Tuesday, March 24, 2015

கோவை மெஸ் - வம்சாவளி பிரியாணி, காளவாசல் பைபாஸ் ரோடு, மதுரை

                         போன வாரம் மதுரைக்கு போயிருந்த போது அந்த ஊர்ல இருக்கிற முக்காவாசி ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் ஏதாவது புது ஹோட்டலில் ட்ரை பண்ணுவோமே அப்படின்னு நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து குப்புறபடுத்து தூங்கிட்டு இருந்த மதுரை புகழ் தமிழ்வாசி அவர்களை தட்டி எழுப்பி விசாரித்த போது, இருப்பா நானே வர்றேன் என ஒரு பத்து நிமிடத்தில் வந்தார்.
அவர், ” காளவாசல் வழியாக போகும் போது வம்சாவளி என்கிற ஹோட்டல் பார்த்து இருக்கேன், அங்க கூட்டம் அள்ளுது.நானும் அங்க போகனும்னு நினைச்சிகிட்டே இருக்கேன்...அதனால் அங்க போலாமா என கேட்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கு இருந்தோம்.ஏனெனில் நாங்க சந்தித்த இடமே அந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் தான்.அப்புறம் என்ன....அடுத்து ஹோட்டலுக்குள்தான்....
                                  
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என உள்ளே நுழைந்தோம்.கடையின்
வாசலிலேயே  ஆளுயுரத்திற்கு மிகப்பெரிய போர்டு வரிசை கட்டிய மெனுக்களோடு வரவேற்கிறது.ஆட்டின் அத்தனை ஸ்பேர் பார்ட்ஸும், சிக்கனின் சின்ன சின்ன மெனுக்களும் அதில் இருக்கின்றன.படித்து முடிக்கவே மூச்சு வாங்குகிறது...சின்ன கடைதான்.ஆனால் கொஞ்சம் விசாலமாக இருக்கிறது.நம் முஸ்லீம் அன்பர்கள் நடத்துகின்ற கடை.ஆனால் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.
கடையில் மொத்தமே ஐந்து டேபிள்கள் தான்.அதில் இரண்டு ஏசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.அந்த இரண்டு டேபிள்களில் ஒன்று ஒரு பேமிலியால் இடம் பிடிக்கப்பட்டு களை கட்டிக்கொண்டு இருந்தது.நாங்கள் இருவரும் அடுத்த டேபிளில் அமர்ந்து அவர்களின் மெனுக்களை காதில் வாங்கிக் கொண்டிருந்த போது சர்வர் எங்களிடம் வர  என்ன இருக்கிறது என கேட்க, அவருக்கு மனப்பாடமாய் இருந்த மெனுக்கள் வெளியே வர ஆரம்பித்தன...

அவரை பேச விட்டு, பிறகு உங்க கடையின் ஸ்பெசல் என்னவென்று கேட்க, பிரியாணி என்றார்,,,சரி..ஆளுக்கு ஒரு கால் பிளேட் அப்புறம் என்ன சைட் டிஷ் கேட்கலாம் என நினைக்கையில் குடல்பிரை, மூளை பிரை, ஈரல் பிரை இருக்கு என சொல்ல, அனைத்தையும் கொண்டு வர சொன்னோம்.மதுரையில் அடித்த வெயிலுக்கு சிக்கன் செம சூடு என்பதால் அதை சாப்பிடவே இல்லை.
முதலில் வந்தது பிரியாணிதான்.பிரியாணி நல்ல டேஸ்டாக இருக்கிறது.சீரக சம்பா அரிசியில் நன்கு மசாலா பிடித்து செம டேஸ்டாக  இருந்தது.மட்டன் கறியும் நன்றாக வெந்து இருந்தது,முஸல்மான் வீட்டு பிரியாணி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது,நல்ல சுவை...கால் பிளேட் என்பதால் குறைவாகத்தான் இருக்கிறது.எங்கிருந்துதான் இந்த மாதிரி சின்ன கப் பிளேட்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ....
அடுத்து வந்தது குடல் பிரை..கொஞ்சம் கிரேவியோடு வர , பிரை பண்ணித்தர சொல்லி திருப்பி அனுப்பினோம்..அதுவும் வந்தது..பிரை பண்ணியதால் நல்ல சுவை இருந்தது.என்ன...குடல்கறியை விட வெங்காயம் தான் அதிகமாக இருக்கிறது,ஏதோ வாசத்திற்காக குடல்கறி போட்டு இருப்பார்கள் போல....ஆனால் சுவை ஓகே...


மூளை பிரை நல்ல சுவையாக இருந்தது.வெங்காயம் போட்டு வறுத்து இருந்த மூளை செம டேஸ்டாக இருந்தது.பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குடல் வறுவலும், மூளை பிரையும் சூப்பராக இருந்தது.

தமிழ்வாசியின் விருப்பத்திற்கு ஏற்ப ஈரல் பிரை வந்தது,அதுவும் செம டேஸ்ட்,.என்ன..... வாங்கின அனைத்து சைட் டிஷ்சும் கொஞ்சம் கூட எலும்பு இல்லாததால் பல்லுக்கு அதிகம் வேலை இல்லாமல் போய்விட்டது. அனைத்தும் சூப்பராக இருந்தது.




சிக்கன் வகைகளில் புது வித மெனுக்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. சிக்கன் 777  மற்றும் சிக்கன் ஆர் டி எக்ஸ்... இப்படி... என்னங்க....சிக்கன் வெடிக்குமா என கேட்க..அவர் கொஞ்சம் புன்னகை செய்துவிட்டு, நம்மூர் பள்ளிபாளையம்  சிக்கனைத்தான் அப்படி போட்டு இருக்கிறோம் என்றார்.

எல்லாம் திருப்தியாய் சாப்பிட்டு இருக்க, இருங்க சார்,,,சாதம் வச்சி ரசம் ஊத்திக்கிங்க என அன்போடு ஒரு பிளேட் சாதம் வைக்க அதை இருவரும் பகிர்ந்து கொண்டு ரசம் ஊற்றி சாப்பிட மிக சுவையாக இருந்தது.நான்வெஜ் சாப்பிட்ட பின் கொஞ்சம் ரசம் சாப்பிட்டு பாருங்கள்...அதை விட இன்பம் வேறு எதுவும் இருக்காது....நான்வெஜ் சாப்பிட்ட வயிற்றின் ஜீரணத்திற்கு ரசம் சூப்பராக இருக்கும்...

நன்றாய் திருப்தியாக சாப்பிட்டு வெளியே வர வெயில் சுள்ளென்று அடித்தது..வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்கலாமே என்று கிளம்பி விளக்குத்தூண் சென்று பேமஸ் ஜிகர்தண்டாவில் ஒரு கை சாரி...ஒரு வாய் பார்த்தோம் இருவரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, March 22, 2015

கோவை மெஸ் - ராய்பூர் தர்பார் ரெஸ்டாரண்ட், திருப்பத்தூர்

              திருப்பத்தூரில் தான் கடந்த ஒரு மாதமாக மையம் கொண்டிருப்பதால் நிறைய ஹோட்டல்களில் சாப்பிடும் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் அருகே பிரியாணிக்கு புகழ்பெற்ற மிக முக்கியமான சிறு குறு பெரு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர் வேலூர்  இருப்பதால் திருப்பத்தூரிலும் அதே போன்ற சுவையினை தேடி அலைந்த போது தான் கண்ணில் சிக்கிய ஹோட்டல் ராய்பூர்.
               ஹோட்டல் கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பொது ஹால், ஏசி ஹால் என பிரித்து வைத்து இருக்கின்றனர். திருப்பத்தூரில் அடிக்கின்ற வெயிலுக்கு ஏசிதான் பெஸ்ட் என்றாலும் நாங்கள் போன அன்று ஏசியின் தற்காலிக சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
எனவே காற்றோட்டமாக பொது ஹாலிலேயே அமர்ந்தோம்.ஹால் காற்றோட்டமாக இருந்தாலும் டேபிள்கள் மக்களால் நிரம்பியிருந்தது.


             தந்தூரி சிக்கன், சிக்கன் 65, மஞ்சூரியன், மட்டன் பிரியாணி, காடை ரோஸ்ட் என அசைவமும் மஸ்ரூம் 65, பேபிகார்ன், என ஒரு சில சைவ மெனுக்களும் விளம்பர போர்டுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. 

                    மெனு கார்டு தந்ததும் சிக்கன் பிரியாணி தான் ஆர்டர் பண்ணினோம்.. நன்கு வாசத்துடன் பிரியாணி பிளேட்டில் வந்து இறங்கியது. பொலபொலவென்று தங்க நிறத்தில் மின்னிய பாசுமதி அரிசி பார்க்கும் போதே பசியை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது

நீள நீளமான பாசுமதி அரிசியுடன் சிக்கன் கலந்து ஒருவித சுவையை ஏற்படுத்தி நம் பசியை தூண்டிவிட்டிருந்தது.ஒரு தட்டு நிறைய பிரியாணியுடன் சிக்கன் பீஸ்கள் நிறைந்து தட்டை நிரப்பி இருந்தது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்கவும் பிரியாணியின் சுவை நம்மை உள்ளுக்குள் இழுக்கிறது.சாப்பிடுவதே தெரியவில்லை.அவ்வளவு அதிகமாக தெரிந்த பிரியாணி சீக்கிரம் காலியாகி விட்டிருந்தது.இடையே சிக்கன் பீஸ் நன்றாக வெந்து மெலிதாய் பிரிந்து விட்டிருந்தது.உப்பும் உரைப்பும் செமயாக இருந்தது.
கூடவே ஆர்டர் செய்திருந்த தந்தூரி சிக்கனும் உடனே டேபிளுக்கு வர அதுவும் காலியாக ஆரம்பித்து விட்டிருந்தது.


தந்தூரி நன்றாக மெது மெதுவென்று இருக்க வாயில் வைக்க கரைந்து ஓடியது. எலும்பு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து விழுந்தது வாயிலிருந்து.
கூட வந்த நண்பரின் பையனுக்காக சிக்கன் நூடூல்ஸ் ஆர்டர் செய்து இருந்தோம்.அதை கொஞ்சம் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாக இருந்தது.

கடைசியாக வந்த மெனு காடை...ஜப்பான் காடை....நன்கு செக்க செவந்த நிறத்தில் கால்களை பிய்த்து தின்பதற்கு ஏற்றப்படி மல்லாந்து கிடந்தது.
நன்கு மொறு மொறு வென்று இருக்கிறது கடித்து தின்பதற்கு.சுவையும் அபாரம்.

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.
பிரியாணி செம டேஸ்ட்.உதிரி உதிரியாக மிக சுவையாக இருக்கிறது.அந்த பாசுமதி அரிசி செம டேஸ்ட்.வட மாவட்டங்களில் மட்டும் இந்த பாசுமதி அரிசி பிரியாணிக்காக  பயன்படுத்துகின்றனர்.சுவை நன்றாக இருக்கிறது.
எல்லாம் சாப்பிட்டு பில் மொத்தம் 450 தான் வந்தது.
திருப்பத்தூர் போனீங்கன்னா ஒரு கை பாருங்க….
அடுத்து ஆம்பூர் போறேன்….அங்க ஊர்ப்பட்ட பிரியாணி கடை இருக்கு.எல்லாம் டேஸ்ட் பண்ணிட்டு திரும்ப வர்றேன்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.




இன்னும் கொஞ்சம்...

Thursday, March 19, 2015

கோவை மெஸ் - சிவா பீப் ஹோட்டல்( SIVA BEEF HOTEL), விருதம்பட்டு, வேலூர்

                                  இது கண்டிப்பா பீஃப் கறி சாப்பிடறவங்களுக்கு மட்டும்.....இப்படி எச்சரிக்கை போடற நாளும் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்....                    
                  ஒரு அவசர வேலையாக சென்னையில் இருந்து வாணியம்பாடி வரைக்கும் போக வேண்டி இருந்ததால் பூந்தமல்லியில் இருந்து வேலூர்க்கு பேருந்தில் சென்றேன்.பஸ் ஏறின டைம் கரெக்டாக ஒரு மணி...பசி இன்னும் ஆரம்பிக்க வில்லை.ஜன்னலோர இருக்கை என்பதால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.பஸ்ஸிலும் அம்மணிகள் என்பது அறவே இல்லாமல் இருந்தது.வெளியே இருந்த வெப்பத்தின் புழுக்கம் பேருந்தின் உள்ளுக்குள்ளும் இருந்தது.வேலூரில் சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணி பேருந்து வழக்கமாய் நிறுத்தும் மோட்டல்களில் கூட இறங்கவில்லை.

                கையில் வேறு புத்தகம் இருந்ததால் அதன் சுவாரஸ்யத்தில் பசியும் காணாமல் போய்விட்டிருந்தது.வெயில் வேறு அனல் பறத்திக்கொண்டிருக்க பேருந்து வறண்ட பாலைவனத்தில் செல்வது போல இருந்தது.இருபுறமும் பசுமையை தொலைத்த பைபாஸ் ரோட்டில் வேகமெடுத்த பேருந்து வெப்பத்தினை தாங்கிக்கொண்டு எங்களுக்கு குளிர்ச்சியை தந்து கொண்டிருக்க, பேருந்தினுள் அனைவரும் கண்கள் சொக்கியபடி உறங்கிக்கொண்டிருந்தனர் மூவரைத்தவிர......மதிய நேரத்தில் எங்காவது நெடுந்தூரப் பேருந்தில் பயணித்து பாருங்கள்..உறக்கம் கண்களைச்சுழட்டும்..பேருந்தின் வேகம் உங்களைத் தாலாட்டும்...
                மூன்று மணி நேர பயணத்தில் வேலூர் வந்தடைந்தேன்.வேலூரில் பதினைந்து வருடங்களாக தண்ணீர் வரத்தே இல்லாத பாலாறில் வெய்யிலாறு ஓடிக்கொண்டிருந்தது.ரோடுகளில் கானல் நீர் தெறித்து ஓடிக்கொண்டிருந்தது.எப்பவோ எனது பதிவுகளை படித்து பாராட்டிக்கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த எழுத்தாளர் உஷா அன்பரசு அவர்கள் சொன்ன ஒரு ஹோட்டல் ஞாபகத்திற்கு வந்தது.அவர்கள் ஆபீஸ் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல்.... சிவா பீப் ஹோட்டல், மாலை நேரம் தென்படுகிற கூட்டமும், அங்கே பரவுகின்ற ஒரு சுவையான மணமும், அதைப்பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார் என்றும் துரதிஷ்டவசமாக அவர்கள் மிகவும் ஆச்சாரமான சைவத்தினை சேர்ந்தவர் என்றும் அறியக்கேட்டிருக்கிறேன்.
              வேலூர் வந்திறங்கியவுடன் அவருக்கு போன் போட அட்ரசை வழிமொழிந்தார். பதிலுக்கு அவரை நான் சாப்பிடக்கூட அழைக்க வில்லை ...அவர் சுத்த சைவம் என்பதால்....
             நான்கு மணி ஆகிவிட்டதால் இருக்குமோ இருக்காதா என்கிற பயத்துடனே பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவந்தேன். ஷேர் ஆட்டோவினை கைகாட்டி நிறுத்தி விருதம்பட்டு சிவா ஹோட்டலில் நிறுத்த சொன்னேன்.பாலாறு பாலம் தாண்டி இருக்கிறது விருதம்பட்டு..அருகிலேயே கடை இருக்கிறது.
           கடையின் தோற்றம் பல சிலேட்களால் அலங்கரிக்கப்பட்டு, மெனுக்களால் நிரம்பி வழிகிறது.லாலிபாட், பிரியாணி, பீப் பக்கோடா, சேமியா, ஈரல் பிரை, மூளை ப்ரை, என சிலேட்கள் மெனுக்களைத் தாங்கி தொங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பெரிய பிளக்ஸ் போர்டு சுவையின் தரத்தினை காட்டிக்கொண்டிருக்கிறது.


உள்ளே கடைசிக்கட்ட நேரத்திலும் பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தனர். பார்சல் பிரியாணி தான்.நேரம் ஆகிவிட்டால் பிரியாணியை பார்சல் செய்து வைத்து விடுவார்களாம்.
நானும் போய் டேபிளில் அமர, மூன்று சிறு சிறு இலைகளால் பின்னப்பட்ட ( தேக்கு இலைன்னு நினைக்கிறேன்) இலையில் மடித்து வைக்கப்பட்ட பிரியாணி பார்சலை பிரித்து வைக்க மணம் நாசியை கவ்வியது.
பீப் பிரியாணிதான். சுவையான பாஸ்மதி அரிசியில் மட்டன் மணம் கலந்து சூப்பராக இருக்கிறது.உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுத்த கத்தரிக்காய் தால்ச்சா செம அருமை.இரண்டும் ஒன்றுக்கொன்று செம காம்பினேசன்.


              சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பீப் பக்கோடா கேட்டேன், அது மாலை ஐந்து மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.அந்த ஹோட்டல் ஸ்பெசல் பீப் பக்கோடா தானாம்.வாசனை தெருவுக்கு வருமாம்....பக்கோடா இல்லை என்று சொல்லவும் கொஞ்சம் மனம் வருத்தமாகிப்போனது.
           லாலிபாப் இருக்கிறது தரவா என கேட்க, சிக்கன் தானே என வினவ, இல்லை பீப் என்றதும் ஷாக்காகிப்போய்விட்டேன்.ஒரு மாட்டுக்காலையே கொண்டுவந்து வைப்பாரோ என அச்சத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.ஆனாலும் சிறிய பீஸாகத்தான் இருக்கிறது பக்கத்து டேபிளில் பூந்து விளையாடிக்கொண்டிருந்த ஒருவரது கையில் இருந்த லாலிப்பாப்பை பார்த்தவுடன்.
விலாஎலும்போடு கொஞ்சம் மட்டன் சேர்ந்து இருக்கிறது.நன்றாக மசாலாவில் ஊற வைக்கப்பட்டு எண்ணையில் பொறித்தால் லாலி பாப்....
ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது.தனியாக வந்தால் சாப்பிடமுடியாது பக்கார்டியுடன் வந்திருந்தால் சாப்பிட்டு  இருக்கலாம் எனவும் தோன்றியது
               எண்ணையில் பொறிக்கிற மணம் நம் டேபிளுக்கு வருகிறது.சுவையாகத்தான் இருக்கிறது போலும் இன்னொரு நாள் வரலாம் என்று நாக்கை கட்டுப்படுத்திக்கொண்டு பிரியாணியை சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவினேன்.


                பிரியாணியின் மணம் மற்றும் சுவை சூப்பராக இருக்கிறது.தனித்தனி அரிசியுடன் மட்டன் கலந்து செமையாக இருக்கிறது.பீப் கறியும் நன்றாக வெந்து பஞ்சு போல் மென்மையாய் இருக்கிறது.உப்பும் உரைப்பும் நன்றாக இருக்கிறது,
மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கிறது சிவா ஹோட்டலின் லாலிபாப் மற்றும் பீப் பக்கோடா.
        அந்தப்பக்கம் போனீங்கன்னா போய் சாப்பிட்டு விட்டு வாங்க....சில்லி, பீப் பக்கோடா.. முதல் அத்தனை அயிட்டங்களும் இருக்கின்றன. 
சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்ட்லை விட்டு வெளியேறுகையில் திரும்பிப்பார்த்தேன்... இன்னொரு நாள் வரணும் என்கிற பார்வை அதில் இருந்தது.

இடம் : விருதம்பட்டு

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 10, 2015

செல்வமகள் சேமிப்பு திட்டம் - சுகன்யா சம்ரிதி திட்டம்

சுகன்யா சம்ரிதி திட்டம்:
உங்க வீட்டில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இருக்கிறதா...அப்படியென்றால் இந்த திட்டத்தில் உடனே சேருங்கள்..

                                                            பிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது.பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்களோ அல்லது காப்பாளர்களோ ரூபாய் 1000 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.பின் மாதா மாதம் 100ன் மடங்குகளில் குறைந்த பட்சம் 1000 முதல்  அதிக பட்சமாய் 150000 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தலாம்.ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.ஆனால் 150000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதன் வருடாந்திர வட்டி விகிதம் 9.1% கூட்டு வட்டி.

சேமிப்பு கணக்கு துவங்கியதில் இருந்து 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.பின் குழந்தைக்கு 21 வயது ஆனவுடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தபின் இருப்புத்தொகையில் இருந்து கல்விக்காக அல்லது திருமணத்திற்காக 50% பணம் பெற்றுக்கொள்ளலாம்.
வாரிசு நியமனம் இல்லை.

துவக்க சலுகையாக 2.12.2013 ல் இருந்து பிறந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு
அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தினை அணுகுங்கள்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...