Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Wednesday, January 8, 2020

பயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா

              கோவை நகரம் மலைகள் நிறைந்த ஒரு மாநகரம்.கடலும் கடற்கரையும் தவிர மற்ற நீர் நிலைகளான வாய்க்கால், குளம், ஆறு, அருவி என அனைத்தும் இருக்கிற ஊரும் கூட.கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள கடல், கடற்கரைக்கு செல்வது என்பது வெகு தொலைவில் இருக்கும் உலகின் நீளமான இரண்டாம் கடற்கரையான மெரினா பீச் இருக்கும் சென்னை, கடைக்கோடியின்  கன்னியாகுமரி மற்றும் வேளாங்கன்னி இப்படி தூரம் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் மிக அருகில் உள்ள கடற்பகுதி எதுவென்றால் கேரளாவின் அரபிக்கடல் தான்.



           திருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம்.திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது.

               திருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.
                   இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.
                      கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.




கேரளாவின் பிரசித்தி பரோட்டாவும் பீஃப்கறியும் தான்.சுவைக்க சுவைக்க நாவூறும்..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்          


இன்னும் கொஞ்சம்...

Friday, March 17, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை - 1

                திருவனந்தபுரத்தில் காலை டிபனை முடித்துவிட்டு நாகர்கோவில் மதுரை வழியாய் கோவை செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம்.கேரளத்தலைநகரின் சட்டசபையை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் சாலைகளில் சேச்சிகளின் வரவு அதிகமாக இருந்தது. காலை நேரம் சர்ச்க்கு செல்லும் கேரள அம்மணிகள், ஷாப்பிங் சென்டரில் பணிக்கு ஒரே யூனிபார்மில் செல்லும் அம்மணிகளையும் கண்டு ரசித்தபடி கிளம்பினோம்.
                       அன்றைய தினம் கறி தினம் ஆதலால் நிறைய மாட்டிறைச்சிக்கடைகள் வழியெங்கும் கும்பல்களால் நிறைந்திருந்தது.பெரும் பெரும் மாட்டுச் சப்பைகள் தொங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்..... அரைக்கிலோ மீட்டருக்கு ஒரு மாட்டிறைச்சிக்கடை இருக்கிறது.
                  ஆட்டிறைச்சிக்கடை மிக சொற்பமாகவே காணப்படுகிறது இந்த கேரளத்தலைநகரில்.கடல் அருகில் இருந்தாலும் மீன் கடைகள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை.ஆலப்புழாவில் இரவு நேரத்தில் கண்டது.அதற்கப்புறம் எங்கேயும் மீன் கடைகளையே காணவில்லை.
செல்லும் வழிகளில் ஆங்காங்கே கள்ளுக்கடைகள் நிறைய திறந்து இருக்கின்றன.கடமை கண்ணுக்கு  நேரே தெரிந்ததால் கள்ளினை ருசிக்க முடியாமல் பயணித்தோம்.
                          செல்லும் வழியில் ஏதோ ஒரு இடத்தில் செம கூட்டம்.அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் நம் பங்காளிகள் என்று.கேரள  ஸ்டேட் பெவரேஜ் கடை முன்புதான் இவ்ளோ கூட்டம்.ஒரு மணி நேரப்பயணத்தில் களியக்காவிளை என்கிற ஊரை அடைந்தோம்.தமிழ்நாட்டு பார்டரும், கேரள பார்டரும் இணைகிற ஊர்.ஒரே ஒரு ரோடு.ரோட்டுக்கு இந்தப்பக்கம் கேரளா அந்தப்பக்கம் தமிழ்நாடு.கேரள பக்கம் நிறைய லாட்டரி சீட்டுக்கடைகள்.அங்கு ஒரு இடத்தில் நமது டாஸ்மாக் கடையும், கேரள கடையும் எதிர் எதிர் இருக்கின்றன.நமது கடை காத்து வாங்குகிறது.ஆனால் கேரள கடையோ நம்மாட்களால் நிரம்பி வழிகிறது.
                  களியக்காவிளை தாண்டி குழித்துறை அடைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லலாம் என நினைக்கையில், தேங்காய்ப்பட்டிணம் அருகில் இருக்கிறது, மீன்பிடி துறைமுகம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என அங்கிருக்கும் நமது நண்பர் ஒருவர் சொல்லவும், அங்கு கிளம்பினோம்.
புதுக்கடை என்கிற ஊரை அடைந்து கடலை அடைந்தோம்.இப்பொழுதுதான் பணி நடந்து கொண்டிருக்கிறது,ஞாயிறு ஆதலால் அங்கு மீன் விற்பனை இல்லை.கடலில் இரு மீன்பிடி போட்கள் நின்று கொண்டிருந்தன.கடலை ஆழப்படுத்தும் ஒரு போட் வேறு நின்று கொண்டிருந்தது.ஒரு சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.



                 கடல் பார்க்க மிக அழகாய் நீலநிறத்தில் இருக்க, வானமும் அதில் செல்லும் மேகமும் ஒரு அழகை உண்டாக்கி இருந்தன.கடலின் நீர் மிகத்தெளிவாய் கிரிஸ்ட்ல் கிளியர் போல் இருக்கிறது.
                      வானமும் கடலும் சேர்ந்த இடம் மிக அழகு.இந்த தேங்காய்ப்பட்டிணம் அருகில் இன்னொரு இடமான குளச்சல் என்கிற இடத்திலும் மீன்பிடி துறைமுகம் வேலை நடைபெற்று வருகிறது.மணற்பாங்கான இடம் இப்போது கான்கிரீட் கற்களால் நிறைந்திருக்கிறது.
                   சில மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி இருந்துவிட்டு பின் அங்கிருந்து கிளம்பினோம்.மதியம் ஆகிவிட்டதால் அருகில் உள்ள ஒரு ஊரில் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.
                                 அங்கிருந்து நேராய் நாகர்கோவில் அடைந்தோம்.நாகர் கோவிலில் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினோம்.திருநெல்வேலி வந்தபோது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.அவ்வூரின் புகழ்பெற்ற இருட்டுக்கடை இன்னும் திறக்காத காரணத்தில் அங்கு எதுவும் வாங்க முடியவில்லை.அங்கிருந்து மதுரைக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் கிளம்ப ஆரம்பித்தோம்.கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடமாக கயத்தாறு அடைந்த போது மழை தூற ஆரம்பித்தது.அங்கிருந்து கோவில்பட்டி சாத்தூர், விருதுநகர் வரை பைபாஸ் ரோட்டில் மழை ஒரு காட்டு காட்டியது.
                    மிக கனத்த மழையில் வண்டியில் விரைந்தபடியே வந்தோம்.அதற்கப்புறம் மதுரை வரை மழையே இல்லை.மதுரை வந்தடைந்த பின் மிக லேசாக தூறல் போட்டது வானம்.
                           மதுரையில் பிரேமாவிலாஸ் அல்வா நன்றாக இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.அந்த நேரத்திலும் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சிலர் சுடச்சுட அல்வாவினை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
திருநெல்வேலியில் வாங்காமல் விட்ட அல்வாவினை இங்கு வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
                       இரவு நேர உணவை மதுரை நண்பருடன் முடித்துவிட்டு இரவு நேரம் கோவை வந்தடைந்தோம்.பயணம் எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்தப்பயணமும் அப்படித்தான் குறுகிய காலம் தான்.வழி நெடுக புதுப்புது மனிதர்கள், இடங்கள், உணவுகள் என அனைத்தையும் ரசித்ததால் மனமும் கொஞ்சம் இலகுவாகி நம்மை லேசாக்குகிறது.இயற்கையும் பயணமும் எப்போதும் நம்மை மகிழ்விக்க கூடியவை தான்.இந்தப் பயணமும் அப்படித்தான்.1030 கிலோமீட்டர் தொலைவினை ஒரு நாள் முழுக்க பயணம் செய்து கடந்தாலும் அலுப்பு என்பதே இல்லை.அதுதான் பயணத்தின் சிறப்பு.

முந்தைய பதிவு

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 2, 2014

கோவையின் பிரபல இடங்கள் - சுற்றுலா

          கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.தொழில்வளர்ச்சி அடைந்த நகரம்.(இப்போ அப்படியான்னு தெரியல..ஏகப்பட்ட பஞ்சாலை மில்கள் மூடப்பட்டு அபார்ட்மெண்ட்களாகிவிட்டன.மோட்டார் தொழில்களும் நசிவடைந்து போய்விட்டிருக்கின்றன.கோவை முழுக்க கான்கிரீட் காடுகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன பசுமை மறந்து.)
கோவை என்றாலே சிறுவாணி தண்ணீரும் சில்லென்ற தென்றலும் தான் ஞாபகத்திற்கு வரும்.மேற்குத்தொடர்ச்சி மலைகளினால் வருகின்ற மிதமான குளிர்ச்சி எப்பவும் கோவையில் குடிகொண்டிருக்கும். கோவில்களும், மலைகளும், அணைகளும் மற்றும் பூங்காக்களும் நிறைந்த ஊராகும்.ஒரு நாள் சுற்றுலா போக ஏற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.அப்படிப்பட்ட கோவையில் இருக்கிற பிரபல இடங்களைப்பார்ப்போம்.
கோவில்கள்:
மருதமலை முருகன் கோவில்:
       கோவையின் மிக அருகில் இருக்கின்ற ஒரு பிரபல மலைக்கோவில் மருதமலை.முருகனின் ஏழாவது படைவீடாகும். மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்தக்கோவிலில் முருகன் குடிகொண்டுள்ளார்.உயரம் குறைவான மலைதான்.ஆனாலும் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை...மலை மேலிருந்து கோவையின் அழகை ரசிக்கலாம். அடிவாரம் வரை மாநகரப்பேருந்துகள் செல்லும். கோவிலுக்கு செல்ல தனிபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முருகனின் விசேச தினங்களில் கூட்டம் அள்ளும்.

நாம எழுதினது - மருதமலை
அனுவாவி சுப்ரமணியர் கோவில்:
       இந்தக்கோவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளது.அனுமனின் தாகம் தீர்க்க வாவி( ஊற்று) ஒன்றினை முருகப்பெருமான் ஏற்படுத்திய இடம் அனுவாவி என்றழைக்கப்படுகிறது
ஆனைகட்டி செல்லும் வழியில் கணுவாய் தாண்டி இருக்கிறது இந்தக்கோவில்.மலைப்பாதைகள் இல்லை.செங்குத்தாக செல்லும் மலைப்படிகளில் தான் செல்லவேண்டும்.அடிவாரம் வரை பேருந்துகள் செல்லும். இந்த கோவிலில் இருந்து சுற்றிலும் இயற்கை சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைக்காணலாம்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்:
       மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் ஒரு சிவஸ்தலம்.படைப்புத்தொழில் வேண்டி புற்று வடிவில் இருந்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்த காமதேனுவுக்கு, தன் கன்றின் குளம்படி பட்டு புற்று உடைந்ததால், காட்சியளித்த சிவன் தோன்றிய இடம்.தன் தலையில் குளம்படி தழும்பைக்கொண்டிருக்கும் சிவலிங்கத்தினை காணலாம். ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் நாற்று நடவு உற்சவம்பிரசித்தி பெற்றது.
தண்டு மாரியம்மன் கோவில்:
           கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த மாரியம்மன் திருக்கோவில் இருக்கிறது.மிகவும் பழம்பெருமை பெற்ற கோவிலாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.கோவையின் கோட்டையை முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை எதிர்த்து திப்புசுல்தான் போரிட,  போரில் உதவி செய்த மைசூர் படையில் லிங்க உருவம் ஒன்று போரிட்டது.போர் முடிந்தபின் மைசூர் செல்லாமல் இந்த லிங்க உருவம் மாரியம்மனாக எழுந்தருளியுள்ளது.படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது.இந்தக்கோவிலும் கோவையின் பிரபல கோவில்களில் ஒன்றாகும்.
கோனியம்மன் கோவில்:
        கோவையின் காவல் தெய்வம் என்றழைக்கப்படுகிற இந்த கோனியம்மன் கோவையை ஆண்ட மன்னன் கோவனின் குலதெய்வம் ஆகும்.இக்கோவில்  நிறுவப்பட்டு கிட்டதட்ட 900 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.கோவை நகரின் மிகச்சிறந்த விழா எதுவென்றால் அது கோனியம்மன் கோவில் திருவிழாதான். கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.இக்கோவில் நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருக்கிறது.

தொடரும்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, February 9, 2014

கர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick) - நினைவு மணிமண்டபம்

கர்னல் ஜான் பென்னி குயிக்....
இவர் தான் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர்.இவரோட நினைவு மணி மண்டபம் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் எனப்படும் இடத்தில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறப்புவிழா கண்டது.இந்த செய்தியை பேப்பரில் படித்ததோடு சரி.அங்கெல்லாம் போகப்போகிறோமா என்று எண்ணியிருந்தேன்.ஆனால் கடந்த வாரம் தேனி போயிருந்தபோது கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.ஒரு ஞாயிறு காலையில் தேனியில் இருந்து குமுளி செல்லும் பாதையில் கூடலூர் என்கிற ஊரை அடுத்து இருக்கிற லோயர்கேம்ப் இடத்திற்கு சென்றோம்.
இயற்கை சூழ்ந்த மலைகளின் பிண்ணனியில் மிக அம்சமாய் கட்டப்பட்டு இருக்கிறது.மணி மண்டபம் மிகுந்த பொருட்செலவில் பளபளக்கும் கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.மண்டபத்தினை சுற்றி புல் தரைகள் பதிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.மினி பூங்கா போன்று இருக்கிறது இம்மண்டபம் பசும்புல் தரைகளால்.


படுசுத்தமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும் மண்டபத்தினுள்ளே கர்னல் பென்னி குயிக் அவர்களின் திருவுருவ சிலை வெண்கலத்தினால் அமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு கையினால் தொப்பியை பிடித்தவாறும், இன்னொரு கையினை தன் கோட் பாக்கெட்டினுள் விட்டு இருக்கும் திருவுருவ சிலை பார்க்க மிக கம்பீரமாய் இருக்கிறது.


 
இரவு நேரத்தில் உட்புறமும் வெளிப்புறமும் ஒளி வெள்ளத்தில் நீந்தும் படி மிக சிறப்பாய் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.நன்கு விசாலமாக கட்டப்பட்டு இருக்கிறது.முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.மேலும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வரைபடம் வைக்கப்பட்டிருக்கிறது

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் தென்மாவட்டங்களுக்கு பாசன வசதி, மற்றும் குடிநீ வசதி ஏற்படுத்துவதற்காகவும் 1895 ல் இவர் கட்டிய அணைதான் முல்லைப்பெரியாறு அணை.இந்த அணையின் மூலம் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீரும், அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.
பென்னிகுயிக்கின் கடுமையான முயற்சியினாலும், பெரும் தியாகத்தினாலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை உருவாகி இருக்கிறது.அவரின் தியாகத்தினை போற்றும் வகையில் தமிழக அரசு அமைத்துள்ள மணி மண்டபம்தான் இது.கண்டிப்பாய் அனைவரும் காண வேண்டிய.....போற்றப்பட வேண்டிய இடம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Thursday, February 6, 2014

பயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்டம்

மேகமலை
ஒரு நாள் தேனில இருக்கிற நம்ம நண்பர்கிட்ட இருந்து போன்.இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிடாவெட்டு வச்சிருக்கேன். மாப்ளை தவறாம கலந்துக்கணும்அப்படின்னு அன்போட அழைச்சிருந்தாப்ல.சரின்னு மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு சனிக்கிழமை அதிகாலையிலேயே நம்ம சிங்கத்தை கூட்டிட்டு கிளம்பியாச்சு...பெரியகுளம் போன போது மணி 7.30 ஆகி இருந்தது.பசி வேற வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.அப்பொழுதுதான் பக்தி மணம் பரப்ப கடையை திறந்து ஆவி பறக்க இட்லியை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஓனரிடம் கேட்டவாறே சாப்பிட அமர்ந்தோம்.சூடான இட்லியை சாம்பாரிலும் சட்னியிலும் தோய்த்து உள்ளே தள்ளவும் தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.சின்னமனூர்ல இருந்துதான் மேகமலை போகனும் என்பதால் சின்னமனூர் கிளம்பினோம்.
சின்னமனூரில் இருந்து ஒரு சில சிற்றூர்களை கடந்து கடைசியாய் தென்பழனி வனப்பகுதி செக் போஸ்ட் அடைந்தோம்.செக்போஸ்டில் விவரங்களை எழுதிக்கொடுத்துவிட்டு வனப்பகுதிக்குள் நுழைந்தோம். கொஞ்ச தூரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவிலில் ஆரத்திகாட்டி மலை மேல் போகின்ற வாகனங்களுக்கும் ஆரத்தி காட்டி வசூல் செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் காணிக்கையைக் கொடுத்துவிட்டு மலை மேல் ஏற ஆரம்பித்தோம்.

மலை மீது ஏற ஏற மிகவும் வறட்சியாய் காணப்பட்டது இருபுறமும்.ரோடும் மிக மோசமாக இருக்கவே சிங்கமும் சீறாமல் மெதுவாகவே சென்றது. மொத்தம் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.ரோடும் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு வண்டி மட்டுமே செல்ல கூடிய வகையில் இருக்கிறது.ஏதாவது வண்டி எதிரில் வந்தால் ஒதுங்குவது சிரமமாக இருக்கிறது.உயரே செல்ல செல்ல பசுமையானது கண்ணுக்கு தோன்ற ஆரம்பித்தது.பெரும் பள்ளத்தாக்குகளும், ஓங்கி உயர்ந்த மரங்களும் அடர்ந்த காட்டின் நிறமும் நம்மை அதிசயக்க வைக்கிறது.




எங்காவது காட்டு விலங்குகள் தென்படுமா என்று எண்ணிக்கொண்டே ஒவ்வொரு வளைவிலும் வளைந்து கொண்டிருந்தோம்.வெறும் போர்டுகள் மட்டுமே அங்குள்ள விலங்குகளை காண்பித்துக்கொண்டிருந்தன. அதிசயமாய் ஒரு வரையாடு எங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தளித்து, கேமராவில் சிக்காமல் பாய்ந்தோடியது.அதுபோல நிறைய காட்டு சேவல்கள்..மிக அழகாய் இருக்கின்றன.நம்ம ஊர் சேவல்கள் போல் இல்லாமல் நல்ல புஷ்டியுடன் இருக்கின்றன.அவைகளும் நம் வண்டியின் சத்தம் கேட்டு ஓடி ஒளிகின்றன.கடைசி வரைக்கும் யானை கண்ணுக்கு அகப்படவில்லை.எப்போதோ யானை போட்ட சாணம் மட்டுமே கிடக்கிறது.

அனைத்து வளைவுகளையும் கடந்த பின் பச்சை பசேல் என்று கண்களுக்கு காட்சியளிக்கின்றன தேயிலைத்தோட்டங்கள். கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை....பசுமை மட்டுமே...ஹைவேவிஸ் என்றழைக்கப்படும் ஊரினை அடைய இன்னும் பயணப்பட வேண்டி இருந்தது. 

பெயரில் தான் ஹைவே இருக்கிறது. ரோடு என்பதே இல்லை.மேடும் பள்ளமும், கற்களுமாக நிரம்பி கிடக்கின்றன.கரடு முரடான பாதையில் மெதுவாய் வண்டியை உருட்டியபடியே சென்றோம்.என்னதான் ரோடு மோசமாக இருந்தாலும் சுற்றிலும் இருக்கின்ற பசுமை நம்மை இலகுவாக்குகின்றது.மெல்லிய குளிர், மலை முகடு தொட்டு செல்லும் மேகம் என மிகவும் ரம்மியமாக இருக்கிறது.





இயற்கையை ரசித்தபடியே செல்ல பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர் இன்னும் நம்மை ரசிக்க வைக்கிறது.எங்கு திரும்பினாலும் பசுமை.இயற்கை அன்னை மலைகளை பசுமையால் போர்த்திக்கொண்டிருக்கும் அழகினை பார்க்க பார்க்க வியப்பூட்டுகிறது. இயற்கையை ரசித்ததில் பசி என்பது மறந்து போனது.நேரம் ஆக பசியை ஞாபகப்படுத்த ஹைவேவிஸ் இல் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் தஞ்சம் புகுந்தோம்.நல்லவேளை...சாப்பாடு இருந்தது.(முன்கூட்டியே சொன்னால்தான் சமைத்து வைப்பார்களாம்).மீன் இருக்கிறதா என்று கேட்க, அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் இருக்கிறது அரைக்கிலோ  பொரிக்கட்டுமா என கடைக்காரர் கேட்க, எவ்ளோ ஆகுமென வினவ, 125 தான் என சொல்ல உற்சாகமாய் தலையாட்டினோம்.கொஞ்ச நேரத்தில் மீன் எங்கள் டேபிளுக்கு வர ஒவ்வொன்றாய் காலி செய்தோம்.மிக சுவையாக இருந்தது அந்த குளிருக்கு இதமாய் சூடாக...

திருப்தியாய் சாப்பிட்டு விட்டு இன்னும் இருக்கிற சொச்சம் இடங்களையும் பார்த்து விடலாம் என்று மகாராஜா மெட்டு என்கிற இடத்திற்கு சென்றோம்.
அங்கேயும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.வண்டியின் ஸ்பீட் 20க்கும் குறைவாக இருந்தது.மெதுவாய் மேடு பள்ளம் பார்த்து இறக்கி ஏற்றி சென்று கொண்டிருந்தோம்.எங்கெங்கு காணினும் தேயிலை மலைத்தொடர்களே..இந்த மலைத்தொடரில் ஹைவேவிஸ், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என நிறைய இடங்கள் இருக்கின்றன.அணைகளும் நிறைய இருக்கின்றன.அணைகளில் இருக்கும் தண்ணீர் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது.பொறுமையாய் அனைத்தையும் ரசித்து முடித்தபின் வந்த வழியே கீழிறங்கினோம். மீண்டும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.

வுட்பிரையர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்டேட்களே மேகமலை முழுவதும் இருக்கின்றன.எஸ்டேட்டினுள் இருக்கும் சாலைகள்  மட்டும் பளபளவென்று இருக்கின்றன.ஆனால் நாம் செல்லும் ரோடு மிக மோசமாக இருக்கின்றன.அரசுக்கும் தனியாருக்கும் பஞ்சாயத்து போல.கிடப்பில் போட்டு விட்டார்கள்.ஆனாலும் இயற்கை ஆர்வலர்களின் வரத்து இருக்கத்தான் செய்கிறது.மேலும் தேயிலை உரிமையாளரான உட்ஃபிரையரின் டீ ஃபேக்டரி காண அனுமதி அளிக்கப்படுகிறது தலைக்கு நூறு ரூபாயில்.டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான காற்று, மனதிற்கு மகிழ்ச்சி, இயற்கை அன்னையை தரிசித்தல் இதெல்லாம் வேண்டும் என்றால் மேகமலை செல்லலாம்.
மேகமலை செல்ல பஸ்வசதி இருக்கிறது.காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான்.ஜீப் போன்ற SUV  வாகனங்கள் தான் பெஸ்ட்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 28, 2014

பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1

  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.



காலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....


நேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...



வெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.




  
மயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இதுக்கு முன்னாடி கோவா

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...