Showing posts with label Singapore. Show all posts
Showing posts with label Singapore. Show all posts

Monday, August 26, 2013

பயணம் - சிங்கப்பூர் - EAST COAST PARK (ECP) - SINGAPORE, குடில் டேட்டிங், சைக்கிளிங், நீச்சல், பொழுது போக்கு

         ஒரு மதிய வேளை...மனதுக்கு இதமான இடத்துக்கு போவோம் என்றெண்ணி போனது இந்த East coast park பீச்சுக்கு.சிங்கப்பூரின் பெடோக் பகுதிக்கு அருகில் இருக்கிற இந்த பீச்சில் நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சி அடைந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது.பொழுது போக்காய் மீன் பிடித்தல், பட்டம் விடுதல், நீச்சலடித்தல், வாட்டர் சர்ஃபிங், சைக்கிளிங், ரோலர் ஸ்கேட்டிங், கேம்ப் எனப்படும் குடில்கள்,நடைபயணம், மனம் ரிலாக்ஸ் ஆக பீச், குடும்பம் குடும்பமாய் கும்மியடிக்க பார்பிகியூ இடங்கள் என எல்லாமாய் இருக்கிறது.




                   பரந்து விரிந்து கிடக்கும் கடலினைப் பார்த்துக்கொண்டே ஓரு ஓரமாய் நடந்து செல்கையில் முதலில் கண்ணில் பட்டது இந்த குடிசைகள் சாரி குடில்கள் தான்.பச்சைப்புல்வெளியில் பசுமையான மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே நீல கலரில் குடில்கள் வியாபித்து இருந்தன.( நீலக்கலர் என்றதுமே அப்போது அது ஞாபகத்திற்கு வரவில்லை.) ஒரு வேளை நாடோடிக் கூட்டங்கள் தான் நட்டு வைத்து இருக்கின்றனரோ என ஒரு ஆச்சர்யத்தில் நண்பரைக் கேட்க அவர் சொன்னது இன்னும் படு ஆச்சர்யம்.வீக் எண்ட் களில் தள்ளிக்கொண்டு, அள்ளிக்கொண்டு, கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு (இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ ) தனிமையைத்தேடி வரும் ஜோடிகள் சல்லாபிக்க சரசமாட சாரி பேசிக்கொள்ள அப்புறம் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.




             எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ்க்கு பயப்படாமல், லாட்ஜ்களுக்கு செலவளிக்காமல் திறந்த வெளியில் குடில் அமைத்து தங்களை புதுப்பித்துக்கொள்ளும் / உணர்ந்து கொள்ளும் இடமாக குடில்களை அமைத்து சல்லாபித்துக்கொண்டு இருக்கின்றனர் கொடுத்த வைத்த குடிமக்கள்.இதுக்கு பேரு தான் குடில் டேட்டிங்கா...? குடில் விலை ஒரு சில டாலர்களில் அடங்கிவிடுவது மட்டுமே.அப்புறம் அம்மணிகளுக்கு பண்ற செலவு தவிர மத்தபடி எந்த செலவுமில்லை.ஆக மொத்தம் குறைந்த விலையில் நிறைந்த சுகம்.கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.



        நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..ஒரு ஏக்கப்பெருமூச்சுதான்....தினத்தந்தி பேப்பரில் வர்ற மாதிரி நிறைய அசைவ செய்திகள் இருக்காது.70 வயசு கிழவியை கெடுத்தது, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது, அப்புறம் அங்க அவன் கெடுத்தான் இங்க இவன் கெடுத்துட்டான்னு பக்கம் பக்கமா நிச்சயமா நியூஸ் வராது.அதே சமயம் நம்மூர் சட்டம் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டும்.கண்டிக்க, தண்டிக்க, துண்டிக்க பாரபட்சம் காட்டாமல் இருந்தால் இதுவும் சாத்தியமே.

      அப்படியே பேசிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நோட்டமிட்டதில் இந்த பீச் மிக சுத்தமாக இருக்கிறது.எந்த வித அசுத்தங்களோ, குப்பைக்கூளங்களோ இல்லை. பீச் ஏரியாவில் இந்த குடில்கள்  நிறைய இருந்தாலும் அம்மக்களை யாரும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்கின்றனர். குடில் இல்லாத மக்கள் குடும்ப குடும்பமாய் அடுப்பு மூட்டி பார்பிக்யூ சமையல் செய்து களிக்கின்றனர்.இன்னும் நிறைய பேர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பீச்சினை வலம் வருகின்றனர்.இதற்காகவே சைக்கிள் வாடகைக்கு விடும் இடமும் இருக்கிறது.பேமிலி சைக்கிள் எனப்படும் ஒரு சைக்கிளில் குடும்பமே குதூகலமாக பீச்சினை சுற்றி வருகின்றனர்.







            ஒரு சிலர் பட்டம் பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.நம்மளை மாதிரி ஆட்கள் உலாவரும் அம்மணிகளை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் கண்டபடி இன்னும் சிலர்.இப்படி ஒவ்வொருவரும் அமைதியான மாலைப் பொழுதினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுகின்றனர். 


       
           நன்றாக திட்டமிட்டு மீன்பிடிக்க இடம், வாட்டர் ஸ்கை செய்ய இடம். புல்வெளிகள், சைக்கிள் ஓட்ட பாதை, நடக்க ஒரு பாதை, மரங்கள், சமைத்து சாப்பிடுவர்களுக்கு டேபிள் என அமைத்து இருக்கின்றனர்.



               எல்லாம் ஆற அமர்ந்து பார்த்து ரசித்தபின் நாங்களும் கடலில் குதித்து எங்கள் களியாட்டத்தினை ஆரம்பித்தோம்.(ம்ம்ம்.என்ன பண்றது எங்களுக்குத்தான் குடில் இல்லையே..ஹிஹிஹி ).

               கடலில் குளித்த பின் நல்ல தண்ணீரில் குளிக்க தனித்தனி ஷவர் வைத்து இருக்கின்றனர்.அங்கேயே உடை மாற்றும் அறைகளும் இருக்கின்றன.டாய்லட் வசதிகளும் இருக்கின்றன.ஆனா நம்ம ஊர் பீச் களை நினைக்கையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நம்ம கவர்மெண்ட்டுக்கு அவ்ளோ தான் முடியும்.மக்கள் தொகைப்பெருக்கம், லஞ்சம், ஊழல் என எல்லாம் பெருகி இருக்கும் போது என்னத்த செய்யுறது..என்னத்த சொல்றது....

                 இருட்ட துவங்கியவுடன் நடையைக்கட்ட ஆரம்பித்தோம்.செல்லும் போது குடில்களை பார்க்கின்ற போது ஒரு ஏக்கப்பெருமூச்சு வெளிவந்தது என்னவோ உண்மைதான்...ஏன்னா நம்மூர்ல தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு, (முடிஞ்சா கற்பையே பறிப்பு), பீச்சில் காதலர்களிடையே போலீசார் மாமூல் வசூல், மகாபலிபுரம் ஈசிஆர் ரோட்டுல போற வர்ற காதலர்கள்கிட்டே வண்டியை மறிச்சு பணம் வசூல் இப்படி நடக்கிறத பார்த்தா சிங்கப்பூர் குடில் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்.

கிசுகிசு : குடிலுக்குள்ள தான் போக முடியல...அட்லீஸ்ட் அதுக்கு முன்னாடியாவது நின்னு போட்டோ எடுத்துக்கலாமே அப்படின்னு சிங்கப்பூர் நண்பருடன்.....

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்


ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 21, 2013

கோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஏரியாவில் கால் வலிக்க சுத்திட்டு இருக்கும் போது ரொம்ப வறண்டு போய் இருந்ததால் தாகத்துக்கு ஏதாவது குடிக்கலாமே அப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் குள்ள புகுந்தோம்.டேக்கா செண்டர் எனப்படும் அந்த மாலுக்குள் நுழைய ஏகப்பட்ட கடை கண்ணி(ன்னி)கள்.துணிக்கடை, ஹோட்டல், என நிறைய....ஒரு சுத்து சுத்திட்டு வந்து தோதா ஒரு இடத்தில் உட்கார பக்கத்தில ஒரு ஜூஸ் கடை...அதில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு பானம் இருந்துச்சு.கருப்பு கலர், பச்சை கலர், வெள்ளை  கலர் என கலர் கலரா இருக்க ஒரு அம்மணி வந்து வாங்கி குடிக்கவும் எனக்கு ஆர்வம்..என்னவா இருக்கும் அப்படின்னு.நமக்குன்னு ஒண்ணு கேட்கலாம்னு பார்த்தா அந்த கடைக்காரர் நம்ம ஊர்க்காரர்.விவரத்தை கேட்கவும் புட்டு புட்டு வைத்தார்.அது பேரு சென்டால் அப்படின்னு விவரத்தை சொல்ல.. சரி ..நமக்கு ஒரு கிளாஸ் என கேட்க ஸ்பெசலாய்  போட ஆரம்பித்தார்.பனங்கருப்பட்டி போட்டு தேங்காய் பால் ஊற்றி அரிசியில செஞ்ச நூடுல்ஸ் போட்டு ஐஸ்கட்டிகள் நிறைய போட்டு தந்தார்.
       ஓரு ஓரமா உட்கார்ந்து போக வர இருந்த அம்மணிகளை ரசித்துக்கொண்டே குடித்ததில்  சீக்கிரம் காலியாகிப்போனது.இந்த பானம் மிக நன்றாக இருக்கிறது..பனங்கருப்பட்டி வாசத்தில் தேங்காய்ப்பால் கலந்து ஜில்லென்று குடிக்க மிக சுவையாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியைத்தரும் பானம் என்று கூடுதல் தகவலை சொன்னார்.இதன் விலை 1.20 டாலர்தான்.நன்றாக இருக்கிறது.





நிறைய தமிழர்கள் புழங்கும் இந்த இடத்தில் அவ்வப்போது அழகழகாய் வெளிநாட்டு அம்மணிகளின் வருகை மனதிற்கு இதமளிக்கிறது.
கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா குடிச்சுப்பாருங்க...செமையா இருக்கும்.
இந்த பானம் பத்தி ஒரு சிறு தகவல் இது மலேசியாவின் மலாக்காவில் மிகப்பிரபலமான பானம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...