Saturday, November 29, 2014

கோவை மெஸ் - இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை

              ஒரு மாலை நேரம்...மணி 3.30 இருக்கும்.மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்துல இருக்கிற இராமசாமி மெட்ரிகுலேசன் ஸ்கூல் பக்கத்துல போயிட்டு இருந்தபோது அந்த ஸ்கூல் நிர்வாகமே ஒரு கேண்டீன் நடத்திட்டு வர்ற விஷயம் ஞாபகத்திற்கு வர அப்படியே யூ டர்ன் அடிச்சு உள்ளே நுழைந்தேன்.மணி 3.30 ஆச்சே, சாப்பாடு இருக்குமா இருக்காதா என்ற எண்ணத்திலேயும், பதிவு ஒண்ணு தேத்தமுடியுமா என்ற எண்ணத்திலேயும் அவசர அவசரமாக வண்டியை நிறுத்தவும், காவலாளி ஒருவர் வாங்க வாங்க என அழைக்கவும், நமக்கான சாப்பாடு கன்பார்ம் ஆகிவிட்ட சந்தோசத்தில் உள்நுழைந்தேன்.
        
           பரந்து விரிந்த பெரிய சாப்பாட்டு ஹால் நம்மை வரவேற்கிறது.டோக்கன் வாங்கிகொண்டு கை கழுவும் இடத்திற்கு சென்றபோது சாப்பிட்டவர்களின் தட்டுகள் நிறைந்து கிடந்தன.ஹாலோ காலியாகி கிடந்தது.லேட்டாய் வந்தால் இப்படித்தான் வெறும் டேபிள் சேர்களை பார்த்துக்கொண்டு உண்ணவேண்டியது தான் என மனதுக்குள் நொந்தபடியே டோக்கன் கொடுத்து அதை சாப்பாடாக மாற்றி, கையில் ஏந்தி காலியான டேபிள்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.
           நான் போன அன்று முள்ளங்கி சாம்பாருடன் கூடிய சாதம்.ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்களுடன் சாம்பார். பொரியலும் தினம் தினம் வெவ்வேறு காய்களுடன்.நன்றாகவே இருக்கிறது.அளவு சாதம் தான்.ஆனால் அதுவே நிறைவாக இருக்கிறது.இன்னும் நிறைய அயிட்டங்கள் சேர்க்கப்படுவதாகவும் அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.

          ஏழைகள் மற்றும் வசதி குறைந்தோர் மிக திருப்தியாக சாப்பிடுவதற்காக ஏற்படுத்திய கேண்டின் இது.குறைந்த விலையில் தரமான சாப்பாடு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது இராமசாமி உணவகம்.காலையில் இட்லி, தோசை, ரவாகிச்சடி, என ஆரம்பித்து நிறைய வெரைட்டிகள் தருகின்றார்கள்.பத்து ரூபாயில் ஆரம்பித்து 30 வரை இருக்கிறது.அதே போல் இரவு சிற்றுண்டியும் நிறைய வெரைட்டிகளில் இருக்கிறது.
            வெளி ஹோட்டல்களில் அறுபது ரூபாயில் இருந்து கிடைக்கின்ற சாப்பாடு இங்கே 30 ரூபாய் மட்டுமே.இந்த நிறுவனமும் மற்றவர்களிடமிருந்து நிதி வாங்காமல் இந்த கேண்டீனை நடத்தி வருகிறது.லாப நோக்கமின்றி செயல்பட துவங்கி இருக்கும் இந்த இராமசாமி நிறுவனம் இன்னும் பல சிறப்பான சேவைகளை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த கேண்டீன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருப்பதால் இன்னும் நிறைய பேரை சென்றடையவில்லை.ஆனாலும் மாலை நேரம் கணிசமான கூட்டம் வந்து சேர்கிறது.
           இந்த சேவையினை செயல்படுத்தி வரும் திரு ஹரி அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
கோவை டூ திருச்சி ரோட்டில் சாந்தி கேண்டீன் இருக்கிறதோ அதே மாதிரி கோவை டூ மேட்டுப்பாளையம் ரோட்டில் இராமசாமி கேண்டீன் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. அடுத்தமுறை கோவை வரும்போது என்னையும் அழைத்துச் செல்லுகள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா...வாங்க...அழைத்துச்செல்கிறேன்...ஆனா இது சைவம் மட்டும் தான்....

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....