Saturday, May 4, 2013

ஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா

நம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலையில் பள்ளி கல்லூரி, அலுவலங்களுக்கு செல்லும்  ஏகப்பட்ட அம்மணிகள்...அசின், நயன் தாரா, லட்சுமி மேனன் பாவனா வடிவில்....நீண்ட கரு கரு கூந்தலுடன்  உருண்டை விழிகளுடனும்.....தாராளமான மனசுடனும்........ம்ம்ம்..வருங்கால நாயகிகளை மனதார வாழ்த்திவிட்டு ராமரை தரிசிக்க கிளம்பினோம்..

அதற்கு முன் கேரள பாரம்பரிய உணவான புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
திருச்சூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருப்பரயார்.நாங்கள் சென்றபோது கோவில் விசேசம் போல.அலங்கார பூக்கள் கொண்டு வீதியில் நடனமாடிக்கொண்டு இருந்தனர்.செண்டை மேளம் கொட்டி மிக அழகாக இருந்தது அந்த நிகழ்வு. (ஒருவேளை எங்களை வரவேற்க கேரள சமஸ்தான ராஜா ஏற்பாடு செய்து இருப்பாரோ )
 கோவிலுக்கு செல்லும் இருபுறமும் எப்பவும் போல நிறைய பிளாட்பார கடைகள்.வேஷ்டி, துண்டுகள், பக்தி பிரச்சார பாடல் கேசட்டுகள், அப்புறம் கேரளாவின் பாரம்பரிய லாட்டரி சீட்டு விற்பனை.வேடிக்கை பார்த்தபடியே கோவிலுக்கு நடையைக்கட்டினோம்.
வீடு போன்ற அமைப்பில் இருக்கிற கோவிலுக்குள் பயபக்தியுடன் உள்நுழைந்தோம்.கேரள கோவில்களில் உள்ளே நுழையும் போது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்லவேண்டும்.நாங்களும் அதுபோலவே நாங்களும் வெற்றுடம்புடன் நுழைந்தோம்.கேரளாவின் பாரம்பரிய முறையில் இருக்கிறது கோவில்.கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், புராதன சின்னங்கள் என அழகாய் இருக்கிறது.திருச்சூரின் வடக்கும்நாதன் கோவிலை போன்றே இங்கும் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பு.கோவிலை ஒட்டியே திருப்பரையாறு என்கிற புழா ஓடுகிறது.பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.
பரந்து விரிந்து இருக்கிறது கோவில்.இந்த கோவிலில் மீனூட்டு என்கிற நேர்த்திக்கடன் மிகப்பிரபலமானது.ஆற்றில் இருக்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாக வைத்து இருக்கின்றனர்.அதுபோலவே வெடி வெடிப்பதும்..இதற்காகவே தனி கவுண்டர் வைத்து இருக்கின்றனர்.நாங்களும் எங்களது பங்குக்கு வெடியும் மீன் உணவும் வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினோம்.பின் ராமரை தரிசிக்க வரிசையாய் வீடு போன்ற அமைப்பில் இருக்கும் கோவிலுக்குள் உள் நுழைந்தோம்.
 
 
பயபக்தியுடன் ஸ்ரீராமரை வேண்டிக்கொண்டோம்.இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகும்.இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவனின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை திருமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.மேலும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோசலை கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
 இந்த கோவிலின் வரலாறு என்னவெனில் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு விக்கிரங்கள் கிடைத்ததாம்.ராமர், லட்சுமனன், பரதன், சத்ருக்கன் ஆகியோரின் விக்கிரங்களே அவைகள்.இந்த விக்கிரங்களை பிரதிஷ்டை செய்ய பிரசன்னம் பார்த்த போது ஸ்ரீராமரை திருப்பரையாறிலும், லட்சுமணரை மூழிக்குளம், பரதரை இரிஞ்ஞாலகுடாவிலும், சத்ருக்கனை பாயம்மல் என்கிற இடங்களிலும் கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.இந்தியாவிலேயே ஒரே மாவட்டத்தில் நால்வருக்கும் கோவில் இருப்பது இங்கு தான்.
இந்த விக்கிரங்களை துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் பூஜிக்கப்பட்டவை என்றும் துவாரகை கடலில் மூழ்கிய போது அவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் நம்பப்படுகிறது.மேலும் நான்கு வேதங்களையும் இந்த விக்கிரங்கள் குறிக்கின்றன.ஸ்ரீராமர் ரிக் வேதமும், லட்சுமணர் யஜுர் வேதமும், பரதர் சாம வேதத்தினையும், சத்ருகன் அதர்வண வேதத்தினையும் குறிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.இந்த நால்வரையும் ஒரே நாளில் உச்சிகாலத்திற்குள் வேண்டிக்கொண்டால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.இதற்கு நாலம்பலம் காணல் என்றும் அழைப்பர்.

கோவிலுக்கு செல்லும் வழி - திருச்சூரில் இருந்து திருப்பரையார், 25 கிலோ மீட்டர் தொலைவு, பஸ் வசதிகள் இருக்கின்றன.
 விசேச விழா - பூரம் மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
நேரம் -4.30 am to 12.30 pm, 4.30 pm to 8 pm.

கிசுகிசு : கோவிலில் எப்பவும் போல மலையாள அம்மணிகள்..கேரள உடை உடுத்தி பார்க்கவே அம்புட்டு அழகாய்....ம்ம்ம்...கொடுத்துவைத்தவர்கள்.
கோவில் போய்ட்டு திரும்பி வரும் போது நமக்காகவே திறந்து வைத்தது போல ஒரு கள்ளுக்கடை.நம்ம சொந்தக்காரங்களோட வருகைக்கு காத்திருந்த கடையில் மூன்றாவது ஆளாக நுழைந்தேன்.மேலும் தொடர .கள்ளு


நேசங்களுடன்

ஜீவானந்தம்

5 comments:

  1. அதானே பார்த்தேன்.. எங்கடா தரிசனம் இன்னும் கிடைக்கலியேன்னு..

    ReplyDelete
    Replies
    1. ஆமா மச்சி..செம தரிசனம்...

      Delete
  2. வெளிமாநிலம் போய் அங்கயும் தரிசனம் பண்ணி இருக்கீங்களே...நான் கோவிலை சொன்னேன்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....