பக்தர்கள் கூட்டம் நெருக்கித்தள்ள ஆரம்பிக்கிறது.அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை சகித்துக்கொண்டு கோவிந்தா..... கோவிந்தா... என கோஷம் போட்டுக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டோம்...அதற்குள் ஜர்கண்டி...ஜர்கண்டி ...என தெலுங்கில் உத்தரவு வர அங்கிருந்து நகர்ந்தோம்....

                   திருப்பதி ஏழுமலையானை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டோம்...பின் அங்கிருக்கும் ஒரு சில தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியேறினோம்.அடுத்து லட்டு கவுண்டர்.... ஒரு மண்டபத்தில் இருபுறமும் ரயில்வே கவுண்டர் மாதிரி வரிசையாய் டிக்கட் கவுண்டர்.நாம் வைத்திருக்கும் தரிசன டிக்கெட்டினை வாங்கி பார்கோட் ரீட் பண்ணி டிக்கெட்டுக்கு உண்டான லட்டினை தருகின்றனர்.லட்டினை பெற்றுக்கொண்டு வெளியே வர திருப்பதி மலையின் மழையோடு கூடிய சுதந்திர காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம்...

                 பின் மெதுவாய் நடக்க ஆரம்பித்து கோவிலுக்கு உள்ளே நாம் கொடுத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே இருக்கும் கவுண்டரில் வாங்கிக்கொண்டு எங்களின் தங்குமிடத்திற்கு சென்றோம்....
மாலை ஆறு மணிக்கு கோவில் வரிசையில் செல்ல ஆரம்பித்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.மிக சிறப்பான தரிசனம்...என்ன கொஞ்ச நீண்ட தரிசனம்...பெருமாளை சந்திப்பது என்ன அவ்வளவு சுலபமா...?என்னதான் தள்ளு முள்ளு, நெருக்கடி இருந்தாலும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டி விரும்புகிறது.இனி அடுத்த முறை அவரை பார்க்க செல்லவேண்டும்...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தபின், அலர்மேல்மங்கை தாயார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.திருப்பதி அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பதி செல்ல ஒரு சில முன்னேற்பாடுகள்: 

1) திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்து கொள்ளலாம்.செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை உங்கள் புகைப்படத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.லட்டுகள் கூட எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம்.
2) திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளவேண்டும்.இல்லையேல் திருப்பதியில் தங்கிக்கொண்டு பின் மேல் திருப்பதிக்கு செல்லலாம்.

3) தங்குவதற்கு அறை கிடைக்க வில்லை எனில் திருப்பதி மலையில் இலவச அறைகள் இருக்கின்றன.லாக்கர் வசதிகள் உள்ளன.அங்கு தம் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்ய கிளம்பலாம்.

4)தங்களின் உடைமைகள், செல்போன், காலணிகள் இவைகளை லாக்கரிலேயே விட்டு செல்வது நல்லது.

5)செல்போன், உடைகள் மறந்து எடுத்துச் சென்றால் தரிசனம் செல்லும் வழியில் லாக்கர் வசதி இருக்கின்றன.அங்கு ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்தபின் கோவிலுக்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளலாம்.கையோடு ஏதாவது துணிப்பை இருப்பின் நல்லது.

6)லட்டு வாங்க கவர் அங்கேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் கையில் பை இருந்தால் நல்லது.

7)மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்தில் பாய், போர்வை வாங்கிக்கொண்டு இரவு தூங்கிக்கொள்ளமுடியும்.இல்லையேல் வெளியே வாடகைக்கு பாய் போர்வை கிடைக்கும்,அதை வாங்கிக்கொண்டு இரவை கழித்துக்கொள்ளலாம்.

8)தங்குமிடங்கள் அனைத்தும் அத்தனை சுத்தம்..24 மணி நேரமும் பணியாளர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

9) பொது தரிசனம் என்கிற இலவச தரிசனத்தில் போனால் எப்படியும் ஒரு நாள் அல்லது இரு நாள் ஆகிவிடும்.ஆனாலும் சாப்பாடு, குடிநீர் வசதிகள், கழிவறை போன்ற வசதிகள் இருக்கின்றன.

பத்திரமாய் பாதுகாப்பாய் திருப்பதி செல்ல வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, November 26, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி

                      திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டி கடந்த வாரம் பயணப்பட்டேன்.அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம்.எங்களை மழை வாழ்த்தி வழியனுப்பியது.கோவையில் ஆரம்பித்த மழை திருப்பதி செல்லும் வரை நீண்டு கொண்டிருந்தது.பத்து நிமிடம் மழை நிற்பதுவும் பின் தொடர்வதுமாய் எங்களுடனே பயணித்தது மழை.திருப்பதி ரயில் நிலையத்தினை மதியம் 2 மணிக்கு அடைந்தோம்.ஸ்டேசனை விட்டு வெளியே வர, தூறலாய் பெய்து கொண்டிருந்த மழை எங்களை வரவேற்க கொஞ்சம் கனமாய் சட சடவென பொழிய ஆரம்பித்தது.கொட்டும் மழையில் கொஞ்சம் நனைந்தும் நனையாமலும் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கி நின்றோம்.
  
                 ரயில் நிலையத்திற்கு வெளியே திருப்பதி தேவஸ்தான பஸ் அந்த மழையிலும் பக்தர்களை ஏற்றிக்கொண்டிருந்தது.ஒரு பஸ் நிரம்பி கிளம்பியதும் உடனடியாக அடுத்த பஸ் நிரம்பிக்கொண்டிருந்தது.நாங்களும் அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.கிளம்பி இரண்டு நிமிடம் கூட இருக்காது, அருகில் உள்ள பஸ்ஸ்டாண்டில் ஓரங்கட்டினர். வெளியே இருக்கும்  டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொள்ள தெலுங்கில் மாட்லாடினார் அந்த பேருந்தின் ஓட்டுனர். குடும்பம் குடும்பமாக வந்திருப்பதால் யாராவது ஒருத்தர் போய் வாங்கினால் போதும் என சொல்ல, நானும் என் பங்குங்கு டிக்கெட் வாங்கினேன்.போக மட்டும் 50 ரூபாய். போக வர சேர்த்து வாங்கிக்கொண்டால் 90 ரூபாய்.மூன்று நாட்கள் வரை இந்த பயணச்சீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

                          அனைவரும் டிக்கெட் வாங்கி வந்தவுடன் பஸ் கிளம்பியது.ஒரு பத்து நிமிட பயணம்.மீண்டும் வண்டி நின்றது.பார்த்தால் செக் போஸ்ட். மலைக்கு மேல் செல்பவர்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செக்போஸ்ட்.ஏர்போர்ட்டில் இருப்பது போன்று மின்னணு சோதனை.நமது அத்தனை உடைமைகள், லக்கேஜ், பிறகு நம்மையும் செக் செய்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏற்றுகின்றனர்.ஒரு மணி நேர பயணம்.மலைப்பாதையில் கொட்டும் மழையினூடே பயணிக்கிறது பேருந்து.இருபுறமும் மழையைத்தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.பேருந்து மேல் திருப்பதியை அடைந்த நேரம் மதியம் மூன்று மணி தான் இருக்கும் ஆனால் இருட்டுவதற்குண்டான அறிகுறியில் சாலைகளில் மழையுடன் மேகம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.இருட்டை பகலாக்கும் முயற்சியில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தவர்கள், தரிசிக்க போகிறவர்கள் என பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்தனர்.
                           

         

                  நாங்களும் பேருந்தை விட்டு இறங்கி குடை பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.பஜார் போன்ற கடைவீதிகளில் மழையையும் மீறி கூட்டம் மொய்த்துக்கொண்டு இருந்தது.கார்கள்,ஜீப்கள், பேருந்துகள், என எல்லாம் பக்தர்களை சுமந்து கொண்டு இயங்கிக்கொண்டிருந்தன.பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலேயே உள்ள மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்திற்கு சென்றோம்.அங்குதான் லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கான இடமும் இருப்பதால் அங்கு சென்றோம்.முதலில் லாக்கர் வசதியை பெற்றுக்கொண்டு ஈர துணிகளை மாற்றிக்கொண்டு மொட்டை போட சென்றோம்.
                           மொட்டை போட இலவச டோக்கன் தான்.டோக்கனோடு அரை பிளேடு ஒன்றும் தருகிறார்கள்.மொட்டை போடும் இடத்தில் வரிசையாய் அமர்ந்திருக்கின்றனர் நாவிதர்கள்.அவர்களுக்கு முன்னால் தலைகுனிந்தபடி இழந்து கொண்டிருக்கின்றனர் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வெங்கடாசலபதிக்காக நேர்ந்து விட்ட தத்தம் முடிகளை.... பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அறையில் பலரும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.ஆங்காங்கே சிதறிக்கொண்டிருந்த முடிகளை வாக்குவம் கிளினர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள்.டோக்கனில் உள்ள நம்பர் படி நாங்களும் தலைகுனிந்தபடி ஆஜரானோம். கண நிமிட நேரம் தான்.வழித்து தள்ளியது நாவிதரின் கத்தி.ஏழுமலையானுக்கான மொட்டையுடன் வெளியேறினோம்.
              குளித்து முடித்து புத்தாடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க கிளம்பினோம்...ஏற்கனவே ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்துவிட்டபடியால் அந்த நேரத்திற்கு முன்கூட்டியே சென்றுவிட்டோம். வளைந்தும் நெளிந்துமாய் வரிசை ஓடுகிறது.வெளியே மழை பெய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.

தொடரும் போடனும் போல இருக்கு....போட்டுடறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Monday, November 16, 2015

கோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)

சோற்றுக்கற்றாழை ஜூஸ்
                 திருப்பத்தூர்ல இருக்கும் போது காலங்காத்தால கொஞ்சதூரம் பைக்கிங் போய்ட்டு வருவேன்.எல்லாரும் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங்க் போய்ட்டு இருப்பாங்க..அவங்களை வேடிக்கை பார்த்துகிட்டே நான் மட்டும் பைக்கிங்க் போவேன்.அப்படி போறபோது தான் இந்த ஜூஸ் கடை அறிமுகமாச்சு.மூணு வேளையும் நல்லா பிரியாணியா கட்டுறது, அப்பப்ப நம்ம பகார்டியையும் டேஸ்ட் பார்க்கிறது என திருப்பத்தூர்ல வாழ்ந்துட்டு இருந்ததால், உடம்பையும் கொஞ்சம் கவனிக்கனுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல இந்த கடைக்கு போனேன்.
              சிறுவயதில் வீட்டுல தொங்க விடுவதற்காக கத்தாழை செடியை பிடிங்கிட்டு வருவதோட சரி.அதன் பலன் என்ன.... பயன் என்ன என்பதெல்லாம் தெரியாது.ஆனா சாப்பிட்டா செம கசப்பு கசக்கும் என்பது மட்டும் தெரியும்.அதுக்கப்புறம் ஒரு தடவை எதுக்கோ பந்தயம் கட்டி டேஸ்ட் பார்த்துட்டு, கத்தாழை செடி இருந்தபக்கம் கூட போனதில்ல.அப்புறம் மிஷ்கின் படத்துல கத்தாழ கண்ணால பாட்டுல மட்டும் இந்த கத்தாழைங்கிற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கேன் அவ்வளவு தான் நமக்கும் இதற்கும் சம்பந்தம்.
                 திருப்பத்தூர்ல அடிக்கிற வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாகும் என ஒருத்தர் நம்ம சைட்ல சொல்லவும், அதுக்கப்புறம் தான் இந்த கடைக்கு வர ஆரம்பிச்சேன்.கத்தாழையை சீவி அப்படியே நுங்கு போல வைத்து இருப்பாங்க.அதை மோர்ல போட்டு கை மிக்ஸியில் கொஞ்ச நேரம் சுத்தவிட்டு ஜூஸா குடுப்பாங்க.பாயசத்துல மிதக்கிற ஜவ்வரிசி மாதிரியே இந்த மோர்ல கத்தாழை துண்டுகள் மிதக்கும் பாருங்க....ஆகா...ஆவ்சம்....



பார்க்கிறதுக்கு தான் நல்லாயிருக்கும்..கொஞ்சம் வாயில பட்டா கசப்பு தெரிய ஆரம்பிக்கும் பாருங்க...அப்படியே மூஞ்சி அஷ்டகோணலா  மாறும்...கண்ணை மூடிகிட்டு, வாயை திறந்து ஒரே மடக்கா குடிச்சிட்டு படக்குன்னு டம்ளரை கசக்கி போட்டுடுவேன்..கொஞ்ச நேரம் செம கசப்பு கசக்கும்...அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்.அவ்ளோ தான் ஒரு ரவுண்ட் தான்...
                                 சரக்கடிக்கும் போது கூட இந்த மாதிரி கசப்பு தெரியமாட்டேங்குது..ஆனா நல்லது பண்ற இந்த கத்தாழை ஜூஸ் குடிச்சா மட்டும் கசப்பு தெரியுது...இவ்ளோ கசப்பு இருந்தாலும் நம் உடலுக்கு தருகிற இதன் பயன் மிக அதிகம்.வயிற்றுபுண், சர்க்கரை நோய், மூலம், அல்சர், சிறுநீரக கோளாறு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், முக பொலிவு,கூந்தல் வளர்ச்சி, தோல் நோய், மலச்சிக்கல், கல்லீரல் நோய் குணம் என ஏகத்துக்கும் இதன் பயன்பாடு அதிகம்.இந்த ஜூஸை அங்க போய் தான் குடிக்கணும்னு இல்ல, உங்க வீட்டுலயே தயாரிக்கலாம்.மோர்ல கலந்து குடிக்க விருப்பமில்லாதவங்க, அப்படியே வெறும் வாயில் இரு துண்டுகளை போட்டு முழுங்கி கொள்ளலாம்.உடம்புல இருக்கிற வியாதிகள் குறைவதற்கு இது ரொம்ப பயன்படுகிறது.வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தால் இதனை நட்டு வையுங்கள்.பாம்பு போன்ற ஜீவராசிகள் வராது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, November 7, 2015

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வணக்கம்...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
புத்தாடை அணிந்து விபத்தில்லாமல் மிக பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...