Thursday, June 22, 2017

கோவை மெஸ் - வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பலகாரம்,சிக்கன் சமோசா, காயல்பட்டினம், தூத்துக்குடி

காயல் பட்டினம் :
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றிருந்தோம்.முருகனின் அருள் பெற்றுவிட்டு திரும்ப வருகையில் தூத்துக்குடி வழியாக மதுரை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தோம்.
காயல் பட்டினம் :
       திருச்செந்தூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற ஒரு புராதன வரலாற்று ஊரான காயல்பட்டினம் அடைந்தோம்.மிகப்பெரும் வரலாற்று நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த ஊரின் சிறப்புகளை பட்டியலிட்டால் இந்த பதிவு ஒரு வரலாற்று பதிவாகிவிடும் என்பதால் இந்த வரியை இத்தோடு நிறுத்திவிட்டு சாப்பாட்டினை கவனிப்போம்.போன நேரமோ மதிய வேளை வேறு, இருக்கின்ற ஊரோ முஸ்லீம் அன்பர்கள் பெருவாரியாக இருக்கிற ஊர்.எப்படியாவது எங்கேயாவது பிரியாணி ஹோட்டல் இருக்கும், கண்டுபிடித்து சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி உள்ளூர் ஆட்களிடம் விசாரித்தோம்.அவர்கள் சொன்ன ஒரே கடை ஜம் ஜம் பிரியாணி கடை.

        மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த கடை.நாங்கள் சென்றிருந்த போது கடையில் எல்லாம் காலியாகி இருந்தது.மதியம் நான்கு மணிக்கும் மேலாகி இருந்ததால் அனைத்தும் காலி.ஆனால் சுடச்சுட சமோசா போட்டு கொண்டிருந்தனர்.மாலை நேரம் ஆகிவிட்டதால் இதையே சாப்பிட்டு விட்டு இப்போதைக்கு பசியை கட்டுப்படுத்துவோம் என்று சமோசா ஆர்டர் செய்தோம்.சிக்கன் சமோசாவா…வெஜ் சமோசாவா என்று கேட்க, ஓ…சிக்கன்ல  இருக்கா என்று கேட்டபடியே சிக்கன் சமோசாவையே ஆர்டர் செய்தோம்.


          சுடச்சுட ஒரு பிளேட்டில் சமோசாக்களை கொண்டு வந்து வைக்க, ஒட்டு மொத்தோரின் ஒவ்வொரு கைகளும் நீண்டு தட்டை உடனடியாக காலி செய்தது.சுடச்சுடச் சிக்கன் சமோசா மணத்தோடு நல்ல ருசியைத்தர, பாகுபாடின்றி இறங்கியது வயிற்றுக்குள்..காலியாகிப் போன தட்டைக்கண்டு மீண்டும் கடைக்காரர் நிரப்பி வைக்க, முதல் ரவுண்ட் முடித்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருந்தனர் நம்மாட்கள்.முதல் ரவுண்டைப்போலவே இப்பொழுதும் சீக்கிரம் காலியாகிப்போனது தட்டு..இப்படி அப்படி ஒரு சில ரவுண்டுகள் போனதும் கைகளை கழுவ ஆரம்பித்து அக்கடா என்று உட்கார ஆரம்பித்தனர்.
        சும்மா இருக்கையில் கடைக்காரரிடம் விசாரிக்கையில் அப்பொழுது தான் காயல் பட்டினத்தில் ஃபேமஸ், வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பட்டர் பிஸ்கட் இப்படி  நிறைய ஸ்னேக்ஸ் வகைகள் இருக்கின்றன என தெரிந்து கொண்டோம்,வாடா எனப்படும் பேரைக் கேட்டவுடன் ஆச்சரியப் பட்டோம்.வாடா எங்கு கிடைக்கும் என்று கேட்கையில், பீச் பக்கம் போங்க, நிறைய முஸ்லீம் பெண்மணிகள் விற்க ஆரம்பித்து இருப்பார்கள் என சொல்லி அனுப்பினார்கள்.அடுத்த சில நிமிடங்களில் பீச்சினை அடைந்தோம்.ஆட்கள் அதிகமற்ற கடற்கரை.உள்ளூர் மக்கள் மட்டும் கொண்டாடும் பீச் ஆக இருக்கிறது.ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் பீச்சில் விளையாடிக்கொண்டிருந்தனர்.கடை போடும் மும்முரத்தில் ஒரு சிலர் இருந்தனர். நாங்களும் கொஞ்ச நேரம் பீச்சில் விளையாடிவிட்டு வருகையில் கறிக் கஞ்சியுடன் வாடா விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.



                   வாடா மட்டும் எங்களை கவர்ந்த படியால் அதை வாங்கி ருசிக்க ஆரம்பித்தோம்.இதன் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது,பறக்கும் தட்டு போல் மேல் பக்கம் உருண்டையாகவும், அடிப்பக்கம் தட்டையாகவும் இருக்கிறது.அரிசிமாவு மற்றும் தேங்காய்த்துருவல் கொண்டு இந்த வாடா தயாரிக்கப்படுகிறது.இதனுள் வைக்கப்படும் பூரணம் இங்கு அடக்கம் என்று சொல்கின்றனர்.வெஜ் அடக்கம் தான் இங்கே கிடைக்கிறது.வெங்காயம் மற்றும் ஒரு சில காய்கறிகள், மிளகாய், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இந்த அடக்கம் செய்கின்றனர்.இதை அரிசி மாவினுள் வைத்து அடக்கம் செய்து எண்ணையில் பொரித்து தருகின்றனர், வாடா  ஆக…..
                  ருசி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.அரிசிமாவு எண்ணையில் பொரிந்ததும் கொஞ்சம் கெட்டிப்பட்டு,மொறு மொறுவாகிறது. உள்ளே இருக்கும் அடக்கம் சாஃப்டாக இருக்கிறது.சாப்பிடும் போது இது ஒரு தனிச்சுவையைத் தருகிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ அதிகம் இதன் சுவை பழக்கப்படவில்லை.கொஞ்சம் கெட்டித்தன்மை இருக்கிறது.
                அந்த ஊர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுப்பண்டமாக இந்த வாடா இருக்கிறது.நோன்புக்கஞ்சி அல்லது கறிக்கஞ்சியுடன் இதை சேர்த்து விற்கின்றனர்.விலை பத்து ரூபாய் ஆக இருக்கிறது.இதனை ருசி பார்த்து விட்ட படியால் அடுத்து தம்மடையை நோக்கி நகர ஆரம்பித்தோம்…
தொடரும் போடுவோம்….

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, June 2, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் அன்னவாசல், உடுமலைப்பேட்டை

                         சமீபத்துல உடுமலை போயிருந்தேன்.எப்பவும் போல மதிய வேளைக்கு நல்ல ஹோட்டலை தேடும் போது, அந்த ஊருக்கு அடிக்கடி வந்துட்டு போயிட்டு இருக்கும் நண்பரை போனில் பிடிச்சேன்.அன்னவாசல் போங்க, நல்லாயிருக்கும் என்றார்.அட்ரஸ் கேட்டு அன்னவாசல் ஹோட்டலை அடைந்துவிட்டோம்.நிறைய கார்கள்  அந்த தெருவில் நின்று கொண்டிருக்க, நாங்களும் ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.

                                 ஹோட்டல் பழசாகிக் கொண்டிருக்கிறது  என்கிற அறிகுறி உள்ளே நுழையும் போதே தெரிந்தது.ஹோட்டல் பராமரிப்பு குறைவாக இருக்கிறது என்பது பார்த்தவுடன் புரிந்து போனது.வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி பார்ட்டிசன் அந்த சூழ்நிலையிலும் மிக அழகாய்த் தெரிந்தது.
                            
                            மூங்கிலால் சூழப்பட்ட காற்றோட்டமான அறைகள் இருக்க, உள்ளே ஏசியில் வந்து அமருமாரு சர்வர் சொல்ல, ஏசி ஹாலுக்குள் நுழைந்தோம்.நான்கு டேபிள்கள் போடப்பட்டிருந்தன.காலியானதில் அமர்ந்தோம்.வேகமாய் வந்து உபசரித்த சர்வர் இருப்பதை மட்டும் ஒப்பித்தார்.
பிளைன் பிரியாணியுடன், மட்டன் தொக்கும், மட்டன் ஃப்ரையும் சொல்ல, சில பல நிமிடங்களில் வந்து சேர்ந்தது.
                 பிரியாணியில் இருந்து பிரித்தெடுத்த சாதம் பிளை பிரியாணி எனப்படுகிறது. அனேகமாக கேள்வி பதில் ரெடின்னு நினைக்கிறேன்.
                             நன்றாகவே இருந்தது, சின்ன சின்ன சீரக சம்பாவில் செய்யப்பட்டு, அளவான காரத்துடன், மிதமான மசாலாவுடன் சாப்பிட சுவையாக இருந்தது.அடுத்து வந்த மட்டன் தொக்கு செம.மைய அரைத்த மசாலாவுடன் சின்ன சின்ன எலும்பில்லாத மட்டன் துண்டுகள் நன்றாக வெந்து, தேங்காய் மசாலாவுடன் சேர்ந்து சுவையை கூட்டியது, நல்ல அளவான காரமும் உப்பும் மட்டனின் மணமும் ஒன்று சேர்ந்து சுவையை அதிகரித்தது.
               கைவிரலில் ஒட்டியிருக்கும் மசாலாவை நன்கு சூப்பும் படி சுவை அமைந்திருந்தது.அது போலவே மட்டன் ஃப்ரையும் செம மாஸ். கொஞ்சம் பிரியாணி சாதத்துடன் கொஞ்சம் மட்டன் தொக்கினை தொட்டுக்கொண்டு சாப்பிட சத்தமில்லாமல் காலியாகி கொண்டு இருந்தது.மட்டன் கொத்துக்கறி தொக்கும், மட்டன் ஃப்ரையும் செம டேஸ்ட்.
                      ஆனால் அளவு மிக குறைந்த அளவே இருக்கிறது.150 கிராம் கூட இருக்காது என நினைக்கிறேன்.டேஸ்ட் மட்டும் செமயாக இருக்கிறது.
                      சில்லி சிக்கனும் மிகவும் நன்றாக இருக்கிறது.பஞ்சு போல் எலும்பில்லாமல் மிகவும் டேஸ்டியாக இருக்கிறது.குஸ்கா சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாதம் வாங்கிக்கொண்டு ரசம் சேர்த்தால் ரசம் சூப்பர் டூப்பர் டேஸ்ட்.தக்காளி ரசத்துடன் கொஞ்சம் மட்டன் எலும்புகள் சேர்த்து செய்திருக்கிறார்கள்.மணமும் சுவையும் சூப்பர்.ரசத்தினை வேண்டுமளவிற்கு சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டும், கையை குழி ஆக்கி அதில் ஊற்றியும் சாப்பிட்டதில் வயிறு நிறைந்து போனது.அடுத்து கெட்டித்தயிரில் சாதம் பிசைந்து கொஞ்சம் மட்டன் தொக்கினை தொட்டுக்கொண்டு சாப்பிட செம டேஸ்ட்...
     நன்கு திருப்தியாய் சாப்பிட்டு கை கழுவி உட்கார்ந்தோம்..சாப்பிட்டதற்குண்டான பில் மட்டும் திருப்தியை தரவில்லை.விலை சற்றே கொஞ்சம் அதிகம்.அந்த ஊரில் விலை அதிகம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.மட்டன் அளவுகள் மிக குறைவாகத் இருக்கின்றன.150 கிராம் இருக்குமா என்பது சந்தேகமே.டேஸ்ட் நன்றாக இருக்கிறது.ஆனால் விலை மட்டும் மிக அதிகமாக இருக்கிறது.சர்வீஸ் என்பது முதல் முறை வைக்கும் போது மட்டும் நன்றாக இருக்கிறது.அதற்கப்புறம் கேட்டு கேட்டு சாப்பிட வேண்டி இருக்கிறது.

இந்த ஹோட்டலில் மட்டன் கொத்துக்கறி தொக்கு மற்றும் ரசம் சூப்பர்.ரசம் சான்சே இல்லை.எலும்பு போட்ட ரசம் நன்றாக இருக்கிறது.
அந்தப்பக்கம் போனிங்கன்னா ரசத்துக்காக போகலாம்.ஏன்னா ரசத்துக்கு மட்டும் தான் விலை இல்லை.
செம டேஸ்ட்....விலையைப் பத்தி கவலைப்படாதவங்க தாராளமா போகலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...