Saturday, November 29, 2014

கோவை மெஸ் - இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை

              ஒரு மாலை நேரம்...மணி 3.30 இருக்கும்.மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்துல இருக்கிற இராமசாமி மெட்ரிகுலேசன் ஸ்கூல் பக்கத்துல போயிட்டு இருந்தபோது அந்த ஸ்கூல் நிர்வாகமே ஒரு கேண்டீன் நடத்திட்டு வர்ற விஷயம் ஞாபகத்திற்கு வர அப்படியே யூ டர்ன் அடிச்சு உள்ளே நுழைந்தேன்.மணி 3.30 ஆச்சே, சாப்பாடு இருக்குமா இருக்காதா என்ற எண்ணத்திலேயும், பதிவு ஒண்ணு தேத்தமுடியுமா என்ற எண்ணத்திலேயும் அவசர அவசரமாக வண்டியை நிறுத்தவும், காவலாளி ஒருவர் வாங்க வாங்க என அழைக்கவும், நமக்கான சாப்பாடு கன்பார்ம் ஆகிவிட்ட சந்தோசத்தில் உள்நுழைந்தேன்.
        
           பரந்து விரிந்த பெரிய சாப்பாட்டு ஹால் நம்மை வரவேற்கிறது.டோக்கன் வாங்கிகொண்டு கை கழுவும் இடத்திற்கு சென்றபோது சாப்பிட்டவர்களின் தட்டுகள் நிறைந்து கிடந்தன.ஹாலோ காலியாகி கிடந்தது.லேட்டாய் வந்தால் இப்படித்தான் வெறும் டேபிள் சேர்களை பார்த்துக்கொண்டு உண்ணவேண்டியது தான் என மனதுக்குள் நொந்தபடியே டோக்கன் கொடுத்து அதை சாப்பாடாக மாற்றி, கையில் ஏந்தி காலியான டேபிள்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.
           நான் போன அன்று முள்ளங்கி சாம்பாருடன் கூடிய சாதம்.ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்களுடன் சாம்பார். பொரியலும் தினம் தினம் வெவ்வேறு காய்களுடன்.நன்றாகவே இருக்கிறது.அளவு சாதம் தான்.ஆனால் அதுவே நிறைவாக இருக்கிறது.இன்னும் நிறைய அயிட்டங்கள் சேர்க்கப்படுவதாகவும் அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.

          ஏழைகள் மற்றும் வசதி குறைந்தோர் மிக திருப்தியாக சாப்பிடுவதற்காக ஏற்படுத்திய கேண்டின் இது.குறைந்த விலையில் தரமான சாப்பாடு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது இராமசாமி உணவகம்.காலையில் இட்லி, தோசை, ரவாகிச்சடி, என ஆரம்பித்து நிறைய வெரைட்டிகள் தருகின்றார்கள்.பத்து ரூபாயில் ஆரம்பித்து 30 வரை இருக்கிறது.அதே போல் இரவு சிற்றுண்டியும் நிறைய வெரைட்டிகளில் இருக்கிறது.
            வெளி ஹோட்டல்களில் அறுபது ரூபாயில் இருந்து கிடைக்கின்ற சாப்பாடு இங்கே 30 ரூபாய் மட்டுமே.இந்த நிறுவனமும் மற்றவர்களிடமிருந்து நிதி வாங்காமல் இந்த கேண்டீனை நடத்தி வருகிறது.லாப நோக்கமின்றி செயல்பட துவங்கி இருக்கும் இந்த இராமசாமி நிறுவனம் இன்னும் பல சிறப்பான சேவைகளை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த கேண்டீன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருப்பதால் இன்னும் நிறைய பேரை சென்றடையவில்லை.ஆனாலும் மாலை நேரம் கணிசமான கூட்டம் வந்து சேர்கிறது.
           இந்த சேவையினை செயல்படுத்தி வரும் திரு ஹரி அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
கோவை டூ திருச்சி ரோட்டில் சாந்தி கேண்டீன் இருக்கிறதோ அதே மாதிரி கோவை டூ மேட்டுப்பாளையம் ரோட்டில் இராமசாமி கேண்டீன் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 12, 2014

கோவில் குளம்:அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

             கோவில் திருவிழாவானது இரவு முழுக்க ஒரே ஒரு நாள் மட்டும் மிக விமரிசையாக பூஜைகள் நடக்கும் கோவில் ஆயா கோவில் என்கிற அழியா இலங்கை அம்மன் கோவில்.சமீபத்தில் இந்தக்கோவிலுக்கு சென்று வந்திருந்தேன்.இரவு நேரம் தான்..கோவில் களை கட்டியிருந்தது அலங்கார விளக்குகளாலும், திடீர்க் கடைகளாலும் மற்றும் எப்பவும் போல இரவென்றாலும் பகலென்றாலும் அம்மன் அருள் பெற விரும்பும் பக்த கோடிகளாலும்…. 
                                   ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
            

            பக்தகோடிகளை வரவேற்கும் பேனர் பிரியர்களின் போட்டோக்கள் நிரம்பிய பேனர்கள் கோவிலுக்கு செல்லும் வழி பூராவும் இருபுறமும் வரவேற்றுக் கொண்டிருந்தன.கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கிற கடைகளில் எப்பவும் போல மக்களாகிய பக்தர்கள் கூட்டம். சட்டி பானை முதல் தட்டு முட்டு சாமான் வரை அனைத்தும் கடை பரப்பியிருந்தன.பொங்கல் அன்று காணப்படும் செங்கரும்பு கூட இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோடி எண்பது ரூபாய்க்கு விற்பனையாகிக்கொண்டிருந்தது.இந்த கோவில் அம்மனுக்கு பிடித்த பழங்களான விளாம்பழமும் கொழுஞ்சிக்காயும் நிறைய குவிந்து கிடந்தன பக்தர்களின் வருகைக்காக.அம்மனுக்கு படைக்கப்படும் வாழைப்பழங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சீப்பு சீப்பாக விலை குறைவின்றி விற்பனையாகிக் கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி அவ்வப்போது தார் தாராக வெளியேறிக் கொண்டிருந்தது வசதி படைத்த பக்தர்களால்...






ராட்டினம், ட்ரெயின் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல் என பக்தர்கள் கூட்டம் நன்றாக திருவிழாவினை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.அகால வேளையிலும் அயர்வின்றி உழைத்துக்கொண்டிருந்தனர் கடைக்காரர்கள். குக்கிராமத்திலும் எட்டிவிட்ட சைனா தயாரிப்பு பொருட்கள் நிறைந்த கடைகளில் ரிகார்ட் செய்யப்பட்ட ஒலியானது உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது எந்தப்பொருள் எடுத்தாலும் இருபது ரூபாய் என்று.எல்லாக்கடைகளிலும் விற்பனை மும்முரமாகிக் கொண்டிருக்க ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தனர் திடீர்க் கடை ஓனர்கள்.எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு ஜோடி செங்கரும்பினை வாங்கி தின்று கொண்டிருந்தோம் நேரம் போக்க....அதிகாலை மூன்று மணியளவில் அம்மனை தரிசிக்க சென்றோம்.

              ஒளி வெள்ளத்திலும் ஒலி வெள்ளத்திலும் நீந்திக்கொண்டே அம்மனிடம் அருள் பெற சென்றோம்.அம்மன் அருள் பெற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, நாங்கள் உள்புகுந்தோம்.புதிதாய் கும்பாபிசேகம் செய்ததாலும் இந்த விழாவினாலும் புதிய பொலிவுடன் காட்சியளித்தது கோவிலின் தோற்றம்.அம்மன் குடிகொண்டுள்ள மண்டபத்தின் பதினாறு தூண்களும் மண்டபமும் அழகுற கனிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.கருவறைக்கு எதிரே நிறுவப்பட்டுள்ள ஊஞ்சலானது அம்மனை வைத்து பாட்டுப்பாடி ஆட்டுவதற்கு இருக்கிறது.இந்த மண்டபத்தின் கருவறையில் புற்று வடிவத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.அம்மனின் பாதங்கள் மட்டுமே இங்கு வழிபட படுகின்றன.அத்தனூர் அம்மனின் தமக்கையாக கருதப்படும் இந்த அம்மனின் துணை தெய்வங்களாக அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் தனித்தனி சன்னதியில் இருக்கின்றனர்.முனியப்பன் மிகப்பெரும் உருவமாக மூன்று வித முனிகளாக அமர்ந்திருக்கிறார்.பசு ஒன்று பால் சொரியும் நிலையில் இருக்கிறது.ஒரு நந்தி ஒன்றும் முனியப்பன் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப்பட்டு தனி சன்னதியில் குடிகொண்டுள்ளனர்.மங்கல வாத்தியத்தின் நாதத்திலும், கோவில் மணி ஓசையிலும் அம்மனை ஆற அமர தரிசித்து விட்டு அதன் துணை தெய்வங்களையும் தரிசித்துவிட்டு வெளியேறினோம்.



                                  ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )

இந்தக்கோவிலின் தல வரலாறு என்னவெனில்
              சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம்.அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள்.இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம்.ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம்.மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.
         மேலும் முனியப்பனை வேண்டினால் பெண்களின் கர்ப்பக்கோளாறு தீர்ந்து விடும் என்பதும், பேய் பிசாசுகளும் அண்டாது என்பதும் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது என்பது நம்பிக்கை.அதன் தொடர்ச்சியாய் வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.வீட்டிலுள்ள பசுக்கள் நலமாக இருக்கவும் நோய் நெருங்காமல் இருக்கவும் மண் உருவங்களை செய்து வழிபடுகின்றனர்.
 ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
இந்த தலத்தின் தலவிருட்சம் வில்வ மரமாக இருக்கிறது.

கோவிலுக்கு செல்ல வழி: ராசி புரம் ஆண்டலூர் கேட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.


கிசு கிசு : எப்பவும் போல பளிச்சென்ற தாவணிகளில் பளபளக்கும் கிராமத்து அம்மணிகளும், வெளியூரிலிருந்து வந்திருக்கும் நவநாகரீக அம்மணிகளும் கண நேரம் நம்மை பக்தியிலிருந்து வெளிக்கொணர்வதென்னவோ உண்மைதான்….ஹிஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Monday, November 3, 2014

வாட்ஸ் அப் தகவல்கள் -1

இப்போ பேஸ்புக் போல வாட்ஸ் அப் ரொம்ப பிரபலமாகிட்டு வருது.இதுல லைக் மட்டும் தான் இல்லை.ஆனா உடனடி ரெஸ்பான்ஸ் கிடைக்குது.எல்லாவிதமான தகவல்கள், வீடியோ, ஆடியோ எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.நம்ம மொபைல்க்கு வந்த தகவல்கள் இனி வாரா வாரம்....

சர்க்கரையைப்பற்றி ஒரு இனிப்பான செய்தி :

           உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.


இந்த தகவல்கள் குறித்து இனி ஆராய வேண்டும்.சர்க்கரை சாப்பிடுவதா வேண்டாமா என்பதையும் யோசிக்கவேண்டும்...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...