Monday, August 7, 2017

கோவை மெஸ் - ஹைதராபாத் உணவுகள் – ஒரு பார்வை - பகுதி 2


மசாலா தோசை
ஹைதராபாத்தில் எங்கு திரும்பினாலும் சாலை ஓர கடைகளே..பானி பூரி முதல் தோசைக்கடை வரை நிறைய இருக்கின்றன.ஹைதையின் இன்னுமொரு சிறப்பு வாய்ந்த உணவு மசாலா தோசை.பெரும்பாலான கடைகளில் இந்த மசாலா தோசைக்கென்றே கூட்டம் கூடுகிறது. சூடான கல்லில், தோசை மாவினை ஊற்றி, அதில் ரவா கிச்சடியை வைத்து பின் ஒரு வித தக்காளி சட்னி ஊற்றி, பொடியாய் நறுக்கப்பட்ட வெங்காயத்தினை தூவி பின் தோசையில் அனைத்தும் தடவி பின் உருளைக்கிழங்கு மசாலா போட்டு அதையும் தடவி பின் பொடி போட்டு  அவ்வப்போது நெய் ஊற்றி, தோசையை முறுகலாய் பொன்னிறமாய் திருப்பி மடித்து,  அதை இரண்டாய் கட் பண்ணி சுடச்சுடச் தட்டில் வைத்து தருகின்றனர்.அதனுடன் தேங்காய் சட்னியும், தக்காளி சட்னியும் ஊற்றி தருகின்றன.சூடான தோசையை ஒரு விள்ளல் பிய்த்து தேங்காய் சட்னியில் கொஞ்சமாய் நனைத்து வாயில் போட்டால் அதன் சுவை அப்படியே அள்ளுகிறது.நாவின் நரம்புகள் புதுவித சுவையை உணர்ந்த சந்தோசம் நம் முகத்தில் தெரிகிறது.தோசையின் முறுகலும், உள்ளே தடவப்பட்ட மசாலாவும் மிகுந்த மணத்தினையும் சுவையையும் தருகிறது.சட்னியின் சுவையோடு தோசையும் இணைந்து இரண்டும் செம காம்பினேஷனை தருகிறது.


ஹைதராபாத் போனால் இந்த மசாலா தோசையை மறந்து விடாதீர்கள்.இரவு நேரக்கடைகளிலும், காலை கையேந்திபவன்களிலும் சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள்.அதன் சுவையை உணர்வீர்கள்...

ஜுன்னு ( JUNNU ) - பால் புட்டிங்  
பாலில் செய்யக்கூடிய ஒரு உணவுப்பொருள் இந்த ஜுன்னு எனப்படும் பால் புட்டிங்.கன்னடாவில் ஜுன்னு எனவும், வட இந்தியாவில் கார்வாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.ஹைதையில் இந்த உணவுப்பொருளும் பிரசித்தம். ஹைதையில் மனிகொண்டா என்கிற இடத்தில் இந்த ஜுன்னுவை வாங்கி சாப்பிட்டேன்.பாலில் மிளகு ஏலக்காய், வெல்லம் போட்டு நன்கு வேகவைக்கப்பட்டு மென்மையாய் சுவைபட செய்யப்பட்டிருக்கும் இந்த ஜுன்னு சாப்பிட நல்ல சுவையை தந்தது.சீம்பாலின் சுவை இதில் இல்லை.ஆனாலும் மிக நன்றாக இருக்கிறது.மேலே தூவப்பட்டிருக்கும் ஏலக்காயின் மறுமணத்துடன் வெல்லத்தின் சுவையுடனும், மிளகின் காரத்துடனும் ஒரு வித சுவையைத்  தருகிறது.


தெலுங்கானா சிக்கன்
பிரியாணிக்கு அடுத்தபடியாய் அசைவங்களில் அதிகம் இடம்பிடிப்பது தெலுங்கானா சிக்கன் தான்.ஏற்கனவே ஆந்திரா என்றால் காரம்.இந்த சிக்கன் காரமோ காரம்.செம...ஒவ்வொரு சிக்கன் துண்டுகளும் நன்றாய் மசாலாவில் பிரட்டப்பட்டு  நன்கு வேகவைக்கப்பட்டிருப்பதால் சுவை சூப்பராய் இருக்கிறது.
சைட் டிஷ் க்கு ஏற்ற செம காம்பினேசன்.இதை ருசிக்க ருசிக்க ஒவ்வொரு பெக்கின் எண்ணிக்கை கூடுவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவையை இதனோடு ரசிக்க வைக்கிறது.நாவிற்கு சுருக் கென்று இதன் காரம் இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்க்கிறது.
ஹைதராபாத் போனீங்கன்னா இதையும் மறந்திடாதீங்க...செம டேஸ்ட்.. நல்ல ருசி...நல்ல மணம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....