Wednesday, April 3, 2019

கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை


கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை
                 கடந்த மாதம் சென்னை வந்திருந்த போது நிறைய முறை கேள்விப்பட்டிருந்த அதிகாலை பிரியாணியை சுவைக்க ஆவல் ஏற்பட்டது.இதற்காகவே அலாரம் வைத்து எழுந்து ஒரு கால் டாக்ஸி புக் செய்து வடசென்னைக்கு பயணமானோம். இந்த பிரசித்தமான இடம் சென்னைக்கு சம்பந்தமே இல்லாத போல இருக்கிறது.ஆனாலும் பரபரப்போடு மக்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர்.
              சென்ற இடம் பார்த்தால் ஆட்டுத்தொட்டி அருகே இருக்கிறது.வியாபாரிகள் வண்டிகளில் இறைச்சியை அப்படியே எடுத்து செல்கின்றனர்.இரு சக்கர வாகனங்கள் முதல் மீன்பாடி வண்டி, மினிடோர் வரைக்கும் வண்டிகளில் இறைச்சிகள் மூடியும் மூடாமலும் செல்கின்றன.ஒட்டு மொத்த சென்னைக்கும் இங்கு இருந்து தான் சப்ளை ஆகிறது என நினைக்கிறேன்.


               ஒரு அழுக்கு படிந்த கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ்.அதற்கு எதிரே ஒரு சின்ன கடை.கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.பிரியாணி அண்டாவை சுற்றி ஒரே வாடிக்கையாளர்கள் கூட்டம்.பிரியாணி அள்ளி போடுபவர் சளைக்காமல் தட்டுக்களில் வைத்துக்கொண்டே இருக்கிறார்.சிக்கன் மற்றும் பீஃப் என இரு வகை பிரியாணிகள்.
பாசுமதி அரிசியின் சுவையோடு, பீஃப் இறைச்சியின் சுவை இரண்டற கலந்து நல்ல ஒரு சுவையை தருகிறது.இறைச்சி நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாஸ்மதி அரிசியும் மிக உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணியின் மசாலா ஒவ்வொரு அரிசியிலும் ஒட்டி இருப்பது சிறப்பு.இதற்கு கொடுக்கப்படும் புதினா சட்னி புதிய சுவையைத் தருகிறது.பிரியாணியின் அளவும் அதிகமே.விலை குறைவாகவே இருக்கிறது.




            காலை 5 மணி முதல் இங்கு பிரியாணி கிடைக்குமாம். பெண்களும் காலையிலேயே இங்கு வந்து சாப்பிடுகிறார்கள்.சுகாதாரம் என்று பார்த்தால் இங்கு எல்லாம் வந்து சாப்பிடவே முடியாது.ஆனாலும் சுவை என்கிற விசயத்திலும், அதிகாலை பிரியாணி என்கிற விசயத்திலும் இந்த சுகாதாரம் என்கிற விசயம் அடிபட்டு போகிறது.அதிகாலையில் பிரியாணி என்கிற விசயமே ஆச்சர்யத்தினை தருகிறது.இரவு முழுக்க வேலை செய்பவர்களுக்கு இந்த பிரியாணி ஒரு வரமே.போய் சாப்பிட்டு விட்டு படுத்தால் மாலை வரை எழுந்திருக்க தேவையில்லை.

            அதிகாலையில் இப்படி பிரியாணி சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அதுவும் பீஃப் பிரியாணி சாப்பிட......வாவ்......

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...