Monday, September 12, 2016

கோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை

                           ஃபேஸ்புக்ல MUDPOT அப்படிங்கிற ஹோட்டலோட அப்டேட்கள் ரொம்ப வந்துட்டு இருந்துச்சு.ஏரியா எங்க இருக்குன்னு பார்த்ததில் நம்ம காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட்ல இருக்குன்னு தெரிந்ததும் அங்க இன்னிக்கு ஆஜரானோம்
                    அன்னபூர்ணா கெளரிசங்கர் பக்கத்துல தான் இந்த ஹோட்டல்.சுத்தியும் பிளக்ஸ் பேனர் அதில் விதவிதமாய் மெனுக்களின் கலர்புல்லான படங்கள் என நம் நாவையும் கண்ணையும் பதம் பார்த்தன.கேரளா பாணியில் இண்டீரியர் பண்ணி இருக்காங்க.மூங்கில் தடுப்புகள் தொங்கவிட்டு ஒரு கேரள உணவகமாக அமைத்து இருக்காங்க.உள்ளே நுழைந்ததும், அப்படியே ஷாக்காகிப் போனோம். மொத்தமும் மூணே டேபிள் தான்…டேபிள் பார்க்க மிக அழகாய் மூங்கிலில் செய்யப்பட்டு இருந்தது.அமர்வதற்கு முன்னால் வாஷ் ரூம் எங்க என்று கேட்டதும், வெளியே இருக்கிறது என்று சொல்லவும், இன்னும் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது..சரி..சமாளிப்போம் என்றெண்ணி வெளியே வந்து ஹோட்டலை அரை சுற்று சுற்றி, வந்து கை கழுவி விட்டு மீண்டும் உள்ளே வந்தமர்ந்தோம்.
என்ன ஸ்பெசல் என்று கேட்டதும், எல்லா பிரியாணியும் இருக்கிறது என மலையாளத்தில் பறைய, சிக்கன் மலபார் பிரியாணி ஆர்டர் பண்ணினோம்.அடுத்து மீன் பொழிச்சது என்ன இருக்கிறது என கேட்டதில் கரிமீன், அயிலை என பதில் வந்தது.மீன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என கேட்டதும், உறைந்து கிடந்த ஒரு கரிமீனை எடுத்து வந்து காட்டினார்.காவிரி ஆற்றில் ஃப்ரஷ் ஆக பிடித்து நன்றாய் உப்பு மிளகிட்டு சாப்பிட்ட ஜிலேபி மீனை இங்கு உறைந்து பனிக்கட்டியாக இருப்பதைப் பார்த்தவுடன் மீன் சாப்பிடும் ஆசையே போய்விட்டது. விலையை கேட்டவுடன், ரூ 550 என்று சொல்லவும், மீன் என்று உச்சரிக்க கூட மனமில்லை.இம்போர்ட்டடு மீன் என்று சொல்லிப்பார்த்தார்…சத்தியமாய் காது கேட்கவில்லை எனக்கு அப்போது. சரி மீன் வேண்டாம், சிக்கன்ல ஏதாவது கொடுங்க என்றதும், சிக்கன் 65 தருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.மெனு கார்டு என்பது இல்லை.ஐபேட்டை தூக்கிவந்து படம் காட்டுகிறார்கள்...

பாக்கு மட்டையில் அழகாய் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி வந்தது.கூடவே டாஸ்மாக் டம்ளரும்.பிளாஸ்டிக் டம்ளரில் நீர் ஊற்றி வைத்துவிட்டு, கொஞ்சம் ஊறுகாயும், ஆனியன் ரைத்தாவும் வைத்துவிட்டு சென்றார் சர்வர்.
நன்கு கலர்புல் சாதமாய், கிராம்பு ஏலக்காய் மணத்துடன் சாதம் இருக்க, இரு அரை முட்டையுடனும், ஒரு பீஸ் சிக்கன் துண்டு மற்றும் கொஞ்சம் கிரேவியானது கலர்புல் சாதத்தினுள் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.சாதம் சாப்பிட சுவையாகத்தான் இருந்தது அதில் இருந்த உலர் திராட்சைகளால்.ஆனால் மலபாருக்குண்டான டேஸ்ட் மிஸ் ஆகி இருந்தது. மேலும் அதில் இருந்த சிக்கன் துண்டோ மிகவும் கெட்டிப்பட்டு இருந்தது.மென்மையாய் இருக்கும் சிக்கன் கூட மெல்லக்கூட முடியாதபடி சவுக் சவுக்கென இருக்க, வெறும் சாப்பாட்டுடன் கிரேவி மட்டுமே ஒத்துழைத்தது.அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்ள, சாதம் கொஞ்சம் காரமாய் தெரிந்தது.
அடுத்து வந்த சிக்கன் 65 தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சிக்கன் மிகவும் கரடு முரடாய், மென்மையாய் இருக்க கூடிய சிக்கன்,மிகவும் கெட்டியாய், பிய்க்க கூட முடியாமல், அப்படியே கஷ்டப்பட்டு பிய்த்து வாயில் போட்டு மெல்ல கடைவாய்ப்பற்கள் அனைத்தும் வலிக்கின்றன.அந்தளவுக்கு சிக்கன் மோசம்.சிக்கன் 65 என்று சொல்லிவிட்டு இரண்டு லெக்பீஸை தள்ளிவிட்டது எந்தவித சாப்பாட்டு நியாயம் என்று தெரியவில்லை.
சிக்கனை முடிந்தளவு உள்ளே தள்ள போராடினேன்..முடியவில்லை.பிறகு அப்படியே தட்டில் வைத்து விட்டு, பரிமாறியவரிடம் சிக்கனை காண்பித்து, பிய்க்க கூட முடியவில்லை, கறி கெட்டிப்பட்டு இருக்கிறது,  ரொம்ப நேரம் நன்றாக எண்ணையில் வச்சி  செஞ்சி (பொறிச்சி) இருக்கீங்க என்பது மட்டும் தெரிகிறது, அது மட்டுமல்ல சிக்கன் டேஸ்டே இல்லை என்று சொல்லிவிட்டு கை கழுவினேன்..
    பில் வந்த போது கடை நன்றாக அமைத்து இருக்கிறீர்கள், ஆனால் கை கழுவும் இடத்தினை மட்டும் வெளியில் அமைத்து இருக்கிறீர்கள் அதான் மிகப்பெரும் மைனஸ் பாய்ண்ட்.அது மட்டுமல்ல, நன்கு விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள் பேஸ்புக்கிலும், பேப்பரிலும்.ஆனால் அந்த அளவு வொர்த்தான டேஸ்ட் இல்லை என்று சொல்லிவிட்டு இனி எப்பொழுதும் இந்தக்கடையை திரும்பிப்பார்க்க கூடாது என்றெண்ணியபடியே வெளியேறினோம்.
           கடையின் இண்டீரியர் மற்றும் விளம்பரங்களில் மட்டும் தான் கவனத்தினை வைக்கிறார்கள்.டேஸ்ட்டில் சுத்தமாக கவனம் வைப்பது இல்லை.ஏதாவது ஹோட்டலில் வேலை செய்துவிட்டு உடனடியாக பணத்தினை புரட்டி எப்படியாவது ஹோட்டலை ஆரம்பித்து விடுகிறார்கள்.பிறகு கஸ்டமர் இல்லாமல் கடை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…
ஃபேஸ்புக் கில் பகிர்வது நல்ல மார்க்கெட் டிரண்ட் என்பது மட்டும் தெரிகிறது.
உங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் வேண்டுமென்றால் தாராளமாக செல்லவும்..

              விலை மிக அதிகம்.பஸ்ஸ்டாண்ட்ல வாடகைக்கு இடம் பிடிச்சு கடை நடத்தினா கொஞ்சமாவா பில் பண்ணுவாங்க....
பேசாம வீட்டிலேயே ஒரு கிலோ கறியை வாங்கி பகார்டியோடு கொண்டாடி இருக்கலாம்…




நேசங்களுடன்
ஜீவானந்தம்.



1 comment:

  1. கடையை மூடிட்டாங்க ஜி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....