Showing posts with label மூணாறு. Show all posts
Showing posts with label மூணாறு. Show all posts

Thursday, February 19, 2015

கோவை மெஸ் - ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு

ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு
                      மூணாறு இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலைத்தொடர்கள் கொண்ட அழகிய கோடை மலைவாசஸ்தலம்.கண்ணுக்கு பசுமையையும், உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இனிமையையும் ஒரு சேர தரும் சுற்றுலாத்தலம்.நாங்கள் போன அன்று காதலர் தினம் வேற.ஏற்கனவே அம்மணிகளால் நிரம்பி செமயாக இருக்கும்.அன்று சொல்லவா வேண்டும்... புதிதாய் மணமுடித்தவர்கள் தங்கள் ஹனிமூனை சிறப்பிக்க வந்து குவியும் இடம் வேறு... ஜோடி ஜோடியாய் காதலர்கள்..வெள்ளைக்கார அம்மணிகள், இரண்டு நாள் விடுமுறையை கழிக்க ஜோடியாய் புறப்பட்டு வந்து இயற்கையையும், இரவில் குளிரையும்(?) அனுபவிக்க வந்தவர்கள் என எங்கும் நீக்கமற நிறைந்திருந்தனர்.குழந்தை குட்டிகள் என குடும்பத்தோடு வந்திருப்பவர்கள், குட்டீஸ்களை கவனித்து கொள்ள பெரியவர்களையும் சேர்த்து கொண்டு வந்தவர்கள் என மூணாறே பரபரப்புடன் இருந்தது.

                   நாங்கள் வந்த நேரம் பசி வயிற்றைக் கிள்ளிய மட்ட மத்தியான நேரமாதலால், கண்முன்னே காட்சியளித்த அம்மணிகள் கொஞ்சம் மங்கலாக தெரியவே, தெம்பாய் பார்க்க கொஞ்சம் ஏதாவது அள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டுமே என மூணாறின் வாசியான ஒருத்தரிடம், எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என வினவ, ரப்சிக்கு போங்கள், எல்லாம் சுவையாக இருக்கும் என சொல்ல, அங்கே ஆஜரானோம்.
              மூணாறின் மெயின் பஜாரில் இருக்கிறது இந்த ஹோட்டல்.கொஞ்சம் சிறிய ஹோட்டல் தான்.ஆனால் நன்றாக வைத்திருக்கிறார்கள்.இண்டீரியர் அமைப்பு நன்றாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும், பாதிக்கும் மேல் ஃபாரினர்கள்.கூடவே அயல்நாட்டு அம்மணிகள் அரை குறை ஆடையோடு (நம்மூர் ராமராஜன் பனியன் மற்றும் டிரவுசர் போட்டுக்கொண்டு)....அவ்வப்போது நம்மூர் அம்மணிகளும் வந்து போக ஹோட்டல் களை கட்டியது.எங்களுக்கு தோதான இடத்தில் அமர, மெனுகார்டு வர நிறைய அயிட்டங்கள் வெளிநாட்டுக்காரர்களுக்கு ஏற்றபடி இருக்க, (ஸ்பானிஷ் ஆம்லேட், மெக்சிகன் சல்சா, இஸ்ரேல் சாக்ஸ்குகா..(என்ன டிஷ்ஷோ))அப்போது தான் புரிந்தது ஏன் அயல்நாட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என.....
                     ஃபாரின் உணவுகள் எதுவும் நமக்கு செட்டாகாது என்கிற படியால் நம்மூர் உணவுகளையே ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம். நம்ம அம்மணியும் ட்ராவல் அதிகமாக இருப்பதால் நான்வெஜ் ஏதும் வேண்டாமென சொல்லிவிட, என் பங்குக்கு மீன் கறியும், பீப் பிரையும், கொஞ்சம் சாதமும் ஆர்டர் செய்தேன்.குட்டீஸ்களுக்கு நூடூல்ஸ், சிக்கன் பிரியாணியும் ஆர்டர் செய்து விட்டு, கண்முன் நிழலாடிய அம்மணிகளை பார்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தது.

வெளியே பரவிய குளிர் உள்ளுக்கும் பரவ ஆரம்பித்த நேரத்தில் சூடாய் சாதம் இருக்க, மஞ்சள் நிறத்தில் எண்ணை மிதக்க மீன் குழம்பு இருக்க, அதில் மீன் மிதந்து கொண்டிருந்தது.சூடான சாதத்தில் கொஞ்சம் மீன்குழம்பை  ஊற்றி பிசைந்து சாப்பிட ஆரம்பிக்க, சுவை நம் நாவில் பரவி, காரமும், புளிப்பும், மீன் வாசனையும் நம்முள் கலக்க, மெய் மறந்து போனேன்.கொஞ்ச கொஞ்சமாய் சாதத்துடன் மீன்குழம்பை ஊற்றி பிசைந்து ரசித்து ருசித்து சாப்பிடவும், அவ்வப்போது குழம்பில் வெந்த மீனினை அப்படியும் இப்படியும் திருப்பி முள்ளை விடுத்து கறியினை சாப்பிட சாப்பிட, பக்கத்திலிருந்த அயல்நாட்டுக்கார அம்மணியின் கண்களில் ஒரு வித காரம் தென்பட்டது என்னவோ உண்மைதான்...மீனின் முள்ளை மொத்தமாய் வாயில் வைத்து சப்பி ஒரு இழுப்பு இழுத்து இருக்கின்ற கொஞ்ச நஞ்ச காரம், புளிப்பு சுவையை சப்பி கீழே வைக்க, காரசாரமான முள் நிறைந்த மீனினை இப்படியும் சாப்பிட முடியுமா என ஆச்சர்யப்பட்டு பார்த்தது அந்த இரு ஜோடி விழிகள்...

அடுத்து வந்த பீஃப் பிரை நன்றாக வெந்து, செம டேஸ்டில் இருக்க, இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இறங்க ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் இரண்டும் சுத்தமாய் காலியானது.
குட்டீஸ்களுக்கு வந்த பிரியாணியின் சைட் டிஷ் ஆக இருந்த கேரளாவின் சம்பந்தி (சட்னி) செம டேஸ்டாக இருந்தது.கேரள பிரியாணி நமக்கு கொஞ்சம் ஆகாது.மசாலா சாதத்துடன் தனியாக சிக்கன் கிரேவிமாதிரி வைத்து தருவதால் அதன் டேஸ்ட் எனக்கு கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும்.




              மற்றபடி அனைத்தும் சூப்பர். ஹோட்டலில் காலி டேபிளே பார்க்க முடியவில்லை.சாப்பிட்டு முடித்தவுடன் உடனே நிறைந்து கொள்ளும்.
டூரிஸ்ட் பிளேஸ் என்பதால் விலை அதிகம் என்பது இல்லை.நார்மலான விலைதான்.தைரியமாக சாப்பிட செல்லலாம்.
சாப்பிட்டு முடித்து தெம்பாய் பில் கொடுத்துவிட்டு வெளியேற, கடந்து சென்ற அம்மணிகள் கொஞ்சம் தெளிவாய் தெரிய ஆரம்பித்தனர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்


.









இன்னும் கொஞ்சம்...

Sunday, February 15, 2015

பயணம் - மூணாறும் யானையும்...

மூணாறு...
             காதலர் தினத்தை செலிபிரேட் பண்ணலாம்னு நம்ம அம்மணியையும், வாரிசுகளையும் கூட்டிட்டு கொஞ்ச தூரம் ட்ரைவிங் போலாமேன்னு அழைச்சிட்டு போனது மூணாறுக்கு...
             இருபுறமும் பசுமை வேய்ந்த தேயிலைத்தோட்டங்கள்...கண்ணுக்கெட்டும் தூரம் மலை முகடுகள் அனைத்தும் பசுமையை போர்த்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் தேயிலைத்தோட்டத்தின் ஊடாய் செல்லும் மலைப்பாதையில் காரில் ஒலித்த இசையையும், இருபுறமும் உள்ள பசுமையையும் ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு முன் பகல் வேளையில், கொஞ்ச தூரத்தில் வளைவின் முன்பாய் ஆட்கள் கூட்டம், மற்றும் வண்டிகளின் அணிவகுப்பு...என்னவாக இருக்கும் என  யோசித்துக்கொண்டே வேகத்தினை குறைத்து மெதுவாய் முன்னேற, முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாய் ரிவர்சில் வர, என்னவென்று பதைபதைத்து கேட்க, ஆன...ஆன... என்று மலையாளத்தில் பறைந்து விட, பக்கென்று ஆனது...நானும் ரிவர்ஸ் எடுக்கலாமா என்று யோசிக்கையில், இரு வளைவுக்கு முன்னால் இருந்த கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது.



            மறைவிலிருந்து வெளியேறிய யானை ஒன்று படு கம்பீரமாய்...வெகு பிரம்மாண்டமாய் ரோட்டில் நடந்து செல்ல கை கால்கள் நடுக்கம் கொண்டன...எங்கே திருப்பி நம் வழியில் வந்துவிடுமோ என கலக்கம் அடைந்தது மனது.எப்பொழுதோ யூ டுபிலும், பேப்பர்களிலும் யானையின் அடாவடிகளைக் கண்டு பயந்திருந்த அந்த ஒரு கணம் நொடிப்பொழுதில் வந்து சென்றது.கொஞ்ச நேரம் அப்படி இப்படி என போக்கு காட்டிக்கொண்டிருந்த யானை சற்று ஓரமாய் ஒதுங்கி நிற்க, வாகனங்கள் வரிசைகட்டி பயந்தபடியே சென்றன.என் முறையும் வந்தது.செல்வது சிங்கத்தில் என்றாலும் யானையைக்கண்டு அதுவும் பூனைபோல் ஊர்ந்து சென்றது.கிடைத்த நொடிப்பொழுதில் கேமராவில் சிக்கிக்கொண்டது யானை.எவ்வளவு பெரிய உருவம்....சிவந்த நாசிகளைக்கொண்ட தும்பிக்கை...நீண்ட தந்தம்...சேற்றில் புரண்ட மேனி...பில்லர் போன்ற கால்கள், லாரி உயரத்திற்கு இருக்கும் அதன் உயரம் என.... கொஞ்சம் பயந்து தான் போனோம்....
              மூணாரில் ஒரு சில மணிகளை கழித்து திரும்பவும் அதே சாலையில் வர, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாய் யானையின் வருகையால் கலவரப்பட்டு கிடந்த இடம் இப்போது வெறுமையாய் கிடந்தது.மீண்டும் எங்காவது யானை தட்டுப்படுமா என்ற அச்சத்திலேயே வந்து கொண்டிருந்தோம்...கேரள எல்லை முடிந்து தமிழக வனப்பகுதியில் நுழைந்த போது, ஒவ்வொரு எச்சரிக்கைப் போர்டும் கண்ணில் பட, பயந்தபடியே சென்று கொண்டிருந்தோம்.மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச அச்சமுடனே மெதுவாய் வந்து கொண்டிருந்தோம்...சாலையின் ஓரத்தில் எதேச்சையாய் கொஞ்சம் பார்க்க, யானைகள்......குட்டி யானையுடன் ஒரு தாய் யானையும், கொஞ்ச தூரம் பின்பாய் ஒரு பெரிய யானையும் தெரிய காலையில் அனுபவித்த அதே பக்கென்ற அனுபவம் மீண்டும் வர, இருந்தாலும் தைரியமாய் இருந்தோம்...மலைப்பாதை இல்லை...அழுத்தி பிடித்து சென்று விடலாம் என்ற நம்பிக்கை தான்...

கோவில்களில் ஆசிர்வாதம் கொடுக்கும் பழகிய யானையின் பக்கத்திலேயே செல்வதற்கு பயம்...அப்படியிருக்க காட்டு யானையைப்பற்றி சொல்லவா வேணும்....கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தி யானையின் அழகை ரசித்துவிட்டு கிளம்பினோம்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, August 20, 2012

மூணாறு - இயற்கை அன்னையின் மடியில்

மூணாறு
கொச்சின் ல வேலையை முடிச்சிட்டு மதுரை போலாம்னு முடிவு பண்ணி மூணாறு வழியை தேர்ந்தெடுத்தோம்.வளைந்து வளைந்து செல்லும் பாதை.பசுமை இருபுறமும்.வழியெங்கும் இயற்கை கொட்டி கிடக்கிறது. ரோட்டின் ஓரத்திலேயே நுரை பொங்கி வரும் அருவியின் ஆர்பாட்டம்.பசுமை மேலாடையை போர்த்தி வைத்து இருக்கிற நிலப்பரப்புகள்.தேயிலை தோட்டங்களின் பசுமை புரட்சி...என எங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை..பசுமை..









நாங்க போன நேரம் வானம் பொத்து கிட்டு ஊத்தியதில் எதையும் பார்க்க முடியாமல் போய் விட்டது.கிடைத்த கேப்பில் எடுத்த படங்கள் கொஞ்சமே..
மேகங்கள் சூழ்ந்த மழையின் சாரலில் பயணித்த படியே மூனாறுல இருந்து மலைப்பாதை வழியா போடி மெட்டு வந்து சேர்ந்தோம்.
அதிகமா போட்டோ எடுக்க முடியல..அவ்ளோ மழை.நல்ல இதமான சூழ்நிலையில் திரும்ப செல்லவேண்டிய ஆவலை ஏற்படுத்தி விட்டது...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, February 14, 2011

அருவி - மூணாறு

ஆலுவா லிருந்து மூணார் போற வழியில ஒரு அருவி இருக்கு.ரோட்டு ஓரத்திலேயே இருக்கு.



தண்ணீர் சும்மா சில்லுனு முகத்தில பட்டு தெறிக்கும்.அவ்ளோ நல்லா இருக்கும்.
அருவி பேரு என்னனு தெரியல.ஆனா 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அங்க இறங்கி நின்னு போட்டோ எடுத்து கிட்டேன்.ரொம்ப கடை இல்ல. மொத்தம் 3 கடை தான் இருக்கு. கூட்டம் அதிகமா இல்ல.அங்க அன்னாசி பழ துண்டுகள், அப்புறம் மாங்காய் போட்டு வச்சிருந்தாங்க .ரொம்ப டேஸ்டா இருந்துச்சு.குளிருக்கு இதமா இருந்தது.


அங்க இருக்கிற மக்கள் யாரும் இயற்கையை விரும்பல போலிருக்கு.ஒருவேள அவங்களுக்கு பழகி போய் இருக்கலாம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...