Friday, May 26, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் அத்தம்மா, பாரம்பரிய உணவகம், ராகி களியும், கருவாட்டுக்குழம்பும், கோவை, HOTEL ATHTHAMMA, COIMBATORE

                 பசி நேரம்...வடகோவை ரயில்வே ஸ்டேசன்.டாடாபாத் வருகிற வழி… பச்சை பசேல் என்கிற போர்டு கண்ணையும் வயிற்றையும் ஈர்த்தது.ஹோட்டல் பெயரும் வித்தியாசமாக இருக்கவே உள்ளே நுழைந்தோம். 

      சின்ன கடைதான். சுவற்றின் இருபுறமும் சின்ன பலகை வைத்து டைனிங் டேபிளாக மாற்றியிருந்தனர்.நின்று கொண்டு தான் சாப்பிட முடியும்.தொங்கிக்கொண்டிருந்த கருப்பு போர்டுகளில் விலைகளுடன் மெனுக்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன.அதில் ராகி களியும் கருவாட்டு குழம்பும் ஈர்த்தன.



                   கடை உரிமையாளரிடன் பேச்சு கொடுத்தபடியே ராகி களி ஆர்டர் செய்தோம். பசுமையான வாழை இலையில் கைக்கு அடங்காத ஒரு ராகி களி உருண்டை வைத்து, கருவாட்டு குழம்பை ஊத்திகிங்க என்று ஒரு பெரிய குண்டாவை உள்ளிருந்து எடுத்து வைத்தார்.கரண்டி எடுத்து குழம்பை கலக்கியதில் நெத்திலி கருவாடுகள் மசாலாவுடன் நீந்திக்கொண்டிருக்க, அலேக்காய் குழம்புடன் இரண்டு நெத்திலி கருவாட்டை எடுத்து களி உருண்டை மேல் ஊற்ற குழம்பாபிசேகம் ஆனது.



                 களியின் ஓரமாய் ஒரு விள்ளலை பிய்த்து குழம்போடு பிசைந்து உருட்டி, வாயில் வைத்தால் கருவாட்டுக் குழம்பின் மணத்துடனும் மிக்க ருசியுடனும் உள்ளே இறங்கியது.கொஞ்சம் கொஞ்சமாய் கனத்த உருண்டை கருவாட்டு குழம்போடு கரைந்து கொண்டிருந்தது.அது பாட்டுக்கு வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நெத்திலி மீனின் சுவையும் நன்றாகவே இருந்தது. பாதி களி உருண்டைதான் சாப்பிட்டிருப்போம்…அதற்குள் கடைக்காரரின் குரல்….இந்தாங்க…சிக்கன் குழம்பு ஊத்திக்குங்க என்று இன்னொரு குண்டாவினை எடுத்து வைத்தார்….அரைத்த வைக்கப்பட்ட சிக்கன் குழம்பு நன்றாக இருந்தாலும், கருவாட்டுக்குழம்புக்கு ஈடாக வில்லை.சிக்கன் குழம்பினை சிறிதளவு டேஸ்ட் பண்ணிவிட்டு, மீண்டும் பழைய குண்டாவிற்கே திரும்பினோம்.களி உருண்டை காணாமல் போகும் வரைக்கும், கருவாட்டுக்குழம்பை ஊற்றி ஊற்றி சாப்பிட்டோம்.
                  இன்னொரு களி உருண்டை சாப்பிட சத்தியமாய் வயிற்றில் இடமில்லை,முழுவதும் கருவாட்டுக்குழம்பால் நிரம்பியிருந்தது.வயிறும் மனசும் நிறைய பெரும் ஏப்பத்துடன் வெளிவந்தோம்.
                  நிறைய வெரைட்டிகள் மெனுகார்டில் இருக்கின்றன.மிக குறைந்த அளவே தயாரிக்கப்படுகின்றன.கடை ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகிறதாம்,கோவையில் முதல் களி உருண்டை ஹோட்டல் இதுதான்.களி உருண்டை பெங்களூர் தள்ளுவண்டிகளில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு முத்தா என்பார்கள்.பெரும்பாலான ஹோட்டல்களில் களி கிடைக்காது.தள்ளுவண்டிதான்.கூட கோழிக்குழம்பினை ஊற்றுவார்கள்.செம டேஸ்டாக இருக்கும்.
           கோவையில் முதன் முதலாய் இங்கு ஆரம்பித்து இருக்கிறார்கள்.சின்ன கடைதான்.இடவசதி நெருக்கடி கண்டிப்பாய் இருக்கும்.ஆனால் மிக்க சுகாதாரமாக இருக்கிறது.டேஸ்டாகவும் இருக்கிறது.
கடை உரிமையாளர் பெயர் சீனிவாசன் என்றார், சொந்த வீட்டிலேயே ஹோட்டல் ஆரம்பித்து இருக்கிறார்.சுகாதாரமாகவும் சுத்தமாகவும் விலை குறைவாகவும் இருக்கிறது.
இளநீர் சர்பத்
இந்த கடைக்கு பக்கத்திலேயே சில்லுனு இளநீர் சர்பத் கிடைக்கும்.இளநீரை வெட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உள்ளே இருக்கிற வழுக்கையையும் வழிச்சி போட்டு, நன்னாரி சர்பத்தினை ஊற்றி, உடைச்ச ஐஸ்கட்டிகளை நிறைய போட்டு, சப்ஜா விதைகளை போட்டு, ஒரு லெமனை பிழிந்து, ஒரு ஆத்து ஆத்தி இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி கொடுப்பாரு பாருங்க, அவ்ளோ டேஸ்ட்....
இளநீர் சர்பத்தின் விலை ரூ 60.


நேசங்களுடன்

ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...

Thursday, May 4, 2017

அனுபவம் - விபத்து

                 விடுமுறையை கழி(ளி)ப்பதற்காகவும் முருகனின் அருள் பெறுவதற்காகவும் கரூரில் இருந்து திருச்செந்தூர் கிளம்பினோம்.குட்டி சுட்டீஸ்களுடன் பெற்றோருடன் உடன்பிறந்தோர் உறவுகளுடன் சுவராஸ்யமாய் ஆரம்பித்தது எங்கள் பயணம்.எப்பவும் போல ஸ்கார்பியோவை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு இன்றைய வருடத்தின் இனிய பாடல்களை கேட்டபடியே மதுரையை நோக்கி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தோம்.
                மதுரைக்கு அருகில் வந்த போது வண்டியில் இருந்து ஒரு சத்தம் கேட்டபடி இருக்க, ஓரிடத்தில் நிறுத்தி வண்டியை சுற்றும் முற்றும் பார்த்து எங்கிருந்து வருகிறது என்று பார்த்ததில் எதுவும் புலப்படவில்லை.மீண்டும் வண்டியை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து கிளம்பினோம்.
                வண்டி எப்பவும் போல 110 / 120 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.மீண்டும் அதே சத்தம் வேகமாய் கேட்கிறது.டயரில் தான் ஏதாவது பிரச்சினையோ, இல்லை அருகில் உள்ள டயர் மேட் உரசுகிறதா என்றும் பேசிக்கொண்டு விரைந்து கொண்டிருக்கிறோம்.இருள் சூழ ஆரம்பித்து விட்டது.
            மென் விளக்கை போட்டு விட்டு விரைந்து கொண்டிருக்கிறோம், சப்தம் மட்டும் நின்றிருக்க வில்லை.மதுரை தாண்டி விருது நகர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி காரின் டயரினை செக் செய்கிறேன்.டயர் மேட் தான் பிரச்சினை போல என்று நினைத்து டயல் மேட்டை பார்த்தால் அது தான் பிராபளம் போல தெரிகிறது.அதனை ஒழுங்கு படுத்தி விட்டு திருப்தியாய் கிளம்புகிறோம்.
                கொஞ்ச தூரம் தான் மீண்டும் அதே சப்தம்.
சரி..ஊருக்கு சென்று விட்டு அங்கு பார்த்து கொள்ளலாம் என்ற படி வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.சாத்தூர், கோவில் பட்டி தாண்டி வந்து கொண்டிருக்கிறோம் கூடவே சத்தத்துடனும்.
            நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மோட்டலில் டீ சாப்பிடுவதற்காக வண்டியை ஓரங்கட்டுகிறோம்.அப்பொழுதும் சந்தேகத்திற்காக ஒரு முறை டயரினை செக் செய்கிறேன்.அப்பொழுதும் புலப்படவில்லை.டீ சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம் அங்கிருந்து.மீண்டும் அதே சத்தம்.இனி காலையில்தான் செக் பண்ண முடியும் முதலில் ஊர் போய் சேருவோம் என்றபடி அங்கிருந்து கிளம்புகிறோம்.
                 வண்டி எப்பவும் போல 120 ல் செல்கிறது.திருநெல்வேலி க்கு இன்னும் 30 கிலோமீட்டர் என அறிவிப்பு போர்டு காட்டுகிறது.அருகில் இன்னும் சில கிலோமீட்டர்களில் கயத்தாறு எனும் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடம் வரப்போகிறது..அதைப்பற்றி பேசிக்கொண்டு வருகிறோம்.டோல்கேட் வருகிறது.அதில் பணத்தை செலுத்தி விட்டு ஒரு சில மீட்டர்கள் நகர்ந்திருப்போம்.வண்டி 20 கிமீ வேகத்தில் இரண்டு வேகத்தடை தாண்டி நகர்ந்த பொழுது டொம் என சத்தம்.
                வண்டி அப்படியே ஒரு பக்கமாய் சாய்ந்து டயர் கழண்டு வண்டியின் ஆங்கிள் தார்ரோட்டில் இழுத்தபடி செல்கிறது.வண்டிக்குள் இருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர கத்துகிறார்கள்.வண்டியை உடனே நிறுத்தி இறங்கி பார்த்தால் டயர் தனியாய் கிடக்கிறது.நவீன வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
             வண்டியிலிருந்து அனைவரும் இறங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம், கூடவே டோல்கேட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ள கடையில் இருந்தவர்கள் என அனைவரும் வேடிக்கை பார்க்கிறோம்.
கரகாட்டக்காரன் படத்திற்கு அப்புறம் நம்ம வண்டிதான் டயர் கழண்டு ஓடியிருக்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஆயத்தமானோம்.டயரில் உள்ள அத்தனை நட்டுகளும் கழண்டு வருகிற வழியிலே விழுந்து விட்டிருக்கிறது.இப்பொழுது நட்டுகள் கூட இல்லை.முதலில் வண்டியை ஜாக்கி வைத்து தூக்குவோம் என்று சொல்லிவிட்டு ஜாக்கி வைக்கிறோம்.அதற்குள் ஒருவர் உதவிக்கு வந்தார்.இன்னொருவர் டோல்கேட் தாண்டி சென்றவர் தனது காரினை நிறுத்திவிட்டு அவரும் உதவிக்கு வந்தார்.மூவரும் சேர்ந்து வண்டியை தூக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
       வண்டியின் டயர் பஞ்சர் ஆகியிருந்தால் ஜாக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.ஆனால் டயர் கழண்டு வெளியே வந்து விட்டதால் தரையை தொட்டுவிட்ட ஆங்கிளை தூக்க ஜாக்கி வைக்க முடியவில்லை.காரில் வந்தவர் அவருடைய ஜாக்கியை கொண்டு வந்தார்.இன்னொருவர் அவருடைய லாரியில் இருந்து பலகை கொண்டு வந்தார்.நான் வேலையினூடே அவரிடம் கேட்கிறேன்.எங்க இருந்து வருகிறீர் கன்னடமா என்று?, ஏனெனில் தமிழை கொஞ்சம் கொஞ்சமாய் உச்சரிக்கிறார்.இல்லை கன்னியாகுமரி என்று.அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.மலையாளம் கலந்த தமிழை அப்படித்தானே பேசுவார்கள் என்று.வண்டி எங்கே என்று கேட்டதற்கு, அதோ டோல்கேட்ல நிற்குது பாருங்க, வேகத்தடை ஏறும் போது ஸ்பிரிங் கட்டாகி விட்டது.அதனால் அங்கேயே நிறுத்தி விட்டேன்.ஒரு லேனை குளோஸ் பண்ணி வைத்து இருக்கிறார்கள்.இனி ரெடியானதுக்கு அப்புறம் தான் கிளம்பனும் என்று சொல்லியபடி எங்கள் வண்டியின் ஜாக்கி வைப்பதற்கு ஆயத்தமாகினார்.
                 நட்டுகள் இல்லாததால் மற்ற டயர்களில் இருந்து ஒவ்வொரு நட்டை மட்டும் கழட்டி இந்த டயருக்கு மாட்டினோம்.
மொத்தம் மூன்று நட்டுகளில் டயரை மாட்டிவிட்டு, ஒரு வழியாய் வண்டியை சரி செய்து விட்டோம்.டயர் மாட்டி விட்டு, உதவி செய்தவரின் பெயரை கேட்க, மோஷாக் என்று சொல்ல, நாங்கள் அனைவரும் ஒருமித்த நன்றியை சொல்ல, புன்னகையுடன் அவரும் பதில் சொல்லி விட்டு கிளம்பினார்.பிறகு லாரி ட்ரைவர் அவரிடமும் நன்றி உரைத்து விட்டு கிளம்பினோம்.
                 எப்பவும் வெகு வேகமாய் செல்லும் எங்கள் சிங்கம் முதல் முறையாய் பாதுகாப்பிற்காய் 60 கி மி வேகத்தில் கிளம்பினோம்.வண்டியில் இருந்து சத்தம் வருவது நின்று இருந்தது, ஆனால எங்களிடம் இருந்து பயமும் படபடப்பும் இன்னமும் இருந்து கொண்டிருந்தது.ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய தூரத்தை இருமடங்கின் நேரத்தில் அடைந்தோம்.வரும் வழியில் இரவு இன்னும் முழுமையாகிருந்தது.திருச்செந்தூர் தமிழ்நாடு ஓட்டலை அடைந்து ரூமில் அடைய மணி 12.20 ஆகியிருந்தது.முருகனின் அருள் பெற காலை வரை நேரம் இருப்பதால் வந்த அலுப்பிற்கு வெகு வேகமாய் உறங்க ஆரம்பித்தோம்…



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...