Showing posts with label பாண்டிச்சேரி. Show all posts
Showing posts with label பாண்டிச்சேரி. Show all posts

Tuesday, July 9, 2019

கோவை மெஸ் -ஹோட்டல் தேவி , கடலூர், KOVAI MESS - HOTEL DEVI , CUDDALORE

                   சிதம்பரம் போன போது பக்கத்துல தான் பாண்டிச்சேரி பார்டரு...போனா கொஞ்சம் குவாலிட்டியா நமக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று உள் மனசு சொல்லியதால் தமிழக அரசாங்கத்தின் வருமானத்தை இன்று ஒரு நாள் தள்ளி வைக்கலாம் என்று நினைத்த படியே கடலூருக்கு பஸ் ஏறினேன்.ஆகவேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போகலாம் என்று நிறைய பேரை கேட்டதில் அனைவரும் சொன்னது இந்த ஹோட்டலைத் தான்.

கடலூரில் உள்ள மிகப் பிரபலமான உணவகம் தேவி ஹோட்டல்.கடலூர் டூ சிதம்பரம் ரோட்டில் இருக்கிறது.கடலூரின் வெயிலுக்கு ஒதுங்க கூடிய ஏசி ரெஸ்டாரண்டாய் இந்த ஹோட்டல் இருக்கிறது.

ஏசி ஹோட்டல்.இன்டீரியர் அமைப்பில் அருமையாக இருக்கிறது.மதிய நேரம் என்பதால் என்னவோ கூட்டம் முண்டியடிக்கிறது.தோதான இடம் தேடி அமர்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் முழுக்க முழுக்க குடும்பங்கள் தான்.வீட்டில் யாரும் சமைப்பதில்லை போல....


உள் அமர்ந்ததும் முதலில் சூப் ஒன்றை தருகிறார்கள்.அதற்கு பின் ஆர்டர்.ஆர்டரிட்டதும் வரிசையாய் வந்து சேர்கிறது.இறால் பிரை. அளவான சைசில் உள்ள இறால்களுடன் மசால் சேர்ந்து செம ருசியாய் இருக்கிறது.அதே போல குடல் வறுவலும்.செம டேஸ்ட்.
அளவான காரத்துடன் மிக மிக அம்சமாய் இருக்கிறது.





இங்கே ஸ்பெசல் என சொல்லப்படும் மல்லி சிக்கன் பயங்கர சுவை.அமோகம்.மொறு மொறுவென்று சில்லியாக சாப்பிட சுவையாக இருக்கிறது.பச்சை பசேலென சுவையுடன் இருக்கிறது.
ஹோட்டல் நிறைந்து இருக்கிறது.கூட்டம் கூட்டமாய் குவிகிறார்கள்.விதவிதமான அனைத்து உணவுகளும் மிக ருசியாய் கிடைக்கிறது.

கடலூரில் தவற விடாத உணவகம் தேவி ஹோட்டல்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 20, 2018

கோவை மெஸ் – JP சர்பத், காரைக்கால்.JP Sharbat, Karaikkal, Pondicherry

          திருநள்ளாறில் குடி கொண்டுள்ள சனிபகவானின் அருள் பெற்றுவிட்டு, குடிமகன்களின் தேசமான பாண்டிச்சேரியின் மற்றுமொரு சிறப்பான நகரமான காரைக்காலில் கால் பதித்தோம்.நகரம் வெறிச்சோடி வறண்டு கிடக்கிற சூழலை தருகிறது.வெயிலில் வாடமுடியாதோர் நிழல் தேடி அடைக்கலம் புகுந்திருந்தனர்.மக்கள் நடமாட்டம் என்பது குறைவாக இருக்கிறது.வெயில் கொடுமைக்கு இதமாய் தாகம் தீர்க்க சர்பத் கடைக்கு சென்றிருந்தோம்.
             சர்பத், பால் சர்பத், லஸ்ஸி, மோர், பாதாம் மில்க், ஜூஸ் என நிறைய வகைகள் இருக்கின்றன.நன்னாரி சர்பத்தினை ஜிலுஜிலுவென ஐஸ்கட்டிகளுடன் பாதாம்பிசின் சேர்த்து ஒரு டம்ளரில் கொடுக்க, சுவைத்ததும் உள்ளுக்குள் குளிர்ச்சி ஓடுகிறது.அடிக்கிற வெயிலுக்கு இந்த சர்பத் செம குளிர்ச்சியாக இருக்கிறது. சின்ன சின்னதாய் அடித்து நொறுக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் ஒவ்வொரு மிடக்கின் போது வாயில் கடிபடுவது ஜில்லென்ற அனுபவத்தினை தருகிறது.அடுத்து தயாரித்து கொடுத்த பால் சர்பத் இதுவும் அப்படியே..நல்ல சுவையாக இருக்கிறது.காரைக்காலில் உள்ள சிறந்த சர்பத் கடை இதுவாக இருக்கிறது.





           குடிமகன்களின் தேசத்தில் அடிக்கிற வெயிலுக்கு பாரினை நோக்கி ஓடுவதை விட்டுவிட்டு, இதென்ன சர்பத் கடைக்கு என முணுமுணுப்பது தெரிகிறது.அதையும் விட்டு வைக்க வில்லை.அங்கேயும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டுதான் கோவைக்கே பஸ் ஏறினோம் என்பது உங்களுக்கு தெரியாது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, July 14, 2012

முதலியார் குப்பம் - படகு இல்லம்


முதலியார் குப்பம்
சென்னை டு பாண்டிச்சேரி ஈ சி ஆர் ரோட்டில் இந்த முதலியார் குப்பம் இருக்கிறது. இங்கு தமிழக அரசு புதிதாய் நவீன வசதிகளை ஏற்படுத்தி இருக்கிற படகு இல்லம் சென்றோம். படகு மட்டுமே இருக்கிறது. நீர் மட்டமும் குறைந்து இருக்கிறது.ஒரு ஈ காக்கா காணோம். காத்து வாங்கி கொண்டு இருக்கிறது. சனி ஞாயிறு மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும் என்று சொல்லியபடியே டிக்கெட் கொடுத்தார் ஊழியர்.இருபது நிமிடம் அந்த பேக் வாட்டரில் செல்ல 390 ரூபாய். மோட்டார் படகு எங்களை சுமந்து கொண்டு நீரில் மிதந்து சென்றது. அந்த பக்கம் பீச் இந்த பக்கம் மணல் திட்டு இதுக்கு நடுவுல பேக் வாட்டர்.இதுல தான் போட்டிங்.

செல்லும் போது ஒரு சில பேர் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.ஒருவர் அப்போதுதான் கட்டுமரத்தில் தொழிலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்படி ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை இந்த போட்டிங் பயணம்.நீர் சறுக்கு விளையாட்டு, பைக், பலூன் விளையாட்டு, மிதி படகுகள் என நிறைய இருக்காம் ஆனால் நாங்க போன அன்னிக்கு எதுவுமே இல்லை.தண்ணீரிலேயே போய்ட்டு தண்ணியிலேயே வந்ததால் தண்ணியிலே மிதந்த எங்களுக்கு பிடிக்கவில்லை.பீச் ஓரம் சென்று இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் காத்தாட விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதுவும் கூட்டம் இருக்கும் போது மட்டும்தான் அங்கு சென்று இறக்கி விடுவார்களாம்.கண்ணுக்கு குளிர்ச்சியாக எதுவுமே இல்லாததால் ரொம்ப வறண்டு கிடக்கிறது இந்த படகு இல்லம்.இங்க போறவங்க சனி ஞாயிறு மற்றும் லீவ் நாட்களில் மட்டும் போங்க.அப்போதான் கொஞ்சம் நல்லா இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, July 5, 2012

பாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்


பாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்
பாண்டிச்சேரி ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் மிக நேர்த்தியான கட்டமைப்பில் இருக்கிறது.எந்த ரோட்டில் சென்றாலும் பீச் செல்லும் பாதையை அடையலாம்.அப்புறம் பாண்டிக்கே உரித்தான மதுக்கடைகள் எங்கெங்கும்....என்ன தான் நிறைய மதுபான கடைகள் இருந்தாலும் முக்கியமான ரோடுகளில் அங்கங்கே நம்ம அரசியல் தலைவர்களின் சிலைகள் அலங்கரிக்கின்றன.




புதிதாய்  கட்டப்பட்டு இருக்கிற அரசு மருத்துவமனை ஜொலி ஜொலிக்கிறது.எந்த வித பரபரப்பும் இன்றி காணப்படுகிற புதுச்சேரி அரசின் சட்டமன்றம்.(இதே நம்ம ஊரா இருந்தா அவ்வளவு தான்... ரெண்டு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் நிக்க வச்சி கேள்வியா கேட்பானுங்க..)
அப்புறம் இங்க சண்டே மார்க்கெட் ரொம்ப பேமஸ்.பழைய பொருட்கள் முதல் புதிய பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.ஏழு வருடம் முன்பு இந்த சண்டே மார்க்கெட்டில் ஒரு கேசட் பிளேயர் வாங்கியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.அதில் ஒலித்த‘’’ ஒரு வார்த்தை கேட்டு ஒரு வருஷம் காத்திருந்தேன்‘’ என்ற பாடலை மறக்க முடியாது.ஒருவேளை நயன்தாரா கூட காரணமாக இருக்கலாம். அதுக்கப்புறம் அந்த கேசட் பிளேயர் ஒரிசா வரைக்கும் சென்று ரிப்பேர் ஆனது தனிக்கதை.M.G ரோடு மார்க்கெட் அருகில் உள்ள இந்தியன் டிலைட் ஓனரிடம் பல்சர் பைக் வாடகைக்கு வாங்கி ஒட்டியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.சந்திரமுகி படம் ரிலீஸ் ஆனபோது முதல் காட்சி பார்க்க பாண்டிச்சேரி ரசிகர்களுடன் போட்டி போட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.அப்புறம் ரொம்ப ஓவராய் குடித்து விட்டு முதல் முதலாய் மட்டையானது, ஒவ்வொரு முறையும் கோவை வரும்போது பாக்கெட் ஒயின் வாங்கி வருவது என  என நிறைய ஞாபகங்கள்.
எப்படியோ இந்த முறை சென்ற போது அனைத்தும் ஞாபகத்தில் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சியே..
முந்தைய  பதிவு  

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 24, 2012

பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1


பாண்டிச்சேரி  குடிமகன்களின் தேசம் - 1

                        எச்சரிக்கை
                  குடி குடியை கெடுக்கும்
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மட்டும்.

வணக்கம் (குடி)மக்களே.......
இது கொஞ்சம் மப்பான பதிவு...
ஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.
ஓகே...மேட்டருக்கு வருவோம்....
பாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன்  மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.



உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாராயம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.
பாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து  சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...

நல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....




கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...
எப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....
கிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...