Showing posts with label நினைவு மணிமண்டபம். Show all posts
Showing posts with label நினைவு மணிமண்டபம். Show all posts

Sunday, February 9, 2014

கர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick) - நினைவு மணிமண்டபம்

கர்னல் ஜான் பென்னி குயிக்....
இவர் தான் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர்.இவரோட நினைவு மணி மண்டபம் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் எனப்படும் இடத்தில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறப்புவிழா கண்டது.இந்த செய்தியை பேப்பரில் படித்ததோடு சரி.அங்கெல்லாம் போகப்போகிறோமா என்று எண்ணியிருந்தேன்.ஆனால் கடந்த வாரம் தேனி போயிருந்தபோது கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.ஒரு ஞாயிறு காலையில் தேனியில் இருந்து குமுளி செல்லும் பாதையில் கூடலூர் என்கிற ஊரை அடுத்து இருக்கிற லோயர்கேம்ப் இடத்திற்கு சென்றோம்.
இயற்கை சூழ்ந்த மலைகளின் பிண்ணனியில் மிக அம்சமாய் கட்டப்பட்டு இருக்கிறது.மணி மண்டபம் மிகுந்த பொருட்செலவில் பளபளக்கும் கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.மண்டபத்தினை சுற்றி புல் தரைகள் பதிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.மினி பூங்கா போன்று இருக்கிறது இம்மண்டபம் பசும்புல் தரைகளால்.


படுசுத்தமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும் மண்டபத்தினுள்ளே கர்னல் பென்னி குயிக் அவர்களின் திருவுருவ சிலை வெண்கலத்தினால் அமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு கையினால் தொப்பியை பிடித்தவாறும், இன்னொரு கையினை தன் கோட் பாக்கெட்டினுள் விட்டு இருக்கும் திருவுருவ சிலை பார்க்க மிக கம்பீரமாய் இருக்கிறது.


 
இரவு நேரத்தில் உட்புறமும் வெளிப்புறமும் ஒளி வெள்ளத்தில் நீந்தும் படி மிக சிறப்பாய் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.நன்கு விசாலமாக கட்டப்பட்டு இருக்கிறது.முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.மேலும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வரைபடம் வைக்கப்பட்டிருக்கிறது

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் தென்மாவட்டங்களுக்கு பாசன வசதி, மற்றும் குடிநீ வசதி ஏற்படுத்துவதற்காகவும் 1895 ல் இவர் கட்டிய அணைதான் முல்லைப்பெரியாறு அணை.இந்த அணையின் மூலம் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீரும், அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.
பென்னிகுயிக்கின் கடுமையான முயற்சியினாலும், பெரும் தியாகத்தினாலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை உருவாகி இருக்கிறது.அவரின் தியாகத்தினை போற்றும் வகையில் தமிழக அரசு அமைத்துள்ள மணி மண்டபம்தான் இது.கண்டிப்பாய் அனைவரும் காண வேண்டிய.....போற்றப்பட வேண்டிய இடம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...