Wednesday, November 12, 2014

கோவில் குளம்:அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

             கோவில் திருவிழாவானது இரவு முழுக்க ஒரே ஒரு நாள் மட்டும் மிக விமரிசையாக பூஜைகள் நடக்கும் கோவில் ஆயா கோவில் என்கிற அழியா இலங்கை அம்மன் கோவில்.சமீபத்தில் இந்தக்கோவிலுக்கு சென்று வந்திருந்தேன்.இரவு நேரம் தான்..கோவில் களை கட்டியிருந்தது அலங்கார விளக்குகளாலும், திடீர்க் கடைகளாலும் மற்றும் எப்பவும் போல இரவென்றாலும் பகலென்றாலும் அம்மன் அருள் பெற விரும்பும் பக்த கோடிகளாலும்…. 
                                   ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
            

            பக்தகோடிகளை வரவேற்கும் பேனர் பிரியர்களின் போட்டோக்கள் நிரம்பிய பேனர்கள் கோவிலுக்கு செல்லும் வழி பூராவும் இருபுறமும் வரவேற்றுக் கொண்டிருந்தன.கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கிற கடைகளில் எப்பவும் போல மக்களாகிய பக்தர்கள் கூட்டம். சட்டி பானை முதல் தட்டு முட்டு சாமான் வரை அனைத்தும் கடை பரப்பியிருந்தன.பொங்கல் அன்று காணப்படும் செங்கரும்பு கூட இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோடி எண்பது ரூபாய்க்கு விற்பனையாகிக்கொண்டிருந்தது.இந்த கோவில் அம்மனுக்கு பிடித்த பழங்களான விளாம்பழமும் கொழுஞ்சிக்காயும் நிறைய குவிந்து கிடந்தன பக்தர்களின் வருகைக்காக.அம்மனுக்கு படைக்கப்படும் வாழைப்பழங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சீப்பு சீப்பாக விலை குறைவின்றி விற்பனையாகிக் கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி அவ்வப்போது தார் தாராக வெளியேறிக் கொண்டிருந்தது வசதி படைத்த பக்தர்களால்...






ராட்டினம், ட்ரெயின் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல் என பக்தர்கள் கூட்டம் நன்றாக திருவிழாவினை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.அகால வேளையிலும் அயர்வின்றி உழைத்துக்கொண்டிருந்தனர் கடைக்காரர்கள். குக்கிராமத்திலும் எட்டிவிட்ட சைனா தயாரிப்பு பொருட்கள் நிறைந்த கடைகளில் ரிகார்ட் செய்யப்பட்ட ஒலியானது உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது எந்தப்பொருள் எடுத்தாலும் இருபது ரூபாய் என்று.எல்லாக்கடைகளிலும் விற்பனை மும்முரமாகிக் கொண்டிருக்க ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தனர் திடீர்க் கடை ஓனர்கள்.எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு ஜோடி செங்கரும்பினை வாங்கி தின்று கொண்டிருந்தோம் நேரம் போக்க....அதிகாலை மூன்று மணியளவில் அம்மனை தரிசிக்க சென்றோம்.

              ஒளி வெள்ளத்திலும் ஒலி வெள்ளத்திலும் நீந்திக்கொண்டே அம்மனிடம் அருள் பெற சென்றோம்.அம்மன் அருள் பெற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, நாங்கள் உள்புகுந்தோம்.புதிதாய் கும்பாபிசேகம் செய்ததாலும் இந்த விழாவினாலும் புதிய பொலிவுடன் காட்சியளித்தது கோவிலின் தோற்றம்.அம்மன் குடிகொண்டுள்ள மண்டபத்தின் பதினாறு தூண்களும் மண்டபமும் அழகுற கனிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.கருவறைக்கு எதிரே நிறுவப்பட்டுள்ள ஊஞ்சலானது அம்மனை வைத்து பாட்டுப்பாடி ஆட்டுவதற்கு இருக்கிறது.இந்த மண்டபத்தின் கருவறையில் புற்று வடிவத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.அம்மனின் பாதங்கள் மட்டுமே இங்கு வழிபட படுகின்றன.அத்தனூர் அம்மனின் தமக்கையாக கருதப்படும் இந்த அம்மனின் துணை தெய்வங்களாக அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் தனித்தனி சன்னதியில் இருக்கின்றனர்.முனியப்பன் மிகப்பெரும் உருவமாக மூன்று வித முனிகளாக அமர்ந்திருக்கிறார்.பசு ஒன்று பால் சொரியும் நிலையில் இருக்கிறது.ஒரு நந்தி ஒன்றும் முனியப்பன் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப்பட்டு தனி சன்னதியில் குடிகொண்டுள்ளனர்.மங்கல வாத்தியத்தின் நாதத்திலும், கோவில் மணி ஓசையிலும் அம்மனை ஆற அமர தரிசித்து விட்டு அதன் துணை தெய்வங்களையும் தரிசித்துவிட்டு வெளியேறினோம்.



                                  ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )

இந்தக்கோவிலின் தல வரலாறு என்னவெனில்
              சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம்.அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள்.இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம்.ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம்.மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.
         மேலும் முனியப்பனை வேண்டினால் பெண்களின் கர்ப்பக்கோளாறு தீர்ந்து விடும் என்பதும், பேய் பிசாசுகளும் அண்டாது என்பதும் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது என்பது நம்பிக்கை.அதன் தொடர்ச்சியாய் வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.வீட்டிலுள்ள பசுக்கள் நலமாக இருக்கவும் நோய் நெருங்காமல் இருக்கவும் மண் உருவங்களை செய்து வழிபடுகின்றனர்.
 ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
இந்த தலத்தின் தலவிருட்சம் வில்வ மரமாக இருக்கிறது.

கோவிலுக்கு செல்ல வழி: ராசி புரம் ஆண்டலூர் கேட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.


கிசு கிசு : எப்பவும் போல பளிச்சென்ற தாவணிகளில் பளபளக்கும் கிராமத்து அம்மணிகளும், வெளியூரிலிருந்து வந்திருக்கும் நவநாகரீக அம்மணிகளும் கண நேரம் நம்மை பக்தியிலிருந்து வெளிக்கொணர்வதென்னவோ உண்மைதான்….ஹிஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்




1 comment:

  1. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....