Friday, May 26, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் அத்தம்மா, பாரம்பரிய உணவகம், ராகி களியும், கருவாட்டுக்குழம்பும், கோவை, HOTEL ATHTHAMMA, COIMBATORE

                 பசி நேரம்...வடகோவை ரயில்வே ஸ்டேசன்.டாடாபாத் வருகிற வழி… பச்சை பசேல் என்கிற போர்டு கண்ணையும் வயிற்றையும் ஈர்த்தது.ஹோட்டல் பெயரும் வித்தியாசமாக இருக்கவே உள்ளே நுழைந்தோம். 

      சின்ன கடைதான். சுவற்றின் இருபுறமும் சின்ன பலகை வைத்து டைனிங் டேபிளாக மாற்றியிருந்தனர்.நின்று கொண்டு தான் சாப்பிட முடியும்.தொங்கிக்கொண்டிருந்த கருப்பு போர்டுகளில் விலைகளுடன் மெனுக்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன.அதில் ராகி களியும் கருவாட்டு குழம்பும் ஈர்த்தன.



                   கடை உரிமையாளரிடன் பேச்சு கொடுத்தபடியே ராகி களி ஆர்டர் செய்தோம். பசுமையான வாழை இலையில் கைக்கு அடங்காத ஒரு ராகி களி உருண்டை வைத்து, கருவாட்டு குழம்பை ஊத்திகிங்க என்று ஒரு பெரிய குண்டாவை உள்ளிருந்து எடுத்து வைத்தார்.கரண்டி எடுத்து குழம்பை கலக்கியதில் நெத்திலி கருவாடுகள் மசாலாவுடன் நீந்திக்கொண்டிருக்க, அலேக்காய் குழம்புடன் இரண்டு நெத்திலி கருவாட்டை எடுத்து களி உருண்டை மேல் ஊற்ற குழம்பாபிசேகம் ஆனது.



                 களியின் ஓரமாய் ஒரு விள்ளலை பிய்த்து குழம்போடு பிசைந்து உருட்டி, வாயில் வைத்தால் கருவாட்டுக் குழம்பின் மணத்துடனும் மிக்க ருசியுடனும் உள்ளே இறங்கியது.கொஞ்சம் கொஞ்சமாய் கனத்த உருண்டை கருவாட்டு குழம்போடு கரைந்து கொண்டிருந்தது.அது பாட்டுக்கு வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நெத்திலி மீனின் சுவையும் நன்றாகவே இருந்தது. பாதி களி உருண்டைதான் சாப்பிட்டிருப்போம்…அதற்குள் கடைக்காரரின் குரல்….இந்தாங்க…சிக்கன் குழம்பு ஊத்திக்குங்க என்று இன்னொரு குண்டாவினை எடுத்து வைத்தார்….அரைத்த வைக்கப்பட்ட சிக்கன் குழம்பு நன்றாக இருந்தாலும், கருவாட்டுக்குழம்புக்கு ஈடாக வில்லை.சிக்கன் குழம்பினை சிறிதளவு டேஸ்ட் பண்ணிவிட்டு, மீண்டும் பழைய குண்டாவிற்கே திரும்பினோம்.களி உருண்டை காணாமல் போகும் வரைக்கும், கருவாட்டுக்குழம்பை ஊற்றி ஊற்றி சாப்பிட்டோம்.
                  இன்னொரு களி உருண்டை சாப்பிட சத்தியமாய் வயிற்றில் இடமில்லை,முழுவதும் கருவாட்டுக்குழம்பால் நிரம்பியிருந்தது.வயிறும் மனசும் நிறைய பெரும் ஏப்பத்துடன் வெளிவந்தோம்.
                  நிறைய வெரைட்டிகள் மெனுகார்டில் இருக்கின்றன.மிக குறைந்த அளவே தயாரிக்கப்படுகின்றன.கடை ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகிறதாம்,கோவையில் முதல் களி உருண்டை ஹோட்டல் இதுதான்.களி உருண்டை பெங்களூர் தள்ளுவண்டிகளில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு முத்தா என்பார்கள்.பெரும்பாலான ஹோட்டல்களில் களி கிடைக்காது.தள்ளுவண்டிதான்.கூட கோழிக்குழம்பினை ஊற்றுவார்கள்.செம டேஸ்டாக இருக்கும்.
           கோவையில் முதன் முதலாய் இங்கு ஆரம்பித்து இருக்கிறார்கள்.சின்ன கடைதான்.இடவசதி நெருக்கடி கண்டிப்பாய் இருக்கும்.ஆனால் மிக்க சுகாதாரமாக இருக்கிறது.டேஸ்டாகவும் இருக்கிறது.
கடை உரிமையாளர் பெயர் சீனிவாசன் என்றார், சொந்த வீட்டிலேயே ஹோட்டல் ஆரம்பித்து இருக்கிறார்.சுகாதாரமாகவும் சுத்தமாகவும் விலை குறைவாகவும் இருக்கிறது.
இளநீர் சர்பத்
இந்த கடைக்கு பக்கத்திலேயே சில்லுனு இளநீர் சர்பத் கிடைக்கும்.இளநீரை வெட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உள்ளே இருக்கிற வழுக்கையையும் வழிச்சி போட்டு, நன்னாரி சர்பத்தினை ஊற்றி, உடைச்ச ஐஸ்கட்டிகளை நிறைய போட்டு, சப்ஜா விதைகளை போட்டு, ஒரு லெமனை பிழிந்து, ஒரு ஆத்து ஆத்தி இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி கொடுப்பாரு பாருங்க, அவ்ளோ டேஸ்ட்....
இளநீர் சர்பத்தின் விலை ரூ 60.


நேசங்களுடன்

ஜீவானந்தம்.

10 comments:

  1. அருமையான பதிவு, உங்கள் பதிவு படிக்க படிக்க எச்சில் ஊருகிறது. நாங்கள் கோவை வரும் போது ருசிகிறோம் அந்த புண்ணியம் உங்களை சேரும். நன்றி வணக்கம்

    ReplyDelete
  2. நண்பரே படங்களுடன் கூடிய தகவலுக்கு நன்றி. ஹோட்டல் அத்தம்மாவில் கருவாட்டுக் குழம்பு. ஆச்சரியமான விஷயம்தான். எனக்குத் தெரிந்து அசைவ ஹோட்டலில் கருவாட்டுக் குழம்பு கேள்விப் பட்டதில்லை. மீன், நண்டு, சிக்கன், மட்டன் என்று குழம்பு வைக்கும்போது கருவாட்டுக் குழம்பை மட்டும் ஏன் தவிர்க்கிறார்கள் என்று காரணம் தெரியவில்லை. எனக்கு கடைக்காரர்களிடம் கேட்க சங்கடம். நீங்களாவது கேட்டு சொல்லுங்கள். நான் இப்போது மீன் மட்டும்தான் அசைவத்தில் எடுத்துக் கொள்கிறேன் என்பது வேறு விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. கருவாடு அனேகம் பேர் விரும்ப மாட்டார்கள்.உப்பு அதிகம் என்பதால் சேர்க்கமாட்டார்கள். பச்சையாய் மீன் கிடைக்கும் போது ஏன் காயந்த மீனை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமும் கூட இருக்கலாம்.ஆதி கால உணவு முறை இந்த உப்பின் மூலம் பதப்படுத்துவது.இப்பொழுது யாரும் விரும்புவதில்லை உப்பினால் பதப்படுத்தப்பட்ட உணவினை.

      Delete
  3. இந்த பதிவு சனிக்கிழமை அதுவுமா கண்ணுல படனுமா?! இன்னிக்கு நான் விரதம்ப்பா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....