Saturday, February 18, 2023

தள்ளுவண்டி பொரிகடலை

ஒரு சில நாட்களில் பூண்டி தேசம் போவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பேன்.அம்மணிகள் வருகை கொஞ்சம் ஆசுவாசத்தை உண்டாக்கும்.அதனாலயே பொறுமையாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.பக்கத்திலேயே தள்ளுவண்டியில் வறுகடலை, வேகவைத்த கடலை, மக்காசோளம், பனங்கிழங்கு, பொரி விற்றுக் கொண்டிருப்பர்.ரிதமாய் ஒலிக்கும் வறுகடலை கரண்டியின் சத்தமும், பொரி கலக்கும் சத்தமும் வேறு நம்மை ரசிக்க வைக்கும். அவித்த கடலையின் வாசம் மூக்கை துளைக்கும்.பசியை வேறு தூண்டும்.

அம்மணிகளின் மேல் கவனம் இருந்தாலும் நாசியானது அந்த வேர்க்கடலையின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்.வாங்கி சுவைக்கலாமா என்ற யோசனையிலேயே மனம் இருக்கும்.

சுகாதாரம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது வந்து போகும்.கடலை வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பேன்..அவ்வப் பொழுது அவித்த கடலை விற்பவனின் செயல்களையும் பார்த்து கொண்டிருப்பேன்.அப்படித்தான் அன்றொரு நாள், அவித்த கடலையில் இருந்த கரண்டியை எடுத்து ரிதமாய் தட்டியபடி, அப்படியே கையின் மணிக்கட்டு பகுதியில் இருந்து முழங்கை வரை கரண்டியை வைத்து மேலும் கீழும் வறட் வறட் என சொறிந்து  விட்டு, அந்த கரண்டியை அப்படியே எடுத்து அவித்த கடலையை கலக்கி விட, பகீர் என்றது  பார்த்த உடனே...

வாங்கி சுவைக்க வேண்டிய ஆசையை அப்படியே மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டேன்....

இனி அம்மணிகளை மட்டும் ரசிப்பது என முடிவெடுத்து விட்டேன்.


கெட்டுப்போன பனங்கிழங்கு, பல நாட்களாய் வெந்து கொண்டிருக்கும் மக்கா சோளம், கடலை மேல் தெளிக்கும் அழுக்கு தண்ணீர் என சுத்தமும் சுகாதாரமும் போட்டி போடும்.

இதை வாங்கி ருசித்தால் இலவசமாய் வியாதிகள் வர வாய்ப்பிருக்கலாம்.

#பூண்டிதேசம் 

#காந்திபுரம் #தள்ளுவண்டி #அவித்தகடலை

இன்னும் கொஞ்சம்...

Friday, February 17, 2023

தமிழன் vs வடக்கன் சோதனைகள்

 நம்ம பெயிண்டர்களாம் வடக்கனுங்க தான்.கோவிட்ல என்னோட மெயின் மேஸ்திரி என் கூடவே 20 வருசம் ட்ராவல் பண்ணவன் இறந்துட்டான்.அவன் போனது மிகப்பெரிய இழப்பு எங்களுக்கு.

ரெண்டு மூணு டீம் வச்சி இருந்தாலும் எப்பவும் அவன் தான் செய்வான்.கோவிட் முடிஞ்சு இப்ப ஒரு ஆறு மாசமாத் தான்  வேலைகளே வந்துட்டு இருக்கு.

அவன் இல்லாம வேற டீமை வச்சி வேலை செஞ்சிட்டு இருக்கோம். இப்ப சமீபத்துல ஒரு வேலை.நம்மாளுங்க பொங்கலுக்கு போனவங்க வரல.

அதனால தமிழ் பெயிண்டர்களை வச்சி வேலை வாங்குனேன்.ரொம்ப மெதுவா வேலை நடக்குது.ஆனாலும் வாரா வாரம் சனிக்கிழமை ஆனா பணத்தை கொடுத்திருவேன்.மூணு வாரம் நல்லாதான் போச்சு.

நம்ம கிளையன்ட் திடீர்னு வெளியூர் போய்ட்டாரு.அதனால பணம் கிடைக்கல.

நானும் அங்க இங்கன்னு புரட்டி கொடுத்துட்டேன்.கொஞ்சம் பாக்கி வச்சேன்.

இந்த வாரம் அமெளண்ட் வந்திடும் தரேன்னு சொன்னேன்.சரின்னு போனவங்க திங்கள் கிழமை வரல.ஏன்னு கேட்டா நீங்க பணம் தரலன்னு வரல அப்படிங்குறான்.இத்தனைக்கும் ரேட் பேசி விட்டிருந்தேன்.அட்வான்ஸ் வந்ததும் தரேன்னு சொல்லி, அதுக்கு ஒத்துகிட்டு தான் வேலையை ஆரம்பிச்சான். வெள்ளி, சனி இரண்டு நாள்தான் செஞ்சானுங்க.ஞா.தி.செ மூணு நாளும் வரல..செம கடுப்பு. போனைப் போட்டு பயங்கரமா திட்டிட்டு ஏன் ஹிந்தி காரன் இங்க நல்லா பொழைக்குறான்னு தெரியுதா ன்னு சொல்லிட்டு இனி சைட் பக்கம் வந்திராத.உன் அமெளண்ட் ஜிபே பண்ணிடறேன்னு சொல்லிட்டேன்.

மீண்டும் வேலைக்கு வச்சா ஓபனிங் டேட் டுக்கு முன்னாடி ஓடினாலும் ஓடிடுவானுங்க.இது வரைக்கும் நாம கட்டிக் காத்து வந்த பேரை கெடுத்திருவானுங்க..கிளையன்ட் கிட்ட சொல்லிட்டேன் வேற டீம் இறக்குறேனுட்டு..

அவரே எங்க உங்க ஹிந்தி ஆளுங்கன்னு  கேட்க, வேற சைட்ல இருக்காங்க வந்திருவாங்க ன்னு சொல்லி மத்த வேலையை பார்த்துகிட்டு இருக்கோம்.

இந்த லட்சணத்துல வடக்கனுங்க வர்றானுங்க, தமிழனுக்கு வேலை இல்லைன்னு புலம்புறது.

10 மணிக்கு வர்றது 11 .30 க்கு டீ.கொஞ்ச நேரம் டைம்பாஸ்.

அப்புறம் 1.30 டூ 2.30 லஞ்ச் 4 மணிக்கு டீ டைம்பாஸ் அப்புறம் 5.30 எடுத்து வைக்குறேன்னு சொல்லி்ட்டு 6 மணிக்கு ரெடியாகுறது. அட்வான்ஸ் தலைக்கு 500 ரூ வாங்கிட்டு போறது. ஏரியா கவர் ஆகி இருக்குமானு பார்த்தா அதுவும் ஆகி இருக்காது.4 பேர் வேலை செஞ்சா 4000/ அட்லீஸ்ட் 1500 sft ஆவது பட்டி பார்த்திருக்கனும்..பண்ணி இருக்க மாட்டானுங்க..தினக் கூலிக்கு விட்டா நம்மளை தெருவுக்கு கொண்டு வந்திருவானுங்க.

இத்தனை வருச சர்வீஸ்ல தமிழனை வேலைக்கு வச்சு இரண்டு நாள்லயே நிப்பாட்டுனது இது தான் முதல் தடவை.

தமிழனுக்கு தமிழன்தான் எதிரின்னு சொல்லிட்டு வராதீங்க.

போங்கடா போய் டாஸ்மாக்ல விழுங்க..

#வடக்கன்ஸ்

நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 15, 2023

வட்டி அனுபவங்கள்

 இனி நாமளும் பைனான்ஸ் ஆரம்பிச்சிட வேண்டியது தான். நம்ம நண்பருக்காக கடன் கேட்டிருந்தேன்.

ஏதோ ஒரு அர்ஜென்ட் என்று சொன்னதால்.

நம்ம கிட்ட இல்லாததால் இன்னொரு நண்பர் மூலம் செல்வபுரத்தில் ஒருத்தரை பிடித்தேன்.

ரூல்ஸ் பார்க்கணுமே.

50000 க்கு 40000 தருவார்கள். ஒரு மாதம் டைம்.திருப்பி 50K தந்து விட வேண்டும்.தராத ஒவ்வொரு நாளுக்கும் 1000 பெனால்டி..பின் பிணயமாக வண்டி ஆர்சி புக் தர வேண்டும்.வண்டியையும் நிறுத்தி விட்டு செல்ல வேண்டும்.

இதை கேட்டவுடன் நாமளும் ஆரம்பிக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.காலையில் 900 / 9000 கொடுத்து மாலையில் 1000 / 10000 ஆக தரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

செல்வபுரம் பகுதி, காந்திபுரம் பகுதிகளில் மெயின் பிஸினஸ் இதான்.எந்த மதம் வட்டி ஹராம் என சொல்லி இருக்கிறதோ அவர்கள் தான் இத்தொழிலில் அதிகம் இருக்கின்றனர்.நாள்வட்டி, வார வட்டி, மாதவட்டி, 

கந்து வட்டி, மீட்டர், ராக்கெட் என எல்லாமும் இருக்கிறது.

கடைசியாய் ஒருவரிடம் கேட்ட போது பிட்டிங் வேண்டுமானால்  வைக்கலாம். உங்கள் வண்டியை தந்துவிட்டு 20000  வாங்கிச் செல்லுங்கள் என சொல்ல, அதற்கு நான் சொன்னது " பாஸ்..வெயிட் பண்ணுங்க...நீங்க பார்ட்டி மட்டும் புடிங்க.

நான் தர்றேன் பைனான்ஸ்னு சொல்லிவிட்டு வந்து விட்டோம்.வெறும் 20000 க்கு ராயல் என்பீல்ட் புல்லட்ஐ பிட்டிங் கேட்க, அப்பொழுது தான்  உதித்தது முதல்வரி...

#கந்துவட்டி #மீட்டர்வட்டி #பணம்

நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 14, 2023

காதலர்களுக்கு ஏற்ற இடங்கள் - கோயம்புத்தூர்

 கோவையில் காதலர்கள் சந்தித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள சிறந்த இடங்கள்


கோவிலுக்கு போற எண்ணம் இருப்பின்


மருதமலை

பேரூர்

அனுவாவி சுப்ரமணியர் கோவில்

பொன்னூத்தம்மன் கோவில்

சாய்பாபா கோவில்

ஈச்சனாரி கோவில்

தியானலிங்கம் ஈஷா

தென்திருப்பதி பாலாஜி கோவில்

காருண்யா தேவாலயம்

குமரகோட்டம் சூலூர்

பத்ரகாளி அம்மன் கோவில் மே.பாளையம்.


ஷாப்பிங்கோட படம் பார்க்கனும்னா 


ப்ரூக் பீல்ட்ஸ் மால்

Prozone மால்

பன் மால்.


கார்னர் சீட் வேணுங்கிறவங்களுக்கு 

 கற்பகம் காம்ப்ளக்ஸ்

கேஜி தியேட்டர்

பாபா காம்ப்ளக்ஸ்

அம்பாள் காம்ப்ளெக்ஸ்..


காத்தோட்டமா கடலை  போடறவங்களுக்கு 

உக்கடம் லேக்

ஆர்எஸ்புரம் லேக்

சுங்கம் லேக்

சூலூர் லேக்

வ.உ.சி பார்க்.

பாரதி பார்க்

காந்திபூங்கா

ரேஸ்கோர்ஸ்

பொட்டானிக்கல் கார்டன்


ப்ரைவசியா போகனும்கிறவங்களுக்கு

இருக்கவே இருக்கு நம்ம OYO


முக்கிய குறிப்பு : கலாச்சார காவலர்கிட்ட மாட்டிக்காதீங்க... வயிற்றெரிச்சல்ல சுத்திகிட்டு இருப்பானுங்க..ஜெய் காளின்னுட்டு...


#காதலர் தின ஸ்பெஷல்

இன்னும் கொஞ்சம்...

Sunday, January 1, 2023

HAPPY NEW YEAR 2023


 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, June 1, 2022

கோவில் குளம் - அருள்மிகு தன்னாசி ஈசர் சித்தர் கோவில், புண்ணாக்கு ஈசர், பெரியநாய்க்கன்பாளையம், கோவை

அருள்மிகு தன்னாசி ஈசர் சித்தர் கோவில் 

         நம்ம நண்பர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதேச்சையா கடவுள் பக்கம் பேச்சு திசை மாறுச்சி..உங்க குரு யாருன்னு கேட்டாப்ல…எந்த சாமியை கும்பிடுவீங்கன்னு கேட்டாரு.ஒரு காலத்துல சாய்பாபாவை கும்பிட்டேன்.அப்புறம் இப்போ சிவபக்தனா ஆகிட்டேன். சிவனைத்தான் கும்பிட்டுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்..ஆனா அவரு குரு இல்லையே…அவரு கடவுள், அவரை கும்பிட்டு சித்தர் ஆனவங்க குரு..அவர்களை வழிபட்டால் மிகவும் நல்லது அதுவும் ஜீவ சமாதி அடைந்த சித்தர்களோட அருள் ரொம்ப பலம் நம்ம தொழில், வம்சம் விருத்திக்கு அவர்களின் ஆசிர்வாதம் நல்லா செட்டாகும் அப்படின்னு சொல்ல, பேச்சு சித்தர்களைப் பற்றி போனது.பழனி பக்கம் தான் நிறைய சித்தர்கள் ஜீவசமாதி ஆகி இருக்காங்க, ஒரு சில ஊர்களில் இன்னும் உயிருடனும் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருவண்ணாமலை பகுதி மலைகளில் சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்கள் 100 க்கும் மேற்பட்ட சித்தர்கள் இருக்கிறார்கள் தமிழகம் முழுக்க என பேச்சு சுவாரஸ்யமாக திரும்பியது.

        நம்மூர்ல பக்கத்துல யார் இருக்கானு கேட்க, தன்னாசி ஈசர்னு ஒரு சித்தர் இருக்கார்,அவரு ஜீவ சமாதி அடைந்த இடம் பாலமலை பக்கத்துல செல்வபுரம் என்கிற ஊரில்.அவருக்கு பெரிய கோவிலே இருக்கு.1000 வருடம் பழமை வாய்ந்த ஆலமரமும் காராட்சி மரமும் இருக்கு என சொல்லி என் ஆர்வத்தினை தூண்டினார்..அதுமட்டுமல்ல அவரது சமாதியில் நீங்கள் வேண்டிய பலனை நினைத்து, இரு கைகளை தள்ளி வைத்து, சித்தரை மனமுருக வேண்டினால் உங்கள் கை தானாக நெருங்கி வரும் அப்படி வந்தால் நீங்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள் கண்டிப்பாய் நிறைவேறும் என கூறி ஆச்சரியமூட்டினார்.

              இது குறித்து கூகுளில் தேடினால் ஒரு சில வீடியோ பதிவுகள், தினமலர் ஆன்மீகம் போன்றவைகளில் இந்த கோவிலை பற்றி இருக்கிறது,

              நாமும் அந்த சித்தரின் ஆசியைப் பெறுவோம் இன்று கிளம்பி விட்டேன். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் இருபுறமும் பசுமை கண்களை ஈர்க்க, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சிறு தொலைவில் பசுமையாக காட்சியளிக்க, செல்வபுரம் என்கிற ஊரில் ஆலமரம் சூழ்ந்த கோவிலில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசர் என்று அழைக்கப் படும் புண்ணாக்கீசர் இங்கே அருள்பாலிக்கிறார்.




  கோவிலில் உள்ளே ப்ரவேசித்தவுடன் அப்படி ஒரு அமைதி நிலவுகிறது.பரந்து விரிந்த ஆலமரத்தின் பிரமாண்ட விழுதுகள் கோவிலின் பின்புறத்தில் தூண்களை போல் கிளைகளைத் தாங்கி நிற்கிறது.காராட்சி மரமும், ஆலமரமும் பின்னிப் பிணைந்து கிளிகள், மயில்கள், குருவிகளின் புகலிடமாய் ஆகி, அவைகளின் ரீங்காரம் ஒலிக்க மிக ரம்யமாக இருக்கிறது.



கொடிமரத்துடன் கூடிய கோவிலின் கருவறையில் தன்னாசி ஈசர் அருள்பாலிக்கிறார்.ஆஞ்சனேயர் சன்னதி, முருகன் சன்னதி, விநாயகர் சன்னதி, மாரியம்மன் சன்னதி, நவக்கிரக சன்னதி என தனித்தனியாக இருக்கிறது,தியானம் செய்வதற்கென்றே தனி மண்டபம் இருக்கிறது. இவை அனைத்தும் பக்தர்களின் நன்கொடையில் மண்டபம், கருவறை, கொடிமரம், கோபுரம் என எல்லாம் புதிதாய் கட்டப்பட்டிருக்கிறது.சிவலிங்கமும் நந்தியும் ஆலமரத்தின் அடியில் வீற்றிருப்பது அழகு..


இதற்குமுன் பலவருடங்களுக்கு முன்னால் ஆள் அரவமற்ற இந்த மலைப்பகுதியில், ஒரு ஆலமரத்தின் அடியில் தவம் புரிந்து கொண்டிருந்த இந்த சித்தர் வருவோர் போவோர்க்கு நோய்களை நீக்கி, அருள்பாலித்துக் கொண்டிருந்தாராம்.ஒரு நாள் அங்கிருக்கும் குகையில் அப்படியே ஜீவசமாதி ஆகிவிட்டாராம்.அவரை வணங்கியவர்கள் அந்த ஆலமரத்தின் அடியில் அவரது சிலையை வைத்து வணங்கி வழிபட ஆரம்பித்து இன்று பெரும் கோவிலாக ஆகி இருக்கிறது.

      சித்தர்களுக்கு என்று தனி சன்னதி அமைக்கப்பட்டு அதில் அகஸ்தியர், திருமழிசை சிவவாக்கிய சித்தர், அழகண்ணர் சித்தர், கோரக்கர் சித்தர், சுந்தரானந்தர் சித்தர், புலிப்பாணி சித்தர், மச்சமுனி சித்தர், கருவூரார் சித்தர், போகர் சித்தர், தன்னாசி ஈசர் சித்தர், பாம்பாட்டி சித்தர், சட்டைநாதர் சித்தர், கொங்கணர் சித்தர், இடைக்காடர் சித்தர், திருமூலர் சித்தர், காளாங்கி சித்தர், குதம்பை சித்தர், கமலமுனி சித்தர் என அனைவருக்கும் தனித்தனியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜை நடக்கிறது.


        
     இந்த கோவிலின் அதிசயம் என்னவெனில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டிக்கொண்டு, ஆலமரத்தின் அடியில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசரின் அருளை பெற, அவரது சிலைக்கு முன் அமர்ந்து தியானித்து, இரு கைகளை தூரமாக வைத்து வேண்டிக்கொள்ளும் போது, இரு கைகளும் இணையும்.அப்படி இணைந்தால் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது உண்மை.

                             

   
இந்த கோவிலில் ஒரு சில வியாதிகளுக்கு சிகிச்சை இலவசமாக அளிக்கின்றனர்,அங்கேயே தங்கி சிகிச்சை பெறும் வசதியும் இருக்கிறது.

                             

தன்னாசி ஈசரின் அருளைப் பெற ஒரு தடவையாவது அங்கே செல்லுங்கள்.

பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் செல்வபுரம் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது இந்த கோவில்.

கோவிலின் அருகே யுனைட்டடு இஞ்சினியரிங் கல்லூரியும், அதன் பள்ளியும் இருக்கிறது,

நடை திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, பேருந்து வசதி இல்லை.கோவையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த தன்னாசி ஈசர் சித்தர் கோவில்.

ஓம் நமச்சிவாய…...


நேசங்களுடன்

ஜீவானந்தம்

 

 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 22, 2021

மீன்குறிப்புகள்

     

            நான் எப்பொழுதும் கோவையில் மீன் வாங்குவதில்லை.பல வருடங்களுக்கே முன்பே வாங்குவதை நிறுத்திவிட்டேன்.எப்பொழுதாவது உறவினர்கள் நண்பர்கள் வருகையின் போது அவர்களின் விருப்பத்திற்கேற்ப மீன் வாங்குவது வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே.அதுவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறையில் சனிக்கிழமை அன்று பிரஷ்ஷாக ( அதுவும் ஓரிரு நாட்கள் பழையது தான் சாத்தனூர் அணையில் இருந்து வருவது ) வரும் டேம் பாறை மீன் மட்டுமே வாங்குவது.அது கொஞ்சம் நன்றாக இருக்கும்.ஆனால் கேரளா மற்றும் தூத்துக்குடியில் இருந்து வருபவை பெரும்பாலும் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் பிடிபட்டவை.கேரள மத்தி மீன் மட்டும் ஒரு சில நாட்களில் கொஞ்சம் பிரஷ்ஷானது போல வரும்.அதுவும் பெரும்பாலான நாட்களில் சொதப்பி விடும்.

        குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்து இருப்பதினால் நன்கு கெட்டியாக இருக்கும்.அது கோவை வந்து மார்க்கெட்டில் தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வரும் போது கொஞ்சம் இளகி இருக்கும்.அதுவரையில் ஐஸ்கட்டிகளோடு இருக்கும். மீன்கடையில் எடை போட்டு வெட்டி வீட்டிற்கு வந்து தண்ணீரில் கழுவினால் போதும் மீன் சதை அப்படியே உடையும்.கடையில் வெட்டும் போதே கொஞ்சம் நேக்காக வெட்டி அனுப்பி விடுவர்.

        இங்கு மீன் வெட்டுபவர்களும் சரியில்லை.விண்வெளிக்கு ராக்கெட் விடுவதை போல் மீனை வெட்டித் தருவர்.வாங்கும் ஒரு கிலோ மீனில் 400 கிராம் காலி ஆகிவிடும்.மீன் தலையை கன்னா பின்னா வென்று வெட்டுபவர்களை கண்டால் கோபம் தலைக்கேறும்.விதியே என்று நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சுத்தம் செய்ய கழுவினால் மீன் சதை வேறு தானாக உதிரும்.மீனின் நாற்றமும் பாசான் நாற்றத்தைப் போல ஒரு மாதிரி வாடை அடிக்கும்.வட்டவடிவ துண்டுகள் போடப்பட்ட மீன்களில் முட்கள் தனியாய் வரும்.

        நெத்திலி சங்கரா போன்ற மீன்களில் முட்கள் வேறு தனியாய் பிரிந்து பூரான் போன்று இருக்கும். எத்தனை நாள் பழசான மீனோ என்று எண்ணியபடியே மீனில் மசாலாக்கள் சேர்த்து குழம்பும் பொரிச்சதுமாக சாப்பிட்டு விடுவது.துணைக்கு வேறு தமிழக அரசு சப்போர்ட் செய்வதால் பசி ருசி அறியாது என்பதை போல காலி ஆகி விடும்.காசு கொடுத்து வாங்கிய பண்டம் அல்லவா.நீண்ட நாட்கள் ஆன மீனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இங்கு வாங்குவதை தவிர்த்து விடுகிறேன்.அதுமட்டுமல்ல நமது ஊரில் காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு துள்ள துள்ள வரும் ஜிலேபி, கெண்டை, அவுரி மீன்களையே சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு இங்கிருக்கும் மீன்கள் ஏனோ பிடிப்பதில்லை.நாங்களே ஆற்றில் தூண்டில் போட்டோ, வலை விரித்தோ, கைகளிலோ மற்றும் இரவு நேரத்தில் மீன் வேட்டைக்கு சென்று பிடித்து விட்டு வரும் மீன்கள் எப்போதும் ருசியாகவே இருந்திருக்கின்றன.

            இறந்த மீனின் செவுளை பார்த்தால் ரத்தச்சிகப்பில் இருக்கும்.ஆனால் இங்கு வரும் மீன்களோ நிறமற்ற செவுள்களாக இருக்கிறது.அந்த அளவுக்கு நாட்பட்டதாக இருக்கிறது.கடல் மற்றும் ஆறு இருக்கும் ஊரில் இருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.மிகவும் பிரெஷ்ஷான மீன்களை உண்டு வாழ்கின்றனர்.

            மற்ற ஊர்களில் உள்ளவர்கள் எங்கிருந்தோ வரும் மீன்களை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.பார்மலின் எனும் ஒரு திரவத்தை வேறு தெளித்து விடுகிறார்கள்.சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ஏழு டன் மீனில் பார்மலின் தெளித்திருப்பதை கண்ட அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர்.இங்கேயும் அது இருக்கலாம்.உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.மீனில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன.அதற்கு ஆசைப்பட்டு உடலுக்கு தீங்கு தரும் பழைய மீன்களை சாப்பிட்டு வருகிறோம்.

#மீன்குறிப்புகள்    


இன்னும் கொஞ்சம்...