Friday, September 20, 2019

கரம் - 36

விநாயகர் சதுர்த்தி 

                             எங்கள் ஏரியாவில் நண்பர் ஒருவர் பணம் வசூல் செய்து விநாயகர் சிலையெல்லாம் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச் சிறப்பாக நண்பர்கள் மற்றும் அந்த ஏரியா மக்களோடு கொண்டாடினார்கள்.இந்த விழாவின் செலவுத் தொகையை அவரிடம் கேட்ட போது மொத்த செலவு 138000 ஆனதாம்.அவரது தெருவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் இந்த தொகை.இது ஒவ்வொரு ஏரியாவிற்கும் சிலையின் வடிவம், டெகரேசன் மற்றும் வாணவேடிக்கை இவைகளை பொறுத்து விலை மாறும்.கோவையில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டிருக்கின்றன.(இன்னும் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை).
இவைகளின் ஒட்டு மொத்த மதிப்பினை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.தண்ணீரில் கரைந்து போன தொகையின் மதிப்பை கண்டால் கண்ணீரே வந்து விடும்.தண்ணீரில் கரைவது மட்டுமல்லாமல் சுற்றுப்புறம் மாசு அடைவதும் உண்மைதான்.



                  இவ்வளவு செலவு பண்ணி நகரை பரபரப்பிற்குள்ளாக்கி, சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தி, மக்களை நெரிசலில் அல்லல்பட வைக்கும் விழாவினை கொஞ்சம் மாற்றி செய்யலாமே..

உங்கள் தெருவில் வசூல் செய்த பணத்தில் சின்னதாய் ஒரு விநாயகர் போதும்.அதுவும் களிமண்ணால் செய்ததாய் இருக்கட்டும்.

அந்த தெருவில் உள்ள பள்ளி (அ) கல்லூரி செல்லும் யாருக்காவது, கல்வி உதவியை அளியுங்கள்.

ஏழைப் பெண்களின் திருமணத்தை நடத்தி வையுங்கள்.

மாற்றுத்திறனாளிகள் யாராவது இருப்பின் அவர்களுக்கு கை கொடுங்கள்.

முடியாமல் இருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவியை அளியுங்கள்.
உங்கள் தெருவினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

மருத்துவ முகாம் அமைத்து நோய்களை கண்டறிந்து குணமாக்க உதவி புரியுங்கள்.

விநாயகர் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்யுங்கள்.

அரசாங்கம் செய்து தராத வேலைகளை இந்த தொகையில் செய்து கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு ஏரியாவும் செய்தால் ஒட்டு மொத்த ஊரும் நன்றாக மாறிவிடும்.இப்படி எவ்வளவோ செய்யலாம்.

மூன்று நாட்கள் தெய்வமாய் வணங்கிவிட்டு, பின் அதை சித்ரவதை செய்து தண்ணீரில் மூழ்கடிப்பதை எங்ஙனம் ஏற்றுக்கொள்வது.ரசாயன கலவைகளால் குளங்கள் ஏரிகள் ஆறுகள் கடல் மாசு அடைவதையும் தவிர்க்கலாமே.

அடுத்த வருடமாவது சிக்கனத்தை கடைப்பிடியுங்கள்.
ஊர் கூடி தேர் இழுங்கள். நாமும் சுத்தமாவோம்.நாடும் சுத்தமாகும்.
உங்கள் பக்தி என்பது நாட்டின் நலனிலும் இருக்கட்டுமே.
இன்னும் கொஞ்சம்...

பு(து)த்தகம் - நான் ஷர்மி வைரம் ( A), 24 சலனங்களின் எண்

பு(து)த்தகம் 

நான் ஷர்மி வைரம் ( A)



நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்.

                      சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று.அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை.

              
               மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது.நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்தோடு முடிப்பது ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ணக்கார பெண்களின் லைஃப்ஸ்டைல், அவர்களின் மறுபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.சரோஜாதேவி புக் கொஞ்சம் அப்பட்டமாய் இருக்கும்.
                               ஆனால் இதில் பூசி மெழுகப் பட்டிருக்கிறது.படிக்க ஒன்றும் விரசமாய் தெரிவதில்லை அதான் இந்த நாவலின் சிறப்பம்சம்.காதல் காமம் துரோகம் என எல்லாம் கலந்து கட்டி, படிக்க படிக்க மிக சுவாரஸ்யத்தை தந்திருக்கிறார் எழுத்தாளர்.புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முழுவதும் முடிக்கும் வரை பல ஆச்சர்யங்களை தந்து கொண்டே இருக்கிறது.செம இண்டரஸ்டிங்.



24 சலனங்களின் எண்


                          ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.
திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. 

                    திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர். 
                              ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது..நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில்.

                         ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ பேர் உழைப்பு காரணமாகிறது.கஷ்டபட்டு உருவாக்கிய திரைப்படம் திரைக்கு வராமலே முடங்குவதால் எத்தனையோ பேரின் உழைப்பும் திறமையும் வீணாகி போய்விடுகிறது.அதை விரிவாய் நாவலில் விறுவிறுப்புடன் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதி இருக்கிறார்.இந்த நாவலில் வரும் இயக்குநர் ராம்ராஜ் அத்தியாயங்கள் ஒரு விக்ரமன் படம் பார்த்தது போல் இருக்கிறது.அவ்வளவு அருமை.சோக காட்சிகள் வந்தால் எப்படி தொண்டையை துக்கம் கவ்வுமே, அது மாதிரி அவரது அத்தியாயங்கள்.கடைசி கிளைமாக்ஸில் ஒரு திரைப்படம் பார்த்த விளைவு.

                           படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கான நாவல்.திரையுலகில் திரைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்களை ஒளிவுமறைவின்றி சொல்லி இருக்கிறார் நாவலின் இயக்குநர்.இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான்.நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் வாக்கிய
எழுத்துப் பிழைதான்.தமிழை தப்பாகவே எழுதி இருந்தாலும் படித்துவிடக்கூடிய நிலையில் இருந்தாலும், எழுத்துப்பிழை இருப்பதால் கவனம் சிதறுகிறது. அதையும் தாண்டி இந்த நாவல் படிக்க படிக்க நன்றாகவே இருக்கிறது.
                           இந்நாவலை படித்து முடிக்கையில் வெள்ளித்திரை படம் கண்ணுக்கு முன்னால் வந்து செல்கிறது.
வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 9, 2019

கோவை மெஸ் -ஹோட்டல் தேவி , கடலூர், KOVAI MESS - HOTEL DEVI , CUDDALORE

                   சிதம்பரம் போன போது பக்கத்துல தான் பாண்டிச்சேரி பார்டரு...போனா கொஞ்சம் குவாலிட்டியா நமக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று உள் மனசு சொல்லியதால் தமிழக அரசாங்கத்தின் வருமானத்தை இன்று ஒரு நாள் தள்ளி வைக்கலாம் என்று நினைத்த படியே கடலூருக்கு பஸ் ஏறினேன்.ஆகவேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போகலாம் என்று நிறைய பேரை கேட்டதில் அனைவரும் சொன்னது இந்த ஹோட்டலைத் தான்.

கடலூரில் உள்ள மிகப் பிரபலமான உணவகம் தேவி ஹோட்டல்.கடலூர் டூ சிதம்பரம் ரோட்டில் இருக்கிறது.கடலூரின் வெயிலுக்கு ஒதுங்க கூடிய ஏசி ரெஸ்டாரண்டாய் இந்த ஹோட்டல் இருக்கிறது.

ஏசி ஹோட்டல்.இன்டீரியர் அமைப்பில் அருமையாக இருக்கிறது.மதிய நேரம் என்பதால் என்னவோ கூட்டம் முண்டியடிக்கிறது.தோதான இடம் தேடி அமர்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் முழுக்க முழுக்க குடும்பங்கள் தான்.வீட்டில் யாரும் சமைப்பதில்லை போல....


உள் அமர்ந்ததும் முதலில் சூப் ஒன்றை தருகிறார்கள்.அதற்கு பின் ஆர்டர்.ஆர்டரிட்டதும் வரிசையாய் வந்து சேர்கிறது.இறால் பிரை. அளவான சைசில் உள்ள இறால்களுடன் மசால் சேர்ந்து செம ருசியாய் இருக்கிறது.அதே போல குடல் வறுவலும்.செம டேஸ்ட்.
அளவான காரத்துடன் மிக மிக அம்சமாய் இருக்கிறது.





இங்கே ஸ்பெசல் என சொல்லப்படும் மல்லி சிக்கன் பயங்கர சுவை.அமோகம்.மொறு மொறுவென்று சில்லியாக சாப்பிட சுவையாக இருக்கிறது.பச்சை பசேலென சுவையுடன் இருக்கிறது.
ஹோட்டல் நிறைந்து இருக்கிறது.கூட்டம் கூட்டமாய் குவிகிறார்கள்.விதவிதமான அனைத்து உணவுகளும் மிக ருசியாய் கிடைக்கிறது.

கடலூரில் தவற விடாத உணவகம் தேவி ஹோட்டல்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

INFUSIONS - CHOCOLATE, RAM NAGAR, COIMBATORE - சாக்லேட் , கோவை

சாக்லேட்.
இதை மிகவும் விரும்பி சாப்பிடாதவர்கள் இவ்வுலகில் இருக்கவே முடியாது.
குழந்தைகள், பெண்களின் பேவரைட் சாக்லேட் தான்.அன்பை சொல்ல அழகான வழி மைசூர்பாவில் மட்டுமல்ல இந்த சாக்லேட்டிலும் இருக்கிறது.
சிறுவயதில் இருந்தே சாக்லேட் என்பதை பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்டிருப்பதை இதுவரைக்கும் சாப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
கோடை மலை வாசஸ்தலங்களுக்கு போனால் மில்க் சாக்லெட், காபி சாக்லேட் , நட்ஸ் போட்ட சாக்லேட்களை சாப்பிட்டிருக்கிறோம்.






ஆனால் இங்கொருவர் சாக்லேட் தயாரிப்பில் பலவித சுவைகளில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..அதுவும் எப்படி.. நம்மூரில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களின் சுவைகளில் கேரளாவில் இருந்து தருவிக்கப்படும் இயற்கை கோகோ வை பயன்படுத்தி சுவை மணம் மாறாமல் தருகிறார்.

கிரீன் சில்லி சாக்லேட்.
பீட்ரூட் ஹல்வா சாக்லேட்
மேங்கோ சாக்லேட்
முருங்கை லெமன் சாக்லேட்
கோகோனட் சாக்லேட்
ப்ரூ காபி சாக்லேட்
மேங்கோ லஸ்ஸி சாக்லேட்
பனைவெல்லம் சாக்லேட்
ராகி சாக்லேட்
மஞ்சள் பெப்பர் சாக்லேட்
இப்படி நிறைய வெரைட்டிகள்..
கோகோவினை மட்டும் முதன்மையாக கொண்டு, அதனுள் நம்மூர் வகை பழங்களை அதன் தன்மை கெடாது சுவையூட்டி இந்த வகை சாக்லேட்களை தயாரிக்கிறார்.இதற்காக இவர் தனி ஆய்வகம் ஒன்றை நடத்தியும் வருகிறார்.சாக்லேட் தயாரிப்பில் புதுமைகளை புகுத்தியதற்காக இவர் அவார்ட் கூட வாங்கி இருக்கிறார்.
அமெரிக்காவில் சாக்லேட் பற்றின துறையில் மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு சாக்லேட் மீதான ஆர்வத்தில் இந்த INFUSIONS எனப்படும் சாக்லேட் அவுட்லெட்ஐ திறந்திருக்கிறார்.
கோவை ராம்நகரில் தாரகராம் சில்க்ஸ் அருகே இந்த கடை இருக்கிறது.
சாக்லேட் வகையில் அனைத்து மெனுக்களும் இருக்கின்றன.
இன்னும் புதுப்புது வெரைட்டிகளை தயாரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
சாக்லேட் மெனுக்களின் விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.

வீடியோ வடிவில் காண நமது kovai food street youtube சேனலை பாருங்கள்.KOVAI STREET FOOD

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, May 16, 2019

இரங்கல்


தர்மா
                            

                        வட இந்திய தொழிலாளி.எங்களிடம் பல வருடங்களாக கார்பெண்டராக பணி புரிந்தவன்.நல்ல வேலைக்காரன்.ஆனால் தாமதம் செய்பவன்.உடனே வாடா என்றால் இரண்டு மணி நேரம் கழித்து தான் வருவான்.சொன்னபடி வேலையை தரமாய் செய்வான்.சின்ன வயது தான்.இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது.வருடத்திற்கு இரு தடவை உ.பி சென்று வருவான்.ரத்தினபுரியில் வாடகைக்கு இருக்கிறான்.இந்த முறையும் ஊருக்கு சென்று வந்து விட்டு வேலை கேட்டான்.
                           சென்னையில் நண்பரின் வீட்டு இன்டீரியர் ஒர்க் அப்பொழுது தான் வந்தது.அன்று புதன் கிழமை.நானும் இவனை அலுவலகத்திற்கு வரச் சொல்லி சென்னை நண்பரின் முகவரி மற்றும் மொபைல் எண்ணினை தந்து நல்லபடியாக அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தந்து விட்டு வா என சொல்லி, உடனே கிளம்பு இன்றே ரயிலை பிடித்து நாளை சென்னை போனதும் கூப்பிடு என்று அனுப்பி வைத்தேன்.
                     இரு நாட்களாக போன் வரவில்லை.ஆனால் சென்னையில் இருந்து என் நண்பர் கூப்பிட்டிருந்தார், கார்பென்டர் வரவே இல்லை என.சரி நானும் விசாரித்து விட்டு வருகிறேன் என சொல்லி தர்மாவினை அழைத்தேன்.மொபைல் சுவிட்ச் ஆஃப்.இன்னொரு எண்ணை அழைத்ததில் அது உ.பி க்கு போனது.ஹிந்தியில் பாத் கர்த்ததும் பேசி விட்டு வைத்துவிட்டேன்.புதனன்று ஆபிசுக்கு வந்த போது கூட அவனது நண்பனும் வந்திருந்தான்.அவனை தொடர்பு கொண்டதும் "சார்..தர்மா கேஸ் பத்திகிச்சி " என அரை குறை தமிழில் சொல்ல அதிர்ச்சியானது.
             அப்புறம் முழுக்க விசாரித்ததில், வியாழன் அன்று மாலை சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்ததில் அது வெடித்து இருக்கிறது. பலத்த தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.அவனே ஆட்டோ பிடித்து கங்கா ஆஸ்பத்திரிக்கு வந்து அட்மிட் ஆயிருக்கிறான்.90% அவனது உயிருக்கு ஆபத்து என சொல்லி விட்டனர்.ஒரு நாள் வைத்திருந்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.மருத்துவ செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கங்காவில் இருந்து உ.பிக்கு செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.
                              சனிக்கிழமை அவனது தம்பி மற்றும் நண்பர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் பேசி உ.பி க்கு அவனை அழைத்து சென்றிருக்கின்றனர்.திங்கட்கிழமை மதியம் நம்ம நண்பர் கெளசிக் ஆபிசுக்கு வந்தார்.ஆம்புலன்ஸ் சேவை நடத்தி கொண்டு வருபவர்.கோவையின் ரட்சகன் எனலாம்.பேச்சு வாக்கில் அவரும் இந்த விசயத்தை சொல்ல, அவரது வண்டி தான் அவனை கொண்டு சென்றிருக்கிறது என்றார்.இவர் நேரடியாக அவனை பார்த்திருக்கிறார்.நெருப்பில் அவனது உடம்பு இரு மடங்காக ஊதியிருக்கிறது.உருவமே தெரியவில்லையாம்.கண்கள் மட்டும் தான் தெரிகின்றன என சொல்ல சொல்ல பரிதாபம் ஏற்பட்டது.இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஒரு போன் கால்.ஆம்புலன்ஸ் ட்ரைவர் தான்..இறந்து விட்டான் என..கோரக்பூர் எட்ட இன்னும் பத்திருவது கிலோமீட்டர் இருக்கையில் அவனது உயிர் பிரிந்திருக்கிறது.மூன்று நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவன் இன்று இல்லை.அவன் அன்று வந்து சென்ற வீடியோ காட்சிகளை கெளசிக் க்கு காட்ட., அவர் ஆச்சர்யப்பட்டு போனார்..என்ன இவன் இவ்ளோ அழகா சிகப்பா ஒல்லியா இருக்கான் என்று..
                  கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் அவன் வந்து போயிருக்கிறான் என்னிடம் வேலைக்காக.கடைசியாய் நான் சொன்னபடி சென்னை சென்றிருந்தால் அவன் ஒருவேளை பிழைத்திருப்பானோ.. ஒரு நாள் தாமதிக்காமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமோ..
விதி வலியது.
ஆழ்ந்த இரங்கல்கள்


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 7, 2019

அனுபவம் - இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை

இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை
  
                ஒரு மாதத்திற்கு முன் நம்மிடம் வேலை செய்யும் ஒருவரின் வண்டியை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் போது திருடி விட்டனர்.நமக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் விசாரித்த போது எங்காவது பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருப்பர்.
                          ஓரிரு நாட்கள் கழிந்த பின் அவ்வண்டியை எடுப்பர் எனவும் குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் சென்று பாருங்கள் என சொல்ல, அந்த பார்க்கிங் ஏரியாக்களில் சோதனை இட வண்டி கிடைக்கவில்லை.ஏற்கனவே நண்பர் ஒருவரின் வண்டி திருடு போய் அது வடகோவை பார்க்கிங்கில் அனாமத்தாய் நிற்க, அதை மீட்டுக் கொண்டு வந்தனர்.
                      அதைப் போலவே வடகோவை ரயில்வே பார்க்கிங்கில் போய் தேடிவிட்டு வந்தனர் வண்டி அங்கேயும் இல்லை.இதற்கிடையில் கவுண்டம்பாளையம் ஏரியா துடியலூர் சர்க்கிளில் வருவதால் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து விட்டு வந்தனர்.ஒரு வாரத்திற்குள் கோவையில் இருசக்கர வாகன திருடர்கள் இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட வண்டிகளை மேட்டுப்பாளையத்தில் வைத்து மீட்டனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர அங்கு இருந்த வண்டிகளில் நம் தொழிலாளியின் வண்டியும் இல்லை.வண்டி கிடைக்காது இனி என்ற மனநிலையில் இருந்தார்.
                             தினமும் வேலைக்கு சென்று வர வண்டி இல்லாததால் மிக சல்லிசான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கி அதில் போய்க்கொண்டிருந்தார்.ஒரு மாதம் கழிந்தது.
               நேற்று மாலை அவருக்கு ஒரு போன் அழைப்பு புது எண்ணிடமிருந்து.ரயில்வே ஜங்சன் பார்க்கிங்கில் இருந்து அந்த உரிமையாளர் அழைத்திருந்தார், வண்டி ஒரு மாத காலமாக எடுக்காமல் இருக்கிறீர்கள் என்று.இவருக்கோ சந்தோசத்திலே ஒரு சந்தேகம்.எப்படி என் நம்பர் என்று..வண்டி பதிவு எண்ணை போட்டு உரிமையாளர் மொபைல் எண்ணை எடுத்து இவரை அழைத்திருக்கிறார்.
                            இவரும் உள்ளதை சொல்லி, புகார் கடிதம், ஆர்சி புக், மற்றொரு சாவி இவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கிங் போய் இருக்கிறார்.வண்டியை கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.முதல் போன் எனக்கு பண்ணிவிட்டு, பின் துடியலூர் காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு, பார்க்கிங் உரிமையாளரிடம் பேசி வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டார்.வண்டி கிடைத்த சந்தோசத்தில் பார்ட்டி வைப்பதாக சொல்லி விட்டார்.அநேகமாக இந்த வாரம் கனத்த பார்ட்டியை எதிர்பார்க்கலாம்.
                         வண்டி தொலைந்து விட்டாலோ, இல்லை திருடு போனாலோ உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.பின் கோவையில் உள்ள அத்துணை பார்க்கிங்கிலும் வண்டியை தேடுங்கள்.பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தி வைப்பர் திருடர்கள்.இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஆற அமர வண்டியை கடத்துவார்கள்.எப்படியும் வண்டி மேட்டுப்பாளையம் தான் போகும்.அந்த ஊர்தான் கோவையின் புதுப்பேட்டை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, May 6, 2019

கரம்- 35


கரம் - 35
JUNE - மலையாளம்
இளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.
பள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.
நடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.
பார்க்க வேண்டிய படம்.


கரூர் ஸ்பெசல்:
திருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..
நல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..
தொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..
குழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...
ரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...


அம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்


ஸ்வீட்ஸ்டால்:
ஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.
ஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.
மொறுமொறுவென இருப்பதை கடித்தால் சுவைபட கரையும்..

போலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்



கரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 3, 2019

கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை


கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை
                 கடந்த மாதம் சென்னை வந்திருந்த போது நிறைய முறை கேள்விப்பட்டிருந்த அதிகாலை பிரியாணியை சுவைக்க ஆவல் ஏற்பட்டது.இதற்காகவே அலாரம் வைத்து எழுந்து ஒரு கால் டாக்ஸி புக் செய்து வடசென்னைக்கு பயணமானோம். இந்த பிரசித்தமான இடம் சென்னைக்கு சம்பந்தமே இல்லாத போல இருக்கிறது.ஆனாலும் பரபரப்போடு மக்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர்.
              சென்ற இடம் பார்த்தால் ஆட்டுத்தொட்டி அருகே இருக்கிறது.வியாபாரிகள் வண்டிகளில் இறைச்சியை அப்படியே எடுத்து செல்கின்றனர்.இரு சக்கர வாகனங்கள் முதல் மீன்பாடி வண்டி, மினிடோர் வரைக்கும் வண்டிகளில் இறைச்சிகள் மூடியும் மூடாமலும் செல்கின்றன.ஒட்டு மொத்த சென்னைக்கும் இங்கு இருந்து தான் சப்ளை ஆகிறது என நினைக்கிறேன்.


               ஒரு அழுக்கு படிந்த கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ்.அதற்கு எதிரே ஒரு சின்ன கடை.கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.பிரியாணி அண்டாவை சுற்றி ஒரே வாடிக்கையாளர்கள் கூட்டம்.பிரியாணி அள்ளி போடுபவர் சளைக்காமல் தட்டுக்களில் வைத்துக்கொண்டே இருக்கிறார்.சிக்கன் மற்றும் பீஃப் என இரு வகை பிரியாணிகள்.
பாசுமதி அரிசியின் சுவையோடு, பீஃப் இறைச்சியின் சுவை இரண்டற கலந்து நல்ல ஒரு சுவையை தருகிறது.இறைச்சி நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாஸ்மதி அரிசியும் மிக உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணியின் மசாலா ஒவ்வொரு அரிசியிலும் ஒட்டி இருப்பது சிறப்பு.இதற்கு கொடுக்கப்படும் புதினா சட்னி புதிய சுவையைத் தருகிறது.பிரியாணியின் அளவும் அதிகமே.விலை குறைவாகவே இருக்கிறது.




            காலை 5 மணி முதல் இங்கு பிரியாணி கிடைக்குமாம். பெண்களும் காலையிலேயே இங்கு வந்து சாப்பிடுகிறார்கள்.சுகாதாரம் என்று பார்த்தால் இங்கு எல்லாம் வந்து சாப்பிடவே முடியாது.ஆனாலும் சுவை என்கிற விசயத்திலும், அதிகாலை பிரியாணி என்கிற விசயத்திலும் இந்த சுகாதாரம் என்கிற விசயம் அடிபட்டு போகிறது.அதிகாலையில் பிரியாணி என்கிற விசயமே ஆச்சர்யத்தினை தருகிறது.இரவு முழுக்க வேலை செய்பவர்களுக்கு இந்த பிரியாணி ஒரு வரமே.போய் சாப்பிட்டு விட்டு படுத்தால் மாலை வரை எழுந்திருக்க தேவையில்லை.

            அதிகாலையில் இப்படி பிரியாணி சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அதுவும் பீஃப் பிரியாணி சாப்பிட......வாவ்......

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 20, 2019

கோவை மெஸ் - HSR, ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி, காந்திபுரம், கோவை


HSR
ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி.


            புதிதாக காந்திபுரம் ஏழாவது வீதி தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கனவே துடியலூரில் உள்ள கடையின் கிளையாக இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.(தீபாவளிக்கே ஓபனாம்...நம்ம கண்ணுக்குத்தான் சிக்காம போயிருக்கு...).இன்னிக்கு நம்ம பையன் ஒருத்தர் சொல்லவும் ஓடோடி(டூ வீலர்ல தான்) போனோம் ஹோட்டலுக்கு.
                ஹோட்டல் நல்ல பளிச்சென்று மிக சுத்தமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பிரியாணியின் வாசனை நம் மூக்கைத் துளைக்கிறது.டேபிளில் வாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்தவுடன், சுடச்சுட பிரியாணி ..ஆம்...பீஃப் பிரியாணி தான்…சூடாய் வைக்க, பிரியாணியானது பொலபொலவென உதிர்ந்து உள்ளே இருக்கும் பீஃப் துண்டுகள் வெளியே வர, அந்த கணத்தில் பிரியாணியின் மணத்தில் கை அனிச்சையாக ஒரு விள்ளலை எடுத்து வாயில் இட, நாவின் ருசி நரம்புகள் நடனமாட தொடங்கின.பிரியாணியின் சுவை சூப்பராக இருக்கிறது.சீரக சம்பா அரிசியின் சுவையில், பிரியாணி மசாலாவின் மணத்தில் பீஃப் இறைச்சி இணைந்து நாடாளுமன்ற எடப்பாடி கூட்டணி போல சூப்பரான சுவையைத் தருகிறது.



அளவான காரத்தில், சூப்பரான சுவையில் பிரியாணி இருக்கிறது.அந்த பிரியாணியின் நிறமும் செம தான்.பீஃப் இறைச்சித் துண்டுகள் நன்றாகவே வெந்து சுவையாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுக்கப்படும் சிக்கன் குழம்பு .ஒன்.அதே போல் பச்சடியும்...
சீப் அண்ட் பெஸ்ட் ஹோட்டலில் உள்ள சுவையை விட இங்கு நன்றாகவே இருக்கிறது.ரொம்ப நேரம் காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவதற்கு பதில், இங்கு அதே விலையில் ஆற அமர உட்கார்ந்து நன்கு சுவை பட சாப்பிட்டு வரலாம்.
பீஃப் சுக்காவும் செம.கறி நன்றாக வெந்தும், அதனோடு கூடிய மசாலா கிரேவியும் செமயாக இருக்கிறது.


காந்திபுரம் ஏரியாவில் உள்ள பீஃப் கிடைக்க கூடிய ஹோட்டல்களில் இது நல்ல பெட்டர்.
சீப் அண்ட் பெஸ்ட் விட இதன் சுவை சூப்பர்...விரைவில் சாப்பிட்டு விட்டும் வரலாம்.சாப்பிடுபவர் எப்பொழுது எந்திரிப்பார், என காத்திருக்க தேவையில்லை.
காந்திபுரம் ஏழாவது வீதியின் தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் இருக்கிறது.விலையும் குறைவு தான்.மற்ற ஹோட்டல்களின் விலையை ஒத்திருக்கிறது.சுவையும் கூடுதலாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...