Saturday, May 5, 2018

கோவை மெஸ் - சதிஷ் ஹோட்டல், பொம்மை குட்டை மேடு, நாமக்கல்.- KOVAI MESS - IDLY KUDAL KARI, SATHISH HOTEL, POMMAI KUTTAI MEDU, NAMAKKAL

கோவை மெஸ் - சதிஷ்  ஹோட்டல், 
     நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பொம்மை குட்டைமேடு என்கிற சிற்றூர்.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்கிறது இவ்வூர்.இவ்வூரில் உள்ள ஒரு ஹோட்டலில் காலை 7 .30 முதல் இட்லி, குடல்கறி, மட்டன் குழம்பு கிடைக்கும் என்கிற செய்தி ரொம்ப நாளாகவே நான் நாமக்கல் வரும் போது என்னைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒவ்வொரு முறையும் வரும்போது இந்த ஹோட்டலுக்கு செல்லும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.கூட்டணி சேர்த்து போவதாக பிளான் பண்ணுவோம்.ஆனால் அதில் யாராவது ஒருத்தர் கழண்டு கொள்வர்.அதனாலாயே இன்று காலை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனித்து கிளம்பினேன்.
        பைபாஸில் இருந்து இடதுபுறம் தாளம்பாடி செல்லும் வழியில் சில கடைகள் சில மீட்டர்கள் தாண்டி இடது புறம் இருக்கிறது இந்த ஹோட்டல்.இருபுறமும் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இரு கடைகள் சேர்ந்த ஹோட்டல்.வெள்ளையும் சொள்ளையுமாய் வேட்டி கட்டிய ஆட்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
                            சின்ன ஹோட்டல்தான்.ஐந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.மொத்தம் பதினைந்து பேர் சாப்பிடலாம் ஒரே நேரத்தில்.அருகில் உள்ள கடையில் புரோட்டா சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கிறது.நான் இடம் கிடைத்து அமர்ந்தவுடன் இலை போட்டு இரண்டு சூடான இட்லி வைத்தனர்.பின்பு குடல்கறி கேட்க, சுடச்சுட வந்து சேர்ந்தது.ஆவி பறக்கும் மட்டன் குருமாவை ஊற்ற, இட்லியை ஒரு விள்ளல் பிய்த்து குருமாவில் தோய்த்து, குடல்கறியில் பிரட்டி இரண்டு மூன்று துண்டுகளோடு எடுத்து வாயில் போட.ஆஹா அற்புதம்.நாவின் சுவை அரும்புகள் ஆட்டம் போட ஆரம்பித்தன.

                 மட்டன் குருமாவின் சுவையும், குடல்கறியின் சுவையும் சேர்ந்து ஒரு மாயஜாலத்தை நிகழ்த்தியது வாய்க்குள்.நல்ல சுவை.குடல்கறியோடு ரத்தம் சேர்த்து நன்கு வேகவைக்கப்பட்டு தேங்காய் துருவல்கள் தூவி மிக மென்மையாய் இருக்கிறது.வெறும் இட்லி குடல் வறுவல் செம காம்பினேஷன்.அதுவும் ரத்தம் சேர்த்து செய்திருக்கும் இந்த வறுவல் டேஸ்ட் இன்னும் கூடுதலாக இருக்கிறது.மென்மையான இட்லிக்கு ஈடு கொடுத்து குடல் கறியின் சுவை இருக்கிறது.
        அடுத்து மட்டன் வறுவல்.இதனுடன் வரும் குழம்பு கிராமப்புறங்களில் செய்யும் தண்ணீர் குழம்புபோல் இருக்கிறது.அதிகம் அரைத்து சேர்க்கப்பட்ட மசாலாக்கள் இல்லை.ஆனால் மட்டன் மிகவும் நன்றாக வெந்திருக்கிறது.சாப்பிட ஒரு புதுவித சுவையை தருகிறது.வெள்ளாட்டுக் கறியின் சுவை நன்கு தனித்து தெரிகிறது.
        இட்லியோடு குருமாவும் ஒரு துண்டு கறியையும் சேர்த்து மெல்லும் போது சுவை அள்ளுகிறது..மட்டன் குருமாவில் நனைந்த இட்லி நம்முள் மென்மையாய் இறங்குகிறது.அடுத்து புரோட்டா..யார் சொன்னது புரோட்டா சாப்பிட்டால் பல வித நோய்கள் வருமென்று.புரோட்டாவை பிச்சி போட்டு குருமாவில் ஊறவைத்து சாப்பிடும் போது இருக்கின்ற சுவை இருக்கே..அது சொர்க்கம்.. சொர்க்கத்திற்கு அப்புறம் நரகம் வந்தால் என்ன போனால் என்ன.
         மொறுமொறு புரோட்டாக்களுக்கு மட்டன் குருமா செம டேஸ்டாக இருக்கிறது.அதற்கப்புறம் ஆம்லேட் கலக்கி என முட்டைவகைகள் இருக்கின்றன.குடல் வறுவல் ரூ.110 மட்டன் ரூ. 160 என்கிற விலையில் இருக்கிறது.அனைத்து நாட்களிலும் கடை இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அள்ளுகிறது.இந்தபக்கம் காலை வேளையில் பயணிக்க நேர்ந்தால் சாப்பிட்டு பாருங்க. 9 மணிக்கு மேல் போனால் சில அயிட்டங்கள் தீர்ந்து விடும் என்பது நிச்சயம்.
           பொம்மை குட்டை மேட்டில் இன்னொரு கடை வேறு இருக்கிறது.பார்வதி டீ கடை.இங்கு போடப்படும் பலகாரங்கள் மிக்க ருசி வாய்ந்தவை.புதிதாய் அசைவ ஹோட்டல் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்கிற சேதி வந்திருக்கிறது.அடுத்த முறை அங்கு ஆஜராக வேண்டியது தான்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


2 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....