Monday, September 30, 2013

கோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்தபோது தினமும் பிரியாணியா சாப்பிட்டு போர் அடிக்கவே ஒரு மாறுதலுக்காக போனது மீனாட்சிபவன்.சைவ ஹோட்டல்.மிகப்பிரசித்தமான ஹோட்டல்.காபிக்கு ரொம்ப ரொம்ப பேமஸ்.
கோர்ட் அருகே இருக்கிறது இந்த மீனாட்சி பவன்.உள்ளே நுழைகையிலேயே சைவ ஹோட்டலுக்குண்டான மணம் நம் சுவாசத்தினை எட்ட, அதன் வாசமே நன்றாக இருக்க அதை முகர்ந்தபடியே முன்னேறினோம்.செம பிஸியாக ஹோட்டல் இயங்கிக்கொண்டிருக்க நிறைய சீட்கள் ஆக்ரமிக்கப்பட்டு இருக்கவும்,  காலியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம்.



ஹோட்டலுக்குள் நுழையும் முன்பே இன்றைய ஸ்பெசல் போர்டு பார்த்துவிட்ட படியால் எனது முதல் சாய்ஸ் ராகி தோசை யானது.அது வர லேட்டாகும் அதுவரைக்கும் சும்மா இருப்பது (சுத்தி முத்தி ஒரு அம்மணிகள் கூட காணோம்.திண்டுக்கல் மாதிரியே வறண்டு கிடக்கு) நல்லா இருக்காது என்பதால் பொங்கல் சொன்னேன்.
பொங்கல் செம டேஸ்ட்.வழுக்கிக்கொண்டு செல்கிறது.நல்ல நெய்மணம் ஊரையே தூக்குகிறது.அதற்கு சட்னியும் சாம்பாரும் ஏகப் பொருத்தமாக இருக்கிறது.கொஞ்சம் விள்ளல் எடுத்து சட்னியில் கொஞ்சம் சாம்பாரில் கொஞ்சம் தொட்டு நனைத்து சாப்பிட ஆகா....அமிர்தம்...கொஞ்ச நேரத்திலேயே பொங்கல் தீர்ந்து விட நமக்கு ருசியின் பசி இன்னும் அதிகமாகி போனது.அதற்குள் ராகி தோசை வந்து விடவே அதை ஒரு கைபார்த்தேன்.

கேழ்வரகு தோசை டேஸ்ட் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் தடிமனாக இருப்பதால் சட்னியிலும் சாம்பாரிலும் ஊறவைத்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தக்காளி சட்னி இந்த ராகி தோசைக்கு அருமையாக இருக்கிறது.
அப்புறம் பூரி ஒரு செட் சொல்ல அது சுட சுட ஹண்சிகா மாதிரி உப்பி இருக்க மேலே ஆவி அலைபாய்ந்தது.மசால் உடன் கொஞ்சம் தொட்டு சட்னி தொட்டு பூரி சாப்பிட சுவையோ சுவை..மொத்தத்தில் அனைத்தும் அருமை.

அதற்கப்புறம் காபி சொல்ல அதுவும் வந்து சேர்ந்தது.காபியும் அருமையோ அருமை.இந்த ஹோட்டலுக்கு காபி குடிப்பதற்காகவே நிறைய பேர் வருவாங்களால்.அவ்ளோ சுவையாக இருக்குமாம்.அதுமட்டுமல்லாமல் ஹோட்டல் வெளியே நிறைய பிரபலங்கள் காரில் இருந்து கொண்டே வெறும் காபி மட்டும் குடித்து விட்டு செல்வார்களாம்.அம்புட்டு பேமஸாம்.விலை பரவாயில்லை.அந்த ஊருக்கு ஏற்றமாதிரி இருக்கிறது.


சைவப்பிரியர்களுக்கு ஏத்த இடம்.AMC ரோட்டில் இருக்கிறது.விலையும் குறைவாக அதே சமயம் தரமாகவும் இருக்கிறது.கூடவே ஸ்வீட் ஸ்டாலும் இருக்கிறது.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டு விட்டு வாங்க.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, September 20, 2013

கோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம், பவர்ஹவுஸ், கோவை

ஒரு மாலை நேரம்...டூ வீலர்ல பவர்ஹவுஸ் ரோட்டு பக்கம் போய்ட்டு இருக்கும் போது காத்துல அப்படியே பொரிச்ச மீன் வாசம் நம்ம நாசியைத் துளைக்கவே ஆட்டோமேடிக்காக கை பிரேக் பிடிக்க ஆரம்பித்தது.இந்த ஏரியாவுல நெய்தல் அப்படிங்கிற தமிழ்நாடு மீன் விற்பனை கூடம் மட்டும் தானே இருக்கு அங்க பச்சை மீன் மட்டும் தானே கிடைக்கும், அப்புறம் எங்க இருந்து வாசம் வருது அப்படின்னு வண்டியை ஓரம் கட்டிட்டு பார்த்தா அங்க ஒரு சில பேர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க...இதுல அம்மணிகளும் அடக்கம் வேற..அப்புறம் தான் தெரியுது கவர்மென்டே மீன் வளர்ப்பினை ஊக்குவித்து மீன் விற்பனை பிரிவும், மீன் உணவகமும் ஆரம்பிச்சி இருக்கிறது.
இத்தனை நாள் தெரியாமப்போச்சே...அப்படின்னு வருத்தப்பட்டுக் கொண்டே....சரி... நாமும் ஒரு அட்டண்டன்ஸ் போடுவோம்னுட்டு என்ன இருக்குன்னு கேட்க 
மீன் சில்லி, ஃபிங்கர் ஃபிரை, கார்லிக் மீன் ஃபிரை லாம் இருக்குன்னு சொல்ல, ஒரு சில்லியும், கார்லிக் ஃபிரையும் சொன்னேன்.பொரிச்சு எடுக்க கொஞ்ச நேரம் ஆகுமே அதுவரைக்கும் அங்க இருக்குற அம்மணிகளை நோட்டம் விடறதுக்கு பதிலா பக்கத்துல இருக்கிற நெய்தல் விற்பனை இடத்தினை பார்ப்போம் என அங்க ஒரு எட்டு வைச்சேன்..
விற்பனைக்கூடம் மிக அலங்காரம் செய்யப்பட்ட தோற்றத்தில் நம்மை வரவேற்கிறது.பார்க்கவே பளிச்சென இருக்கிறது.உள்ளே பார்க்கையில் நிறைய மீன்கள் பிரெஷாய் குளிர்பதன பெட்டியில் வாடிக்கையாளரை வரவேற்று வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருந்தன கூடவே விற்பனையாளரும்...பாறை, கட்லா, ரோகு நெய்மீன் போன்றவை அலங்கரித்துக்கொண்டு இருந்தன குளிர்பதன பெட்டியை...
அரசே நிர்ணயித்தவிலை அதனால் விலையும் குறைவாகத்தான் இருக்கிறது. 


நம்ம பதிவுக்கு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் பொரிச்ச மீன் ரெடியானதுக்கான அழைப்பு வரவே கால்கள் இடம் பெயர்ந்தன.



கார்லிக் மீன் துண்டு செம டேஸ்ட்.என்ன மசாலாவென தெரியவில்லை அம்புட்டு டேஸ்டாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகரித்துக் கொண்டேயும் மீனின் அளவு குறைந்து கொண்டேயும் இருக்கிறது.மிக சூப்பராக இருக்கிறது.அதே போல் விலையும் குறைவாக இருக்கிறது.மீன் சில்லி எப்பவும் போல ஒரே சுவை தான்.நெய்மீன் போட்டு தயாரித்து இருக்கிறார்கள்.ஓகே ரகம்..


மாலை நேரம் கொஞ்சம் மங்க ஆரம்பித்தவுடன் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.காலையில் இருந்தே வியாபாரம் நடக்கிறது.அவ்வப்போது வருவதும் போவதுமாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள்...
பிரெஷ் மீன் வாங்கவும் கூட்டம் காலையில் அலை மோதுகிறது.மாலை வரைக்கும் விற்பனை இருக்கிறது.
மத்த இடங்களில் இருக்கும் விலைகளை விட இங்கு குறைவாக இருக்கிறது.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற இடம்.
மேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பவர்ஹவுஸ் ரோட்டில் இடது புறம் இருக்கிறது.
வேலை நேரம் - காலை 10.30 டூ  2.30 மாலை 4.30 டூ 9.30 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 18, 2013

கோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர் ரோடு, திண்டுக்கல்

போன வாரம் திண்டுக்கல் போயிருந்தேன்.இந்த ஊரு பூட்டுக்கு பேமஸா இருந்தாலும் இப்போ அந்த தொழிலை அவங்க செஞ்ச பூட்டாலே இழுத்து பூட்டிட்டாங்க.அதே மாதிரி தான் புகையிலை, தோல்...இதுவும் இப்போ சுத்தமா இல்ல...ஆனா.ஊரைச்சுத்தி மணக்க மணக்க பிரியாணி பண்ணும் ஹோட்டல்கள் தான் பெருகிப்போச்சு.சந்துக்கு சந்துக்கு தெருவுக்கு தெரு, ரோட்டுக்கு ரோடு இருக்கும் போல.அப்படித்தான் ஒரு ரோட்டுல சிலுவத்தூர் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல் போர்டினைப் பார்த்தேன்.மாம்பழ நாயுடு ஹோட்டல் என்று பெயரே வித்தியாசமா இருக்க, கூட வந்த நண்பரைக்கேட்க, இங்க சுவை நன்றாக இருக்கும் என்றும், தினமலரின் அக்கம்பக்கம் எடிசனில் இவர்களின் ஹோட்டல் பத்தி வந்திருக்கு என்று சொல்லவும், நாக்கு அப்படியே  கொஞ்சம் நம நமக்க, அங்கேயே நம்ம சிங்கத்தினை ஓரம் கட்டினேன்.

சின்ன கடைதான்..ஆனாலும் விஸ்தாரமாக இருக்கிறது.அந்த மதிய வேளையிலும் புரோட்டா சூடாக ரெடியாகிக்கொண்டிருந்தது.பக்கா புரடக்சனில் இருந்த மாஸ்டர் தன் கைவரிசையினை மைதா மேல் காட்டிக்கொண்டிருந்தார்.
நண்பருக்கு ஏற்கனவே அறிமுகம் போல அந்த கடை ஓனர்..சிரித்துக்கொண்டே வரவேற்றார் எங்களை..
கடையில் தோதான இடத்தினை எடுத்து ஆக்ரமித்தோம் அனைவரும்.சீக்கிரமே மட்டன் பிரியாணி தீர்ந்துவிட சிக்கன் பிரியாணியை கேட்க,உடனடியாய் கொண்டு வந்து இலையில் வைக்க மணம் நாசியைத்துளைத்தது.கொஞ்சம் எண்ணைப்பசையின்றி பிரியாணி இருந்தாலும் சுவை நன்றாக இருந்தது.சிக்கன் நன்றாக மெது மெதுவென்று இருக்கிறது.அதற்கு மேட்சாக சிக்கன் வறுத்த குழம்பினை கொண்டு வந்து ஊற்ற...அது கரண்டியில் இருந்து நாசுக்காய் வழுக்கிக்கொண்டே விழுந்தது.மிக அற்புதமான டேஸ்ட்..இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளிறங்க, ஸ்பெசலால் ஒரு சிக்கன் பிரை சொல்ல. அதுவும் உடனடியாக வந்து சேர்ந்தது.மிளகு போட்டு பிரட்டிய சிக்கன் செம டேஸ்டாக இருந்தது.




பிரியாணியை சுவைத்த பின் மொறுகுன புரோட்டா கேட்கவும் சூடாய் வந்து விழுந்தது.சிக்கன் வறுவலுடன் சேர்த்து மொறு மொறுவென சாப்பிடுகையில் அருமையாய் இருக்கிறது.அந்த சூடான புரோட்டா மணம் இன்னும் நினைவில் இருக்கிறது.

இன்னும் நிறைய அயிட்டங்கள் இருந்தாலும் மனதும் வயிறும் நிறைந்து போனதால் அதிகம் சாப்பிடமுடியவில்லை.மட்டனில் சுக்கா, குடல், தலைக்கறி என இருக்கிறது.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த கடையில் வான்கோழி பிரியாணி ஸ்பெசல் உண்டாம்.ஒரு வாரம் செம கூட்டமாக இருக்குமாம்.
விலையும் மிகக்குறைவுதான்.அந்த ஏரியாவில் இது ஒரு கடை மட்டுமே விஸ்தாரமாக இருக்கிறது.சுவையும் நன்றாக இருக்கிறது.
பழனி ரயில்வே கேட் அருகில் இந்த கடை இருக்கிறது.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுப்பார்க்கலாம்.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற கடை..காரம், மணம், திடம் என எல்லாம் ஒரு சேர இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Friday, September 13, 2013

கோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை

                 ஒரு மதிய வேளை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பிரியாணி பத்தி பேச்சு வந்தது.நல்லா டேஸ்டா சாப்பிடனும் எல்லா பக்கமும் சாப்பிட்டாச்சு நம்மூர்ல வேற இருக்கா எங்காவது போலாமா அப்படின்னு கேட்டதற்கு வெயிட் பண்ணு இரவு 7 மணிக்கு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் அப்படின்னு சொல்ல மதிய சாப்பாட்டினை கொஞ்சம் லைட்டாக எடுத்துக்கொண்டு இரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.சாயந்திரம் ஆகவும் நண்பருக்கு போன் போட அவர் நமக்கு முன்னே காத்துக் கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் அவரை பிக்கப் பண்ணிக்கொண்டு டவுன்ஹால் நோக்கி சிங்கம் சீறிக் கொண்டிருக்க அப்பொழுதுதான் இந்த பிரியாணி பத்தி பேசினார்.
 
இது ஒரு தள்ளுவண்டிக்கடை.கடை போட்டிருக்கும் பையன் முஸ்லிம் அன்பர்.இவரு பல வருசமா நம்ம நண்பரோட சித்தப்பா கடையில் வேலை செஞ்சிட்டு இருக்காராம்.இப்போ சொந்தமா பிரியாணி கடை போட்டு இருக்கார் என்றும், முக்கிய விசேசங்களுக்கு பிரியாணி செய்து தருபவராகவும். பகல் நேரங்களில் ஆட்டோ  ஓட்டுவதும், அவ்வப்போது சித்தப்பா கடையில் வேலை செய்வதும் என பல முகங்களை கொண்டிருக்கிறார்.சித்தப்பா வீட்டு விழாக்களில் இவரின் கைமணத்தின் சுவையான பிரியாணி சப்ளை செய்யப்படுமாம்.அப்போ சாப்பிட்டு இருக்கேன்.இப்போ புதுசா கடை திறந்திருக்காப்ல.
பிரியாணி கடை ஆரம்பித்து ஒரு மாதம் தான் ஆகுது சீக்கிரமாய் விற்றுத் தீர்ந்து விடுகிறது என்றும் சொல்லவும் கலக்கத்தில் நண்பரை பார்க்க அவரோ ஒரு போன் போட்டு நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் 6 பிரியாணி எடுத்துவைக்கவும் என சொல்லிவிட நமக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.சிங்கமும் சீரா போக ஆரம்பிச்சது.மேலும் பிரியாணி செம டேஸ்டா இருக்கு அதனால நானும் வாரங்களில் மூன்று தினங்கள் வந்து விடுகிறேன் காந்திபுரத்தில் இருந்து பஸ் பிடித்து என சொல்லவும் நம்ம சிங்கம் வெரைட்டி ஹால் ரோடு வரவும் சரியாக இருந்தது.
காரினை பார்க் செய்து விட்டு நடக்க ஆரம்பிக்கையில் மெலிதான தூறல் இட மிக ரம்மியமான இரவுப்பொழுதாக இருந்தது.V.H ரோட்டில் ஒரு கட்சி பேனருக்கு அடியில் விளக்கொளியில் தள்ளுவண்டி மின்னிக்கொண்டிருந்தது.AKF  என்கிற பெயர் பொறித்த கடையின் பிரியாணி வாசம் அந்த இடத்தினையே துவம்சம் செய்து கொண்டிருந்தது.தள்ளுவண்டி கடையினை சுற்றி கூட்டம் இருக்கவே, வாசம் நோக்கி முன்னேறிச்சென்ற எங்களைப்பார்த்ததும் புன்முறுவலோட வரவேற்ற நம் முஸ்லிம் அன்பரின் தந்தையும் தங்கையும் பிரியாணியை ஒரு பிளேட்டில் போட்டுத்தர இளம் சூட்டுடன் பிரியாணி மணம் மூக்கைத்துளைக்க கையில் வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட ஆஹா என்ன டேஸ்ட்...
மிக பக்குவமான சமையல்...மிக  நன்றாக இருக்கிறது.பிரியாணி அரிசி மிக சுவையுடன் நன்றாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அருமையாக இருக்கிறது.
மெல்லிய தூறலில் இளம் சூட்டில் மிதமான காரத்துடன் சாப்பிட என்ன ஒரு ரம்மியம்.ஒரு பிளேட் பிரியாணி நம் மனசையும் வயிறையும் நிறைத்து விடுகிறது.சில்லி சிக்கன் இதற்கு செம காம்பினேசனாக இருக்கிறது.அதுவும் செம டேஸ்ட் உடன் இருக்கிறது.விலை குறைவுதான்.சிக்கன் பிரியாணி ரூ 50 தான்.நல்ல பெரிய சிக்கன் பீஸ் உடன்.
இவர் பிரியாணி தரும் போது பிரியாணியும் தனியாக வறுவல் செய்த கோழியும் பிளேட்டில் இட்டு தருகிறார்.காரணம் கேட்ட போது முழு பீஸ் கிடைக்காது உடைந்து விடும் என்றும் தனியாக தந்தால் உடையாது என்றும் சொல்லி பிரியாணி வெறும் குஸ்கா இல்லை அதிலும் இறைச்சியினை கொஞ்சம் கலந்து விட்டுத்தான் செய்வேன் என்று ரகசியத்தினை உடைத்தார்.
இவர் இப்போ வச்சி நடத்துறது தள்ளுவண்டிக்கடைதான்.உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்காது.நின்னுகிட்டே தான் சாப்பிடனும்.அதுமட்டுமல்ல சிக்கன் பிரியாணி தான் இப்போ செஞ்சிட்டு இருக்காரு.ஆர்டரின் பேரில் மட்டன் பிரியாணி செஞ்சு தருவார்.கூடிய சீக்கிரம் கடைக்கு மாற்றல் ஆயிடுவார்னு நினைக்கிறேன்..நல்ல கூட்டம்..வாழ்த்துகிறேன்..சீக்கிரம் இடம் பெயர...நல்லா சாப்பிட்டு விட்டு வரும்போது வீட்டுக்கு பார்சல் வாங்கிட்டு வந்தேன்.வீட்ல நம்ம அம்மணி சொன்னது பிரியாணி சூப்பருங்கோ...

பிரியாணி மிக நன்றாக இருக்கிறது.ஆர்டர் வேண்டுமென்பவர்கள் வீட்டிற்கோ விசேசத்திற்கோ இவரிடம் முன்னே சொல்லிவிட்டால் சரியான நேரத்திற்கு தந்து விடுவார்.
ஆர்டர் எடுக்க - Shaffi - 99945 19550

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 11, 2013

சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++

                                    சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை  எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.  படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.

               படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.

                             அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார்  மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.

            செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...


                           இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
                        எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில்  நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல்  நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
                            இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது 
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில்,  கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, September 5, 2013

சமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)

போன வாரம் நம்ம வீட்டுல எல்லாருக்கும்  சளி இருமல்ன்னு வந்திடுச்சி அடிக்கடி கிளைமேட் மாறிப்போனதால வந்த வினையா இருக்கலாம்  .நமக்கு பகார்டில ஒரு கட்டிங் விட்டா சரியாகிடும்.ஆனா நம்ம அம்மணிக்கு, குழந்தைக்கு அப்படித்தர முடியாதே...அதனால ஆட்டுக்கால் சூப் குடிச்சா சளி இருமலுக்கு நல்லதுன்னு சூப் ரெடி பண்ண ஆரம்பித்தேன்.கடைக்கு போய் நல்லா நெருப்புல வாட்டின காலா வாங்கிட்டு வந்தேன்.(அங்கயே கட் பண்ணி வாங்கிட்டேன்.).உடம்புக்கு, எலும்பு வலிமைக்கு ஏத்த சூப் இது.


செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
இஞ்சி பூண்டு நசுக்கியது - சிறிதளவு
மிளகு - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
மல்லி - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள்- சிறிது
மிளகாய்த்தூள்- சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
பட்டை கிராம்பு சோம்பு - கொஞ்சம்
உப்பு  - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தூவ







காலை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் தனியா இவைகளைப் போடவும்
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்
கழுவிய ஆட்டுக்காலை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
மல்லித்தூள் மிளகாய், மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து விடவும்.
அடுப்பு சிம்மில் இருந்தால் போதும் ஒரு அரைமணி நேரம் நன்றாக கால் வேகும் வரை வைத்து இருக்கவும்.தண்ணீரும் சிறிதளவு குறைந்து விடும்.உப்பின் சுவை அதிகமானால் நீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.பின் மல்லித்தழை தூவிவிடவும்.
சுவையான சூப் ரெடி..
கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் மிளகுத்தூளையும் தூவி சாப்பிட்டால் கண்டிப்பாய் ஒரு வித விக்கல் வரும்.அதுதான் சூப்பின் சுவைக்கு கிடைத்த வெற்றி..



எங்க கிராமத்துல விறகு அடுப்பினில் செய்யும் போது முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஆட்டுக்காலை எல்லா மசாலாக்களுடன் போட்டு வேக வைத்து விடுவர்.அடுத்த நாள் காலை சூப்பினை சிறிது சூடு பண்ணி சாப்பிட செம டேஸ்ட் ஆக இருக்கும்.ஒரு மாலையின் மழைப்பொழுதில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, September 3, 2013

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.

அம்மா....அந்த அம்மா இல்லை...என் சொந்த அம்மா... நான் பிறந்த கிராமத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்க பிறந்த நாளைப்பத்தி சொன்னாங்க.அப்போதான் உரைச்சது நமக்கு.இதுவரைக்கும் ஏன் மறந்து போனோம் என்று மனம் வலித்தது.நாம மட்டும் வருசம் வருசம் தவறாம கொண்டாடுறோம்.அதே மாதிரி மனைவியோட பிறந்த நாள், அவங்க காதலியா இருக்கிற போதும் கொண்டாடி இருக்கிறோம்.இப்போ குழந்தைகள் ஆன பின்னாடி அவங்க பிறந்த நாளை கொண்டாடிட்டு இருக்கோம்.நம்ம கூட இருக்கிற நண்பர்களோட பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சி கொண்டாடுகிறோம்.போன்லயோ, நேரிலோ இல்லேனா மெயில் ஃபேஸ்புக் இப்படி என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனைலயும் வாழ்த்துக்கள் சொல்லிடறோம்.ஆனா நம்மை பெற்ற தாய் பிறந்த நாளை கொண்டாடுகிறோமா இல்லேனா ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா என்று அன்னிக்குத்தான் மிக அதிகமாக வருத்தப்பட்டேன்.இப்போ சமீபத்துல அவங்க பிறந்த நாள் வர்றது தெரிஞ்சவுடன் கிராமத்துல இருக்குற அம்மாவிற்கு ஆனந்த அதிர்ச்சியினை அளிக்கலாம் என்று சொல்லாமலே கிளம்பினோம் வீட்டிற்கு.
      கரூர் சென்று சின்னதாய் அவர் பெயர் பொறித்த கேக் மற்றும் இன்ன பிற ஸ்வீட் வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தோம்.என்னடா திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்றீங்க என சந்தோசத்தில் திக்கு முக்காடின அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கேக் வெட்ட சொன்னோம்.

தன் வாழ்நாளில் முதன் முறையாக பிறந்த நாள் கேக் வெட்டும் அம்மாவை பார்த்த போது அவர்கள் இனி மேல் எதுக்குடா இதெல்லாம் என்று கேட்டாலும் சந்தோசத்தில் திக்குமுக்காடிய அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவே இல்லை ஆனால் அவர் கண்களில் வெளியேறின கண்ணீர் மட்டும் மிகப்பெரும் ஆனந்தத்தை, அளப்பரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது..வெட்டிய கேக் துண்டுகளை அவருக்கு ஊட்டிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியினை விவரிக்க வார்த்தைகளே இல்லை.என் மகள் ஹேப்பி பர்த்டே வாழ்த்து பாடியபடியே அவருக்கு கேக் ஊட்ட இன்னும் மெலிதாகிப்போனது மனது.இந்த தருணம் என் வாழ்வில் மிக அரிதானதாகும்.இவ்வளவு நாள் எப்படித்தொலைத்தோம் என்கிற கேள்வி மட்டும் மனதை நெருடியது.
    இத்தனை வருடம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் என்று தோணலாம்.கிராமங்களில் இது போன்ற பிறந்த நாள் நிகழ்வுகள் அரிதானவை.அதுமட்டுமல்ல…சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த பிறந்தநாள் விழாக்கள் ஆடம்பரமாக தெரிந்தனவே தவிர அதில் இருந்த அன்பு தெரியாமல் போய்விட்டது.வீட்டிற்கே தொலைக்காட்சி வந்தவுடன் தான் இந்த மாதிரி நிகழ்வுகள் தெரிய ஆரம்பித்தன.பணம் காசு புரள ஆரம்பித்தவுடன் தான் நடுத்தர வர்க்கத்தினரும் கொண்டாடினர்.எதுவும் இல்லாத ஏழை பாழைகள் என்ன செய்வார்கள். என்னைப்பொறுத்த வரை எனக்கு எட்டாக்கனியாக இருந்தது பணம், காசு.. கல்லூரி காலத்தில் என் பிறந்த நாளை நானே கொண்டாடினது இல்லை.யாரும் வாழ்த்தியதும் இல்லை.காதல் உண்டான பின்னாடிதான் வாழ்த்து அட்டைகளை பெற ஆரம்பித்தேன்.போனிலே வாழ்த்துச் செய்திகளை கேட்கவும், அவசர கால தந்தி செய்தியினை என் பிறந்த நாளில் வருடம் தவறாது பெறவும் ஆரம்பித்தேன்.அதுமட்டுமல்லாமல் படிக்கிற காலத்தில் நமக்கே காசு கிடைக்காது.அப்புறம் எங்கே கேக் வாங்குவது.எப்படி கொண்டாடுவது..என்னுடைய காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு பெறும் போராட்டம்.நிலையான வேலை இல்லாமை, தொடர்ந்த காதல், வீட்டில் எதிர்ப்பு இப்படி நிறைய… அப்படிப்பட்ட சூழ்நிலையில் உழன்று கொண்டிருந்த எனக்கு எப்படி கொண்டாட முடியும்.?
     அப்புறம் சொந்த காலில் நின்று பெற்றோர் ஆசி இல்லாமல் காதல் திருமணம் செய்து இன்று ஏதோ ஒரு வகையில் முன்னேறி, அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.
அதற்கப்புறம் மாதம் ஒரு முறை வீட்டிற்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.தினமும் அம்மாவுடன் போனில் உரையாடி வசந்த காலத்தினை மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம்.இனி எங்களின் வருகை எப்போதும் அவர்களுக்கு ஆனந்தமே.அப்படி போன போது தான் அவர்களது பிறந்த நாள் தெரிந்து வருத்தப்பட்டேன்.ஆனால் இன்று கொண்டாடியதில் அனைத்தும் நிறைவேறிவிட்டது. இது போன்ற தருணங்கள் வாழ்வில் மிக அரிதானவை.ஒவ்வொரு வருடமும் எப்பவும் மீட்டெடுக்க முடியாத வசந்த நினைவுகள்.மிக சந்தோசமாக இருக்கிறது.வாழ்க அம்மா...என்றென்றும்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...