Wednesday, February 21, 2018

கல்பனா திரையரங்கம் - கவுண்டம்பாளையம், கோவை, KALPANA THEATRE, KAVUNDAMPALAYAM, COIMBATORE

கல்பனா தியேட்டர்
               எங்கள் ஏரியாவான கவுண்டம்பாளையத்தில் இருக்கிற ஒரே ஒரு தியேட்டர்.நகரின் வெளியே இருப்பதால் புது படங்கள் வெளியாகாத கால கட்டம்.நகரில் ஓடி முடித்த புதுப்படங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து செகன்ட் ரிலீஸாக இங்கே படம் வரும்.ரீல் முறையில் தான் புரொஜக்டர் இயங்கி கொண்டிருந்தது.நான்கு ரீல் முடிந்தவுடன் மீண்டும் மற்றொரு ரீலை பொருத்தி படம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த கால கட்டம்.
                 அதற்கு அப்புறம் இடைவேளை வரை ரீல் அந்து போகாமல் ஒரே ஒரு இடைவேளை விட்ட காலகட்டம் டிக்கெட் விலையும் மிக குறைவாக இருந்த நேரம்.சேர் 4 ரூபாய்,பால்கனி 8 ரூபாய் என இருந்த காலகட்டம். இரவு காட்சிகளில் கதவை மூடாமல், இயற்கை காற்றை சுவாசித்தபடி பார்த்த காலகட்டம்…சனி ஞாயிறுகளில் கவுண்டம்பாளையத்தினை சுற்றி இருக்கிற மக்கள் ஹவுஸ்புல்லாகி பார்த்துக்கொண்டிருந்த காலகட்டம்… பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் புதுப்படங்களை இறக்குமதி செய்தார்கள்.பின் மீண்டும் க்யூப் தொழில்நுட்ப முறைக்கு மாறி முதல் நாள் ரீலீஸாக ரஜினி, விஜய் அஜித் படங்களை வெளியிட்டார்கள்.ஓடின படங்கள் சீக்கிரமே அரங்கினை விட்டு ஓட தடுமாறித்தான் போனார்கள்.
             அப்புறம் திரைப்படங்களில் அதிகம் லாபம் எடுக்க முடியாமல் திணறிப்போய் திரையரங்கினை மூடி விட்டனர்.அதற்கு பின் ஒரு கார் கம்பெனிக்கு லீஸுக்கு விட்டனர்.ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது.இப்பொழுது அந்த கார் சர்வீஸ் கம்பெனியும் காலி செய்து விட்டது.கடந்த மூன்று நான்கு மாதமாக திரையரங்கினுள் ஏதோ இண்டீரியர் வேலை நடந்து கொண்டு இருந்தது.இப்பொழுது வெளிப்புற வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.என்னவென்று விசாரித்ததில் திரையங்கம் நவீனப்படுத்தப்பட்டு இரண்டு ஸ்கீரீன்கள் கொண்ட அரங்கமாக மெருகேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது என்றார்கள்.நல்ல ஒலி ஒளி அமைப்புடன் புது திரைப்படங்களை கண்டு களிக்க முடியும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.எப்பொழுது திறப்பு விழா என்று தெரியவில்லை.திறப்பிற்க்காக காத்திருக்கிறோம்.
                 இதையெல்லாம் விட இந்த கல்பனா திரையரங்கில் பெரிய அம்சம் என்னவெனில் கேண்டீனில் 2ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காய சமோசாதான்.சமோசா வந்து சேர்ந்து அதன் வாசனை பரவினாலே போதும், இடைவேளைக்கான அறிகுறி என்று அர்த்தம்.கை நிறைய வாங்கிக்கொண்டு அரங்கினுள் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் சமோசாவினை சாப்பிட்டு கொண்டே பொறுமையாய் படத்தினை ரசிக்கும் மனநிலை இருக்கிறதே…ஆஹா…படம் சரியில்லை என்றாலும், சமோசா மட்டும் எப்போதும் நன்றாகவே இருக்கும்.வதக்கிய வெங்காயத்தின் மணமும் சுவையும் எந்த திரைப்படமும் தந்ததில்லை.இந்த தடவை நவீனமயமாக்கப்பட்ட கேண்டீனில் சமோசாவுக்கான இடம் இருக்குமா என்பது கேள்விக்குறியே….
அரங்கம் ரெடியாகட்டும் போட்டோ அப்லோடுகிறேன்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 20, 2018

கோவை மெஸ் – JP சர்பத், காரைக்கால்.JP Sharbat, Karaikkal, Pondicherry

          திருநள்ளாறில் குடி கொண்டுள்ள சனிபகவானின் அருள் பெற்றுவிட்டு, குடிமகன்களின் தேசமான பாண்டிச்சேரியின் மற்றுமொரு சிறப்பான நகரமான காரைக்காலில் கால் பதித்தோம்.நகரம் வெறிச்சோடி வறண்டு கிடக்கிற சூழலை தருகிறது.வெயிலில் வாடமுடியாதோர் நிழல் தேடி அடைக்கலம் புகுந்திருந்தனர்.மக்கள் நடமாட்டம் என்பது குறைவாக இருக்கிறது.வெயில் கொடுமைக்கு இதமாய் தாகம் தீர்க்க சர்பத் கடைக்கு சென்றிருந்தோம்.
             சர்பத், பால் சர்பத், லஸ்ஸி, மோர், பாதாம் மில்க், ஜூஸ் என நிறைய வகைகள் இருக்கின்றன.நன்னாரி சர்பத்தினை ஜிலுஜிலுவென ஐஸ்கட்டிகளுடன் பாதாம்பிசின் சேர்த்து ஒரு டம்ளரில் கொடுக்க, சுவைத்ததும் உள்ளுக்குள் குளிர்ச்சி ஓடுகிறது.அடிக்கிற வெயிலுக்கு இந்த சர்பத் செம குளிர்ச்சியாக இருக்கிறது. சின்ன சின்னதாய் அடித்து நொறுக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் ஒவ்வொரு மிடக்கின் போது வாயில் கடிபடுவது ஜில்லென்ற அனுபவத்தினை தருகிறது.அடுத்து தயாரித்து கொடுத்த பால் சர்பத் இதுவும் அப்படியே..நல்ல சுவையாக இருக்கிறது.காரைக்காலில் உள்ள சிறந்த சர்பத் கடை இதுவாக இருக்கிறது.





           குடிமகன்களின் தேசத்தில் அடிக்கிற வெயிலுக்கு பாரினை நோக்கி ஓடுவதை விட்டுவிட்டு, இதென்ன சர்பத் கடைக்கு என முணுமுணுப்பது தெரிகிறது.அதையும் விட்டு வைக்க வில்லை.அங்கேயும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டுதான் கோவைக்கே பஸ் ஏறினோம் என்பது உங்களுக்கு தெரியாது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...