Wednesday, February 25, 2015

கோவை மெஸ் - பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம், கோவை

பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம் கோவை
                     பவர்ஹவுஸ் ரோட்டில் ஒரு தள்ளுவண்டியில் கம்மங்கூழ் நன்றாக இருக்கும் என கேட்டு இருப்பதால் ஒரு மதிய வேளை சுள்ளென்ற வெயிலில் சென்றால் குளிர்ச்சியாக இருக்குமே என இன்றைய உச்சிவெயிலில் அங்கு ஆஜரானேன்.கார்களும் டூ வீலர்களும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்க, அதன் உரிமையாளர்களோ தள்ளுவண்டியை சுற்றி கூட்டமாய் இருக்க ஓவ்வொருத்தர் கைகளிலும் காகித டம்ளர்கள்…கூடவே கடித்துக்கொள்ள ஸ்னேக்ஸ் வகைகளும்…..


                ஒரு தள்ளுவண்டி தான்..இரு பெரிய பானைகள்.வண்டிக்கு பக்கத்தில் ஒரு சின்ன டேபிள்.அதில் அனைத்து வகையான ஸ்னேக்ஸ்களும் வரிசை கட்டி இருந்தன.



                 ரொம்பவும் பிஸியாய் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த டம்ளர்களில் கொஞ்சம் தயிர், கூட வெங்காயம், பின் கம்மங்கூழ் என ஊற்றி ஆட்டத்தில் பிஸியாக இருந்த பாண்டியன் பிரதர்ஸ்களில் ஒருவரது அசாத்திய வேகம் கண்டு கண்ணிமைக்க மறந்து காத்திருந்தோம்.பிறகு கூட்டத்தில் எப்படியோ அரும்பாடு பட்டு அவரது கவனத்தினை ஈர்த்து இரு டம்ளர் ஆர்டர் செய்து விட உடனடியாய் கம்மங்கூழ் கைக்கு வந்தது.ரொம்ப திக்கான தயிரில், கெட்டியான கம்மங்கூழுடன், சிறிது வெங்காயம் போட்டு டம்ளர் வழிய வழிய நிறைந்த படி இருந்தது.கொஞ்சமாய் வாயில் வைத்து குடிக்க, அமிர்தமாய் இறங்கியது..அடிக்கிற வெயிலில் சில்லென்ற குளிர்ச்சியாய் தொண்டையை நனைத்தது. 
அதற்கு தொட்டுக்கொள்ளவும், கடித்துக் கொள்ளவும் வகை வகையாய் வைத்து இருந்தனர். வடாகம், சுண்டக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், குடல் வகைகள், மஞ்சள்,  சிகப்பு வர்ணங்களில் உண்டான குடல் வகைகள் என ரொம்ப வெரைட்டிகள் இருக்க, எல்லாத்திலும் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு மிடக்கு கம்மங்கூழ், பின் ஒரு கடி என இப்படி ஒவ்வொரு மடக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் வழுக்கியபடியே உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நன்கு வெந்த கம்பு, கொஞ்சம் கெட்டியாய் கூழாய் குடிக்க சுவையோ சூப்பராக இருக்கிறது.

கம்பு உடலுக்கு மிகவும் நல்லது.அதுவும் இந்த வெயிலுக்கு மிகவும் நல்லது.அந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க…டேஸ்டை நீங்களே உணர்வீங்க…..ஆரோக்கியமான உணவும் கூட....

இதுக்கு பக்கத்துல தமிழக அரசோட நெய்தல் மீன் வளர்ச்சி விற்பனையகம் இருக்கு...மாலை நேரத்துல போனிங்கன்னா மீன் வறுவல் ஒரு கட்டு கட்டலாம்.....
நெய்தல் மீன் விற்பனையகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 24, 2015

பு(து)த்தகம் - வாசித்தவை - தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

              சமீபத்தில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை இரு டஜனுக்கும் மேல் இருக்கும்.இப்போது தான் வாசிக்க தொடங்கியிருக்கிறேன்.
         புத்தக விமர்சனம் எழுதற அளவுக்கு நாம ஒண்ணும் பெரிய இலக்கியவாதி கிடையாது.ஆனால் படித்த ரசித்த வியந்த புத்தகங்களைப்பற்றி கொஞ்சமாவது எழுதி நாமளும் அந்த வட்டத்துக்கு வெளியில இருக்கிறோம் அப்படிங்கிறதை காட்டிக்கத் தெரியும். இருந்தாலும் வாசித்த புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
                
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

         ஜனார்த்தனன் பிள்ளை...1940ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆரம்பித்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் கிட்டதட்ட முப்பதாண்டுகள் தூக்கிலிடுபவராக வேலை செய்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர்.இவரைப் பற்றிய குறிப்புகளை அவரையே எழுத வைத்து ஒரு நூலாக ஆங்கிலத்தில் (Hangman’s Journal ) வடித்தவர் சசி வாரியர்.பின் அதனை தமிழில் மொழி பெயர்த்தவர் இரா.முருகவேள்.
              இந்த நூலில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் விரவிக்கிடக்கின்றன. தூக்கிலிடப்படும் அதிகாலை நேரம் பற்றிய விவரங்கள், தந்தையின் ஓய்வுக்குப்பின் தன் குடும்பத்தினருக்காக இந்த தொழிலை ஏற்றுக்கொண்டதாய் இருக்கும் விவரக்குறிப்புகள், தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக பயன்படுத்தப்படும் கயிற்றின் பலத்தினை கல் கொண்டு சோதிக்கும் முறை, தூக்குமேடை அமைப்பு, எடிசன் கண்டுபிடித்தது மின்சார பல்பு எனத்தெரியும், ஆனால் உலகின் முதல் மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது அவர்தான் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும் என்கிற விவரக்குறிப்புகள், தூக்கு உறுதி செய்யப்பட்ட கைதியின் முதல் நாள் நடவடிக்கைகள்,  தூக்குகயிற்றின் முடிச்சினை தண்டனைக் கைதியின் வலது காதுக்கு பின் எதற்காக நிறுத்துவது, தான் செய்த முதல் தூக்கின் போது ஏற்பட்ட மனக்காயம், என புத்தகம் முழுக்க இப்படி குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவைகளை படிப்பதற்குள் மொத்தமும் தொகுப்பட்ட விதம் நம்மை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவ்வப்போது அவரின் வாயிலாக தூக்கு தண்டனை பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.

                      ” லிவரை அழுத்துகிறேன்..பொறிக்கதவு படாரென்று கீழே திறந்து இருபுறமும் உள்ள தூண்களில் மோதிக்கொள்ளும் ஓசை.....அந்த மனிதர் குழிக்குள்ளே மறைகிறார்...அது உதறுகிறது...உதறுகிறது...உதறிக்கொண்டே இருக்கிறது... கீழிலிருந்து அந்த மனிதர் தனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றும் சத்தங்கள் வருகின்றன....முதலில் சிறுநீர்ப்பை பின்பு குடல்கள்...அந்த மெல்லிய சத்தங்களாலும்.....திறந்திருந்த பொறிக்கதவு வழியாய் மிதந்து வந்த மெல்லிய நாற்றத்தாலும் கூனி குறுகிப்போகிறேன்....
நீண்ட....நீண்ட நேரத்திற்கு பின் இறுதியாக கயிறு உதறுவது நிற்கிறது.....அவர் இறந்து விட்டார்.....

எதிர் வெளியீடு             பக்கங்கள் 272              விலை ரூ 220

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Sunday, February 22, 2015

வாட்ஸ் அப் தகவல்கள் - 3

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே!ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.]


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, February 19, 2015

கோவை மெஸ் - ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு

ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு
                      மூணாறு இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலைத்தொடர்கள் கொண்ட அழகிய கோடை மலைவாசஸ்தலம்.கண்ணுக்கு பசுமையையும், உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இனிமையையும் ஒரு சேர தரும் சுற்றுலாத்தலம்.நாங்கள் போன அன்று காதலர் தினம் வேற.ஏற்கனவே அம்மணிகளால் நிரம்பி செமயாக இருக்கும்.அன்று சொல்லவா வேண்டும்... புதிதாய் மணமுடித்தவர்கள் தங்கள் ஹனிமூனை சிறப்பிக்க வந்து குவியும் இடம் வேறு... ஜோடி ஜோடியாய் காதலர்கள்..வெள்ளைக்கார அம்மணிகள், இரண்டு நாள் விடுமுறையை கழிக்க ஜோடியாய் புறப்பட்டு வந்து இயற்கையையும், இரவில் குளிரையும்(?) அனுபவிக்க வந்தவர்கள் என எங்கும் நீக்கமற நிறைந்திருந்தனர்.குழந்தை குட்டிகள் என குடும்பத்தோடு வந்திருப்பவர்கள், குட்டீஸ்களை கவனித்து கொள்ள பெரியவர்களையும் சேர்த்து கொண்டு வந்தவர்கள் என மூணாறே பரபரப்புடன் இருந்தது.

                   நாங்கள் வந்த நேரம் பசி வயிற்றைக் கிள்ளிய மட்ட மத்தியான நேரமாதலால், கண்முன்னே காட்சியளித்த அம்மணிகள் கொஞ்சம் மங்கலாக தெரியவே, தெம்பாய் பார்க்க கொஞ்சம் ஏதாவது அள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டுமே என மூணாறின் வாசியான ஒருத்தரிடம், எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என வினவ, ரப்சிக்கு போங்கள், எல்லாம் சுவையாக இருக்கும் என சொல்ல, அங்கே ஆஜரானோம்.
              மூணாறின் மெயின் பஜாரில் இருக்கிறது இந்த ஹோட்டல்.கொஞ்சம் சிறிய ஹோட்டல் தான்.ஆனால் நன்றாக வைத்திருக்கிறார்கள்.இண்டீரியர் அமைப்பு நன்றாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும், பாதிக்கும் மேல் ஃபாரினர்கள்.கூடவே அயல்நாட்டு அம்மணிகள் அரை குறை ஆடையோடு (நம்மூர் ராமராஜன் பனியன் மற்றும் டிரவுசர் போட்டுக்கொண்டு)....அவ்வப்போது நம்மூர் அம்மணிகளும் வந்து போக ஹோட்டல் களை கட்டியது.எங்களுக்கு தோதான இடத்தில் அமர, மெனுகார்டு வர நிறைய அயிட்டங்கள் வெளிநாட்டுக்காரர்களுக்கு ஏற்றபடி இருக்க, (ஸ்பானிஷ் ஆம்லேட், மெக்சிகன் சல்சா, இஸ்ரேல் சாக்ஸ்குகா..(என்ன டிஷ்ஷோ))அப்போது தான் புரிந்தது ஏன் அயல்நாட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என.....
                     ஃபாரின் உணவுகள் எதுவும் நமக்கு செட்டாகாது என்கிற படியால் நம்மூர் உணவுகளையே ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம். நம்ம அம்மணியும் ட்ராவல் அதிகமாக இருப்பதால் நான்வெஜ் ஏதும் வேண்டாமென சொல்லிவிட, என் பங்குக்கு மீன் கறியும், பீப் பிரையும், கொஞ்சம் சாதமும் ஆர்டர் செய்தேன்.குட்டீஸ்களுக்கு நூடூல்ஸ், சிக்கன் பிரியாணியும் ஆர்டர் செய்து விட்டு, கண்முன் நிழலாடிய அம்மணிகளை பார்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தது.

வெளியே பரவிய குளிர் உள்ளுக்கும் பரவ ஆரம்பித்த நேரத்தில் சூடாய் சாதம் இருக்க, மஞ்சள் நிறத்தில் எண்ணை மிதக்க மீன் குழம்பு இருக்க, அதில் மீன் மிதந்து கொண்டிருந்தது.சூடான சாதத்தில் கொஞ்சம் மீன்குழம்பை  ஊற்றி பிசைந்து சாப்பிட ஆரம்பிக்க, சுவை நம் நாவில் பரவி, காரமும், புளிப்பும், மீன் வாசனையும் நம்முள் கலக்க, மெய் மறந்து போனேன்.கொஞ்ச கொஞ்சமாய் சாதத்துடன் மீன்குழம்பை ஊற்றி பிசைந்து ரசித்து ருசித்து சாப்பிடவும், அவ்வப்போது குழம்பில் வெந்த மீனினை அப்படியும் இப்படியும் திருப்பி முள்ளை விடுத்து கறியினை சாப்பிட சாப்பிட, பக்கத்திலிருந்த அயல்நாட்டுக்கார அம்மணியின் கண்களில் ஒரு வித காரம் தென்பட்டது என்னவோ உண்மைதான்...மீனின் முள்ளை மொத்தமாய் வாயில் வைத்து சப்பி ஒரு இழுப்பு இழுத்து இருக்கின்ற கொஞ்ச நஞ்ச காரம், புளிப்பு சுவையை சப்பி கீழே வைக்க, காரசாரமான முள் நிறைந்த மீனினை இப்படியும் சாப்பிட முடியுமா என ஆச்சர்யப்பட்டு பார்த்தது அந்த இரு ஜோடி விழிகள்...

அடுத்து வந்த பீஃப் பிரை நன்றாக வெந்து, செம டேஸ்டில் இருக்க, இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இறங்க ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் இரண்டும் சுத்தமாய் காலியானது.
குட்டீஸ்களுக்கு வந்த பிரியாணியின் சைட் டிஷ் ஆக இருந்த கேரளாவின் சம்பந்தி (சட்னி) செம டேஸ்டாக இருந்தது.கேரள பிரியாணி நமக்கு கொஞ்சம் ஆகாது.மசாலா சாதத்துடன் தனியாக சிக்கன் கிரேவிமாதிரி வைத்து தருவதால் அதன் டேஸ்ட் எனக்கு கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும்.




              மற்றபடி அனைத்தும் சூப்பர். ஹோட்டலில் காலி டேபிளே பார்க்க முடியவில்லை.சாப்பிட்டு முடித்தவுடன் உடனே நிறைந்து கொள்ளும்.
டூரிஸ்ட் பிளேஸ் என்பதால் விலை அதிகம் என்பது இல்லை.நார்மலான விலைதான்.தைரியமாக சாப்பிட செல்லலாம்.
சாப்பிட்டு முடித்து தெம்பாய் பில் கொடுத்துவிட்டு வெளியேற, கடந்து சென்ற அம்மணிகள் கொஞ்சம் தெளிவாய் தெரிய ஆரம்பித்தனர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்


.









இன்னும் கொஞ்சம்...

Sunday, February 15, 2015

பயணம் - மூணாறும் யானையும்...

மூணாறு...
             காதலர் தினத்தை செலிபிரேட் பண்ணலாம்னு நம்ம அம்மணியையும், வாரிசுகளையும் கூட்டிட்டு கொஞ்ச தூரம் ட்ரைவிங் போலாமேன்னு அழைச்சிட்டு போனது மூணாறுக்கு...
             இருபுறமும் பசுமை வேய்ந்த தேயிலைத்தோட்டங்கள்...கண்ணுக்கெட்டும் தூரம் மலை முகடுகள் அனைத்தும் பசுமையை போர்த்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் தேயிலைத்தோட்டத்தின் ஊடாய் செல்லும் மலைப்பாதையில் காரில் ஒலித்த இசையையும், இருபுறமும் உள்ள பசுமையையும் ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு முன் பகல் வேளையில், கொஞ்ச தூரத்தில் வளைவின் முன்பாய் ஆட்கள் கூட்டம், மற்றும் வண்டிகளின் அணிவகுப்பு...என்னவாக இருக்கும் என  யோசித்துக்கொண்டே வேகத்தினை குறைத்து மெதுவாய் முன்னேற, முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாய் ரிவர்சில் வர, என்னவென்று பதைபதைத்து கேட்க, ஆன...ஆன... என்று மலையாளத்தில் பறைந்து விட, பக்கென்று ஆனது...நானும் ரிவர்ஸ் எடுக்கலாமா என்று யோசிக்கையில், இரு வளைவுக்கு முன்னால் இருந்த கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது.



            மறைவிலிருந்து வெளியேறிய யானை ஒன்று படு கம்பீரமாய்...வெகு பிரம்மாண்டமாய் ரோட்டில் நடந்து செல்ல கை கால்கள் நடுக்கம் கொண்டன...எங்கே திருப்பி நம் வழியில் வந்துவிடுமோ என கலக்கம் அடைந்தது மனது.எப்பொழுதோ யூ டுபிலும், பேப்பர்களிலும் யானையின் அடாவடிகளைக் கண்டு பயந்திருந்த அந்த ஒரு கணம் நொடிப்பொழுதில் வந்து சென்றது.கொஞ்ச நேரம் அப்படி இப்படி என போக்கு காட்டிக்கொண்டிருந்த யானை சற்று ஓரமாய் ஒதுங்கி நிற்க, வாகனங்கள் வரிசைகட்டி பயந்தபடியே சென்றன.என் முறையும் வந்தது.செல்வது சிங்கத்தில் என்றாலும் யானையைக்கண்டு அதுவும் பூனைபோல் ஊர்ந்து சென்றது.கிடைத்த நொடிப்பொழுதில் கேமராவில் சிக்கிக்கொண்டது யானை.எவ்வளவு பெரிய உருவம்....சிவந்த நாசிகளைக்கொண்ட தும்பிக்கை...நீண்ட தந்தம்...சேற்றில் புரண்ட மேனி...பில்லர் போன்ற கால்கள், லாரி உயரத்திற்கு இருக்கும் அதன் உயரம் என.... கொஞ்சம் பயந்து தான் போனோம்....
              மூணாரில் ஒரு சில மணிகளை கழித்து திரும்பவும் அதே சாலையில் வர, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாய் யானையின் வருகையால் கலவரப்பட்டு கிடந்த இடம் இப்போது வெறுமையாய் கிடந்தது.மீண்டும் எங்காவது யானை தட்டுப்படுமா என்ற அச்சத்திலேயே வந்து கொண்டிருந்தோம்...கேரள எல்லை முடிந்து தமிழக வனப்பகுதியில் நுழைந்த போது, ஒவ்வொரு எச்சரிக்கைப் போர்டும் கண்ணில் பட, பயந்தபடியே சென்று கொண்டிருந்தோம்.மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச அச்சமுடனே மெதுவாய் வந்து கொண்டிருந்தோம்...சாலையின் ஓரத்தில் எதேச்சையாய் கொஞ்சம் பார்க்க, யானைகள்......குட்டி யானையுடன் ஒரு தாய் யானையும், கொஞ்ச தூரம் பின்பாய் ஒரு பெரிய யானையும் தெரிய காலையில் அனுபவித்த அதே பக்கென்ற அனுபவம் மீண்டும் வர, இருந்தாலும் தைரியமாய் இருந்தோம்...மலைப்பாதை இல்லை...அழுத்தி பிடித்து சென்று விடலாம் என்ற நம்பிக்கை தான்...

கோவில்களில் ஆசிர்வாதம் கொடுக்கும் பழகிய யானையின் பக்கத்திலேயே செல்வதற்கு பயம்...அப்படியிருக்க காட்டு யானையைப்பற்றி சொல்லவா வேணும்....கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தி யானையின் அழகை ரசித்துவிட்டு கிளம்பினோம்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...