Wednesday, August 13, 2014

கோவை மெஸ் - அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், (செளடேஸ்வரி கோவில் பின்புறம்), கோவை.

ஒரு இரவு நேரம்..மணி ஒன்பதை தாண்டிக்கொண்டிருக்க, நண்பரோடு பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கும் போதுதான் சாப்பிடும் எண்ணம் வர,  எங்கு செல்வது கடை இழுத்து மூடும் நேரமாச்சே, கையேந்தி பவனில் தான் சாப்பிட வேண்டி இருக்குமோ என நண்பரைக் கேட்க அவரோ ஒரு கடை இருக்கு ரொம்ப லேட்டாத்தான் ஆரம்பிப்பாங்க, நான்வெஜ்லாம் இருக்காது, ஒன்லி சைவம் தான்…ஆனா ஆம்லேட், ஆப்பாயில் கிடைக்கும் என  சொல்லி நெஞ்சிலே பால் வார்த்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் அந்த கடை இருக்கும் சந்தில் நுழைந்திருந்தோம்.கொஞ்ச தூரம்தான் சென்றிருப்போம், இட்லியின் மணம் நம் நாசியை துளைத்தது.பக்கத்திலேயே பிரம்மாண்டமான கோவில் மதில் சுவர் இருக்க ஒரு ஓரமாய் வண்டியை பார்க் செய்தோம்.ஒரு ஓட்டு வீடு தான்.வாசல் முன்பு கும்பலாய் நின்று கொண்டிருந்தனர்.
இட்லி அவிக்கும் வாசமும், பட்டர் உருகும் வாசமும் வெளியே வந்து கொண்டிருந்தது.உள்ளே எட்டிப்பார்த்ததில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு வயதான பாட்டி இட்லி சுடும் வேளையிலும், இன்னொரு வயதான பாட்டி தோசை சுடுவதிலும், ஒரே ஒரு வயதான ஆண் அவ்வப்போது பரிமாறிக்கொண்டிருக்க, அந்த ரூமே நிறைந்து கொண்டிருந்தது ஆட்களிலாலும் வாசத்தினாலும்…சிறு அறைதான்.பத்துக்கு பத்து கூட இருக்காது.இடவசதி என்பது குறைவுதான். அதிகபட்சம் நான்குபேர் தான் உட்கார முடியும். அப்படியிருந்தும் ஒவ்வொருத்தராய் சாப்பிட்டு வெளியேறிக்கொண்டிருக்க, வாசலில் நின்றவர்கள் உள்ளே புகுந்து கொண்டிருந்தனர்.

எங்களுக்கும் அரைமணி நேரம் காத்திருந்தது.ஒருவழியாக 10.20க்கு அமர இடம் கிடைத்தது.பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருப்பவர்களால் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்கிற நிலை உருவாகியிருந்தது.ஆனால் இலை போட்டு இரண்டு இட்லியை வைத்து மிளகாய்ச்சட்டினியும், தேங்காய் சட்டினியும், கத்தரிக்காய் தொக்கும் வைத்து அதை தொட்டு வாயில் வைக்கும் வரை தான்….இந்த சுவைக்காக எவ்ளோ நேரமானாலும் காத்திருக்கலாம் என்று எண்ண தோன்றியது.
ஒரு பாட்டியின் வேலை என்னவெனில் அமர்ந்த இடத்திலேயே இட்லி மாவு ஊத்துவது தான் வேலை…சுட சுட இட்லி வெளியேறிக்கொண்டிருக்கிறது.உடனேயும் தீர்ந்து விடுகிறது.இட்லியை மிளகாய் சட்னியில் தொட்டு வாயில் வைக்கும் போது சுள்ளென இறங்குகிறது காரமும் சுவையும்…கத்தரிக்காய் தொக்கு சொல்லவே வேண்டாம்…செம டேஸ்ட். நாங்களோ இட்லியை தேங்காய்ச்சட்னியில் தொட்டு சாப்பிட பக்கத்தில் இருந்தவரோ பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அதுவும் செம டேஸ்ட்…இட்லி மட்டும் கிட்டத்தட்ட 12க்கும் மேல் பாஸாகியது வயிற்றின் உள்ளே..அதற்கப்புறம் பட்டர் தோசை ஆர்டர் செய்ய கெட்டி தோசைக்கல்லில் நீர் தெளித்து இரண்டு கரண்டி மாவினை ஊற்றி தட்டு அகலத்துக்கு வட்டமிட்டு பின் திருப்பி போட்டு தோசையில் பட்டரை தடவி மீண்டும் ஒரு முறை திருப்பி, தோசை வெந்தவுடன் வாசத்துடன் எங்கள் இலையை தேடி வந்தது.மீண்டும் அதே சட்னி வகைகள்…தோசைக்கு ஏற்றதாய் இருக்க, மீண்டும் அதே சுவை…..தோசையில் தேங்காய் சட்னி ஊறி, பிய்த்து பிய்த்து சாப்பிட சீக்கிரம் காலியானது.
அதற்கப்புறம், கலக்கியும், ஆம்லேட்டும் எங்கள் இலையை அலங்கரித்தன…அனைத்தையும் சாப்பிட்டு வெளியேற உடனே எங்கள் இடத்தினை இன்னொரு குழு கைப்பற்றி ஆரம்பிக்க ஆயத்தமானது.
இந்த இடைவெளியில் அவ்வப்போது பார்சலும் பகிரங்கமாய் வெளியேறிக் கொண்டிருந்தன.
இந்தக்கடைக்கு பெயர் எதுவுமில்லை.இரண்டு பாட்டிகள் தெலுங்குல அவ்வாக்கள் நடத்துவதால் அவ்வா இட்லிகடை என்றே அழைக்கின்றனர்.
ஒரு தடவை போனாலே வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வருவீர்கள்...அவ்வளவு சுவை இருக்கிறது.
இந்தக்கடை இரவு நேரம் மட்டுமே செயல்படும் 9 மணியிலிருந்து 12 வரை செயல்படும்
போன் - 9952259831
விலை குறைவு தான்.இட்லி 6 தோசை 15, பட்டர் 20 என இருக்கிறது.கண்டிப்பா கார் பார்க்கிங் இல்லை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, August 11, 2014

கோவை மெஸ் - பப்ஸ், கண்ணன் உணவகம், கட்டப்பெட்டு, கோத்தகிரி, ஊட்டி மாவட்டம் ( Kattabettu, Otty)

           கடந்த சனியன்று வேலை விசயமாக ஊட்டி சென்றிருந்தேன்.ஊட்டிக்கு ரெண்டு வழில போலாம்.ஒண்ணு கோத்தகிரி, இன்னொரு வழி குன்னூர்.குன்னூர் வழியா போனா ரோடு ரொம்ப மோசம்..அதிலில்லாம டிராபிக் படு பயங்கரமா இருக்கும்.முன்னால் போற வண்டியோட வாலைப்பிடிச்சிகிட்டே போகனும்.ஹேர்பின் பெண்டுகள் வேற அதிகம்.
             ஆனா கோத்தகிரி வழியா போனா ரோடு அம்சமா இருக்கும்.ஏன்னா கொடநாடுக்கு போற வழி.குண்டு குழியில்லாம ரோடு சும்மா கும்னு இருக்கும்.அதிக டிராபிக் இருக்காது, ஹேர்பின் பெண்டுகளும் கம்மி.வண்டியை அழுத்தி பிடிச்சிட்டு நாம பாட்டுக்கு போலாம்..
              அப்படித்தான் அன்னிக்கு கோத்தகிரி வழியில் சென்றோம்.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்...அடர்ந்த மரங்கள், சில்லென குளிர் காற்று, என ரம்மியமாக இருக்க, ரசித்துக்கொண்டே மலை ஏறிக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் நண்பர் பப்ஸ் டீ சாப்பிட்டுவிட்டு போலாம் என சொல்ல, குளிருக்கு இதமாக இருக்கட்டுமே என்று வண்டியினை ஓரங்கட்டினோம்.


                அது கட்டபெட்டு என்கிற ஊர்.கோத்தகிரி தாண்டி ஒரு பிரிவு வருகிறது.குன்னூர்க்கும் உதகைக்கும் தனித்தனியே பாதை பிரிகிறது. அங்கிருந்து உதகை செல்லும் வழியில் ஒரு சில மீட்டர்களில் கட்டபெட்டு ஊர் நம்மை வரவேற்கிறது.அங்கே இருக்கிறது இந்த கண்ணன் உணவகம்.
 
            காரை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தால் அந்த ஹோட்டலுக்கு எதிரில் ஒரு மலை முகடு கண்ணுக்கெட்டிய தூரத்தில் பசுமையாய் காட்சியளிக்கிறது.சில்லென சாரலில் சிறுதூறலில் நனைந்து கொண்டே கடைக்குள் காலடி வைத்தோம்.
    உள்ளே நுழைகையில் பப்ஸின் வாசம் நம்மை கட்டிப்போடுகிறது.ஓரமாய் ஓரிடத்தில் அமர, கடந்து சென்ற தட்டு நிறைய பப்ஸ்கள் நம்மை கூடவே இழுத்து செல்கின்றன.சூடாய் பப்ஸ் கடையின் காலி ஷோகேஸிற்கு காட்சிப்பொருளாய் வந்து அமர, சில கணங்களில் காலியாகி மீண்டும் பழைய நிலையை அடைகிறது ஷோகேஸ்.இப்படி சில நிமிடங்களுக்கொரு முறை மறுசுழற்சி நிலையை அடைகிறது ஷோகேஸ்.

              பப்ஸினை முக்கோண வடிவத்தில், செவ்வக வடிவத்தில் தான் பார்த்திருக்கிறேன்..ஆனால் இங்கோ தோற்றத்தில் கொளுக்கட்டை போல் இருக்க, ஒரு புறம் நெளி நெளியாய் சுருட்டப்பட்டு பார்க்கவே அழகாய் இருக்கிறது.
                  எங்களிருவருக்கும் ஆளுக்கொரு பப்ஸ் கிடைத்து சாப்பிட ஆரம்பிக்க, பஞ்சு போன்ற மென்மையாய் மெத்தென்று இருக்க, இரு விரல்களால் கொஞ்சம் பிய்க்க, உள்ளேயிருந்து இளஞ்சூடாய் ஆவி வெளியேற, இலகுவாய் விரல்களில் குடியேறி வாய்க்கு வந்து சேர்ந்தது.சுவையோ அபாரமாய் இருக்க, வாசம் சுற்றுப்புறத்தினை நனைக்க ஆரம்பித்தது.உருளைக்கிழங்கு மசாலாவுடன் சூடும் சேர்ந்து நம் வாயினை சேர சுவை நரம்புகள் புதியதாய் ஒரு உணர்வினை உணர்ந்து கொண்டிருந்தன.

                    இளஞ்சூட்டுடன் கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து சாப்பிட சாப்பிட வாய்க்கு வலிக்காமல் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.மீண்டும் இன்னொரு பப்ஸ் ஆர்டர் செய்து அந்த அனுபவத்தினை ர(ரு)சிக்க ஆரம்பித்தோம்.கூட டீ யும் சேர்ந்து கொண்டதில் மாலை வேளையில் மழைப்பொழுதில் மிக சுவையாய் இருக்க ஆரம்பித்தது.
                     பப்ஸ் பக்கத்திலிருந்த சமையலறையில் இருந்து வெளிவர எட்டிப்பார்த்ததில் ஒரு குருப்பே தீயாய் வேலை செய்து கொண்டிருந்தது.மைதா மாவினை உருட்டி பிசைந்து நெவிட்டி, அதில் உருளைக்கிழங்கு மசாலாவினை சேர்த்து கலை நயத்தினை அதில் பொறித்து எண்ணையில் போட, பப்ஸ் வெந்து வெளியேற காத்துக்கொண்டிருந்தது.
             பப்ஸ்கள் உடனுக்குடன் வெளியாகி தீர்ந்து கொண்டிருந்தது.வருபவர்கள் சாப்பிட்டு பார்சல் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.நாங்களும் எங்கள் பங்குக்கு வாங்கிக் கொண்டோம்..விலை ரொம்ப குறைவுதான்.சுவையோ அதிகம்.
அந்தப்பக்கமாக போனா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கே பிடிக்கும்.
இடம் – கோத்தகிரி தாண்டி, உதகை, குன்னூர் பிரிவு ரோடு வருகிறது.அதில் உதகை ரோட்டில் சில மீட்டர்களில் கண்ணன் உணவகம் இருக்கிறது.

இதுக்கு முன்னாடி போனது எமரால்டு எஸ்டேட்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...