Saturday, March 25, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் ஜலால் ஃபேமிலி ரெஸ்டாரண்ட், மட்டன் பிரியாணி, கருங்கல், நாகர்கோவில்

               கேரளா சென்றுவிட்டு தமிழ்நாட்டுக்குள் களியக்காவிளை வழியாக உள்நுழைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக நாகர்கோவில் சென்றுகொண்டிருக்கும் போது தான் குழித்துறை அருகில் தேங்காய்பட்டிணம் என்கிற ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி துறைமுகத்தினை பார்த்துவிட்டு வருகையில் மதியம் ஆகி இருக்க, அங்கேயே புதுக்கடை என்கிற இடத்தில் ஒரு ஹோட்டலில் பிரியாணி நன்றாக இருக்கும் என சொல்ல, அருகிலிருந்த உள்ளூர்க்கார நண்பர் கருங்கல் என்கிற ஊரில் பிரியாணி நன்றாக இருக்கும் அங்கே செல்லுங்கள் என வழியனுப்பி வைத்தார்.

              புதுக்கடையில் இருந்து ஒரு பத்து நிமிட பயணத்தில் கருங்கல் என்கிற ஊரை அடைந்தோம்.சின்ன ஊர்தான்.நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையம் அருகில் இந்த ஹோட்டலைக் கண்டோம்.முகப்பில் ஒரு சின்ன ஸ்வீட் ஸ்டால் போல இருக்கிறது.ஆனால் கடைக்கு உள்ளே நுழைந்தால் மிக நீண்டு பரந்து இருக்கிறது. யூனிபார்ம் போட்ட சர்வர்கள் நிறைய பேர்கள் இருக்க, ஒவ்வொரு டேபிளிலும் குடும்பம் குடும்பமாய் நிறைந்திருந்தனர்.இண்டீரியர் மிக மெலிதாய் கண்ணை கவரும் வகையில் இருக்க, ஒருபுறத்தில் பிரியாணி அண்டாக்கள் சுடச்சுட இருக்க, அதிலிருந்து ஆவிபறக்க சூடாய் பிரியாணியை தட்டுக்களில் நிரப்பி டேபிளுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
நாங்கள் உள்நுழைந்ததும் வரவேற்ற சர்வர் டேபிளில் அமரவைத்து ஆர்டரை கேட்க, இங்கு என்ன ஸ்பெசலோ அதை கொண்டு வாருங்கள் என சொல்ல, பிரியாணியில் சிக்கன், மட்டன் இருக்கிறது, எது வேண்டும் என கேட்க, மட்டனை சொன்னோம்.

மட்டன் பிரியாணி பின்னே வர மணம் முன்னே வந்து ஆளைத்தூக்கியது.கூடவே மட்டன் கிரேவியும் சில பல துண்டுகளுடன் வந்தது.கேரள தமிழ்நாடு கூட்டு பிரியாணிபோல் வெள்ளை நிற பாசிமதி அரிசியுடன், கொஞ்சம் பொரித்த வெங்காயம் துண்டுகள் மேலே பரவியும், ஓரிரு கலர்களுடன் பாசுமதி அரிசி மணம் மிகுந்து இருக்க, அவித்த முட்டை ஒன்றும் பிரியாணியில் ஒளிந்திருக்க, பிரியாணியின் மத்தியில் மறைந்திருந்த மட்டன் துண்டுகள் எங்கள் கைவிரல்களை எதிர்பார்த்து காத்திருக்க, மணம் நாசியை துளைக்க, நாவின் சுவை மொட்டுகள் விரிய ஆரம்பித்தன.
நாங்கள் எங்கள் வேட்டையை தொடர ஆரம்பித்தோம்.கொஞ்சம் விள்ளல் எடுத்து வாயில் போட, அப்படியே பிரியாணியின் மணம் சுவை நம்மை ஆட்கொண்டது.கைகளில் அதன் மணம் ஏற ஆரம்பித்தது.நாவின் சுவை நரம்புகள் நாட்டியம் ஆட ஆரம்பித்தது.ஐநா சபையில் ஆடிய ஐஸ்வர்யா வின் நடனம் போல் இல்லாமல் மேடை முழுக்க பரவி ஆடும் நம்ம ஊர் குத்தாட்டம் போல் ஆடத்துவங்கின.


               பஞ்சு போல் வெந்திருந்த மட்டன் துண்டுகள் இன்னும் சுவையை கூட்டி நாவின் நரம்புகளின் ஆட்டத்தினை உசுப்பேத்தியது.
கைகளில் மட்டன் சுவையின் மணமும், பிரியாணியின் மசாலா மணமும் மிகவும் ஏறி இருந்தது.பரபரவென கையும் வாயும் இயங்க, தட்டிலிருந்த பிரியாணி மளமளவென காலியாகிக் கொண்டிருந்தது.அவ்வப்போது பிரியாணியின் இலவச இணைப்பாய் வந்த மட்டன் கிரேவி, கொழுப்பு மிகுந்த கறியுடன் நன்கு சுவையாய் இருக்க, அதுவும் ஒரு சேர காலியாகிக் கொண்டிருந்தது.

கை கழுவிய பின்னரும், கைகளில் வாசம் இருக்க, சுவையான பிரியாணியை சுவைத்த திருப்தி ஏற்பட்டது.
குடும்பம் குடும்பமாய் மக்கள் உள்ளே நுழைவதும், திருப்தியாய் உண்ட பின் வெளியேறுவதும் இயல்பாய் நடந்து கொண்டிருந்தது.
ஞாயிறு ஆதலால் செம கூட்டம் வேறு.பக்கத்திலுள்ள ஊர்க்காரர்கள் சமைக்க மாட்டார்கள் போல, மலையாளம் கலந்த தமிழில் சம்சாரித்தபடியே குடும்பம் குடும்பமாய் வந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் திருப்தியாய் உண்டு முடித்து பில்லை செட்டில் செய்து விட்டு மனதிருப்தியுடன் வெளியேறினோம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்







இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 21, 2017

கரம் - 27

பார்த்த படங்கள்:
புலிமுருகன்: காட்டில் வாழும் மனிதர்களை கொல்லும் புலியை, மக்களுக்காக புலியை கொல்லும் ஒருவனின் கதை.இடையிடையே ஹீரோவின் கஞ்சா கடத்தல், சந்தன மரம் கடத்தல் என ஹீரோயிச காட்சிகள்.இதனிடையே கடத்தல் மாஃபியாவுடன் பகை, போலீஸ் துரத்தல், வில்லன் புலிமுருகனை தேடுவது, புலிமுருகனின் காதல், ஊடல் கூடல், செண்டிமெண்ட், என பக்கா கமர்சியல் படம்.எப்பவும் போல கம்பிளீட் ஆக்டர் மோகன்லால் ஸ்மார்ட்.புலி வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது.படம் பார்த்ததில் இருந்து புலிமுருகனின் தீம் சாங்க் முருகா...முருகா...புலிமுருகா முணுமுணுக்க வைக்கிறது.
  
அச்சமின்றி :
மிகவும் சுவாரஸ்யமான படம்.விறுவிறுப்பான காட்சிகளுடன் மிகவும் நன்றாகவே இருக்கிறது.கல்விக்கொள்ளை பற்றி பேசும் படம்.காமெடி, ஆக்சன் என நன்றாகவே இருக்கிறது.விஜய் வசந்த் பிக்பாக்கெட் காரனாக வாழ்ந்திருக்கிறார்.சமுத்திரகனி போலீஸாக வருகிறார்.படம் மிகவும் அருமை...

துருவங்கள் பதினாறு :
செம கிரைம் திரில்லர் படம்.பார்க்க பார்க்க வியப்பூட்டும் திருப்பங்களை தந்து கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு காட்சியும் அபாரம்.சலிப்பு தராத மேக்கிங்.பாடல்கள் இல்லாத மிக நேர்த்தியான விறுவிறுப்பான அற்புத படைப்பு. ரகுமானின் பெயர் பொறித்து வைக்க வேண்டிய படம்.


படித்தது :
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்..
கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத எழுத்து நடை.பழங்குடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம் என நினைத்தால் அது சுத்த வேஸ்ட்.கட்டுரைத் தொகுப்பு போல் இருக்கிறது.புத்தகத்தினை படிக்கவே அலுப்பாக இருக்கிறது.பத்துப்பக்கங்கள், அப்புறம் இடையிடையே கொஞ்சம் புரட்டல் அவ்வளவுதான்.எடுத்து வைத்து விட்டேன்.இந்த புத்தகத்தினை ரிட்டன் அனுப்புவது குறித்து யோசிக்கனும்.
இதை எப்படி காலச்சுவடு கிளாசிக் வாழ்க்கை வரலாறு கேட்டகிரியில் சேர்த்தது என்று தெரியவில்லை. காசுக்கு கேடு, பகார்டி வாங்கி இருக்கலாம். மனமாவது சந்தோசம் அடைந்திருக்கும்.




இன்னும் கொஞ்சம்...

Friday, March 17, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை - 1

                திருவனந்தபுரத்தில் காலை டிபனை முடித்துவிட்டு நாகர்கோவில் மதுரை வழியாய் கோவை செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம்.கேரளத்தலைநகரின் சட்டசபையை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் சாலைகளில் சேச்சிகளின் வரவு அதிகமாக இருந்தது. காலை நேரம் சர்ச்க்கு செல்லும் கேரள அம்மணிகள், ஷாப்பிங் சென்டரில் பணிக்கு ஒரே யூனிபார்மில் செல்லும் அம்மணிகளையும் கண்டு ரசித்தபடி கிளம்பினோம்.
                       அன்றைய தினம் கறி தினம் ஆதலால் நிறைய மாட்டிறைச்சிக்கடைகள் வழியெங்கும் கும்பல்களால் நிறைந்திருந்தது.பெரும் பெரும் மாட்டுச் சப்பைகள் தொங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்..... அரைக்கிலோ மீட்டருக்கு ஒரு மாட்டிறைச்சிக்கடை இருக்கிறது.
                  ஆட்டிறைச்சிக்கடை மிக சொற்பமாகவே காணப்படுகிறது இந்த கேரளத்தலைநகரில்.கடல் அருகில் இருந்தாலும் மீன் கடைகள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை.ஆலப்புழாவில் இரவு நேரத்தில் கண்டது.அதற்கப்புறம் எங்கேயும் மீன் கடைகளையே காணவில்லை.
செல்லும் வழிகளில் ஆங்காங்கே கள்ளுக்கடைகள் நிறைய திறந்து இருக்கின்றன.கடமை கண்ணுக்கு  நேரே தெரிந்ததால் கள்ளினை ருசிக்க முடியாமல் பயணித்தோம்.
                          செல்லும் வழியில் ஏதோ ஒரு இடத்தில் செம கூட்டம்.அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் நம் பங்காளிகள் என்று.கேரள  ஸ்டேட் பெவரேஜ் கடை முன்புதான் இவ்ளோ கூட்டம்.ஒரு மணி நேரப்பயணத்தில் களியக்காவிளை என்கிற ஊரை அடைந்தோம்.தமிழ்நாட்டு பார்டரும், கேரள பார்டரும் இணைகிற ஊர்.ஒரே ஒரு ரோடு.ரோட்டுக்கு இந்தப்பக்கம் கேரளா அந்தப்பக்கம் தமிழ்நாடு.கேரள பக்கம் நிறைய லாட்டரி சீட்டுக்கடைகள்.அங்கு ஒரு இடத்தில் நமது டாஸ்மாக் கடையும், கேரள கடையும் எதிர் எதிர் இருக்கின்றன.நமது கடை காத்து வாங்குகிறது.ஆனால் கேரள கடையோ நம்மாட்களால் நிரம்பி வழிகிறது.
                  களியக்காவிளை தாண்டி குழித்துறை அடைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லலாம் என நினைக்கையில், தேங்காய்ப்பட்டிணம் அருகில் இருக்கிறது, மீன்பிடி துறைமுகம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என அங்கிருக்கும் நமது நண்பர் ஒருவர் சொல்லவும், அங்கு கிளம்பினோம்.
புதுக்கடை என்கிற ஊரை அடைந்து கடலை அடைந்தோம்.இப்பொழுதுதான் பணி நடந்து கொண்டிருக்கிறது,ஞாயிறு ஆதலால் அங்கு மீன் விற்பனை இல்லை.கடலில் இரு மீன்பிடி போட்கள் நின்று கொண்டிருந்தன.கடலை ஆழப்படுத்தும் ஒரு போட் வேறு நின்று கொண்டிருந்தது.ஒரு சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.



                 கடல் பார்க்க மிக அழகாய் நீலநிறத்தில் இருக்க, வானமும் அதில் செல்லும் மேகமும் ஒரு அழகை உண்டாக்கி இருந்தன.கடலின் நீர் மிகத்தெளிவாய் கிரிஸ்ட்ல் கிளியர் போல் இருக்கிறது.
                      வானமும் கடலும் சேர்ந்த இடம் மிக அழகு.இந்த தேங்காய்ப்பட்டிணம் அருகில் இன்னொரு இடமான குளச்சல் என்கிற இடத்திலும் மீன்பிடி துறைமுகம் வேலை நடைபெற்று வருகிறது.மணற்பாங்கான இடம் இப்போது கான்கிரீட் கற்களால் நிறைந்திருக்கிறது.
                   சில மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி இருந்துவிட்டு பின் அங்கிருந்து கிளம்பினோம்.மதியம் ஆகிவிட்டதால் அருகில் உள்ள ஒரு ஊரில் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.
                                 அங்கிருந்து நேராய் நாகர்கோவில் அடைந்தோம்.நாகர் கோவிலில் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினோம்.திருநெல்வேலி வந்தபோது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.அவ்வூரின் புகழ்பெற்ற இருட்டுக்கடை இன்னும் திறக்காத காரணத்தில் அங்கு எதுவும் வாங்க முடியவில்லை.அங்கிருந்து மதுரைக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் கிளம்ப ஆரம்பித்தோம்.கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடமாக கயத்தாறு அடைந்த போது மழை தூற ஆரம்பித்தது.அங்கிருந்து கோவில்பட்டி சாத்தூர், விருதுநகர் வரை பைபாஸ் ரோட்டில் மழை ஒரு காட்டு காட்டியது.
                    மிக கனத்த மழையில் வண்டியில் விரைந்தபடியே வந்தோம்.அதற்கப்புறம் மதுரை வரை மழையே இல்லை.மதுரை வந்தடைந்த பின் மிக லேசாக தூறல் போட்டது வானம்.
                           மதுரையில் பிரேமாவிலாஸ் அல்வா நன்றாக இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.அந்த நேரத்திலும் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சிலர் சுடச்சுட அல்வாவினை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
திருநெல்வேலியில் வாங்காமல் விட்ட அல்வாவினை இங்கு வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
                       இரவு நேர உணவை மதுரை நண்பருடன் முடித்துவிட்டு இரவு நேரம் கோவை வந்தடைந்தோம்.பயணம் எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்தப்பயணமும் அப்படித்தான் குறுகிய காலம் தான்.வழி நெடுக புதுப்புது மனிதர்கள், இடங்கள், உணவுகள் என அனைத்தையும் ரசித்ததால் மனமும் கொஞ்சம் இலகுவாகி நம்மை லேசாக்குகிறது.இயற்கையும் பயணமும் எப்போதும் நம்மை மகிழ்விக்க கூடியவை தான்.இந்தப் பயணமும் அப்படித்தான்.1030 கிலோமீட்டர் தொலைவினை ஒரு நாள் முழுக்க பயணம் செய்து கடந்தாலும் அலுப்பு என்பதே இல்லை.அதுதான் பயணத்தின் சிறப்பு.

முந்தைய பதிவு

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Friday, March 10, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை

                               ஒரு வேலை விஷயமாக கேரளா வரை செல்ல வேண்டியிருந்தது.காலை பத்து மணிக்கு மேல் முன்னறிவிப்பின்றி கிளம்பினோம்.கோவையில் இருந்து பாலக்காடு வரை பைபாஸ் ரோடு நன்றாக இருக்கிறது.ஒரு சில இடங்களில் இன்னமும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.பாலக்காடு தாண்டி திருச்சூர் வரை இருக்கிற மலையெல்லாம் உடைத்தும் குடைந்தும் சாலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது.இருமருங்கிலும் வறட்சியை தாங்கி மரங்கள் இருக்க, வெயிலோ பயங்கரமாய் அடித்தது.முன்பெல்லாம் கேரளா செல்லும் போது மிக பசுமையாய் இருக்கும்.பார்க்க குளிர்ச்சியாய் இருக்கும்.ஆனால் அன்றோ வெறும் வறட்சி..மழை வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக இருந்தன.
                                வடக்கன்சேரி என்கிற ஊர் கொஞ்சம் மலைப்பாதையான ஊர்.அதிகம் டிராபிக் அந்த ஏரியாவில் ஏற்படும்.குதிரைவீரன் சாமி என்கிற கோவில் செல்லும் பாதையிலேயே இருக்கிறது.வாகனங்களில் செல்பவர்கள் காசை விட்டெறிந்து விட்டு செல்வார்கள் அந்த இடத்தில்.அதை பொறுக்குவதற்கென்றே ஒரு சில பேர் அங்கு இருப்பார்கள்.

                                 அந்த கோவிலை ஒட்டி இருபுறமும் மலைகளில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும்.மிக ரம்மியமாக இருக்கும் பார்க்க.ஆனால் இன்றோ மலைகள் உடைக்கப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்து இருப்பதில் அந்த கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது.கோவிலைச்சுற்றி சாலை வேலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அரைகுறையாக நாங்களும் குதிரை வீரன் சாமியை வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
                                        திருச்சூர் தாண்டி மண்ணுத்தி என்கிற ஊரை அடைந்தவுடன் தூறல் ஆரம்பித்தது.கடும் வெயிலில் வந்த எங்களுக்கு மிக ரம்மியமாய் இருந்தது திடீர் மழை.அங்கு ஆரம்பித்த மழை கொச்சின், கொல்லம் வரை நீண்டது.கொச்சினில் மழையோடு கேரள அம்மணிகளையும் ரசிக்க வைத்தது  அங்கிருந்த சீதோஷ்ணநிலை.
                        கொச்சினில் இருந்து ஆலப்புழா வரை மழையோடு நாங்களும் பயணித்தோம்.அவ்வப்போது ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டோம்.கொல்லம் வரும்வரை ஒவ்வொரு ஊரிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
திருவிழாக்களில் கேரள ஸ்பெஷல் உடுப்பான கேரளா சாரியை கட்டிக்கொண்டு தேவதைகளாய் கைகளில் விளக்கு தீபத்தினை ஏந்திக்கொண்டு அம்மணிகள் வலம் வந்தது மனதோடு ஒரு மகிழ்வினை ஏற்படுத்தி இருந்தது.யானைகள் வேறு அம்பாரி சுமந்தபடி வரிசையாய் வந்துகொண்டிருந்தன.


கொல்லத்தில் கருநாகப்பள்ளி என்கிற ஊரில் இரவு உணவை ஆரம்பித்தோம்.அரிபத்திரி, சிக்கன் தந்தூரி, பீஃப் ஃப்ரை யுடனும் மேற்படியுடனும் இனிதாய் கழிந்தது.


                கொல்லத்தில் இரவு முழுக்க மழை பெய்து கேரளாவை குளிர வைத்தது.சனி இரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை திருவனந்தபுரம் அடைந்தோம்.

(இன்னும் கொஞ்சம் வரும்)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...