Friday, June 17, 2016

சமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு

எங்க ஊர் கரூர்...காவிரியும் அமராவதியும் ஓடற ஊர்.காவிரியின் ஓரப்பகுதிகளில் நன்செய் புன்செய் வயல்கள் உண்டு.அதனாலேயே இங்க வாத்துகள் அதிகம்.வாத்து வளர்ப்பவர்களும் அதிகம்.காவிரியின் ஓரமாக உள்ள வயல்களில் வாத்துக்கள் எப்போதும் மேய்ஞ்சிட்டு இருக்கும்.நெல் அறுத்த வயல்களில் தண்ணீர் இருக்கும் போது வாத்துகள் மேய்ஞ்சிட்டு இருக்கும்.சிறுவயதில் வயல்காட்டில் வாத்துக்களை துரத்தி விளையாடுவோம்.மேஞ்சிட்டு இருக்கும் போதே வாத்து முட்டை போட்டுடும்.அதை மேய்க்கறவங்களுக்கு தெரியாம எடுத்துவந்து வீட்டில் அவிச்சோ ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம்...

சாப்பிட்ட பத்தாவது நிமிசத்தில் நம்ம வீட்ல கண்டுபிடிச்சிருவாங்க....வாத்து முட்டை தின்றிருக்கான் என்று...அவ்ளோ கவிச்சி அடிக்கும்.அப்படி கவிச்சி அடிச்சாலும் அதுல ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு.சளிக்கு ரொம்ப நல்லது.
வாத்துக்கறின்னாலே கொஞ்சம் கவிச்சி அடிக்கும்னு சொல்வாங்க.ஆனாலும் அதன் சுவையில் சூப்பராக இருக்கும்.
வாத்தினை கோழி வெட்டுவது போல் அதன் கழுத்தை அறுக்ககூடாது.திருகி போடனும்.பின் அதை நன்கு கொதிக்க வைத்த குண்டாவில் போட்டு முக்கனும்.பிறகு அதன் இறகை பிய்த்து எடுக்கவேண்டும்.பிறகு கொஞ்ச நேரம் நெருப்பில் வாட்டி மிச்சமிருக்கிற சிறு சிறு முடிகளை பொசுக்க வேண்டும்.பின் மஞ்சள் போட்டு நன்கு கழுவி வெட்ட ஆயத்தமாகனும்.ரத்தம் வேஸ்டாகாமல் வெட்டி துண்டுகள் போடனும்.

ஒரு சிலர் கறியை நன்கு கழுவி விடுவர்.இருந்தாலும் டேஸ்ட் இருக்கும்.ஆனால் ரத்தத்தோடு சமைக்கிற வாத்துக்கறி இன்னும் டேஸ்டாக இருக்கும்.

செய்முறை:

வேண்டிய பொருட்கள்:
வாத்து -  1 (நல்லா  மஞ்சள் போட்டு கிளீன் பண்ண கறி )
சி - வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது
பூண்டு - 10 பல்
இஞ்சி - கொஞ்சம்
பட்டை, கிராம்பு, - 2 எண்ணம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

செய்முறை :
முதலில் வாத்தினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( வாத்தினை அதன் ரத்தத்தோடு சமைப்பது நல்ல ருசியை தரும்  )
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் அதை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.தேங்காயை  துருவி நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு, இஞ்சி அரைத்துக்கொள்ளவும்.தக்காளி அரிந்து கொள்ளவும்.




குக்கரில் எண்ணைய் விட்டு இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்பு சுத்தம் செய்த வாத்தினை போட்டு நன்கு வதக்க வேண்டும்.இரண்டு டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து வதக்கவும்.வாத்திலிருந்து எண்ணைய் நிறைய பிரியும்.அவ்வாறு பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.பிறகு அரிந்து வைத்திருக்கிற தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.



நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கிற தேங்காய், வெங்காய கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான  உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு எட்டு முதல் பத்து விசில் வரை விடவும்.(புளி வேண்டுமென்பவர்கள் கொஞ்சம் கரைச்சு ஊத்திக்கொள்ளலாம்)
பின் விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான  வாத்துக்குழம்பு தயார்.குக்கரில் வேண்டாம் என்பவர்கள் அரை மணி நேரம் வாணலியில் கொதிக்க வைத்தால் சுவையான குழம்பு ரெடி....
இதையே கொஞ்சம் சுண்ட வைத்தால் வாத்து வறுவல் ரெடி...

குழம்பில் என்னதான் மஞ்சளும் மிளகாயும் சேர்த்தினாலும், குழம்பின் நிறம் கொஞ்சம் கருப்பாகவே இருக்கும்.அதுதான் வாத்துக்கறியின் சுவை....
காலையில் சூடாய் இட்லிக்கு சாப்பிட்டால் செமயாக இருக்கும்.வாத்துக்கறி கொஞ்சம் எலும்பாகத்தான் இருக்கும்.ஆனால் சாப்பிட சூப்பராக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

9 comments:

  1. எங்கே தேடுவேன் வாத்தை எங்கே தேடுவேன் ... ஜீவானந்தம் சார் வீட்டு குக்கரில் ஒளிந்து கொண்டாயோ இல்ல கறிக்கடை பாய் வீட்டில் ஒளிந்து கொண்டாயோ? எங்கே தேடுவேன் வாத்தை எங்கே தேடுவேன் . விமல்

    ReplyDelete
    Replies
    1. வேலாயுதம் பாளையம் அல்லது கரூர் வந்தீங்கன்னா பிடிச்சிடலாம்..வாத்தை...

      Delete
  2. சமையல் குறிப்பு தகவல் அருமை நண்பரே!!




    ReplyDelete

  3. சிறந்த வழிகாட்டல்

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  4. Jeeva,

    Earlier, we use to go to Kathirvelan kadai, then we started going to Manickam kadai.

    Ananth,
    namakkal

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ்..கதிர்வேல் கடை ஒரு காலத்துல நல்ல டேஸ்டா இருந்துச்சு.அவரு தன்னோட இடத்தினை டெவலெப் பண்ணி கட்டினதோட சரி..டேஸ்டை டெவெலப் பண்ணல.கதிர்வேல் கடைக்கு எதிர்க்க இருக்குற கடை மாணிக்கம் நல்லாயிருக்கும்.அருள் கடையும் நல்லாயிருக்கும்

      Delete
  5. இரத்தத்துடன் இறைச்சி உண்பது இஸ்லாமில் தடை செய்யபப்ட்ட்து
    தடை செய்ய காரணம் அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல
    மிருகங்களின் ரத்தம் கெடுதலானது
    .
    காட்டுமிராண்டிகளும், நாகரீகம் இல்லாதவர்களே ரத்தத்துடன் இறைச்சியை உண்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடுவதற்கு மதம் தேவையில்லை.வயிறு நிறைஞ்சா போதும் என்பவன்.நாங்கள் காட்டுமிராண்டிகளாகவே இருந்து விட்டு போகிறோம்.

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....