Wednesday, August 13, 2014

கோவை மெஸ் - அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், (செளடேஸ்வரி கோவில் பின்புறம்), கோவை.

ஒரு இரவு நேரம்..மணி ஒன்பதை தாண்டிக்கொண்டிருக்க, நண்பரோடு பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கும் போதுதான் சாப்பிடும் எண்ணம் வர,  எங்கு செல்வது கடை இழுத்து மூடும் நேரமாச்சே, கையேந்தி பவனில் தான் சாப்பிட வேண்டி இருக்குமோ என நண்பரைக் கேட்க அவரோ ஒரு கடை இருக்கு ரொம்ப லேட்டாத்தான் ஆரம்பிப்பாங்க, நான்வெஜ்லாம் இருக்காது, ஒன்லி சைவம் தான்…ஆனா ஆம்லேட், ஆப்பாயில் கிடைக்கும் என  சொல்லி நெஞ்சிலே பால் வார்த்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் அந்த கடை இருக்கும் சந்தில் நுழைந்திருந்தோம்.கொஞ்ச தூரம்தான் சென்றிருப்போம், இட்லியின் மணம் நம் நாசியை துளைத்தது.பக்கத்திலேயே பிரம்மாண்டமான கோவில் மதில் சுவர் இருக்க ஒரு ஓரமாய் வண்டியை பார்க் செய்தோம்.ஒரு ஓட்டு வீடு தான்.வாசல் முன்பு கும்பலாய் நின்று கொண்டிருந்தனர்.
இட்லி அவிக்கும் வாசமும், பட்டர் உருகும் வாசமும் வெளியே வந்து கொண்டிருந்தது.உள்ளே எட்டிப்பார்த்ததில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு வயதான பாட்டி இட்லி சுடும் வேளையிலும், இன்னொரு வயதான பாட்டி தோசை சுடுவதிலும், ஒரே ஒரு வயதான ஆண் அவ்வப்போது பரிமாறிக்கொண்டிருக்க, அந்த ரூமே நிறைந்து கொண்டிருந்தது ஆட்களிலாலும் வாசத்தினாலும்…சிறு அறைதான்.பத்துக்கு பத்து கூட இருக்காது.இடவசதி என்பது குறைவுதான். அதிகபட்சம் நான்குபேர் தான் உட்கார முடியும். அப்படியிருந்தும் ஒவ்வொருத்தராய் சாப்பிட்டு வெளியேறிக்கொண்டிருக்க, வாசலில் நின்றவர்கள் உள்ளே புகுந்து கொண்டிருந்தனர்.

எங்களுக்கும் அரைமணி நேரம் காத்திருந்தது.ஒருவழியாக 10.20க்கு அமர இடம் கிடைத்தது.பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருப்பவர்களால் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்கிற நிலை உருவாகியிருந்தது.ஆனால் இலை போட்டு இரண்டு இட்லியை வைத்து மிளகாய்ச்சட்டினியும், தேங்காய் சட்டினியும், கத்தரிக்காய் தொக்கும் வைத்து அதை தொட்டு வாயில் வைக்கும் வரை தான்….இந்த சுவைக்காக எவ்ளோ நேரமானாலும் காத்திருக்கலாம் என்று எண்ண தோன்றியது.
ஒரு பாட்டியின் வேலை என்னவெனில் அமர்ந்த இடத்திலேயே இட்லி மாவு ஊத்துவது தான் வேலை…சுட சுட இட்லி வெளியேறிக்கொண்டிருக்கிறது.உடனேயும் தீர்ந்து விடுகிறது.இட்லியை மிளகாய் சட்னியில் தொட்டு வாயில் வைக்கும் போது சுள்ளென இறங்குகிறது காரமும் சுவையும்…கத்தரிக்காய் தொக்கு சொல்லவே வேண்டாம்…செம டேஸ்ட். நாங்களோ இட்லியை தேங்காய்ச்சட்னியில் தொட்டு சாப்பிட பக்கத்தில் இருந்தவரோ பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அதுவும் செம டேஸ்ட்…இட்லி மட்டும் கிட்டத்தட்ட 12க்கும் மேல் பாஸாகியது வயிற்றின் உள்ளே..அதற்கப்புறம் பட்டர் தோசை ஆர்டர் செய்ய கெட்டி தோசைக்கல்லில் நீர் தெளித்து இரண்டு கரண்டி மாவினை ஊற்றி தட்டு அகலத்துக்கு வட்டமிட்டு பின் திருப்பி போட்டு தோசையில் பட்டரை தடவி மீண்டும் ஒரு முறை திருப்பி, தோசை வெந்தவுடன் வாசத்துடன் எங்கள் இலையை தேடி வந்தது.மீண்டும் அதே சட்னி வகைகள்…தோசைக்கு ஏற்றதாய் இருக்க, மீண்டும் அதே சுவை…..தோசையில் தேங்காய் சட்னி ஊறி, பிய்த்து பிய்த்து சாப்பிட சீக்கிரம் காலியானது.
அதற்கப்புறம், கலக்கியும், ஆம்லேட்டும் எங்கள் இலையை அலங்கரித்தன…அனைத்தையும் சாப்பிட்டு வெளியேற உடனே எங்கள் இடத்தினை இன்னொரு குழு கைப்பற்றி ஆரம்பிக்க ஆயத்தமானது.
இந்த இடைவெளியில் அவ்வப்போது பார்சலும் பகிரங்கமாய் வெளியேறிக் கொண்டிருந்தன.
இந்தக்கடைக்கு பெயர் எதுவுமில்லை.இரண்டு பாட்டிகள் தெலுங்குல அவ்வாக்கள் நடத்துவதால் அவ்வா இட்லிகடை என்றே அழைக்கின்றனர்.
ஒரு தடவை போனாலே வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வருவீர்கள்...அவ்வளவு சுவை இருக்கிறது.
இந்தக்கடை இரவு நேரம் மட்டுமே செயல்படும் 9 மணியிலிருந்து 12 வரை செயல்படும்
போன் - 9952259831
விலை குறைவு தான்.இட்லி 6 தோசை 15, பட்டர் 20 என இருக்கிறது.கண்டிப்பா கார் பார்க்கிங் இல்லை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


2 comments:

  1. Wow.... naakkil neeer ooruthu ponga ! Boss eppadi ippadi ellam kadaiyai pidikkireenga !

    ReplyDelete
  2. ஓய்வெடுக்க வேண்டிய வயதில் மற்றவர்கள் பசியாற உழைக்கும் பாட்டியம்மா .... இவரது பசியை ஆண்டவன் போக்குவானாக ....!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....