Saturday, October 27, 2018

கோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE


                             நேற்று செ.சி.வானம் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.மழைக்கு இதமாய் நாவுக்கு காரமாய் சாப்பிடத் தோணியதால் தியேட்டரில் இருந்து யூ டர்ன் அடித்து மெயின்ரோட்டில் உள்ள கொக்கரக்கோ போனோம்.புதிதாக ஆரம்பித்த கிளை இது.பல வருடங்களுக்கு முன்னால் கவுண்டம்பாளையத்தில் நன்கு சக்கை போடு போட ஹோட்டல் இது.அப்பவே கிரில் தந்தூரி என மிக அருமையான சுவையில் கிடைக்கும்.இடையில் பார்ட்னர்ஷிப் பிரச்சினை காரணமாக கவுண்டம்பாளையத்தில் இருந்து வெளியேறியது.அதற்கு பின் கொக்கரக்கோ சிவானந்தா காலனியில் இன்னொரு கிளையை ஆரம்பித்தது.பின் சில வருடம் கழித்து, கவுண்டம்பாளையத்தில் மிக நேர்த்தியாய் தனது மூன்றாவது கிளையை ஆரம்பித்தது.ஹோட்டல் நல்ல இண்ட்ரீயர் அமைப்புடன் விசாலமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் நிறைய டேபிள்கள் காலியாக இருந்தது.மழைக்கு யாரும் ஒதுங்க வில்லை போல.சாப்பிட வருபவர்களை விட அங்கே வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.நாங்களும் ஒரு டேபிளை ஆக்ரமித்து அமர்ந்தோம்.


                               மெனுகார்டு புக் வடிவில் வர, தந்துவிட்டு வெயிட்டர் காத்திருந்தார் ஆர்டர் வேண்டி...நாங்களும் கொஞ்சம் பத்து நிமிடம் கழித்து வாருங்கள், புக்கை முடித்துவிட்டு கூப்பிடுகிறோம் என சொல்ல அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.பின் ஆர்டராய் சிக்கன் விங்ஸ், கிரில், சிக்கன் டைனமைட் என பிடித்ததை சொன்னோம்.ஒவ்வொன்றும் சூடாக வந்து சேர்ந்தது.கிரில் சிக்கன் நல்ல காரம்.மழைக்கு ஆஃப்டாக இருந்தது.நன்கு மசாலாக்கள் தூவி இன்னும் காரமாக இருந்தது.மயோனிஸ் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கிறது.அடுத்து எப்பவும் பிடித்த அயிட்டம் சிக்கன் விங்க்ஸ்.எப்பொழுது கொக்கரக்கோவின் எந்த கிளைக்கு சென்றாலும் மறக்காமல் அதை ஆர்டர் செய்வது சிக்கன் விங்க்ஸ் தான்.அந்தளவிற்கு அதன் சுவை பிடிக்கும்.அதை ஒவ்வொன்றாய் எடுத்து சின்ன சின்ன எலும்புகளை பிரித்து பின் கறியை சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம்.



                  அதைப்போலவே சிக்கன் டைனமைட்டும் செம டேஸ்ட்.போன்லெஸ்.பட்டரில் வறுத்தெடுத்திருப்பார்கள் போல.நல்ல சுவை.மெதுவாய் உள்ளிறங்குகிறது.அதற்கப்புறம் நூடுல்ஸ், பட்டர் நான், பரோட்டா என எல்லாம் வரிசையாய் வந்தது.பன் பரோட்டோ மட்டும் ஏமாற்றிவிட்டது.பன் மாதிரி சின்னதாய் இருக்கும் என பார்த்தால் நார்மல் புரோட்டாவை அடித்து துவைத்து கொண்டு வந்து பொசுபொசுவென வைக்கிறார்கள்.சுவையும் சரியில்லை.சைஸும் சரியில்லை.




                                      பட்டர் சிக்கன் கிரேவி நல்ல சுவை.கிரில் மட்டும் சரியான காரம்.அதேபோல் மிக்ஸ்ட் நூடுல்ஸ் இல் வந்த இறால், மீன், சிக்கன் துண்டுகள் அதே போல் கொஞ்சம் காரம். குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டனர்.பெரியவர்களுக்கு ஓகே ரகம்.நன்றாகவே இருக்கிறது.
                                             காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இது ஓகே தான்.எதிரில் வேற தமிழக அரசு கடை இருக்கிறது.அதனால் கூட ஒருவேளை காரம் கூடியிருக்கலாம்.
எப்பவும் போல விலை கோவைக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.

எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கவுண்டம்பாளையம் கிளையிலும் சாப்பிட்டுப் பாருங்கள்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, October 26, 2018

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, R.S புரம் கிளை, கோவை. STAR BIRIYANI, R.S.PURAM BRANCH, COIMBATORE


                                 ஞாயிறு.. மதிய நேரத்தில் பொழிந்த மழையினூடே கடையை தேடி பயணித்தோம்.கடை என்பது நம்ம அரசாங்க கடை அல்ல.நல்ல சுவை மிகு உணவைத் தேடி.எப்பொழுதோ கோவையில் தனது கிளையை பரப்பியுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலுக்கு சென்றோம்.பிரியாணிக்கு புகழ் ஆம்பூர்தான்.அங்கு கிடைக்கும் அதே சுவை இருக்குமென நினைத்து பிரியாணியை ஆர்டரிட்டோம்.



                       சென்னை வேலூர் ஆற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரியாணிக்கு பாசுமதி அரிசிதான்.ஆனால் இங்கோ பாசுமதிக்கு பதில் சீரக சம்பா..சம்பாவிற்கென உண்டான சுவையும் இல்லை.சாதம் குழைந்தது போலவே இருக்கிறது. பிரியாணியின் நிறம் மட்டும் கொஞ்சம் ஒத்திருக்கிறது.மட்டன் துண்டுகள் பெரிதாக இருந்தாலும் எலும்புகளே ஆக்ரமிக்கின்றன.பிரியாணி சாப்பி்ட்ட உணர்வே இல்லை.இதற்கு கொடுத்த கத்தரி கட்டா சுவையாக இருந்தது.
பிரியாணி சொல்லிக் கொள்வது போல இல்லை.கடையில் வேலை செய்பவரிடம் அரிசி பற்றி கேட்டால் ஆம்பூரில் சீரகசம்பா தான் போடுகிறார்களாம்.அப்படி இருந்தும் சீரக சம்பாவிற்கென்ற ருசி இல்லை.வேலூர் மாவட்ட பிரியாணி நிறத்தில் தான் இவர்களின் பிரியாணியும் இருக்கிறது.ஆனால் சுவை குறைவாகவே இருக்கிறது.வேலூரில்
டூப்ளிகேட் கடைகள் நிறைய இருந்தாலும் அங்கு இதை விட கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.வாணியம்பாடியில், ஆம்பூரில் ஒரு சில கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு சாப்பிட சுவையாகவே இருக்கிறது.ஆனால் இந்த கடையில் நன்றாக வே இல்லை.
           மழைக்கு இதமாய் காரஞ்சாரமாய் இருக்கும் என ட்ரை அயிட்டங்கள் ஆர்டர் செய்தால் அதுவும் நன்றாகவே இல்லை.இறால் ஃபிரை ஏதோ பகோடா சாப்பிட்ட உணர்வைத் தான் தந்தது.ஹைதராபாத் ஃபிரை என்று ஒன்று.அதுவும் நன்றாகவே இல்லை.அதே போல் எக் பிரைடு ரைஸ்..அரிசி அரைவேக்காட்டில்..வடிச்ச சாதத்தில் அப்படியே போட்டு பிரட்டி கொண்டு வந்தது போல இருக்கிறது.கொஞ்சம் கூட ட்ரை ஆகவே இல்லை.




                   சர்வீஸ் சுத்த மோசம்.ஆர்டர் எடுத்ததில் இருந்து பில் வந்தது வரை ரொம்ப ஸ்லோ..இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கு ஆசைப்பட்டு மோசம் போனது இந்த ஸ்டார் பிரியாணியில் தான்.விலையும் எப்பவும் போலவே கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது அதிகமாய்...
இனி அந்தப்பக்கம் தலைவைத்து படுப்போம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, October 25, 2018

கோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI, KARUR


                                   இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சென்றுவிட்டு கரூர் வந்தேன்.வரும் வழியில் பள்ளபட்டியில் பிரியாணி சாப்பிடலாம் என்று அங்கு வண்டியை திருப்பினேன்.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதால் பிரியாணியும் சுவைமிக்கதாக இருக்கும் என்று நம்பி(?)ப் போனேன்.பள்ளபட்டியில் ஒருவர்க்கு இரண்டு பேராய் விசாரித்தேன்.பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என்று.இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே கடையை சொன்னனர்.அந்த ஊரில் இருப்பதே மொத்தம் மூன்றுகடைகள் தான் போல.மூன்றில் இது நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் அங்கு போனேன்.
                                             கடை நல்ல கூட்டமாகத்தான் இருந்தது.குல்லா போட்டா பாய்களில் ஒருவர் கல்லாவிலும், ஒருவர் சப்ளையிலும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.(முஸ்லீம் கடையாமாம்..)கடை முன்பே தோசைக்கல்லில் புரோட்டா வெந்து கொண்டிருந்தது.காடை, சிக்கன் எல்லாம் மசாலாவில் ஊறி எண்ணையில் பொறிவதற்கு காத்துக் கொண்டிருந்தன. சின்ன கடைதான்.பதினைந்து பேர் அமரக்கூடிய இடவசதி.அனைத்து டேபிள்களும் நிரம்பியிருந்தன.அப்போது காலியான ஒரு சேரில் அமர, பிரியாணியை ஆர்டரிட்டேன்.
                                                   பெரும்பாலோனோர் புரோட்டா சிக்கன் குருமாவை காலி செய்து கொண்டிருந்தனர்.பிரியாணி வந்தது.சம்பா அரிசிதான் அரைகுறை வேக்காட்டில்.
பிரியாணிக்குண்டான மணமும் குறைவுதான்.சிக்கன் துண்டும் மிருதுவற்று இருந்தது.அதற்கு கொடுத்த சிக்கன் குருமாவும் சரியில்லை.கொஞ்சம் வரைக்கும் சாப்பிட்டேன்.முடியவில்லை.அப்புறம் கடைக்காரை கூப்பிட்டு அரிசியின் பதத்தை காட்டிவிட்டு, நம்பி வந்தேன் நல்லாவே இல்லீங்களே என சொல்லி விட்டு பணம் தந்து விட்டு கிளம்பினேன்.


                           அறுபது ரூபாய்க்கு என்ன ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணியா தரமுடியும்.விலை குறைச்சலா இருந்தாலும் சுவையை தூக்கலா தரமுடியும்.ஆனா விலையும் குறைவு டேஸ்டும் சுத்தமும் இல்லாம இருக்கு.மற்ற இரு கடைகளை முயற்சிக்கலாமா என யோசித்தேன்.முன்பே இந்த கடை நன்றாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வந்ததால் இந்த நிலைமை.அந்த கடைகள் எப்டியிருக்குமோ..எதற்கு ரிஸ்க்..பேசாமல் கரூர் போய் கரம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து வண்டியை கிளப்பினேன்.முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி..ஒரு பிரியாணி கூட டேஸ்டா கிடைக்க மாட்டிக்குதே...பீஃப் கூட கிடைக்கல அங்கு...தள்ளுவண்டில ஜம்ஜம் பிரியாணின்னு ஒன்ணு நின்னுச்சு..பீஃப் வறுவல் கிடைக்கும் போட்டிருந்தது. பேசாம அங்கயும் ஒரு கை பார்த்திருக்கலாம்...
கடைசியா கரூர் வந்து முட்டை கரம் டேஸ்ட் பார்த்ததில் தான் மனமும் வயிறும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, October 24, 2018

பஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந்தவிலாஸ் ; PALANI, SIDDANATHAN, SHIRI KANDAVILAS


                            பழனின்னாலே முதலில் ஞாபகம் வருவது பஞ்சாமிர்தம் தான்.திருப்பதிக்கு எப்படி லட்டு பேமஸோ அதே போல் இங்கு பஞ்சாமிர்தம் தான் பிரசித்தி பெற்றது. சித்தநாதன் கடைதான் பேமஸ்.மலை அடிவாரத்திலேயே இருப்பதால் அதிகம் பேர் வாங்குவது இங்குதான்.எப்பொழுது பழனி சென்றாலும் இங்கு வாங்காமல் வருவதில்லை.யாராவது பழனி சென்று வந்து பிரசாதத்துடன் பஞ்சாமிர்தம் கொடுத்தால் போதும், உடனடியாக உள்ளங்கையில் போட்டு நக்கித் தின்பது வழக்கமே.சிறுவயதில் இருந்தே பஞ்சாமிர்தத்திற்கு அடிமையாகி போயிருக்கிறேன்.ஒரு அரைலிட்டர் டப்பாவையே காலி பண்ணும் அளவிற்கு இருந்திருக்கிறேன்.இனிப்பைச் சுற்றி மொய்க்கும் எறும்பைப் போலவே டப்பாவையே மொய்த்திருக்கிறேன்.



                                        பஞ்சாமிர்த டப்பா காலியானாலும் அதில் டீயோ, பாலோ ஊற்றி ஒரு கலக்கு கலக்கி அந்த சுவையோடு அதனை குடித்திருக்கிறேன்.இப்பொழுதும் சுவைக்கத் தவறுவதில்லை எப்பொழுது ப.மி கிடைத்தாலும்.கோவையில் மருதமலை சென்றாலும் அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தமும் வாங்கி சுவைப்பதுண்டு.ஆனால் கோவை டூ பழனி எவ்வளவு தூரமோ அதைவிட பலமடங்கு குறைவாக இங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தத்தின் சுவை.இந்த முறை பழனி சென்ற போது சித்தநாதனிலும், கந்தவிலாஸிலும் பஞ்சாமிர்தம் வாங்கி வந்தேன்.சித்தநாதன் கடையும், கந்தவிலாஸ் கடையும் எதிரெதிரே தான் இருக்கின்றன.இரண்டு கடையிலும் பஞ்சாமிர்தத்தின் சுவைகள் வேறுபட்டே இருக்கின்றன.விலையிலும் அப்படியே.
                                       அரைகிலோ ப.மி சித்தநாதனில் ரூ.35 ம், கந்தவிலாஸில் 400 கிராம் ரூ.40 ம் இருக்கின்றன.வெண்மை நிற டப்பாவில் சித்தநாதனும், மஞ்சள் நிற டப்பாவில் கந்தவிலாஸும் தனித்துவமாய் இருக்கின்றன.சுவையை பொறுத்தவரை கந்தவிலாஸ் ஒருபடி மேலே இருக்கிறது.நன்கு திக்கான கலரில் முந்திரிகள் போட்டு சாப்பிட சுவையாக இருக்கிறது.ஆனால் அதே சமயம் அவ்வப்போது ஏலக்காய் தோல்கள் தொந்தரவு செய்கின்றன.அதையும் மீறி மிக சுவையாக இருக்கிறது.


                          சித்தநாதனில் வெல்லம் மற்றும் முழு கற்கண்டின் சுவை சுவைக்கும் போதே தெரியும்.கொஞ்சம் இளகுதன்மையுடன் இருக்கிறது.பெரிய பெரிய பேரிச்சை துண்டுகள் முழுதாய் இருந்தாலும் சுவையாகவே இருக்கும்.மெலிதான திருநீர் சுவை எப்பவும் இருக்கும்.சித்தநாதன் ப.மி சாப்பிட சுவையாக இருந்தாலும் கந்தவிலாஸ் அதைவிட சிறப்பான சுவையையே கொண்டிருக்கிறது.உள்ளங்கையில் ஊற்றி நுனி நாக்கினால் ஒரு நக்கு நக்கினால் அதன் சுவை அப்படியே உள்ளுக்குள் போகும் பாருங்க..சான்சே இல்ல.. 

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, October 4, 2018

அன்பு - நட்பு


அன்பைச் சொல்ல அழகான வழி
                நண்பர் திண்டுக்கல்.இப்பொழுது சென்னை வாசி.கோயம்பேடு மார்க்கட்டில் மொத்த வியாபாரம்.எனக்கும் அவருக்கும் அதிக பட்சம் இரண்டு மூன்று சந்திப்புகள் தான்.வருடத்திற்கு ஒரு முறை தொலைபேசி உரையாடல் எப்பவோ எதற்காகவோ இருக்கும்.சென்னை வந்த போது ஒரு ஞாயிறு அன்று அவரை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்.பின் வந்த இரண்டு நாட்களும் எனது வேலையில் பிசியானேன்.நேற்று காலை அவரிடம் “இன்றிரவு சென்னையில் இருந்து கிளம்புகிறேன் என்றேன்.”     “ஓகே மாப்ள”, என்று சொல்லி விட்டு இரவு எட்டரை மணிக்கு அழைத்தார்.
           எந்த ட்ராவல்ஸ், சீட் நம்பர் என கேட்டுவிட்டு தொடர்பை துண்டித்தார்.ஒன்பதரை மணிக்கு பஸ்ஸிற்கு கொஞ்சம் பத்து நிமிடம் வந்து சேர்ந்த போது மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு.என்னவென்று கேட்டால் லக்கேஜாக காய்கறிகள் வச்சிருக்கேன் ஊரில் போய் மறக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.நான் சங்கோஜப்பட்டு எதற்கு இதெல்லாம் என்றேன்..அட கொண்டு போங்க..பார்சலை எடுத்து விட்டு போன் பண்ணுங்கள் என்றார்.சரி என்று சொல்லிவிட்டு இரவு வணக்கம் சொல்லிட்டு முதலில் பேஸ்புக்கிலும், பிறகு ஆழ்ந்த நித்திரையிலும் மூழ்க ஆரம்பித்தேன்.அடுத்த நாள் காலை..அதான் இன்று கோவை வந்தடைந்த பின் பேருந்தின் லக்கேஜ் பகுதியில் பார்த்தால் ஒரு மூட்டை காய்கறிகள் இருக்கின்றன..


         ஆச்சர்யத்திலும் அதிசயமும் அடைந்து போன் போட்டு….”யோவ்..என்ன மாமா...ஒரு விசேசத்திற்கு அனுப்புற மாதிரி அனுப்பி வச்சிருக்க..இதை தின்னு தீர்க்கவே ஒரு மாசம் ஆகுமே” என்றவுடன்..சும்மா வச்சி சாப்பிடுய்யா என்று சொல்லி நலம் விசாரித்து விட்டு போனை வைத்துவிட்டார்.அதற்கப்புறம் அந்த மூட்டையை பேருந்து பணியாளின் உதவியுடன் கீழே இறக்கி வைக்க, அதற்குள் நம்ம ஆட்டோ ட்ரைவர் வந்து சேர, அவரும் ஆச்சர்யப்பட்டு " உலகத்திலேயே மெட்ராஸில் இருந்து காய்கறி வாங்கி வந்தது நீங்களாகத் தான் இருக்கும் என சொல்லியபடியே ஆட்டோவில் ஏற்றி, என்னையும் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வர..
மனைவியும்..என்னங்க இது..என ஆச்சர்யப்பட, மேலே எழுதியதை இருக்கும் மீண்டும் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைந்தேன்..இனி வீட்டில் தினமும் வெங்காய சாம்பார், வெங்காய வறுவல், வெங்காய சட்னி, வெங்காய பொரியல், வெங்காய ஃபிரை, வெங்காய பகோடா என நினைக்கிறேன்.

நன்றி மாம்ஸ்..இந்த அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...