Thursday, April 24, 2014

என் ஓட்டு - என் உரிமை

காலையிலேயே ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு கிளம்பிவிட்டேன் எங்கள் ஏரியாவில் இருக்கிற வாக்குச்சாவடிக்கு.எந்த வித களேபரங்களும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த ஏரியா.கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 25 கட்சிகளில் ஒரு சில முக்கிய கட்சிகளின் பணிமனைகள் மட்டுமே இருக்க, அங்கு தொண்டர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தனர்.வாக்குச்சாவடிக்கு பல மீட்டர் தூரம் முன்பே மிலிட்டரி யூனிபார்மிட்ட காவலர் துப்பாக்கியுடன் வரவேற்க, வாக்காளப்பெருமக்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.மழைக்கு கூட பள்ளிப்பக்கம் மாணாக்கர்களாய் ஒதுங்காத பலர், இப்போது வாக்காளர்களாய் ஒதுங்கி கொண்டிருந்தனர்.

               பள்ளிக்குள் நுழைந்ததும் பழைய ஞாபகங்கள் எதுவும் வரவில்லை ஆட்டோகிராப் சேரனைப்போல்.ஆண்களும் பெண்களும் (நம்ம பாஷையில் அம்மணிகளும்) அவரவர் இடம் தேடி தம் பொன்னான வாக்குகளை பதிவு செய்திட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்த பீப் சத்தத்துடன் ஒரு சிலர் வெளியேறிக்கொண்டிருக்க அவர்களின் முகத்தில் தம் கடமையை சரிவர செய்த திருப்தி ஒட்டியிருந்தது. 

         உள்ளே நுழைந்ததும் நீண்ட வரிசை எனக்காக காத்திருந்தது.வரிசையின் வால் பகுதியில் நானும் ஒட்டிக்கொண்டேன். பக்கத்திலேயே அம்மணிகள் வரிசை.கன்னி ஓட்டு போடும் கன்னிகளும், கடைசி ஓட்டாக இருக்கும் என்றெண்ணி போட வந்திருக்கும் முதும்பெண்களும், இன்னும் நான்கைந்து தேர்தலில் வாக்களிக்க தகுதியான பேரிளம் பெண்களும் புடவை, ஜீன்ஸ், சுரிதார் என கலர்புல் காக்டெயில் வரிசை... இருவரது வரிசை மிக மெதுவாக நகர்ந்தாலும், சீக்கிரம் அம்மணிகள் வரிசை காலியாகிக்கொண்டிருக்க, ஆண்களின் வரிசை மெதுவாகவே ஊர்ந்தது.ஆனாலும் அவ்வப்போது வித விதமாய் அம்மணிகள் வரிசையில் சேர்ந்துக்கொண்டு வர நமக்கும் இன்னும் மெதுவாகவே போலாம் என்றிருக்க ஆரம்பித்தது.இடைவிடாது ஒலிக்கின்ற மெஷினின் பீப் சத்தம் அங்கே இருக்கிற சூழ்நிலைக்கு பின்ணணி இசையாய் இருக்க, நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் கிளைமாக்ஸாய் எனது வாக்களிக்கும் முறை வந்துவிட உள்ளே நுழைந்தேன்.விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, என் விரலில் மையிட்டு பின் ஒப்பமிட்டு, மெசினில் என் வேட்பாளரின் பொத்தானை அழுத்த அது அழகாய் சத்தமிட ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புன்னகையுடன் வெளியேறினேன்.


         வெளியேறிய போது என் வரிசையில் இன்னும் கொஞ்சம் கூடியிருந்தது.அதைவிட அம்மணிகளின் வரிசை இன்னும் அழகழாய் நீண்டிருக்க, இன்னொரு ஓட்டு போட முடியாதா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வெளியேறினேன்.

ஓட்டு போட விருப்பம் இல்லாதவங்க கூட வாக்குச்சாவடிப்பக்கம் போய்ப்பாருங்க....உங்களுக்கே விருப்பம் வரும்....
இது ஆண்களுக்கு மட்டுமல்ல....அம்மணிகளுக்கும் தான்...ஹிஹிஹி 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

7 comments:

  1. இதுவல்லவோ ஏக்கத்துடன் கூடிய ஜனநாயக கடமை... ஹா... ஹா...

    ReplyDelete
  2. அங்க போயும் ஜொள்ளா!?

    ReplyDelete
  3. ஆரம்பம் சரிதான் முடிவுல சோகமோ?

    ReplyDelete
  4. மக்களை ஓட்டு போடா சொல்றதுக்கு நல்ல பிரசார யுக்தி

    ReplyDelete
  5. நல்ல ஏக்கம்தான்! நானும் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன்!

    ReplyDelete
  6. கலரும் பாத்தாச்சு,ஓட்டும் போட்டாச்சு!வெரி குட்!!ஒவ்வொருத்தரும் உங்க மாதிரியே ஜன நாயகக் கடமைய நிறைவேத்தினா நல்லது!!!

    ReplyDelete
  7. க்டமையும் செய்தாயிற்று... கொஞ்சம் கலரும் பார்த்தாயிற்று! :))))

    வாழ்த்துகள் ஜீவா.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....