Tuesday, January 28, 2014

பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1

  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.



காலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....


நேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...



வெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.




  
மயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இதுக்கு முன்னாடி கோவா

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 22, 2014

கோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேரளா

கோவை மெஸ் - கல்லு மக்காய், தலச்சேரி, கேரளா...
இந்த பொங்கல் லீவுல கேரளா, கண்ணூர் மாவட்டத்துல இருக்குற தலச்சேரி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.நான் போன நேரம் என்னவோ அங்கயும் விடுமுறை தினமா போயிடுச்சு.ஹோட்டல்ல நான் வெஜ் என்பதே இல்லாம போயிடுச்சி.நம்ம கடையும் இல்ல, கறிக்கடையும் இல்ல.. தள்ளுவண்டி கடை கூட லீவ் போட்டிருக்கு.

            தலச்சேரி அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு கடற்கரை ஊர்.....கடலோரம் இருக்கிறதால் அங்க மீன் வரத்துகள் அதிகமா இருக்கும்.அதுவும் கடலில் கற்பாறைகள் நிறைய இருப்பதால் அங்க கல்லுமக்காய் எனப்படும் சிப்பி (MUSSEL ) நிறைய காணப்படும்.இந்த சிப்பி ஒரு மருத்துவக்குணம் வாயந்த கடல் உணவு.இந்த கல்லுமக்காய் கோழிகோடு, கண்ணூர், மாவட்டங்களில் தான் அதிகமா கிடைக்கும்.இந்த உணவை பத்து வருசம் முன்னாடி கோழிக்கோடுல சாப்பிட்டு இருக்கேன்.செம டேஸ்டா இருந்தது.அப்போ இருந்து இந்த உணவுக்கு அடிமை.எப்போ கோழிக்கோடோ இல்ல கண்ணூரோ போகும் போது சாப்பிடாம வரமாட்டேன்.


அப்படித்தான் இந்த முறையும் தலச்சேரி போனா சாப்பிடலாம்னு வந்தேன்..ஆனா லீவா போயிடிச்சு.... தலச்சேரில இருக்கிற நிறைய ஹோட்டல்களில் கேட்க எங்கயும் இல்ல.ஆட்டோ காரங்கிட்ட எங்க கிடைக்கும்னு கேட்டா அவங்களும் உதட்டை பிதுக்கிட்டாங்க.ஒரே ஒருத்தர் மட்டும் நம்பிக்கையா ஒரு வார்த்தை சொன்னாரு..இன்னு லீவு...நாளை கிட்டும்னு....சரின்னு இன்றைய பொழுதை ஓட்டிட்டா நாளைக்கு சாப்பிடலாமே அப்படின்னு லாட்ஜ் எடுத்து தங்கிட்டேன்...
                 அடுத்த நாள் காலை சீக்கிரமே விடிஞ்சது.வாக்கிங் போற மாதிரி காலையிலேயே மீன் விக்கிற இடங்களுக்கு சென்ற போது விற்பனைக்கு காத்திட்டிருந்த கல்லு மக்காய் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருந்தது.அவர்கிட்டயே எங்க கிடைக்கும் இந்த பொரிச்ச கல்லுமக்காய்னு கேட்க, இப்போ கிடைக்காது சாயந்திரம் தான் கிடைக்கும், அதுவும் தள்ளுக்கடையில தான் கிடைக்கும்னு சொல்ல, அடடா...இன்னும் சாயந்திரம் வரைக்கும் காத்திருக்கணுமா அப்படின்னு.சரி வெயிட் பண்ணுவோமே அப்படின்னு திரும்பி நடக்கையில்..... பார்ல கிடைக்கும் இப்ப அப்படின்னு ஒரு வழிப்போக்கன் சொல்லவே உடனடியாக பாரில் ஆஜரானோம்....
              பார் திறந்த பத்தாவது நிமிசத்தில நாங்க உள்ளே நுழைந்தோம்..முதல் கஸ்டமரை புன்முகத்தோடு வரவேற்ற சேட்டன்கிட்ட, பொரிச்ச கல்லு மக்காய் இவிட கிட்டோ அப்படின்னு சோதிக்க, கிட்டும் குறைச்ச லேட்டாகும் என்று பறைஞ்ச சேட்டனிடம் ஓகே.வெயிட் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேவரைட்டான பகார்டியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கிறோம் கல்லுமக்காய்க்கு.... 
இரண்டாவது ரவுண்டில் கல்லுமக்காய் பொரிச்சது இல்லாமல் மசால் ஃப்ரையாக வந்தது.சரி ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டதில் ஆஹா ....என்னா டேஸ்ட்....வாயில் வைத்ததுமே மெதுவாய் கரைவதும், பல்லிலே கடிபடுவதுமாய் செம டேஸ்ட்..மிக நன்றாக இருந்தது.ஒவ்வொன்றாய் எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுகையில் இன்னும் பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது.இன்னொரு பிளேட் ஆர்டர் செய்ததை ஆச்சரியமாக பார்த்த சேட்டனுக்கு எங்கே தெரிய போகிறது நமது ருசியின் வேட்கை.....
            பகார்டியும், கல்லுமக்காயும் போட்டி போட்டுக்கொண்டு இறங்கின...அனைத்தையும் காலி செய்துவிட்டு மெதுவாய் இடம் பெயர ஆரம்பித்தோம்.விலை ஒரு பிளேட் நூறு ரூபாய் தான்.விலைக்கேற்றவாறு அதிகமான பீஸ்கள் இருந்தது.மனதும் வயிறும் நிறைந்தது.
இந்த மசாலா பிரையை விட பொரிச்ச கல்லுமக்காய் மிக டேஸ்டாக இருக்கும்.கோழிக்கோட்டில் சாகர் என்கிற ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.தள்ளுவண்டிக்கடையில் கிடைக்கிற கல்லுமக்காயும் மிக டேஸ்டாக இருக்கும்.
எப்பவாது கோழிக்கோடு கண்ணூர், தலச்சேரி பக்கம் போனீங்கன்னா, சாப்பிடாம வந்திராதீங்க....


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, January 19, 2014

பயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)

கோல்வா பீச், கோவா...
கோவாவில் மட்கான் (MADGOAN) என்றழைக்கப்படும் ஊரின் ரயில்வே ஸ்டேசனில் வந்து வலது காலை வைத்து இறங்கிய போது மணி அதிகாலை மூன்றாகியிருந்தது.அந்த நேரத்திலும் ரயில்வே ஸ்டேசன் ஆட்கள் நடமாட்டத்தால் மிகவும் பிஸியாக  இருந்தது.எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் அதிகாலை குளிரினை தடுக்க ஏதாவது செய்யனுமே என்று யோசித்தபடியே மெதுவாய் ஸ்டேசனை விட்டு வெளியேறிய போது டூவீலர் டாக்ஸி ஓட்டி ஹிந்தியில் பாத் ஹர்த்த போது கோல்வா பீச் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்களை டிரிபிள்ஸ் ஆக்கி இரவு நேரத்தில் பீச்சினை நோக்கி பயணித்தோம்..
பனி படரும் குளிரில் டூவீலரின் சத்தம் மட்டுமே கேட்க எந்த வித வாகன்ங்களும் எங்களுடன் போட்டிக்கு வராமல் தனித்தே பயணித்தோம்...இருட்டிய சாலைகளில் இரவினை துணையாகக் கொண்டு பதுங்கிக்கிடக்கின்ற தெருநாய்கள் எங்களுடன் போட்டிக்கு வந்து இயந்திர சக்திக்கு முன்னால் தோற்றுப்போனதை தாங்கமுடியாமல் வெறியுடன் குலைத்த அவைகளின் முன் எங்களின் புறமுதுகை காண்பித்து பயணித்தோம்....அனாதையாய் வெறிச்சோடிக்கிடந்த ரோட்டில் வேகமாய் பயணித்து வெகு சீக்கிரமே கோல்வா பீச் வந்தடைந்தோம்....

பொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.டூவீலர் ஓட்டியின் கைங்கர்யத்தால் பீச்சினை ஒட்டி அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்தது.விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த அந்த அதிகாலை வேளையிலும் எங்கள் கண்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தான் ஃபிரீசரில் இருந்த கிங் ஃபிஷர் நண்பன்.....ஒருவனை எடுத்து திறந்து தொண்டையை நனைத்தபோது சில்லென்ற குளிர்ச்சி வந்து சேர்ந்து கொண்டது அகமும் புறமும்....அங்கிருந்து நகர்ந்தபடி ரூம் வந்து சேர, மிச்சத்தினையும் காலி செய்துவிட்டு சீக்கிரம் பீச் செல்லவேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.....
தங்கியிருந்த இடத்திற்கும் பீச்சிற்கும் ஒரு சில மீட்டர் தூரமே இருக்க பொடிநடையாய் நடந்து பீச்சினை அடைந்தோம்....



தென்னை மரங்கள் கரையோரம் கடலுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது..இன்னும் தன் விடியலை ஆரம்பிக்காத பீச் வெறிச்சோடி கிடந்தது. நேற்றைய பனியால் தற்காலிக உடை உடுத்தி இருந்த பீச்சின் வெண்ணிற மணல், ஆட்கள் வருகையினால் தன் உடைகளை களைய ஆரம்பித்தது... ஆங்காங்கே ஒரு சில பேர் மட்டும் காலை விடியலை ரசிக்க வந்திருந்தனர்....படகுக்காரர்கள் தங்கள் விற்பனையைத் துவக்க ஆரம்பித்து இருந்தனர்.மணல் மேட்டில் படகுகள், வாட்டர் கேம்ஸ் படகுகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.நடுக்கடலினுள் அலைகளின் உதவியால் ஆடிக்கொண்டிருந்த சிறு படகுகள் வாடிக்கையாளர்களை கரையினில் கண்டவுடன் கரைகளை நோக்கி வர தத்தம் ஓனர்களை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.பீச்சோரம் இருக்கின்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு கடைக்கு முன்னும் இருக்கிற சாய்வு நாற்காலிகள் தன் மேல் வெளிநாட்டு அம்மணிகளின் உடல் படும் சுகம் வேண்டி சோபா குஷன் போட்டு காத்துக்கொண்டிருந்தன....




காலை வேளை... சுத்தமான காற்று....மெல்லிய வெயில்...அலையடிக்கும் ஆரவாரமிக்க கடற்கரை...வெண்ணிற மணற்படுக்கைகள்..நம்மைப்போலவே ரசிக்க வந்திருக்கும் வெளிநாட்டு அம்மணிகள் என ரம்மியமாக பொழுது போனது...குளிக்க ஆரம்பித்து விடலாமென்று சில்லென்ற கடல் நீரில் கால் வைத்தபோது குளிர்ச்சி உடம்பெங்கும் பரவியது..மெதுவாய் கடலினுள் நோக்கி நகர உடல் கொஞ்சம் கொஞ்சமாக நனையவும் மூழ்கவும் ஆரம்பித்தது.....எதிர் வரும் அலைகளை தாண்டி அதில் விழுந்து, புரண்டு கடலின் அலைகளோடு விளையாட்டில் ஐக்கியமானோம்.... அவ்வப்போது கடற்பரப்பினையும் பார்த்துக்கொண்டு கடந்து செல்லும் அரைகுறை அம்மணிகளின் அழகிலும் அதிசயத்துக்கொண்டே மும்முரமாய் கடலோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.

 ரொம்ப நேரம் கடலில் விளையாண்டதில் சீக்கிரம் களைத்துப்போகவே தாகம் தீர்க்க கடைக்கு வந்தோம்.பிரிட்ஜில் நிறைந்து இருந்த கிங் ஃபிஷர் இரண்டை எடுத்து ஒரு ஓரமாய் அமர்ந்து கடலினையும் கடந்து செல்லும் அம்மணிகளையும் ரசித்தவாறே காலி செய்ய ஆரம்பித்தோம்.....
இன்னும் இருங்குங் சாமியோவ்.....................

நேசங்களுடன்
ஜீவானந்தம்
  
இன்னும் கொஞ்சம்...

Saturday, January 11, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


இந்த பொங்கல் நாளில் எல்லா வளமும் பெற்று சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கிறேன்....

பொங்கல் நாளை முன்னிட்டு ஒரு வார காலம் பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்...ஒரு நாடோடியைப்போல....புதுவித அனுபவம் வேண்டி...
மீண்டும் சந்திப்போம்...விரைவில்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 8, 2014

கோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு

ஈரோட்டில் ஒரு இரவு வேளை.... பத்து மணிக்கு மேல் ஆகிக்கொண்டிருந்தது. பசி வயிற்றை பதம் பார்க்கவே எங்காவது ஹோட்டல் தட்டுப்படுமா என்று பார்வைகள் அலைமோதிக்கொண்டே வர, பார்க் செல்லும் வழியில் ஜூனியர் குப்பண்ணாவின் பச்சை போர்டு கண்களில் தட்டுப்பட்டது.ஏற்கனவே மற்றொரு பச்சை போர்டு கடையால் அதிகமாய் பசியின் தீவிரத்தில் இருந்தோம்.வியாபாரம் முடிவடையும் நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடையில், ஆள் அரவமின்றி இருந்த கடையில் எதுவும் கிடைக்காது போல என எண்ணிக்கொண்டே அங்கிருந்த பணியாளர்களை நெருங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, வாங்க சார் எல்லாம் இருக்கு என சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.சந்தோசமாய் உள்ளே நுழைந்தால் நம்மளைப் போலவே நிறைய பேர் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில் அம்மணிகளும் அடக்கம்...




அமர்ந்த உடனே இலை வந்து சேர்ந்தது.என்ன இருக்கு என்று கேட்க, எல்லாம் ஒப்பித்த சர்வரிடம், நாங்கள் நான்கு பேரும் பிளைன் பிரியாணி, மட்டன் தலைக்கறி, கொத்துக்கறி, சிக்கன் 65, தோசை, முட்டை தோசை, கோதுமை உப்புமா என ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
பிளைன் பிரியாணி குஸ்கா ரகத்தில் தான் இருந்தது.மணம் குணம் சுவை எல்லாம் ஓகே....மட்டன் பீஸ் இல்லாததால் அதைப்பற்றிய குறிப்புகள் நஹி....
அடுத்து தோசை....செம சாஃப்ட்....பிய்ப்பது கூட தெரியாமல் இருக்கிறது.ஒவ்வொரு விள்ளலாய் பிட்டு பிட்டு சட்னியிலும் கொத்துக்கறியிலும், தலைக்கறி சாந்திலும் தோய்த்து தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்..அதிலும் கொடுத்த குருமா இருக்கே செம டேஸ்ட்..பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது தோசை..சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.கொஞ்சம் தோசை பிய்த்து ஈரல் கறியில் மடக்கி அப்படியே வாயில் போட்டால் கரைகிறது...சுவை நரம்புகள் அதிகமாய் மீட்டப்பட்டதால் சீக்கிரம் காலியாகி அடுத்த ஆர்டரும் தோசையாகிப்போனது....

பக்கத்து இலைக்கு கோதுமை உப்புமா வர அதை எடுத்து டேஸ்ட் பார்க்கையில் அதுவும் செம டேஸ்ட்...வழுக்கிக்கொண்டு போகிறது.முந்திரிலாம் போட்டு நெய் வாசத்துடன் இருக்க ஆஹா செம டேஸ்ட்..அட இது ரொம்ப நல்லாஇருக்கே என்று சொல்லவும் சுத்தியிருந்த கைகள் நீண்டு சீக்கிரம் தட்டைத் துடைத்துவிட்டன.....








சிக்கன் 65, கொத்துக்கறி, ஈரல் வறுவல் என எல்லாம் நன்றாகவே இருந்தது.
எல்லாம் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவச் செல்லும் போது ஒரு இடத்தின் சுவற்றில் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும் என எழுதியிருக்க, இதை எப்படி கைவிட்டோம் என்றெண்ணி கைகழுவி வந்தவுடன் பாயாசம் ஆர்டர் செய்தேன்..ஒரே ஒரு பாயாசம் போதும் என்று சொல்லிவிட்டபடியால் ஒன்று மட்டும் வர குடித்து விட்டு ஆகா,..சூப்பரோ சூப்பர் என சொல்ல, மற்றவர்களும் ஆர்டர் செய்ய மீண்டும் அவர்களின் ருசி அறிய வந்தது.வறுத்த சேமியா, முந்திரிலாம் போட்டு பாயாசம் ரொம்ப டேஸ்டியாக இருந்தது.ஊர் வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கைவிட்டு அகலவே இல்லை...
எல்லாம் முடிந்து பில் வர, விலை கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது.ஈரோட்டில் ரொம்ப பேமஸான ஹோட்டல் வேற, விலையும் அப்படித்தான் இருக்கும்....செட்டில் செய்து விட்டு வெளியேறி ரோட்டில் நின்று ஆசுவாசமாய் பேசிக்கொண்டிருக்க ஹோட்டலுக்கு எதிரில் ஈரோட்டின் பிரபல மரப்பாலம் முதலியார் மெஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட....ஒரு நாள் இங்கு வரணும் என்று சொன்னபடியே கிளம்பினோம்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...