Saturday, April 2, 2016

கரம் - 21

பட்டர் காராஸ்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றாலே மைசூர்பா தான் ஞாபகத்திற்கு வரும்.கெட்டியா கல்லுமாதிரி கடிச்சு தின்னுகிட்டு இருந்த மைசூர்பாவை பார்த்தாலே கரையுறமாதிரி மாத்தின பெருமை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு உண்டு.
                      மைசூர்பா நெய் மணத்துடன் இளஞ்சூடாய் இருக்கும் போது கொஞ்சமாய் பிய்த்து எடுத்து வாயில் போட்டாலே போதும்.நாவின் சுவை நரம்புகள் அத்தனையும் உடனடி நிமிர்ந்து நின்று உமிழ்நீர் சுரந்து மைசூர்பாவை கரையச் செய்து அதன் மணத்துடனும் சுவையுடனும் தித்திப்பை தரும்.அவ்வளவு சுவை தரும் மைசூர்பா. இப்பொழுது அவர்களின் அடுத்த படைப்பாக பாக்கெட்களில் கார வகை உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

                             பட்டர் காராஸ் (BUTTER KARAS) என்கிற பெயரில் அவல் மிக்சர், பாம்பே மிக்சர்,பாதாம் மிக்சர், தேன்குழல், முள்ளு முறுக்கு, கடலை மிக்சர்,பெப்பர் சீடை, ஓட்டுபக்கோடா,காராசேவ், முறுக்கு ஸ்டிக்ஸ் போன்ற பத்து வகை கார உணவுகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.பாக்கெட் ஹன்சிகா மாதிரி கும்மென்று இருக்கிறது.டேஸ்டும் சூப்பராய் இருக்கிறது.பாக்கெட்டில் காற்று மட்டும் அதிகமாய் இருக்கிறது மிக்சரை விட.ஆனால் சுவை அதிகமாய் இருக்கிறது.

தனி பாக்கெட்விலை பத்து ரூபாய்.அனைத்தும் சேர்ந்து ஒரு கார காம்போ ரூபாய் 100 என விற்கின்றனர்.
நம்ம பங்காளிகளுக்கு ஸ்நேக்ஸ் அயிட்டத்திற்கு இந்த ஒரு பண்டல் வாங்கினால் போதும்.செமயா பிச்சிக்கும்...
                         ********************************************

சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20
                      30 வருஷம் முன்னாடி எங்க ஊர்ல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு குருவிக்காரர் வருவார்.மூங்கிலால் பின்னப்பட்ட ஒரு கூண்டை வண்டியில் வச்சு கட்டிக்கொண்டு வருவார்.அந்த குருவி கூண்டு வட்டவடிவத்துல 3 அடி விட்டத்துல ஒரு அடி உயரத்துல இருக்கும்.ஒரு கை போற அளவுக்கு திறப்பு இருக்கும்.எங்க ஊர் முச்சந்தியில் ஒரு ஓரமான இடத்துல கூண்டோட உட்காரும் போது அவரைச்சுத்தி எங்க ஊர்க்காரங்க கூடிடுவாங்க.விலையை கேட்பாங்க.டஜன் பத்தோ இருவதோ சொல்லுவாரு. ஆளாளுக்கு டஜன் கணக்குல சொன்னவுடன், கூண்டின் ஓட்டைக்குள் கைவிட்டு அள்ளுவாரு.கை நிறைய சிட்டுக்குருவிகள் இருக்கும்.ஓங்கி தரையில ஒரே அடி.எல்லாம் செத்துடும்.ஏதோ அதிர்ஷ்டம் இருக்குறது பறந்து போயிடும்.
                                           ஒவ்வொரு குருவியா எடுத்து கருப்பா இருக்கிற அலகை அரிவாளால் அரிஞ்சு போடுவார்.அவர் கால் பெருவிரலுக்குள் லாவகமா அரிவாளோட பிடியை வச்சிருப்பாரு.அதுல ஒரே அரி.அவ்ளோதான்.அப்புறம் இறக்கையோடு தோலை ஒரு இழுப்பு இழுப்பாரு.வழுக்கிகிட்டு வரும் சிட்டுக்குருவி உடல்.வயிற்றை ஒரு பிதுக்கு பிதுக்கினா குடல் வந்துடும்.அவ்ளோ தான் கிளினீங் முடிஞ்சது.அப்போலாம் பாலீத்தின் பை இல்ல.கொண்டுட்டு வந்த பாத்திரத்துல வாங்கிட்டு போவோம்.
                                வீட்டுல எங்க அம்மா மசாலாவை நல்லா அம்மில அரைச்சு சிட்டுக்குருவியை பதமா வேகவச்சி தேங்காய் அரைச்சி ஊத்தி நல்லா வதக்கி வறுவலா தருவாங்க...ஒண்ணை எடுத்து வாயில போட்டா அம்புட்டு டேஸ்டா இருக்கும்.மொறு மொறுன்னு எலும்பு வாயில அரைபடும்.சதையும் மசாலாவோட இருக்கிறதால் பஞ்சு மாதிரி சுவையா உள்ளே போகும்.குருவி தலை அம்புட்டு டேஸ்டா இருக்கும்.வீட்டுல இருக்கிற எண்ணிக்கையை பொறுத்து ஆளுக்கு இத்தனை குருவின்னு வாங்கி செஞ்சு பிரிச்சு குடுத்துடுவாங்க.ஒவ்வொண்ணா சாப்பிட்டுகிட்டே கையை நக்கிட்டு இருப்போம்.அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

                                     வயல்வெளிகள் அப்போ அதிகமா இருந்துச்சு.நெல்லு கம்பு சோளம்னு எங்க பார்த்தாலும் தானியப்பயிர்களா இருந்துச்சு.மரங்கள் நிறைய இருந்துச்சு.அதனால சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் அதிகமா இருந்துச்சு.நாங்களும் வாரா வாரம் டஜன் கணக்குல சாப்பிட்டுகிட்டு இருந்தோம்.
வருசம் ஆக ஆக வயல்வெளிகள் கான்கிரீட் காடுகள் ஆகிடுச்சு.மரங்கள் இல்ல.விவசாயம் இல்ல.புதுசா செல்போன் டவர் வந்ததினால் குருவிகள் அழிஞ்சு போச்சு.இனப்பெருக்கம் எதுவும் இல்ல.அதனால அரிய வகையில் சேர்ந்துவிட்டது.
இப்போ புதுசா சிட்டுக்குருவி வளர்ப்போம்னுட்டு ஒரு பிஸினஸா ஆக்கி ஒரு சில பேரு கிளம்பிட்டாங்க...விவசாய நிலங்களை அழிக்காமல் இருந்தால் சிட்டுக்குருவி ஒரு அபூர்வ பறவை ஆகி இருக்காது...

இனி இருக்குற ஒண்ணு ரெண்டு சிட்டுக்குருவிகளை சாப்பிடாம பாதுகாப்போம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. பங்காளி... இருக்குற எல்லா குருவியயும் அடிச்சு ஏப்பம் விட்டுட்டு இப்ப ஊருக்கு உபதேசம் பண்டிரீங்களே... உங்களுக்கே நியாயமா பங்காளி..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....