Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Wednesday, December 24, 2014

பயணம் – தனுஷ்கோடி, இராமேஸ்வரம்

          இராமேஸ்வரத்தில் நம்ம வேலை முடிந்ததும் எங்கு செல்வது என்று நினைக்கையில் உடனே ஞாபகம் வந்தது தனுஷ்கோடி தான்.புயலால் அழிந்த ஒரு கிராமம் என்று கேள்விப்பட்டிருப்பதாலும், இன்னும் அதன் நினைவுகளை தாங்கி ஒரு சில கட்டிடங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை அறிந்திருப்பதாலும் அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

           இராமேஸ்வரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.சிறு தூறல் எங்களை வரவேற்றிருக்க தனுஷ்கோடி செல்லும் சாலையில் பயணித்தோம்.மழை பெய்து கொண்டிருந்தாலும், இருபுறமும் ஓங்கி தளைத்திருந்த மரங்கள் தன் பசுமை அழகை இழந்திருந்தன.சிறிது தூரத்தில் சாலையில் இருபுறமும் கடல் தென்பட ஆரம்பித்தது.கடல் நடுவே செல்லும் பாதையில் கடலை ரசித்துக்கொண்டே பயணித்தோம்.கொஞ்ச நேரத்தில் முகுந்தராயர்சத்திரம் என்னும் ஊரை அடைந்தோம்.
    கடலழகை கண்டு ரசிக்க ஒரு கண்காணிப்பு கோபுரம் ஒன்று இருக்க, ஏகப்பட்ட வேன்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன.கார்பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வெளிவர, கூவி அழைத்துக்கொண்டிருந்தனர் வேன் வாசிகள்.தனுஷ்கோடிக்கு செல்ல அங்கிருக்கும் வேன் மூலம் மட்டுமே அழைத்து செல்லப்படுவர்.நமது வண்டிகள் அங்கே அனுமதி இல்லை.ஒவ்வொரு வேனும் 15 முதல் 25 பேர் வரை ஆட்களை ஏற்றி தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தன. எங்களுக்கு தோதான ஒரு வேனில் ஏறிக்கொண்டு பயணித்தோம்.
              கடற்கரை மணலில் வேன் ஒரு படகு போல் வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது.மணலில் செல்லும் போது வேனாகவும், அவ்வப்போது கடலில் சிறிதளவு ஆழத்தில் படகாகவும் சென்றது.அரைமணி நேரப்பயணம்...கடலை ரசித்துக்கொண்டே தனுஷ்கோடி வந்திறங்கினோம்.
              சுற்றுலா இடத்திற்கே உண்டான சிறு கடைகள்...உப்பும் மிளகாயுமிட்ட மாங்காய் துண்டுகள், கிழங்குகள், என சிற்றுண்டி வகைகள்...கடற்கரை ஓரம் என்பதால் முத்துக்களும் சிப்பிகளும் பல்வேறு வடிவத்தில் உருமாறி அணிகலன்களாக வரவேற்றுக்கொண்டிருந்தன வாடிக்கையாளர்களை....



                மூன்று புறமும் கடல் இருப்பதால் எப்பவும் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.அவ்வப்போது மழை சிறு தூறலாய் வந்து கொண்டிருக்க புதையுண்ட வீடுகளையும், இன்னமும் நினைவுச் சின்னங்களாய் பழைய ஞாபங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் கட்டிடங்களை காண சென்றோம்.
                கடல்மணலில் கால் பொதிய நடக்க சிதறிக்கிடந்தன நிறைய செங்கற்கள்....இவையெல்லாம் இன்னும் மிச்சமிருக்கும் கட்டிடங்களின் ஞாபகங்களை சுமந்துகொண்டு கீழே கிடக்கின்றன.கடல் எப்பவும் போல அலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ஆகாயமானது சிறு தூறலை உற்பத்தி செய்து, மண்ணில் புதையுண்ட நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தது.
              அரை நூற்றாண்டுக்கு முன்பு கம்பீரமாய் நின்றிருந்த சர்ச், கோவில், கட்டிடங்கள், வீடுகள் என அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு, பேரழிவின் சாட்சியாய் சிதிலமடைந்து இருப்பதை காண மனம் வேதனைக்குள்ளாகிறது.

               ஒரே ஒரு இரவில் ஒரு ஊரே தன் அடையாளத்தினை தொலைத்து இப்போது அதன் மிச்சங்களை நினைவுச் சின்னங்களாய் ஆக்கி இருப்பது வரலாற்றின் கோலம்.புயலால் பாதிக்கப்பட்டதால் இங்கு மக்கள் வாழ தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் சில மீனவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பழைய நினைவுகளை சுமந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

                1964ம் வருடம் டிசம்பர் 22ம் நாள் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடி என்கிற ஊரே அழிந்து போனது. ஆனாலும் அதன் நினைவுகளை தாங்கி இன்னமும் மிச்சமிருக்கும் சின்னங்கள் ஒரு ஊரின் வரலாற்றை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 6, 2014

பயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்

மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்
போன மாதம் ஓசூர் போயிருந்தபோது மூதறிஞர் இராஜாஜி பிறந்த வீடு இங்கு தான் இருக்கிறது என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரைப்பற்றி அதிகம் தெரிந்ததில்லை, எப்போதோ வரலாறுகளில் படித்தது, அப்புறம் பொது அறிவுக்கேள்விகளில் மட்டுமே இராஜாஜி என்பவரை தெரிந்து வைத்து இருந்தேன்.ஓசூர் அருகிலேயே இருக்கும் அவரது இல்லத்தினை பார்க்க கிளம்பினோம்.ஓசூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் பெங்களூர் நெடுங்சாலையில் வலதுபுறம் தொரப்பள்ளி செல்லும் ஊரின் முன்பாக பெரிய வளைவு நம்மை வரவேற்கிறது.
தொரப்பள்ளி செல்லும் சாலையானது படுமோசம் என்பது அதில் செல்லும்போதே தெரிகிறது.ஆனால் சாலையின் இருமருங்கிலும் பசுமை தலைவிரித்தாடுகிறது.மாமர தோப்புகள், சிறு வயல்வெளிகள், அதில் காலிபிளவர் செடிகள், கொத்தமல்லி செடிகள் என விவசாயம் செழிப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.தென்பெண்ணை நதிதான் அதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.இருபுறமும் பசுமையை ரசித்தபடி 4 கிலோமீட்டர் தொலைவு வந்தடைய தொரப்பள்ளி எனும் சிறு கிராமம் நம்மை வரவேற்கிறது.





இன்னமும் நகரவாழ்க்கைக்கு அடிபணியாமல் கிராமத்து இயல்பில் இருந்தாலும் பொட்டிக்கடை வரை குடியேறிவிட்ட கோகோ பெப்சி குளிர்பானங்களின் அத்தனை விளம்பர போர்டுகளிலும் தமிழும் கன்னடமும் சரிக்கு சமமாய்  இடம் பிடித்திருக்கின்றன. அங்கிருக்கிற ஒருவரிடம் விசாரித்தபோது பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்ல அந்த சின்ன கிராமத்தில் அடுத்த தெருவில் இன்னுமொரு பெரிய ஆர்ச்சு வரவேற்கிறது.நீண்ட தெரு...வீடுகள் அனைத்தும் வரிசையாய் இருபுறமும் இருக்கின்றன.அனைத்து வீடுகளிலும் ஆள் நடமாட்டம் இருக்க, மூதறிஞர் இராஜாஜி வீடு பூட்டிக்கிடந்தது.வீட்டினைப் பராமரிக்கும் வாட்ச்மேன் கூட இல்லை.பக்கத்தில் கேட்டபோது அவர் எங்கோ சென்றிருக்கிறார் என சொல்ல, பூட்டிய வீட்டிற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.





வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவரின் வீடு ஆள் அரவமின்றி இருக்க காரணம் முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பற்றி யாரும் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாததுதான் காரணம்.இதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று நினைக்க தோன்றுகிறது.அவரின் வீட்டிற்கு சென்ற பின் தான் அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.அவர் பிறந்த ஆண்டின் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் நான் பிறந்திருக்கிறேன் என்பதும், நான் பிறப்பதற்கு முன்பே காலமானதும் மலைக்கவைக்கும் ஆச்சர்யம்.1878ல் பிறந்து பல்வேறு சாதனைகள் செய்த மூதறிஞர் பற்றி தெரிஞ்சுக்க கிளிக்

இந்த கோடைவிடுமுறையில் கொஞ்சம் பயனுள்ளதாக கழியனும்னா இந்தமாதிரி இடங்களுக்கு சுற்றுலா கூட்டிட்டு போங்க...வரலாற்றில் இருக்கிற உண்மைகள் கொஞ்சமாவது தெரிய வரும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...