Wednesday, December 24, 2014

பயணம் – தனுஷ்கோடி, இராமேஸ்வரம்

          இராமேஸ்வரத்தில் நம்ம வேலை முடிந்ததும் எங்கு செல்வது என்று நினைக்கையில் உடனே ஞாபகம் வந்தது தனுஷ்கோடி தான்.புயலால் அழிந்த ஒரு கிராமம் என்று கேள்விப்பட்டிருப்பதாலும், இன்னும் அதன் நினைவுகளை தாங்கி ஒரு சில கட்டிடங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை அறிந்திருப்பதாலும் அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

           இராமேஸ்வரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.சிறு தூறல் எங்களை வரவேற்றிருக்க தனுஷ்கோடி செல்லும் சாலையில் பயணித்தோம்.மழை பெய்து கொண்டிருந்தாலும், இருபுறமும் ஓங்கி தளைத்திருந்த மரங்கள் தன் பசுமை அழகை இழந்திருந்தன.சிறிது தூரத்தில் சாலையில் இருபுறமும் கடல் தென்பட ஆரம்பித்தது.கடல் நடுவே செல்லும் பாதையில் கடலை ரசித்துக்கொண்டே பயணித்தோம்.கொஞ்ச நேரத்தில் முகுந்தராயர்சத்திரம் என்னும் ஊரை அடைந்தோம்.
    கடலழகை கண்டு ரசிக்க ஒரு கண்காணிப்பு கோபுரம் ஒன்று இருக்க, ஏகப்பட்ட வேன்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன.கார்பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வெளிவர, கூவி அழைத்துக்கொண்டிருந்தனர் வேன் வாசிகள்.தனுஷ்கோடிக்கு செல்ல அங்கிருக்கும் வேன் மூலம் மட்டுமே அழைத்து செல்லப்படுவர்.நமது வண்டிகள் அங்கே அனுமதி இல்லை.ஒவ்வொரு வேனும் 15 முதல் 25 பேர் வரை ஆட்களை ஏற்றி தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தன. எங்களுக்கு தோதான ஒரு வேனில் ஏறிக்கொண்டு பயணித்தோம்.
              கடற்கரை மணலில் வேன் ஒரு படகு போல் வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது.மணலில் செல்லும் போது வேனாகவும், அவ்வப்போது கடலில் சிறிதளவு ஆழத்தில் படகாகவும் சென்றது.அரைமணி நேரப்பயணம்...கடலை ரசித்துக்கொண்டே தனுஷ்கோடி வந்திறங்கினோம்.
              சுற்றுலா இடத்திற்கே உண்டான சிறு கடைகள்...உப்பும் மிளகாயுமிட்ட மாங்காய் துண்டுகள், கிழங்குகள், என சிற்றுண்டி வகைகள்...கடற்கரை ஓரம் என்பதால் முத்துக்களும் சிப்பிகளும் பல்வேறு வடிவத்தில் உருமாறி அணிகலன்களாக வரவேற்றுக்கொண்டிருந்தன வாடிக்கையாளர்களை....



                மூன்று புறமும் கடல் இருப்பதால் எப்பவும் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.அவ்வப்போது மழை சிறு தூறலாய் வந்து கொண்டிருக்க புதையுண்ட வீடுகளையும், இன்னமும் நினைவுச் சின்னங்களாய் பழைய ஞாபங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் கட்டிடங்களை காண சென்றோம்.
                கடல்மணலில் கால் பொதிய நடக்க சிதறிக்கிடந்தன நிறைய செங்கற்கள்....இவையெல்லாம் இன்னும் மிச்சமிருக்கும் கட்டிடங்களின் ஞாபகங்களை சுமந்துகொண்டு கீழே கிடக்கின்றன.கடல் எப்பவும் போல அலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ஆகாயமானது சிறு தூறலை உற்பத்தி செய்து, மண்ணில் புதையுண்ட நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தது.
              அரை நூற்றாண்டுக்கு முன்பு கம்பீரமாய் நின்றிருந்த சர்ச், கோவில், கட்டிடங்கள், வீடுகள் என அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு, பேரழிவின் சாட்சியாய் சிதிலமடைந்து இருப்பதை காண மனம் வேதனைக்குள்ளாகிறது.

               ஒரே ஒரு இரவில் ஒரு ஊரே தன் அடையாளத்தினை தொலைத்து இப்போது அதன் மிச்சங்களை நினைவுச் சின்னங்களாய் ஆக்கி இருப்பது வரலாற்றின் கோலம்.புயலால் பாதிக்கப்பட்டதால் இங்கு மக்கள் வாழ தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் சில மீனவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பழைய நினைவுகளை சுமந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

                1964ம் வருடம் டிசம்பர் 22ம் நாள் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடி என்கிற ஊரே அழிந்து போனது. ஆனாலும் அதன் நினைவுகளை தாங்கி இன்னமும் மிச்சமிருக்கும் சின்னங்கள் ஒரு ஊரின் வரலாற்றை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



4 comments:

  1. ம்... இயற்கைக்கு முன்னால் நாமெல்லாம் தூசு...

    ReplyDelete
  2. hai nanba... your Rameshwaram Trip journey is very interest and useful to us.
    photos are very superb. but you miss the journey Mukundarayar Chatthiram to Dhanuskodi walk in the sea route. u feel a lot nanba. melum dhanuskodiyilinrunthu thirumba varum bothu kaal muttalavu neeril nadanthu konde varuvathu thani sugam. athilum beach karayil vaithurikkum elumicchai Sharbath pati solla maranthutiye nanba. sutterikkum veyilil antha then elumicchai charu pothum amutham endru solla.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே...அடுத்த முறை வரும் போது கண்டிப்பாய் எலுமிச்சை சர்பத் சுவைக்கிறேன்...

      Delete
  3. http://oorsutrii.blogspot.in/
    please write your comment on my Rameswaram Trip in blogspot
    Thank you.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....