Friday, September 5, 2014

கோவை மெஸ் - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை

ஒரு மதிய நேரம்...நம் பதிவுலக படைகளோடு ( வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விக்கியுடனும், வெளியூரிலிருந்து வந்திருந்த ஆபிசருடனும் அப்புறம் நம்மூரின் பிரபல பதிவரும் பெண் பெயருடன் இயங்குபவருடனும் (கிசு...கிசு..) சென்றோம்.இன்னொரு புகழ்பெற்ற பதிவர் பாண்டியன் மட்டை ஊறுகாயோடு  ரூமிலேயே மட்டையானதால் அவரை விட்டுவிட்டு சென்றோம்.
அதிகாலையிலேயே அம்மணிகள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாக்கிங் சென்று முடித்துவிட்டதால் அந்த மதிய வேளை வெறிச்சோடிக்கிடந்தது.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மனதில் பால் வார்த்தனர்.
வளர்மதி மெஸ் இருக்கும்  ரோட்டில்  படை பரிவாரங்களோடு நாங்கள் நுழைய, சாலையின் ஒருபுறம் வரிசை கட்டி வாகனங்கள் இருக்கவும், அதன் உரிமையாளர்கள் அனைவரும் ஹோட்டலில் பலவித உயிரினங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர், அவ்வேளையில் நாங்களும் உள்ளே நுழைந்தோம்..

மெல்லிய சில்லென குளிருடனும், மென் இசையுடனும் பலவித மணங்களுடன் நிரம்பியிருந்த உணவகத்தில் எங்களை வரவேற்ற உரிமையாளர் தோதான இடத்தில் அமரவைத்தார்.சோத்துக்கடை உரிமையாளர் ஏற்கனவே எங்களின் வருகையை அவரிடம் சொல்லி இருந்தபடியால் வரவேற்பு பலமாக இருந்தது...

யூனிபார்மிட்ட யுவன்களும் யுவதிகளும் நம்ம பாஷையில் அம்மணிகள்( அதுவும் நேபாள நாட்டு) அங்குமிங்கும் அலைந்து பரிமாறிக்கொண்டிருந்தனர்.
தட்டுக்களாலும், பதார்த்தங்களாலும் நிரம்பியிருந்த டேபிள்களை சுற்றியிருந்த குடும்பங்கள் உயிரினங்களை பதம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த ஏசி ஹாலே நிரம்பியிருந்தது பலவித உணவு வாசனைகளால்..

பசியினை ஏகத்திற்கும் எதிர்பார்க்க வைத்திருந்த அந்த நேரத்தில் மெனு கார்டோடு உரிமையாளரே வர மெனுக்கள் ஒவ்வொன்றாய் அவரின் ஆர்டரில் ஏற்றப்பட்டது...

மட்டன் பிரியாணி, இலையில் வைத்து சுடப்பட்ட மீன், பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை என வரிசைக்கிரமமாய் வந்து சேர்ந்தது எங்கள் முன் தண்ணீர் தெளித்து வைக்கப்பட்ட தலைவாழை இலையில்...

பிரியாணியின் மணம் நம் நாசியை துளைக்க, கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க சுவை மிக சூப்பராக இருக்கிறது.உதிரிஉதிரியான மசாலா சேர்த்த சீரக சம்பா அரிசி சாப்பிட சுவையாக இருக்கிறது.மட்டன் பஞ்சு போல் மென்மையானது...அடடா...முகேஷ் ஞாபகம் வருதே... மட்டன் மிக மிருதுவாக இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.

அடுத்து இலையோடு வைத்து வேகவைக்கப்பட்ட மீன் மிக சுவையாக இருந்தது.வாழையிலையின் மணத்தோடு மீனின் சுவையும் சேர்ந்து புதுவித சுவையை கொடுக்கிறது

பிச்சிப்போட்ட கோழி...இதுவும் மெனுகார்டில்ட் இருக்கிற பெயர்தான்.கோழி வறுவல்தான்..ஆனால் கோழியை பிச்சி பிச்சி போட்டு இருக்கின்றனர்.சுவை மிக சூப்பராக இருக்கிறது.காரம் மணம் சுவை திடம் என திரி ரோசஸ் போல சூப்பராக இருக்கிறது.

நெத்திலி ஃபிரை.... வட்ட வடிவ சூரியனைப்போல் அலங்காரம் செய்யப்பட்டு எங்கள் டேபிளை அலங்கரித்தது...கொஞ்ச நேரம் தான்..சீக்கிரம் எங்களது வயிற்றுப்பகுதியில் மறைந்து விட்டது.
மொறு மொறுவென ஃப்ரெஞ்ச் ப்ரை போல சுவை...

அதற்கப்புறம் சாதம்....வகை வகையான குழம்புகளை ஒவ்வொன்றாய் ஊற்றி கலந்து பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் தூள் பறக்கிறது.
எப்பவும் அரிசி சாதத்தினை தொடாத விக்கி அவர்கள் அன்று நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ரசம் என ஒரு பிடி பிடித்து விட்டு தான் கை கழுவ போனார்...

விலை நார்மலாகத்தான் இருக்கிறது.ஆனால் சுவை நன்றாக இருக்கிறது.
நன்றாக சாப்பிட்டுவிட்டு வரலாம்.

மிகத்திருப்தியாக சாப்பிட்டுவிட்டு கை கழுவ போன போது வேக வேகமாக ஓடி வந்தார் உரிமையாளர்..என்ன..அதற்குள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கணையோடும், உங்களுக்காக ஒரு புதுவித குழம்பினை செய்து கொண்டிருந்தேன் அதற்குள் வந்துவிட்டீர்களே என கடிந்து கொண்டார்..அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் இன்னொரு வகையினை ருசி பார்த்துவிடுகிறோம் என சொல்லிவிட்டு விடைபெற்றோம்..

வளர்மதி மெஸ் - ரேஸ்கோர்ஸ் ரோட்டில் போட்டோ செண்ட்ருக்கு எதிரில் உள்ள ரோட்டில் வலது புறம் இருக்கிறது

முன்னாடியே டேபிள் புக் பண்ணனும்னா 98434 11190

நேசங்களுடன்
ஜீவானந்தம்


5 comments:

  1. செம்ம மச்சி...

    நெத்திலியும், இலை மீனும் மீன் கவுச்சியே இல்லாமல் சுவையா இருந்தது... அதற்கு பின் 2 முறை போய்ட்டு வந்துட்டேன்பா...

    கோவை வரும் நண்பர்கள் மதிய உணவிற்கு நம்பி செல்லலாம்... சுவையும், தரமும் நன்று...

    ReplyDelete
  2. நண்பர்கள் புடைசூழ சாப்பிட்டது மறக்கமுடியாத அனுபவம்

    ReplyDelete
  3. அதிலும் அந்த இலையில் சுடச்சுட பரிமாறப்பட்ட மீனின் வாசம் இன்னமும் நினைவுகளில். நன்றி நட்புக்களே.

    ReplyDelete
  4. சாப்பாடு இங்கே வரை மணக்குதய்யா !!!

    ReplyDelete
  5. na adikadi inga poven, my favorite is pichu pota kozhi and chicken biriyani... next time pona maandhal fry try panunga jeeva..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....