Friday, June 29, 2018

கரம் – 32 - கோவை மெஸ் - அஞ்சணன் ஹோட்டல், ஆர்.எஸ்.புரம், கோவை; ANJANAN HOTEL, R.S.PURAM, COIMBATORE


SWIGGY :
                    நம்மூர்ல ஆரஞ்சு நிற டீ சர்ட் போட்ட ஒரு குரூப் சமீபத்துல இருந்து கோவைல எங்க பார்த்தாலும் சுத்திட்டு இருந்தாங்க.என்ன சேதி ன்னு பார்த்தா ஸ்விக்கி SWIGGY என்கிற உணவு டெலிவரி பண்ற ஆளுங்க..சரி நாமும் ஒரு நாள் உபயோகப்படுத்துவோம்னு டவுண்லோட் பண்ணி வச்சேன்.இன்னிக்கு இந்த ஆப் பின் செயல்பாடுகள் எப்படி இருக்கு அப்படிங்கிறத தெரிந்து கொள்வதற்காக இதன் மூலம் மதிய உணவை ஆர்டரினேன் கோவையில் அஞ்சணன்னு ஹோட்டல் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க.

                சரி..இந்த கடைல இருந்து ஆதரிப்போம்/ ஆரம்பிப்போம்னு நினைச்சு ஆர்டரை போட்டேன்.கறிவிருந்து அப்படிங்கிற மதியம் மீல்ஸ், நண்டு வறுவல் இதை இரண்டையும் ஆர்டர் பண்ணேன்.

                   மொபைல் ஆப் கரெக்டா 33 நிமிசத்துல டெலிவரி அப்படின்னு காட்டுச்சு.பணத்தை கிரடிட், டெபிட் , ஆன்லைன் மற்றும் கேஷா பில் பண்ணலாம் என்கிற முறையில் கேஷ் தேர்ந்தெடுத்து ஆர்டரை போட்டுட்டு மத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.கொஞ்ச நேரம்தான்..25 நிமிசம் இருக்கும்..அதற்குள் டெலிவரி/ ஸ்விக்கி பாய் வந்து சேர, பார்சலை வாங்கி பணம் கொடுத்துவிட்டேன்.நல்ல சர்வீஸ்.கடையில் வாங்கின பில்லோடு சுடச்சுட பார்சலை கொடுத்து விட்டு போகிறார்கள்.ஆப்பில் இருக்கும் ரேட்டும் கடை ரேட்டும் ஒன்றுதான்.ஆனால் ஸ்விக்கி ஆஃபரில் விலையை குறைத்து தருகிறார்கள்.ரூ 575 க்கு பதிலாக டிஸ்கவுண்டில் ரூ 320 டெலிவரி சார்ஜோடு வாங்கி செல்கிறார்கள்.கடைக்கு போய் சாப்பிடுவதற்கு பதிலாக பார்சலே வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.அந்தளவுக்கு விலை குறைவாக இருக்கிறது.(கொஞ்ச நாள் தான்.பின் நன்கு பிரபலம் ஆனவுடன் விலை ஏற்றிவிடப் போவது சகஜம்).கார்ல போய் ட்ராஃபிக்கில் சிக்கி, கடையில் ஒரு மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டுட்டு வர்றதுக்கு பதில் பேசாம பிடிச்ச ஹோட்டல்ல, பிடித்த மெனுவை ஆர்டர் போட்டுட்டு நிம்மதியா அக்கடானு இருந்துக்கலாம் நம் வீட்டிலேயே.
                  ஆனாலும் இதிலும் ஒரு பிரச்சினை. நம் வசதிக்காக பார்சல் வாங்குவதில் என்ன பிரச்சினை எனில் ஊர்ப்பட்ட பிளாஸ்டிக் காகிதங்கள், டப்பாக்கள் வந்து சேர்கின்றன நம்மிடத்தில்.ஒவ்வொரு குழம்பு மற்றும் பொரியல், ரசம், மோர் என அனைத்திற்கும் தனித்தனி பிளாஸ்டிக் கவர்கள், டப்பாக்கள். கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பாலீதீன் கவர்கள்.நம் சோம்பேறி தனத்தினால் சுற்றுப்புற சூழலை கெடுக்கிறோம் என்பது மட்டும் புலப்படுகிறது.என்ன செய்வது..ஆன்ட்ராய்டு போன் நம்மை சோம்பேறி ஆக்கிவிட்டது என்பது மட்டும் நிஜம்..சரி..இப்போ சாப்பாட்டிற்கு வருவோம்.ரொம்ப நாள் கழித்து புது ஆட்களுடன் இறக்குமதி ஆயிருக்கும் அஞ்சணன் ஹோட்டல் சுவை பற்றி பார்ப்போம்.
                        அழகான குட்டி குட்டி டப்பாக்களுடன் கறிவிருந்து ஸ்பெஷல் நல்ல பேக்கிங்கில் இருந்தது.மட்டன் வறுவல், குடல் வறுவல், மீன் சில்லி, சிக்கன் வறுவல்,நா.கோ.வறுவல்,ரத்தப்பொரியல் இப்படி பல அயிட்டங்கள் இந்தகறிவிருந்தில்.குழம்பு அயிட்டங்கள் தனித்தனி கவர்களில் பேக் செய்யப்பட்டிருந்தது.சுவை கொஞ்சம் சுமார்தான்.ஒன்றிரண்டு அயிட்டங்கள் தான் தேறின.இரத்தப்பொரியல், சிக்கன் வறுவல் ஓகே.மற்றவை அனைத்தும் கொஞ்சம் சுமார் ரகங்களே.நல்ல மிளகாய் காரம் கண்களில் தெரிகிறது சாப்பிட்டவுடன்.முட்டை பிரியாணியில் முட்டை மட்டுமே செம டேஸ்ட்.பிரியாணியில் சம்பா அரிசி அரை குறை வேக்காட்டில் இருந்தது.ஒப்புக்கு மணம் ஏதோ கொஞ்சம் வீசியது.நண்டு வறுவல் இதுவும் சுமார்தான்.நன்கு காரமாக இருக்கிறது.ஆனால் சுவை குறைவாக இருக்கிறது.ரசம் செம டேஸ்ட்..காரமாய் சாப்பிட்டதற்கு இந்த தக்காளி ரசம் மிக அருமையாக இருக்கிறது.ஜூ.கு ரசம் போலவே இருக்கிறது.ஒருவேளை கடையில் போய் வாழை இலையில் பரிமாறப்பட்டு சாப்பிட்டிருந்தால் நன்றாக இருக்குமோ என்னமோ...


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, June 2, 2018

கோவை மெஸ் - சட்னி முறுக்கு, நாமக்கல், CHUTNEY MURUKKU, NAMAKKAL


நாமக்கல் ரவுண்ட் அப் :
சட்னி முறுக்கு :
                 நாமக்கல்லை சுற்றி உள்ள திருச்செங்கோடு ரோடு, சேலம் ரோடு, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, திருச்சி ரோடு போன்ற அத்தனை ரோடுகளிலும் தள்ளுவண்டி கடைகள் நிறைய இருக்கின்றன.இட்லி முதல் சிக்கன் சில்லி, பீஃப் சில்லி வரை பெரும்பாலான கடைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.இத்தகைய தள்ளுவண்டிகளில் புதுவித மெனுவினை கண்டது துறையூர் ரோட்டில் தான்.சட்னி முறுக்கு எனும் ஸ்பெசல் மெனுவை ருசித்துப் பார்த்தேன்.கரூரில் எப்படி கரம் மிகப்பிரபலமோ அது போல சேலம் மற்றும் நாமக்கல்லில் தட்டுவடை செட் பிரபலம்.அப்படித்தான் தட்டுவடை செட் ருசிக்க செல்லும் போது தான் சட்னி முறுக்கினை சுவைக்க நேர்ந்தது.

                 சின்ன சின்ன முறுக்கினை, தக்காளி சட்னி வாளியில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கின்றனர்.பின் அதை எடுத்து தட்டில் வைத்து கேரட் வெங்காயம் பீட்ரூட் தூவல்களை தூவி தருகின்றனர்.சாப்பிடும் போது முறுக்கின் மொறு மொறு தன்மை குறைந்து அதன் சுவை தக்காளி சட்னியோடு சேர்ந்து காரம் மற்றும் இனிப்பு கலந்த இன்னொரு சுவையை தருகிறது.கூடவே வெங்காயம் கேரட், பீட்ரூட் சுவைகளும் சேர்ந்து புது விதமாக சுவையை தருகிறது.இந்த சட்னி முறுக்கு சாப்பிட நன்றாகவே இருக்கிறது.மென்மையாகவும், இனிப்பாகவும் கொஞ்சம் காரமாகவும் இருக்கிறது.


                     இதைப் போலவே தான் தட்டு வடை செட்டும்.தட்டு முறுக்கில் இரண்டு வகை சட்னிகளை தோய்த்து, கேரட் பீட்ரூட், வெங்காய துருவல்களை வைத்து, பின் அதன் மேல் இன்னொரு சட்னி தோய்த்த தட்டு முறுக்கினை வைத்து தருகின்றனர்.மேலும் கீழும் உள்ள தட்டு முறுக்கினை அப்படியே அலேக்காக சிந்தாமல் சிதறாமல் தூக்கி வாய்க்குள் போட்டு சுவைக்க ஆரம்பித்தால் அத்தனை சுவைகளும் வரிசை கட்டி நாவில் நாட்டியமாடும்.கொஞ்சம் கொஞ்சமாய் வயிற்றுக்குள் இறங்கும் வரையிலும் சுவை இருக்கும்.




                  நாமக்கல்லில் தள்ளுவண்டி தவிர்த்து, கடைவீதிக்குள் ஒரு சட்னி முறுக்கு கடை இருக்கிறது. M.தங்கராஜ் சட்னி முறுக்கு கடை.இந்த கடை மிக பிரபலம் அந்த பகுதிக்குள்.பெண்கள் மட்டுமே இதை நடத்துகிறார்கள்.மாலை வேளையில் இருந்து இரவு பத்து மணி வரை இங்கு அனைத்து சாட் வகைகளும் கிடைக்கும்.விலை பத்து ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.சட்னி முறுக்கு ரூ 20 விலையில் இருக்கிறது.அந்தப்பக்கம் போனீங்கன்னா, மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிடனும்னு தோணுச்சின்னா, மறக்காம போய் சாப்பிட்டு பாருங்க…


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...