Thursday, March 19, 2015

கோவை மெஸ் - சிவா பீப் ஹோட்டல்( SIVA BEEF HOTEL), விருதம்பட்டு, வேலூர்

                                  இது கண்டிப்பா பீஃப் கறி சாப்பிடறவங்களுக்கு மட்டும்.....இப்படி எச்சரிக்கை போடற நாளும் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்....                    
                  ஒரு அவசர வேலையாக சென்னையில் இருந்து வாணியம்பாடி வரைக்கும் போக வேண்டி இருந்ததால் பூந்தமல்லியில் இருந்து வேலூர்க்கு பேருந்தில் சென்றேன்.பஸ் ஏறின டைம் கரெக்டாக ஒரு மணி...பசி இன்னும் ஆரம்பிக்க வில்லை.ஜன்னலோர இருக்கை என்பதால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.பஸ்ஸிலும் அம்மணிகள் என்பது அறவே இல்லாமல் இருந்தது.வெளியே இருந்த வெப்பத்தின் புழுக்கம் பேருந்தின் உள்ளுக்குள்ளும் இருந்தது.வேலூரில் சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணி பேருந்து வழக்கமாய் நிறுத்தும் மோட்டல்களில் கூட இறங்கவில்லை.

                கையில் வேறு புத்தகம் இருந்ததால் அதன் சுவாரஸ்யத்தில் பசியும் காணாமல் போய்விட்டிருந்தது.வெயில் வேறு அனல் பறத்திக்கொண்டிருக்க பேருந்து வறண்ட பாலைவனத்தில் செல்வது போல இருந்தது.இருபுறமும் பசுமையை தொலைத்த பைபாஸ் ரோட்டில் வேகமெடுத்த பேருந்து வெப்பத்தினை தாங்கிக்கொண்டு எங்களுக்கு குளிர்ச்சியை தந்து கொண்டிருக்க, பேருந்தினுள் அனைவரும் கண்கள் சொக்கியபடி உறங்கிக்கொண்டிருந்தனர் மூவரைத்தவிர......மதிய நேரத்தில் எங்காவது நெடுந்தூரப் பேருந்தில் பயணித்து பாருங்கள்..உறக்கம் கண்களைச்சுழட்டும்..பேருந்தின் வேகம் உங்களைத் தாலாட்டும்...
                மூன்று மணி நேர பயணத்தில் வேலூர் வந்தடைந்தேன்.வேலூரில் பதினைந்து வருடங்களாக தண்ணீர் வரத்தே இல்லாத பாலாறில் வெய்யிலாறு ஓடிக்கொண்டிருந்தது.ரோடுகளில் கானல் நீர் தெறித்து ஓடிக்கொண்டிருந்தது.எப்பவோ எனது பதிவுகளை படித்து பாராட்டிக்கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த எழுத்தாளர் உஷா அன்பரசு அவர்கள் சொன்ன ஒரு ஹோட்டல் ஞாபகத்திற்கு வந்தது.அவர்கள் ஆபீஸ் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல்.... சிவா பீப் ஹோட்டல், மாலை நேரம் தென்படுகிற கூட்டமும், அங்கே பரவுகின்ற ஒரு சுவையான மணமும், அதைப்பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார் என்றும் துரதிஷ்டவசமாக அவர்கள் மிகவும் ஆச்சாரமான சைவத்தினை சேர்ந்தவர் என்றும் அறியக்கேட்டிருக்கிறேன்.
              வேலூர் வந்திறங்கியவுடன் அவருக்கு போன் போட அட்ரசை வழிமொழிந்தார். பதிலுக்கு அவரை நான் சாப்பிடக்கூட அழைக்க வில்லை ...அவர் சுத்த சைவம் என்பதால்....
             நான்கு மணி ஆகிவிட்டதால் இருக்குமோ இருக்காதா என்கிற பயத்துடனே பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவந்தேன். ஷேர் ஆட்டோவினை கைகாட்டி நிறுத்தி விருதம்பட்டு சிவா ஹோட்டலில் நிறுத்த சொன்னேன்.பாலாறு பாலம் தாண்டி இருக்கிறது விருதம்பட்டு..அருகிலேயே கடை இருக்கிறது.
           கடையின் தோற்றம் பல சிலேட்களால் அலங்கரிக்கப்பட்டு, மெனுக்களால் நிரம்பி வழிகிறது.லாலிபாட், பிரியாணி, பீப் பக்கோடா, சேமியா, ஈரல் பிரை, மூளை ப்ரை, என சிலேட்கள் மெனுக்களைத் தாங்கி தொங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பெரிய பிளக்ஸ் போர்டு சுவையின் தரத்தினை காட்டிக்கொண்டிருக்கிறது.


உள்ளே கடைசிக்கட்ட நேரத்திலும் பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தனர். பார்சல் பிரியாணி தான்.நேரம் ஆகிவிட்டால் பிரியாணியை பார்சல் செய்து வைத்து விடுவார்களாம்.
நானும் போய் டேபிளில் அமர, மூன்று சிறு சிறு இலைகளால் பின்னப்பட்ட ( தேக்கு இலைன்னு நினைக்கிறேன்) இலையில் மடித்து வைக்கப்பட்ட பிரியாணி பார்சலை பிரித்து வைக்க மணம் நாசியை கவ்வியது.
பீப் பிரியாணிதான். சுவையான பாஸ்மதி அரிசியில் மட்டன் மணம் கலந்து சூப்பராக இருக்கிறது.உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுத்த கத்தரிக்காய் தால்ச்சா செம அருமை.இரண்டும் ஒன்றுக்கொன்று செம காம்பினேசன்.


              சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பீப் பக்கோடா கேட்டேன், அது மாலை ஐந்து மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.அந்த ஹோட்டல் ஸ்பெசல் பீப் பக்கோடா தானாம்.வாசனை தெருவுக்கு வருமாம்....பக்கோடா இல்லை என்று சொல்லவும் கொஞ்சம் மனம் வருத்தமாகிப்போனது.
           லாலிபாப் இருக்கிறது தரவா என கேட்க, சிக்கன் தானே என வினவ, இல்லை பீப் என்றதும் ஷாக்காகிப்போய்விட்டேன்.ஒரு மாட்டுக்காலையே கொண்டுவந்து வைப்பாரோ என அச்சத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.ஆனாலும் சிறிய பீஸாகத்தான் இருக்கிறது பக்கத்து டேபிளில் பூந்து விளையாடிக்கொண்டிருந்த ஒருவரது கையில் இருந்த லாலிப்பாப்பை பார்த்தவுடன்.
விலாஎலும்போடு கொஞ்சம் மட்டன் சேர்ந்து இருக்கிறது.நன்றாக மசாலாவில் ஊற வைக்கப்பட்டு எண்ணையில் பொறித்தால் லாலி பாப்....
ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது.தனியாக வந்தால் சாப்பிடமுடியாது பக்கார்டியுடன் வந்திருந்தால் சாப்பிட்டு  இருக்கலாம் எனவும் தோன்றியது
               எண்ணையில் பொறிக்கிற மணம் நம் டேபிளுக்கு வருகிறது.சுவையாகத்தான் இருக்கிறது போலும் இன்னொரு நாள் வரலாம் என்று நாக்கை கட்டுப்படுத்திக்கொண்டு பிரியாணியை சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவினேன்.


                பிரியாணியின் மணம் மற்றும் சுவை சூப்பராக இருக்கிறது.தனித்தனி அரிசியுடன் மட்டன் கலந்து செமையாக இருக்கிறது.பீப் கறியும் நன்றாக வெந்து பஞ்சு போல் மென்மையாய் இருக்கிறது.உப்பும் உரைப்பும் நன்றாக இருக்கிறது,
மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கிறது சிவா ஹோட்டலின் லாலிபாப் மற்றும் பீப் பக்கோடா.
        அந்தப்பக்கம் போனீங்கன்னா போய் சாப்பிட்டு விட்டு வாங்க....சில்லி, பீப் பக்கோடா.. முதல் அத்தனை அயிட்டங்களும் இருக்கின்றன. 
சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்ட்லை விட்டு வெளியேறுகையில் திரும்பிப்பார்த்தேன்... இன்னொரு நாள் வரணும் என்கிற பார்வை அதில் இருந்தது.

இடம் : விருதம்பட்டு

நேசங்களுடன்
ஜீவானந்தம்



10 comments:

  1. //100% மெதுவானது// :)

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் தெரியுது....

      Delete
  2. அந்த ஸ்டால் பக்கம் வரும் போதெல்லாம் வேகமாக ஓடுவதுண்டு.. ஆனா அசைவ ப்ரியர்களுக்கு உங்க பதிவு விருந்துதான்.. எந்த ஊர்ல எங்க என்ன சாப்பிடலாம்னு கஷ்டப்பட்டு யோசிக்காம ஜீவாவோட வலைப்பக்கத்தை பார்த்தாலே போதும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.தாங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி...

      Delete
  3. வேலூர் வெயிலைத்தவிர இங்க சொல்லிக்கிற மாதிரி பொற்கோவிலும் வி.ஐ.டி பல்கலைக்கழகமும், சிம்.எம்.சி ஆஸ்பிட்டலும் புகழ் பெற்றது இதெல்லாம் பார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு முறை முயற்சிக்கிறேன்...தங்க கோவில் வேலூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் என்று போர்டு மட்டும் பார்த்தேன்.

      Delete
  4. அருமையான பதிவு. வாசனை படிக்கும் போதே அடிக்கிறது. மட்டன் என்று எழுதியிருக்கிறீர்கள், அதை கறி என்று எழுதலாம். ஏனெனில் மட்டன் என்பது ஆட்டுக் கறிக்கு மட்டுமே பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...இனி அவ்வாறே ஆகட்டும்..

      Delete
  5. எங்கும் காண முடியாத உஷா அன்பரசு அவர்களையே வரவழைத்து விட்டீர்களே...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...வணக்கம் தனபாலன்...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....