Thursday, April 24, 2014

என் ஓட்டு - என் உரிமை

காலையிலேயே ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு கிளம்பிவிட்டேன் எங்கள் ஏரியாவில் இருக்கிற வாக்குச்சாவடிக்கு.எந்த வித களேபரங்களும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த ஏரியா.கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 25 கட்சிகளில் ஒரு சில முக்கிய கட்சிகளின் பணிமனைகள் மட்டுமே இருக்க, அங்கு தொண்டர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தனர்.வாக்குச்சாவடிக்கு பல மீட்டர் தூரம் முன்பே மிலிட்டரி யூனிபார்மிட்ட காவலர் துப்பாக்கியுடன் வரவேற்க, வாக்காளப்பெருமக்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.மழைக்கு கூட பள்ளிப்பக்கம் மாணாக்கர்களாய் ஒதுங்காத பலர், இப்போது வாக்காளர்களாய் ஒதுங்கி கொண்டிருந்தனர்.

               பள்ளிக்குள் நுழைந்ததும் பழைய ஞாபகங்கள் எதுவும் வரவில்லை ஆட்டோகிராப் சேரனைப்போல்.ஆண்களும் பெண்களும் (நம்ம பாஷையில் அம்மணிகளும்) அவரவர் இடம் தேடி தம் பொன்னான வாக்குகளை பதிவு செய்திட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்த பீப் சத்தத்துடன் ஒரு சிலர் வெளியேறிக்கொண்டிருக்க அவர்களின் முகத்தில் தம் கடமையை சரிவர செய்த திருப்தி ஒட்டியிருந்தது. 

         உள்ளே நுழைந்ததும் நீண்ட வரிசை எனக்காக காத்திருந்தது.வரிசையின் வால் பகுதியில் நானும் ஒட்டிக்கொண்டேன். பக்கத்திலேயே அம்மணிகள் வரிசை.கன்னி ஓட்டு போடும் கன்னிகளும், கடைசி ஓட்டாக இருக்கும் என்றெண்ணி போட வந்திருக்கும் முதும்பெண்களும், இன்னும் நான்கைந்து தேர்தலில் வாக்களிக்க தகுதியான பேரிளம் பெண்களும் புடவை, ஜீன்ஸ், சுரிதார் என கலர்புல் காக்டெயில் வரிசை... இருவரது வரிசை மிக மெதுவாக நகர்ந்தாலும், சீக்கிரம் அம்மணிகள் வரிசை காலியாகிக்கொண்டிருக்க, ஆண்களின் வரிசை மெதுவாகவே ஊர்ந்தது.ஆனாலும் அவ்வப்போது வித விதமாய் அம்மணிகள் வரிசையில் சேர்ந்துக்கொண்டு வர நமக்கும் இன்னும் மெதுவாகவே போலாம் என்றிருக்க ஆரம்பித்தது.இடைவிடாது ஒலிக்கின்ற மெஷினின் பீப் சத்தம் அங்கே இருக்கிற சூழ்நிலைக்கு பின்ணணி இசையாய் இருக்க, நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் கிளைமாக்ஸாய் எனது வாக்களிக்கும் முறை வந்துவிட உள்ளே நுழைந்தேன்.விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, என் விரலில் மையிட்டு பின் ஒப்பமிட்டு, மெசினில் என் வேட்பாளரின் பொத்தானை அழுத்த அது அழகாய் சத்தமிட ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புன்னகையுடன் வெளியேறினேன்.


         வெளியேறிய போது என் வரிசையில் இன்னும் கொஞ்சம் கூடியிருந்தது.அதைவிட அம்மணிகளின் வரிசை இன்னும் அழகழாய் நீண்டிருக்க, இன்னொரு ஓட்டு போட முடியாதா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வெளியேறினேன்.

ஓட்டு போட விருப்பம் இல்லாதவங்க கூட வாக்குச்சாவடிப்பக்கம் போய்ப்பாருங்க....உங்களுக்கே விருப்பம் வரும்....
இது ஆண்களுக்கு மட்டுமல்ல....அம்மணிகளுக்கும் தான்...ஹிஹிஹி 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

நம் ஓட்டு நம் உரிமை

 மே - 24.4.2014 இன்று நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் ஓட்டு போட்டு நல்ல அரசினை தேர்ந்தெடுக்க வேண்டும்.நம் பாரதத்தின் வளர்ச்சியானது சிறந்த தலைவர்களின் கைகளில் உள்ளது. அவர்களைத்தேர்ந்தெடுங்கள்.ஒவ்வொரு ஓட்டும் விலைமதிக்க முடியாதது. உங்கள் ஓட்டினை வீணாக்காதீர்கள்.

வரிசையில் நின்று ஓட்டு போட வெட்கப்பட்டுக்கொண்டும் சோம்பேறித்தனம் கொண்டும் வராமல் இருக்கும் நிறைய பணக்காரர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமாக இருக்கிறது.அவர்கள் அனைவரும் தம் ஜனநாயக கடமையை நிறைவேற்றினால் மிக நன்றாக இருக்கும்.



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியாதான்.நம் நாட்டில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்தால் திறமையான அரசினை தேர்ந்தெடுக்க முடியும்.

ஓட்டு போடுங்க....உங்க உரிமையை நிலை நாட்டுங்க.....

நேசங்களுடன்

ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, April 21, 2014

பயணம் - கெலவரப்பள்ளி அணை - ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் கெலவரபள்ளி அணை.
ஒரு வேலை விசயமாக ஓசூர் சென்றிருந்த போது ஃப்ரி டைமில் அந்த ஊரில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என கூகுளிடவும், கெலவரப்பள்ளி அணை, மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம், சந்திரசூடேஸ்வர் கோவில் மற்றும் தளி ஆகிய இடங்களைக் காட்டவும், சரி...பக்கத்தில் இருக்கும் கெலவரப்பள்ளி டேம் போவோம் என்று அங்கு வண்டியைக்கட்டினோம்.


பாகலூர் செல்லும் வழியில் வலது புறம் ஒரு ரோட்டில் பிரிய, 20 நிமிட நேரப்பயணத்தில் கெலவரப்பள்ளி டேம் வந்தோம்.ரோடு படு மோசமாக இருக்க, இருபுறமும் கரட்டுமேடுகளாய் காணப்படுகிறது.ஒரு சில இடங்களில் மட்டும் விவசாய நிலங்கள் விளைந்திருக்க, ஆங்காங்கே கான்கிரீட் காடுகள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் தென்பெண்ணை நதியாய் உருவாகி கர்நாடகா, தமிழ்நாடு வழியே பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் பொன்னையார் நதியாக மாறிப்பாய்கிறது.அதன் குறுக்கே கெலவரப்பள்ளியில் அணை கட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டு அங்குள்ள பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.பரந்து விரிந்து கிடக்கிறது இந்த அணையின் நீர்த்தேக்கம்.ஆனால் அணையோ மிகச்சிறியதாக இருக்கிறது.அணையின் உயரம் 13.5 மீட்டர்கள் மட்டுமே.நீளமும் 105.25 மீட்டர்தான்.மிகப்பெரிய அணையாக இருக்கும் என்றெண்ணி வந்தவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.எங்களுக்கும் அதுவே...




புரட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர், பகுதிகளுக்கு பாசன வசதியை தந்து கொண்டிருக்கிறது.
இந்த அணையை சுற்றுலாத்தளமாக ஆக்கிய அரசு அங்கு சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கு அம்சங்களை அமைத்துள்ளது.ஓசூரின் பரபரப்புக்கு ஓய்வு கொடுக்கும் இடமாக இது இருக்கிறது.பசுமை வாய்ந்த பூத்துக்குலுங்கும் மரங்கள், பலவித பறவைகள் (அம்மணிகளும் சேர்த்து) என காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.


அணைக்கு செல்ல 4 ரூபாய் வசூலிக்கிறார்கள்.இந்த அணையில் கடை கண்ணிகள் என்பது சுத்தமாக இல்லை.எப்போதாவது வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதற்கு கடை போடணும் என்று நினைத்திருப்பார்கள் போல....ஆனால் இது போன்ற சுற்றுலாத்தளங்களில் எப்பவும் போல அம்மணிகள் தத்தம் ஜோடிகளுடன் ஒதுக்குப்புறங்களில் மோன நிலையில் இருப்பதைக்காணலாம்.அணையில் ஒரு சில பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்கும் மீன் வறுவலைக் காணோம்.எல்லா அணைகளிலும் யாராவது ஒருத்தர் மீன் கடை போட்டு இருப்பாங்க.ஆளே இல்லாத கடையில் எதுக்கு  டீ ஆத்தனும் அப்படின்னு விட்டிருப்பாங்க போல...
மிக அமைதியாக ஊரின் பரப்பரப்பின்றி இருக்கிறது.இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்.அது போலவே நம்ம பங்காளிகளுக்கும் ஏற்ற இடம்.வார இறுதியை சுகமாய் செலவின்றி கொண்டாடக்கூடிய இடம்.

ஓசூர் மக்களுக்கான ஒரே பொழுது போக்கு இடம் இதுதான்.சனி ஞாயிறுகளில் கூட்டம் அள்ளும்.ஓசூர் பக்கம் போனிங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.வருங்கால சந்ததியினருக்கு நீர் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது, அணையின் பயன்பாடு என்ன என்பதெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 16, 2014

கோவை மெஸ் – சீதா பாணி (SITA PANI) ரெஸ்டாரண்ட், கணபதி, கோவை

கோவை மெஸ் – சீதா பாணி (SITA PANI) ரெஸ்டாரண்ட், கணபதி, கோவை
காந்திபுரத்தில் இருந்து கணபதி சிஎம்எஸ் பக்கம் போகும் போதெல்லாம் இந்த ஹோட்டலைப் பார்ப்பதுண்டு.முன்புறமாக இருக்கிற கிச்சன்ல ஆட்கள் ரொம்ப தீவிரமா வேலை செஞ்சுட்டு இருப்பாங்க, ஹோட்டலுக்கு முன்னாடி கார்கள் நிறைய நின்னுட்டு இருக்கும், அம்மணிகளாம் அழகழகாய் வந்து போயிட்டு இருப்பாங்க.என்னிக்காவது ஒருநாள் இந்த ஹோட்டலுக்குள் நுழைந்திட வேண்டியதுதான் என எண்ணிக் கொண்டிருப்பேன்.அந்த வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

நண்பருடன் ஒரு மாலை மயங்கிய இரவு வேளையில் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்றோம்.உள் நுழையும்போதே கிச்சனில் இருந்து வாசம் நம்மை வரவேற்கிறது (வரவேற்பறையிலேயே கிச்சன் இருப்பதால்).கண்ணாடி ஷோகேஸில் சைசு வாரியாய் வெட்டப்பட்ட கோழிகள் மசாலாவில் புரண்டபடி நம் பார்வைக்கு விருந்தளிக்கின்றன வித வித போஸ்களில்.காடை கூட மசாலா பெட்(BED)டில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு நம்மை வரவேற்கிறது.மீன்களும் மசாலாவில் நீந்திக்கொண்டிருக்கின்றன, நாம் ஆர்டர் கொடுத்தால் போதும் அவைகளும் எண்ணையில் நீந்த ஆரம்பித்துவிடும்.விதவிதமான வெரைட்டி ரகங்களில் கோழிகள் மசாலாவில் நனைந்தபடி வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன.

கொஞ்ச நேரம் கோழி, மீன், காடை என அனைத்தையும் வேடிக்கைப்பார்த்துவிட்டு, ஹோட்டலுக்குள் நுழைந்தோம். பெரிய ஹாலில் குடும்பம் குடும்பமாக, பேச்சிலர்களாக நிறைய பேர் இருக்க, ஒரு சில அம்மணிகளும் கூடவே பாடிகார்டும் இருக்க, பார்த்தபடி ஏசி ஹாலுக்குள் நுழைந்தோம்.தனிமை வேண்டிய ஒரு சில அம்மணிகள் தத்தம் துணையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும். அந்த ஏசி குளிரிலும் கொஞ்சம் சுட்டெரித்தது நம் மனது.எங்களுக்கான தோதான இடத்தினை தேர்வு செய்துகொண்டு நண்பர் மெனு கார்டினை பார்க்க ஆரம்பிக்க, ஆட்டோமேடிக்காய் நம் கண்கள் அலைபாய்ந்தது.

ஏசி ஹால்..நல்ல இண்டீரியர் அமைப்புடன், மிதமான லைட்டிங் வசதியுடன், வால் பேனலிங் செய்யப்பட்ட சுவருடன், அழகாய் தோற்றமளித்தது.சுத்தமான டேபிள், கலர்புல் பெயிண்டிங், விட்ரிபைட் டைல்ஸ் என கண்ணைக்கவரும் வகையில் மிக ரம்மியமாக இருந்தது.அனைத்தையும் ரசித்து முடிப்பதற்குள், சர்வர் வந்துவிட, உடனடியாய் சிக்கன் சூப், மற்றும் வெஜ் சூப் மற்றும் சிக்கன் வகையில் ஒரு பிளேட் லாலிபாப், அல்பகம் சிக்கன், எக் ஃப்ரைடு ரைஸ் என சொல்ல, உடனடியாய் வந்தது சிக்கன் சூப் மற்றும் வெஜ் சூப்.எப்பவும் நமக்கு சூப் குடிக்கிற வழக்கம் இல்லாத காரணத்தினால் அப்படியே பக்கத்தில் தள்ளிவிட நம் வாண்டுகள் ருசிக்க ஆரம்பித்தன.




அதற்குள் நம்ம அயிட்டமான சிக்கன் (ALFAHAM CHICKEN) வர, பார்த்தால் ஒரு தட்டு முழுக்க பரவிக்கிடந்த செக்கச்சிவந்த சிக்கன் நம் பசியை இன்னும் அதிகமாக்கியது.ஆளுக்கொரு பீசினை எடுக்க, நல்ல புஷ்டியுடன் இருந்த முழுக்கோழி சீக்கிரமே வெறும் எலும்புகளாய் உருமாறியது.காலியான தட்டு நிறைந்து போனது வெறும் எலும்புகளால்.சிக்கன் நெருப்பில் வாட்டியதால், செம டேஸ்டாக இருக்கிறது.நன்றாக வெந்து இருக்கிறது.காரம் அளவாக இருக்க, சாப்பிட சூப்பராய் இருக்கிறது சிக்கன்.

அடுத்து ஆர்டர் செய்தது மலபார் பிரியாணியும் செட்டிநாட்டு பிரியாணியும்.செட்டிநாட்டு பிரியாணியை விட மலபார் பிரியாணி மிக நன்றாக இருக்கிறது.வெள்ளை நிறத்துடன், கொஞ்சம் மணத்துடன் மலபார் பிரியாணி இருக்க, சிக்கன் மசாலும் கறியும் பிரியாணிக்குள் ஒளிந்திருந்தது, கூடவே ஒரு முட்டையும்...பிரியாணி சாதத்துடன் கொஞ்சம் மசாலாவினை சேர்த்து எடுத்து வாயில் போட்டால், ஆஹா என்ன ருசி....செமையாக இருக்கிறது.மிக நன்றான சுவையுடன் இருக்கிறது பிரியாணி.செட்டிநாட்டு பிரியாணி கொஞ்சம் சுமார் தான்.என்ன இருந்தாலும் நம்மூர் பாய் பிரியாணி போல் இல்லை.


உண்ட உணவுகள் செரிக்கணுமே என்பதற்காக ஒரு லைம் சோடாவினை ஆர்டர் செய்து கொஞ்சம் காலியாக இருந்த வயிற்றினை நிறைத்துக்கொண்டு பில்லினை செட்டில் செய்து வெளியேறினோம்.

மொத்தத்தில் நன்றாக இருக்கிறது.ருசி, தரம், உணவகத்தின் சுகாதாரம், என எல்லாம் நன்றாக இருக்கிறது.விலை கோவைக்கேற்றபடி இருக்கிறது.சிக்கன் சூப் 75. வெஜ் சூப் 70, அல்பகம் சிக்கன் முழு கோழி 250, லாலிபாப் 140 பிரியாணி 120, என கோவைக்கான விலையில் இருக்கிறது.எனினும் சுவை நன்றாக இருக்கிறது.எப்பாவாது அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுவிட்டு வாங்க...
கணபதி சிஎம்எஸ் பள்ளிக்கு எதிரில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 8, 2014

கோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை

ஒரு மதிய நேரம்.....நண்பரும் நானும்....சரவணம்பட்டியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, பசி வயிற்றைப்பதம் பார்க்கவே ரோட்டின் இருபுறங்களிலும் பார்வை ஹோட்டலைத்தேடி அலைபாய்ந்தது.ஏகப்பட்ட கடைகள் முளைத்திருக்கின்றன, எந்தக் கடைக்குள் நுழையலாம் என்று வயிறு நினைத்தாலும் முதலாய் போய் அவஸ்தைக்குள்ளாக வேண்டாம் என்று மனது நினைத்தது.எப்போதோ நண்பன் சொல்லியிருந்த ஒரு ஹோட்டல் பெயர் ஞாபகத்திற்கு வரவே அங்கு செல்லலாம் என யோசித்ததில் அருகிலேயே அந்த ஹோட்டல் இருக்க எதிரில் வண்டியை பார்க் செய்துவிட்டு நுழைந்தோம்.அந்த ஹோட்டல் பனானா லீஃப் –(Banana leaf )

ஹோட்டல் உள்ளே நுழையும் முன்பே நம் கண்களை எட்டிய மெனு போர்டு பார்த்ததும் பசி இன்னும் அதிகமாகிறது.சிக்கனில் இவ்ளோ வெரைட்டியா என யோசித்தபடி வாஷ் பேசினைத் தேடி உள்ளே செல்கையில் கேஷியர் முதல், சர்வர் வரை ஒரு மலையாள வாடை வீசவும், அதை உறுதிசெய்வது போல பக்கத்து டேபிளில் ஒருவர் கேரள அரிசியான மட்டை அரி சாதத்தினை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஐ........கேரள அயிட்டம்லாம் இங்க கிடைக்கும் போல என மனம் ஆனந்தக் கூத்தாடியது.கை கழுவிக்கொண்டு தோதான இடத்தில் அமர்ந்து மட்டை அரி சாதத்தினையும், மீன் குழம்பினையும் ஆர்டர் செய்து விட்டு காத்திருக்க, காலியாகி கிடந்த சேர்கள் அனைத்தும் நிரம்பிக்கொண்டிருந்தது, மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டே வந்து அமர்கிற ஆட்களால்......

நமக்கான உணவு வரும் வரை சுற்றிலும் நோட்டமிட்டதில் ஹோட்டல் மிகப்பெரிதாக இருக்கிறது. உள் நுழையும் போது ஏசி இல்லாத பொது இடமும், தனியாக ஏசி அறையும் இருக்கிறது.வெளியே கண்ணாடி போட்ட கிரில்லில் மசாலில் மேக்கப்பிட்ட கோழி நெருப்பில் உருண்டு புரண்டு கொண்டிருந்தது வாசத்தினை வெளியே விட்டபடி....
கொஞ்ச நேரத்தில் நமக்கான உணவு வந்த போது, மீன் குழம்பு வாசம் நம்மை தூக்கியடித்தது.மட்டை சாதத்துடன் கலந்து கட்டி அடிக்க செம டேஸ்டாய் இருக்க, அத்தனை சாதமும் சீக்கிரம் தீர்ந்து போக, நம்மைப்பார்த்துக்கொண்டிருந்த சர்வர், உடனடியாக மீண்டும் தட்டு நிறைய சோறினைக்கொட்ட, வயிறு இன்னும் வாய் பிளந்தது.பொறுமையாய் மீன்குழம்பினை முடித்துவிட்டு, கொஞ்ச நஞ்சம் இருக்கிற பொரியல், சம்பந்தி, ரசம், சாம்பார், மோர் பாயசம் என அனைத்தையும் முடித்தபோது திருப்தியாய் வயிறு நிறைந்திருந்தது...கூடவே மனமும்.....


இதற்கிடையில் வெயிலுக்கு போட்டியாக இருக்கட்டுமே என்று ஒரு சிக்கன் லாலிபாப் சொல்ல, அதுவும் சீக்கிரம் வந்தது காலில் அலுமினிய பேப்பரை சுத்தியபடி....சிக்கன் சொல்லவே வேணாம்...அது எப்பவும் நல்லாயிருக்கும்..
கூட வந்த நண்பர் எக் பிரைடு ரைசினை சொல்ல அதுவும் சூடாய் வர, ஜாமினால் கோலம் போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.இதைப்பத்தி சொல்ல ஒண்ணுமில்லை.


பக்கத்து டேபிளில் அமர்ந்த ஒருவர், பிரியாணி ஆர்டர் பண்ண, வெள்ளையும் சொள்ளையுமாக, நடுவில் மசாலாவோடு வர, மனிதர் பூந்து விளையாட ஆரம்பித்தார் மலபார் பிரியாணியில்.ஆக மொத்தம் இந்த ஹோட்டல் கேரள மெனுக்களால் நிரம்பி வழிகிறது.கேரள சாப்பாடு, மலபார் பிரியாணி, மீன் பொரிச்சது என அனைத்தும் இருக்கிறது.நம்மூர் சாப்பாடும், சைனீஸ் அயிட்டங்களும் இருக்கின்றன.
சாயந்திர நேரம்  ஜோடி போட்டு சுத்தும் ஐடி அம்மணிகளால் நிறைந்து வழிகிறது.சிக்கன் காம்போ என்கிற பெயரில் நிறைய வெரைட்டி இருக்கிறது.கிரில்லும், தந்தூரியும் போட்டி போட்டுக்கொண்டு அதிகம் வாடிக்கையாளர்களை வசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
கேரள உணவுகளை விரும்பி சாப்பிடனுமா....ஹோட்டல் பனானா லீப் போலாம்.... கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்...உணவும் மிக டேஸ்டாக இருக்கிறது.மெனு கார்டினைப்பார்த்தால் ஒரு பைண்டிங் பண்ணின சின்ன புக் போல இருக்கிறது.புரட்டவே நேரம் சரியாக இருக்கும் போல...

விலை சுவைக்கேற்ப, தரத்திற்கேற்ப, நம்ம கோவைக்கேற்ப இருக்கிறது.அந்தப்பக்கம் போனீங்கன்னா, கேரளா உணவு சாப்பிடனும்னா போலாம்...கடைசியில் கேட்க மறந்திட்டேன்..பீஃப் கறி கிடைக்குமான்னு.... இதுக்காவே அடுத்த முறை போகணும்.....
சத்தி ரோட்டில் அத்திப்பாளையம் பிரிவு பஸ்ஸ்டாப் அருகே மிக விஸ்தாரமாக இருக்கிறது இந்த ஹோட்டல்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 1, 2014

பு(து)த்தகம் - திருடன் மணியன்பிள்ளை

திருடன் மணியன்பிள்ளை
                திருப்பூர்ல நடந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்தபோது வரிசையா ஒவ்வொரு ஸ்டால்களா பார்த்துட்டு வந்திட்டு இருந்தேன்.காலச்சுவடு அரங்கில் இருந்த திருடன் மணியன்பிள்ளை புத்தகம் என் கண்களை ஈர்த்தது.எடுத்து ஓரிரண்டு பக்கங்கள் புரட்டவே மிக சுவாரஸ்யமாக இருக்க, வாங்கிக்கொள்ளலாம் என மனது தீர்மானித்தது.ஆனால் புத்தகத்தின் சைஸ் கொஞ்சம் மிரட்டவே, எப்படி இவ்ளோ எடையோடு தூக்கிக்கொண்டு இன்னும் பல ஸ்டால்களை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்குமே என நினைத்து மணியன்பிள்ளையை கடைசியாய் சந்திக்கலாம் என்றெண்ணி விட்டு கிரிவலம் சுத்துவது போல் அனைத்து ஸ்டால்களையும் சுத்திவிட்டு வந்தால் மணியம்பிள்ளை புத்தகம் காணவில்லை.அதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட்டார்கள்.....சாரி..... வாங்கிக்கொண்டு விட்டார்கள்.... காலச்சுவடு ஆட்களிடம் கேட்டபோது புத்தகம் இனி சென்னையில் இருந்துதான் வரும், ஓரிரு நாட்களாகிவிடும் என சொல்லிவிட்டனர். மீண்டும் திருப்பூர் வந்து வாங்க வேண்டுமா என யோசித்து விட்டு வெளியேறிவிட்டேன்.ஒரு நல்ல புத்தகத்தை தவறவிட்டுவிட்டோமோ என்று மனது கிடந்து துடித்தது. ஆனாலும் இந்தப்புத்தகத்தினை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று வீட்டிற்கு வந்தவுடன் ஆன்லைனில் தேடியபோது நம்மபுக்ஸ் தளத்தில் கிடைத்தது.உடனே ஆர்டர் போடவும்,  அடுத்த அரைமணி நேரத்தில் கன்பர்மேசனுக்காக ஒரு போன் கால் பொள்ளாச்சியில் இருந்து.பிறகு தான் தெரிந்தது நம்ம புக்ஸ் பொள்ளாச்சியில் இருப்பது என்று..அடுத்த நாளே புரபஷனல் கொரியரில் வீடு தேடி வந்தார் திருடன் மணியன்பிள்ளை.

          புரட்ட ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.மொத்தம் 590 பக்கங்கள்.ஒவ்வொரு நாளும் கிடைக்கிற நேரத்தில் படிக்க ஆரம்பித்து மொத்தமாய் தீர்ந்து போனது.பிறகு சமயம் கிடைக்கும்போதெல்லாம் இன்னும் புரட்ட ஆரம்பித்தேன்...புரியாத ஓரிரு விசயங்களும் இன்னும் ஆழமாய் புரிந்து போனது.எப்பொழுது படித்தாலும் சுவாரஸ்யங்கள் அகலாமல் இருப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.ஒரு திருடன் தன் வரலாறாக வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி விவரித்து இருப்பதால் அந்த திருடன் மேல் மதிப்பையும் அனுதாபத்தினையும் அளிக்கிறது.

            கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வாழ்த்துங்கல் என்கிற ஊரில் கொடுந்தற என்கிற பிரபல குடும்பத்தில் பிறந்த ஒரு திருடனின் கதை தான் இந்த புத்தகம்.சிறுவயதில் தந்தையை இழந்தவுடன் மொத்தமும் மாறிப்போன ஒரு வளர்ந்த பையனின் வரலாறு.படிக்கின்ற காலத்தில் குடும்பச்சூழல் மாறிவிட்டதால் சிறு திருட்டில் ஆரம்பித்து பின் கேரளாவில் புகழ்பெற்ற பிரபல திருடனாக மாறி, மைசூரில் மிகப்பெரும் கோடிஸ்வரனாகி, கர்நாடக முதல்வரோடு ஒரே ஹெலிகாப்டரில் பயணித்து, அமைச்சராவதற்கு முன்னால் போலீஸிடம் பிடிபட்டு, ஒரே நொடியில் கோடிஸ்வரனாகி இருந்த சலீம்பாஷா என்கிற மணியன்பிள்ளை ஏழ்மையாகி, தண்டனை பெற்று, இப்போது திருந்தி வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த புத்தகம்.

              இந்த புத்தகத்தில் இவர் விவரித்து இருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சுவாரஸ்மானவை.ஒரு வீட்டில் திருடச்சென்று மாட்டிக்கொண்டது, திருடிய பொருட்களை போலிஸ்காரர்களிடமே கொடுத்தது, கூட இருக்கும் நண்பர்களுக்காக திருடி உதவி செய்தது, தன்னைப்பழிவாங்கிய போலீஸ், நீதிபதி வீடுகளில் ஆபரேசன் நடத்தியது என அனைத்தும் மிக சுவாராஸ்யமே....

            இந்தப்புத்தகம் ஒரு திருடனின் இயல்பை, சமூகத்தினால், நீதிமன்றத்தால், காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒருவனது வாழ்க்கையை விவரிக்கிறது.மற்றபடி திருட்டை ஊக்கப்படுத்தியோ, குற்றம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகயோ இல்லை.தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதிந்து கிடக்கிற உண்மைகளை காலங்கெட்டு உணர்ந்து பார்த்து இப்போது நம்மை உணர வைக்கிற எழுத்துக்களை இந்த புத்தகத்தில் காணலாம்.

               ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு குணாதியசங்கள் உண்டு.பல திருடன்கள் மணியன்பிள்ளைக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.(திருடனுக்கு திருடன் தானே நண்பன்).இப்படி ஒவ்வொருவரும் திருடச்செல்லும் வீட்டில் திருடியபின்பு நன்கு சாப்பிட்டுவிட்டு பண்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வருவது, நன்றாக குளித்துவிட்டு பவுடர்லாம் பூசி உடைகளை மாற்றி ஒரு ஜெண்டில்மேனாக வெளிவருவது,பிடிக்காத நபர்களின் வீட்டில் நடுக்கூடத்தில் மலம் கழித்துவிட்டு வருவது என ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் அதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது, நீதிமன்றத்தில் தன் தாயை அவமானப்படுத்தி, வேண்டுமென்றே தனக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் திருட முயற்சித்து முடியாமல் போக தன் நண்பனை விட்டு அவர்க்கு உடல் நலம் குன்றச்சொன்னது என ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காட்சியைப்போல மனக்கண்களில் விரிகிறது.

             இந்தப்புத்தகம் முழுவதும் ஒரு குடும்பத்தின் வறுமை, அதன் காரணமாக திருட்டு வாழ்க்கைக்கு நுழைந்தது, திருடனின் சாகசங்கள், அவன் வாழ்ந்தவிதம், போலீசில் துன்பப்பட்டது, தன் வழக்கில் தானே ஆஜராகி வாதிட்டது, கல்யாணம், நட்பு, விபச்சாரிகளுடன் தொடர்பு, பக்கத்து மாநிலத்தில் ஏழைப்பங்காளன் ஆனது, கோடிஸ்வரன் ஆகி ஏழையானது,  சிறைத்தண்டனை, நன்னடத்தை காரணமாக போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றியது என அனைத்து நிகழ்வுகளும் ஒரு திரைப்படம் போல கண்முன் தெரிகிறது.

              திருடச்சென்ற வீட்டில் ஏற்பட்ட அனுபவம், மாட்டிக்கொண்ட அனுபவம் எனப்பலவும் விரவிக்கிடக்கிறது....வெகு நேரம் நீண்ட சண்டையில் கெட்டியாக பிடித்த ஒரு வாலிபனை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து, அடுத்தநாள் அவன் உயிரோடிருக்கிறானா என்பதை அறியும் பொருட்டு விசாரித்ததில், அவன் மிஸ்டர் பாத்திமா காலேஜ் என்றும், அவனுடைய மாமா கொல்லம் சர்க்கிள் என்பதும், பிற்காலத்தில் அவர் ஒரு ஐபிஎஸ் ஆகி தன்னைச் சந்தித்தது என எல்லாம் விரிவாய் சொல்லியிருக்கிறார். திருடச்சென்ற இடத்தில் தற்கொலை செய்யவிருந்த ஆளைக்காப்பாற்றியது, திருடிய பணத்தில் பிறர்க்கு உதவியது, திருடிய பணத்தில் ஆடம்பரமாய் வாழ்ந்தது என அனைத்தும் படிக்க படிக்க சுவாரஸ்யமே....
              ஒவ்வொரு திருட்டு அனுபவத்திலும் ஒரு பாடம்..ஒரு தத்துவம் என நன்றாகவே உணர்ந்திருக்கிறார் நமக்கும் உணர்த்தியிருக்கிறார்  எழுத்தாளர். இந்தப்புத்தகம் முழுக்க முழுக்க சுவாரஸ்யமான சம்பவங்கள், மனதைப்பிழியும் சோகங்கள் என எல்லாம் இருக்கிறது.மலையாளிகளுக்கு இயல்பாகவே பேசும்போது ஒரு நக்கல் தொனி, காமெடி வெளிப்படும்.அதுதான் இந்தப்புத்தகத்திலும் நிறைய இருக்கிறது.பேச்சும் தொனியினை எழுத்தினில் நகைச்சுவையாக கொண்டிருப்பதில் இந்தப்புத்தகம் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது.

              இந்தப்புத்தகத்தினை பற்றி இன்னும் எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.காலச்சுவடு வெளியீட்டில் வந்திருக்கும் இந்தப்புத்தகம் ஜி.ஆர் இந்துகோபன் எழுதி, தமிழில் குளச்சல் மு யூசுப் மொழிபெயர்த்துள்ளார்.விலை 450.00, மொத்தப்பக்கங்கள் 590

இந்த தன்வரலாறு படித்ததில் இருந்து அந்த திருடன்(ர்) மணியன்பிள்ளையை சந்திக்க ஆவல் ஏற்பட்டிருக்கிறது...விரைவில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...