Monday, January 4, 2021

கரம் – 40

ஆச்சரியம்:

        சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.


         நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.

வாவ்…..வாட் எ ஐடியா சேட்ஜி…..

அதிசயம் :

கோவை  கவுண்டம்பாளையத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.ஹவுசிங் யூனிட்டில் ஆரம்பித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வரைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பாலம் பணி கொஞ்சம் ஆமை வேகத்தில் நடந்தது.இப்பொழுது மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தூண்கள் அமைக்கும்  பணி அனைத்தும் முடிந்து இப்பொழுது இரு தூண்களுக்கு இடையில் செண்ட்ரிங்க் அடித்து உத்திரம் (BEAM ) அமைப்பதற்காக கான்கீரீட் வேலை நடக்கிறது.இப்பொழுது வரை 6 பில்லர்கள் வரை பீம் வேலை முடிந்து விட்டது.மற்றவை ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.பாலம் கட்டுமான பணி முடிய எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.அதற்குள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும்.அதனால் தான் என்னவோ சீக்கிரம் பில் பாசாக வேண்டி கட்டிக்கொண்டிருக்கும் பாலத்திற்கு அம்மா பெயிண்ட் ...சாரி...பச்சை கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கின்றனர்.




பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.

கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.

முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....

சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.

அனுபவம் :

                      கரூர் செல்லும் போது வெள்ளக்கோவில் பகுதியில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினோம்.கடைக்காரரிடம் டீ சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கோலி சோடா..உடனே டீ யை கேன்சல் செய்து விட்டு கோலி சோடாவினை எடுத்து பெருவிரலை உள்ளே விட்டு ஒரு அழுத்து அழுத்தினால் கேஸ் பீச்சி அடிக்க,கோலி குண்டு உள்ளே போக, பாட்டிலில் இருந்த கலரின் வாசம் வெளிவந்து மூக்கை துளைக்க, எடுத்து வாயில் வைத்து குடிக்க, சிறுவயதில் கோலி சோடா குடித்த ஞாபகங்கள் வந்து போனது.கலரின் இனிப்பும், கேஸ் நிறைந்த தண்ணீரும் நாவினை நனைத்து சுவை நரம்புகளை நடனமாட வைத்து தொண்டைக்குள் இறங்கி வயிற்றினை நிரப்பியது.சிறிது நேரத்திலேயே கலரின் வாசத்தோடு பெரிய ஏப்பத்தினை கொடுக்க மனம் ஆனந்தமானது.கோலி சோடா குடிக்கும் போது சீக்கிரம் தீராமல் இருக்க பாட்டிலை திருப்பி, கோலிக்குண்டினை பாட்டிலில் உள்ள அந்த அடைப்பினில் குண்டினை வைக்காது, குண்டுடன் கலரை உறிஞ்சி குடிக்கும் போது இருக்கிற ஆனந்தம் இருக்கே  அதை அனுபவித்தால் தான் தெரியும்.அவ்வப்போது கோலி குண்டு பாட்டிலில் உரசி உரசி ஒரு சத்தம் வரும் பாருங்க...கேட்க அது அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.



                    இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

 


1 comment:

  1. கோலி சோடா எங்க ஊரில் என்றும் கிடைக்கும்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....