Thursday, April 6, 2017

கோவை மெஸ் - ஜே பி ரெஸ்டாரண்ட் (JB restaurant ),பொன்மேனி, மதுரை - 16

                  கேரளா போய்ட்டு ரிடர்ன் தமிழ்நாட்டு பார்டர் வழியாய் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வந்தபோது மழை தூற ஆரம்பித்தது. இரவும் கவிழ்ந்திருக்க, பசியை உணர ஆரம்பித்தது வயிறும் மனமும்.சாப்பிடுவதற்கான ஹோட்டலை அருகிலேயே தேர்ந்தெடுப்போம் என்றெண்ணி மதுரையில் உள்ள நண்பர் பிரகாஷை அழைக்க, அவரோ நானும் பக்கத்தில் தான் இருக்கிறேன், வந்துவிடுகிறேன் என்று சொல்ல, அவருக்காக காத்திருந்தோம்.கடைவீதியில் மதுரை மண்ணின் அம்மணிகள் அந்த மழை நேரத்தில் தென்றலாய் வீச மனம் குளிர் எடுக்க ஆரம்பிக்க, பசி மறைந்து போக நினைக்கையில் தமிழ்வாசி பிரகாஷ் வரவும், அவரும் நனைய ஆரம்பித்தார்.பின் எப்பவும் போல வழக்கமான நலம் விசாரிப்புகளில், எங்கு சாப்பிட போலாம் என்கிற அழைப்பும் இருந்தது.
                   அடுத்த சில நிமிடங்களில் பொன்மேனியில் மெயின் ரோட்டை ஒட்டி பிரியும் ஒரு சின்ன ரோட்டில் இருந்தோம்.கடை முன்பு கூட்டம்.தகர கொட்டகை, மெலிதான விளக்கு வெளிச்சம்.டாஸ்மாக் கடை போன்ற அமைப்பு.ஒருவேளை பழக்கதோஷத்தில் நம்ம கடைக்குத்தான் அழைத்து வந்துவிட்டாரோ என்று நினைக்கையில் கொத்து புரோட்டாவினை தோசைக்கல்லில் கொத்தும் சத்தம் கணீரென்று வர, அட …ஹோட்டலுக்குத்தான் வந்து இருக்கிறோம் போல என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தோம்.

                செம கூட்டம். வண்டிகள் வரிசை கட்டி காத்திருக்க, டேபிள்கள் நிரம்பி வழிகின்றன.ஒவ்வொரு டேபிளிலும் கோழிகள் தந்தூரியாகவோ, கிரில்லாகவோ மாறி வாடிக்கையாளர்கள் கையிலும் வாயிலும் இருந்ததை பார்த்தபடியே எங்களுக்கான டேபிளில் அமர்ந்தோம்.
               இரவு வெகுநேரம் ஆகி இருந்ததால் நிறைய அயிட்டங்கள் மிஸ்ஸாகி இருந்தன.கோழியில் தந்தூரி, சில்லி, க்ரில் இவை மட்டுமே இருந்தன.ஆட்டுக்கறியில் சில பார்ட்ஸ்கள் தீர்ந்துவிட்டு இருந்தன.ஆட்டின் அத்தனைப் பகுதியிலும் வெரைட்டி வெரைட்டியாய் கிடைக்கிற இடம் மதுரைதான்.இங்கும் அப்படித்தான்.நேரம் ஆனதால் எல்லாம் காலியாகிவிட்டிருந்தது.
                    சரி இருப்பதை கேட்டு சாப்பிடலாம் என்று சர்வரை அழைக்க, ஓடோடி வந்து வாழை இலையை பரப்பி வைத்துவிட்டு, நீர் தெளித்துவிட்டு, மூன்று கப்புகளில் மட்டன், சிக்கன் குழம்பு, சட்னி வைத்து விட்டு, கறி தோசை, சிக்கன் தோசை இருக்கிறது.மற்றபடி தந்தூரி, கிரில் தான் என சொல்ல, கறி தோசை மட்டும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.

                காத்திருந்த நேரத்தினை ஏன் வீணாக்க வேண்டும் என்று கடையை நோட்டமிட்டதில், டேபிள்கள் அனைத்தும் ஆண்களால் நிரம்பி இருந்தது.பேம்லி ரூம் என்று தனியாக இருக்கிறது.அங்கு பெண்கள் குழந்தைகள் என நிரம்பி இருந்தனர்.மாஸ்டர் வெகு மும்முரமாய் தோசைக்கல்லோடு விளையாண்டு கொண்டிருந்தார்.கல்லில் இருந்து எழும் ஆவியின் புகையில் கறியின் மசாலா மணமும், மாவின் வேகும் மணமும் கடை எங்கும் பரவிக்கொண்டிருந்தது, கூடவே அவரின் உழைப்பின் மணமும்.

                ஒவ்வொரு டேபிளிலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாய் அந்நிய பானங்கள் இடம் பெறாது, பொவண்டோ மற்றுமே இருக்க, சிக்கன் தந்தூரி மற்றும் கிரில்க்கு இணையாய் இந்த பொவண்டேவினை பருகி கொண்டிருந்தனர் (இது என்ன டேஸ்ட்டுன்னு தெரியல.நல்ல காரம் சாரமா சாப்பிடற நேரத்தில கேஸ் நிறைந்த பானத்தினை பருகி வயிற்றை நிரப்புவது…)
               கொஞ்ச நேரத்தில் எங்களுக்கு உண்டான தோசை இலையை வந்தடைய, எங்கள் வேலையை ஆரம்பித்தோம்.சூடு நிறைந்த கறி தோசை இலையை பொசுக்க ஆரம்பிக்க, மசாலா மணத்தோடு இலவச இணைப்பாய் வாழை இலையின் சுவையும் ஒன்று சேர மணம் நம் நாசியை துளைக்க, ஆட்டோமேட்டிக்காய் கை இயங்க, தோசையில் ஒரு விள்ளலை பிய்த்து உள்ளே தள்ள, ஆஹா…என்ன ருசி…கூடவே தேங்காய் சட்னியும், மட்டன் குழம்பும் சேர்ந்து தோசையை ஊற வைக்க, எல்லாம் ஒரு புது சுவையினை கொடுக்க, எளிதாய் பிய்த்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம்.

எலும்பில்லாத மட்டன் கறியும், மசாலாவும் தோசையில் விரவி கிடக்க, முட்டை கலந்த தோசையில் இரண்டும் ஒன்று சேர்ந்து நம் பசியை அதிகப்படுத்த அதை அவ்வப்போது தோசையால் ஆற்றுப்படுத்தி கொண்டிருந்தோம்.ஒரே தோசை தான்.நல்ல ஹெவியாய், தடித்து நல்ல மணத்துடன் இருக்க சீக்கிரம் காலியாகிப்போனது.அதே நேரத்தில் வயிறும் நிறைந்து போனது.பிரகாஷ் சிக்கன் கறி தோசையோடு போராடிக்கொண்டிருக்க, நாங்கள் அடுத்து குருமா கலக்கி ஆர்டர் செய்து முன்னேறிக்கொண்டிருந்தோம்... கலக்கியும் மிக டேஸ்டாக இருந்தது.

லேட்டாய் வந்ததினால் நிறைய அயிட்டங்கள் மிஸ் ஆகிவிட்டன.அதை சாப்பிடவேண்டும் என்பதற்காகவே அடுத்தமுறை செல்லவேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.பார்ப்போம்.

காளவாசல் டூ பழங்காநத்தம் பைபாஸ் செல்லும் வழியில் பொன்மேனி, தினமலர் அவென்யூ கீர்த்தி ஆஸ்பிடல் எதிரில் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

Saturday, March 25, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் ஜலால் ஃபேமிலி ரெஸ்டாரண்ட், மட்டன் பிரியாணி, கருங்கல், நாகர்கோவில்

               கேரளா சென்றுவிட்டு தமிழ்நாட்டுக்குள் களியக்காவிளை வழியாக உள்நுழைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக நாகர்கோவில் சென்றுகொண்டிருக்கும் போது தான் குழித்துறை அருகில் தேங்காய்பட்டிணம் என்கிற ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி துறைமுகத்தினை பார்த்துவிட்டு வருகையில் மதியம் ஆகி இருக்க, அங்கேயே புதுக்கடை என்கிற இடத்தில் ஒரு ஹோட்டலில் பிரியாணி நன்றாக இருக்கும் என சொல்ல, அருகிலிருந்த உள்ளூர்க்கார நண்பர் கருங்கல் என்கிற ஊரில் பிரியாணி நன்றாக இருக்கும் அங்கே செல்லுங்கள் என வழியனுப்பி வைத்தார்.

              புதுக்கடையில் இருந்து ஒரு பத்து நிமிட பயணத்தில் கருங்கல் என்கிற ஊரை அடைந்தோம்.சின்ன ஊர்தான்.நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையம் அருகில் இந்த ஹோட்டலைக் கண்டோம்.முகப்பில் ஒரு சின்ன ஸ்வீட் ஸ்டால் போல இருக்கிறது.ஆனால் கடைக்கு உள்ளே நுழைந்தால் மிக நீண்டு பரந்து இருக்கிறது. யூனிபார்ம் போட்ட சர்வர்கள் நிறைய பேர்கள் இருக்க, ஒவ்வொரு டேபிளிலும் குடும்பம் குடும்பமாய் நிறைந்திருந்தனர்.இண்டீரியர் மிக மெலிதாய் கண்ணை கவரும் வகையில் இருக்க, ஒருபுறத்தில் பிரியாணி அண்டாக்கள் சுடச்சுட இருக்க, அதிலிருந்து ஆவிபறக்க சூடாய் பிரியாணியை தட்டுக்களில் நிரப்பி டேபிளுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
நாங்கள் உள்நுழைந்ததும் வரவேற்ற சர்வர் டேபிளில் அமரவைத்து ஆர்டரை கேட்க, இங்கு என்ன ஸ்பெசலோ அதை கொண்டு வாருங்கள் என சொல்ல, பிரியாணியில் சிக்கன், மட்டன் இருக்கிறது, எது வேண்டும் என கேட்க, மட்டனை சொன்னோம்.

மட்டன் பிரியாணி பின்னே வர மணம் முன்னே வந்து ஆளைத்தூக்கியது.கூடவே மட்டன் கிரேவியும் சில பல துண்டுகளுடன் வந்தது.கேரள தமிழ்நாடு கூட்டு பிரியாணிபோல் வெள்ளை நிற பாசிமதி அரிசியுடன், கொஞ்சம் பொரித்த வெங்காயம் துண்டுகள் மேலே பரவியும், ஓரிரு கலர்களுடன் பாசுமதி அரிசி மணம் மிகுந்து இருக்க, அவித்த முட்டை ஒன்றும் பிரியாணியில் ஒளிந்திருக்க, பிரியாணியின் மத்தியில் மறைந்திருந்த மட்டன் துண்டுகள் எங்கள் கைவிரல்களை எதிர்பார்த்து காத்திருக்க, மணம் நாசியை துளைக்க, நாவின் சுவை மொட்டுகள் விரிய ஆரம்பித்தன.
நாங்கள் எங்கள் வேட்டையை தொடர ஆரம்பித்தோம்.கொஞ்சம் விள்ளல் எடுத்து வாயில் போட, அப்படியே பிரியாணியின் மணம் சுவை நம்மை ஆட்கொண்டது.கைகளில் அதன் மணம் ஏற ஆரம்பித்தது.நாவின் சுவை நரம்புகள் நாட்டியம் ஆட ஆரம்பித்தது.ஐநா சபையில் ஆடிய ஐஸ்வர்யா வின் நடனம் போல் இல்லாமல் மேடை முழுக்க பரவி ஆடும் நம்ம ஊர் குத்தாட்டம் போல் ஆடத்துவங்கின.


               பஞ்சு போல் வெந்திருந்த மட்டன் துண்டுகள் இன்னும் சுவையை கூட்டி நாவின் நரம்புகளின் ஆட்டத்தினை உசுப்பேத்தியது.
கைகளில் மட்டன் சுவையின் மணமும், பிரியாணியின் மசாலா மணமும் மிகவும் ஏறி இருந்தது.பரபரவென கையும் வாயும் இயங்க, தட்டிலிருந்த பிரியாணி மளமளவென காலியாகிக் கொண்டிருந்தது.அவ்வப்போது பிரியாணியின் இலவச இணைப்பாய் வந்த மட்டன் கிரேவி, கொழுப்பு மிகுந்த கறியுடன் நன்கு சுவையாய் இருக்க, அதுவும் ஒரு சேர காலியாகிக் கொண்டிருந்தது.

கை கழுவிய பின்னரும், கைகளில் வாசம் இருக்க, சுவையான பிரியாணியை சுவைத்த திருப்தி ஏற்பட்டது.
குடும்பம் குடும்பமாய் மக்கள் உள்ளே நுழைவதும், திருப்தியாய் உண்ட பின் வெளியேறுவதும் இயல்பாய் நடந்து கொண்டிருந்தது.
ஞாயிறு ஆதலால் செம கூட்டம் வேறு.பக்கத்திலுள்ள ஊர்க்காரர்கள் சமைக்க மாட்டார்கள் போல, மலையாளம் கலந்த தமிழில் சம்சாரித்தபடியே குடும்பம் குடும்பமாய் வந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் திருப்தியாய் உண்டு முடித்து பில்லை செட்டில் செய்து விட்டு மனதிருப்தியுடன் வெளியேறினோம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்







இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 21, 2017

கரம் - 27

பார்த்த படங்கள்:
புலிமுருகன்: காட்டில் வாழும் மனிதர்களை கொல்லும் புலியை, மக்களுக்காக புலியை கொல்லும் ஒருவனின் கதை.இடையிடையே ஹீரோவின் கஞ்சா கடத்தல், சந்தன மரம் கடத்தல் என ஹீரோயிச காட்சிகள்.இதனிடையே கடத்தல் மாஃபியாவுடன் பகை, போலீஸ் துரத்தல், வில்லன் புலிமுருகனை தேடுவது, புலிமுருகனின் காதல், ஊடல் கூடல், செண்டிமெண்ட், என பக்கா கமர்சியல் படம்.எப்பவும் போல கம்பிளீட் ஆக்டர் மோகன்லால் ஸ்மார்ட்.புலி வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது.படம் பார்த்ததில் இருந்து புலிமுருகனின் தீம் சாங்க் முருகா...முருகா...புலிமுருகா முணுமுணுக்க வைக்கிறது.
  
அச்சமின்றி :
மிகவும் சுவாரஸ்யமான படம்.விறுவிறுப்பான காட்சிகளுடன் மிகவும் நன்றாகவே இருக்கிறது.கல்விக்கொள்ளை பற்றி பேசும் படம்.காமெடி, ஆக்சன் என நன்றாகவே இருக்கிறது.விஜய் வசந்த் பிக்பாக்கெட் காரனாக வாழ்ந்திருக்கிறார்.சமுத்திரகனி போலீஸாக வருகிறார்.படம் மிகவும் அருமை...

துருவங்கள் பதினாறு :
செம கிரைம் திரில்லர் படம்.பார்க்க பார்க்க வியப்பூட்டும் திருப்பங்களை தந்து கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு காட்சியும் அபாரம்.சலிப்பு தராத மேக்கிங்.பாடல்கள் இல்லாத மிக நேர்த்தியான விறுவிறுப்பான அற்புத படைப்பு. ரகுமானின் பெயர் பொறித்து வைக்க வேண்டிய படம்.


படித்தது :
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்..
கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத எழுத்து நடை.பழங்குடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம் என நினைத்தால் அது சுத்த வேஸ்ட்.கட்டுரைத் தொகுப்பு போல் இருக்கிறது.புத்தகத்தினை படிக்கவே அலுப்பாக இருக்கிறது.பத்துப்பக்கங்கள், அப்புறம் இடையிடையே கொஞ்சம் புரட்டல் அவ்வளவுதான்.எடுத்து வைத்து விட்டேன்.இந்த புத்தகத்தினை ரிட்டன் அனுப்புவது குறித்து யோசிக்கனும்.
இதை எப்படி காலச்சுவடு கிளாசிக் வாழ்க்கை வரலாறு கேட்டகிரியில் சேர்த்தது என்று தெரியவில்லை. காசுக்கு கேடு, பகார்டி வாங்கி இருக்கலாம். மனமாவது சந்தோசம் அடைந்திருக்கும்.




இன்னும் கொஞ்சம்...

Friday, March 17, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை - 1

                திருவனந்தபுரத்தில் காலை டிபனை முடித்துவிட்டு நாகர்கோவில் மதுரை வழியாய் கோவை செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம்.கேரளத்தலைநகரின் சட்டசபையை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் சாலைகளில் சேச்சிகளின் வரவு அதிகமாக இருந்தது. காலை நேரம் சர்ச்க்கு செல்லும் கேரள அம்மணிகள், ஷாப்பிங் சென்டரில் பணிக்கு ஒரே யூனிபார்மில் செல்லும் அம்மணிகளையும் கண்டு ரசித்தபடி கிளம்பினோம்.
                       அன்றைய தினம் கறி தினம் ஆதலால் நிறைய மாட்டிறைச்சிக்கடைகள் வழியெங்கும் கும்பல்களால் நிறைந்திருந்தது.பெரும் பெரும் மாட்டுச் சப்பைகள் தொங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்..... அரைக்கிலோ மீட்டருக்கு ஒரு மாட்டிறைச்சிக்கடை இருக்கிறது.
                  ஆட்டிறைச்சிக்கடை மிக சொற்பமாகவே காணப்படுகிறது இந்த கேரளத்தலைநகரில்.கடல் அருகில் இருந்தாலும் மீன் கடைகள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை.ஆலப்புழாவில் இரவு நேரத்தில் கண்டது.அதற்கப்புறம் எங்கேயும் மீன் கடைகளையே காணவில்லை.
செல்லும் வழிகளில் ஆங்காங்கே கள்ளுக்கடைகள் நிறைய திறந்து இருக்கின்றன.கடமை கண்ணுக்கு  நேரே தெரிந்ததால் கள்ளினை ருசிக்க முடியாமல் பயணித்தோம்.
                          செல்லும் வழியில் ஏதோ ஒரு இடத்தில் செம கூட்டம்.அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் நம் பங்காளிகள் என்று.கேரள  ஸ்டேட் பெவரேஜ் கடை முன்புதான் இவ்ளோ கூட்டம்.ஒரு மணி நேரப்பயணத்தில் களியக்காவிளை என்கிற ஊரை அடைந்தோம்.தமிழ்நாட்டு பார்டரும், கேரள பார்டரும் இணைகிற ஊர்.ஒரே ஒரு ரோடு.ரோட்டுக்கு இந்தப்பக்கம் கேரளா அந்தப்பக்கம் தமிழ்நாடு.கேரள பக்கம் நிறைய லாட்டரி சீட்டுக்கடைகள்.அங்கு ஒரு இடத்தில் நமது டாஸ்மாக் கடையும், கேரள கடையும் எதிர் எதிர் இருக்கின்றன.நமது கடை காத்து வாங்குகிறது.ஆனால் கேரள கடையோ நம்மாட்களால் நிரம்பி வழிகிறது.
                  களியக்காவிளை தாண்டி குழித்துறை அடைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லலாம் என நினைக்கையில், தேங்காய்ப்பட்டிணம் அருகில் இருக்கிறது, மீன்பிடி துறைமுகம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என அங்கிருக்கும் நமது நண்பர் ஒருவர் சொல்லவும், அங்கு கிளம்பினோம்.
புதுக்கடை என்கிற ஊரை அடைந்து கடலை அடைந்தோம்.இப்பொழுதுதான் பணி நடந்து கொண்டிருக்கிறது,ஞாயிறு ஆதலால் அங்கு மீன் விற்பனை இல்லை.கடலில் இரு மீன்பிடி போட்கள் நின்று கொண்டிருந்தன.கடலை ஆழப்படுத்தும் ஒரு போட் வேறு நின்று கொண்டிருந்தது.ஒரு சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.



                 கடல் பார்க்க மிக அழகாய் நீலநிறத்தில் இருக்க, வானமும் அதில் செல்லும் மேகமும் ஒரு அழகை உண்டாக்கி இருந்தன.கடலின் நீர் மிகத்தெளிவாய் கிரிஸ்ட்ல் கிளியர் போல் இருக்கிறது.
                      வானமும் கடலும் சேர்ந்த இடம் மிக அழகு.இந்த தேங்காய்ப்பட்டிணம் அருகில் இன்னொரு இடமான குளச்சல் என்கிற இடத்திலும் மீன்பிடி துறைமுகம் வேலை நடைபெற்று வருகிறது.மணற்பாங்கான இடம் இப்போது கான்கிரீட் கற்களால் நிறைந்திருக்கிறது.
                   சில மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி இருந்துவிட்டு பின் அங்கிருந்து கிளம்பினோம்.மதியம் ஆகிவிட்டதால் அருகில் உள்ள ஒரு ஊரில் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.
                                 அங்கிருந்து நேராய் நாகர்கோவில் அடைந்தோம்.நாகர் கோவிலில் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினோம்.திருநெல்வேலி வந்தபோது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.அவ்வூரின் புகழ்பெற்ற இருட்டுக்கடை இன்னும் திறக்காத காரணத்தில் அங்கு எதுவும் வாங்க முடியவில்லை.அங்கிருந்து மதுரைக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் கிளம்ப ஆரம்பித்தோம்.கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடமாக கயத்தாறு அடைந்த போது மழை தூற ஆரம்பித்தது.அங்கிருந்து கோவில்பட்டி சாத்தூர், விருதுநகர் வரை பைபாஸ் ரோட்டில் மழை ஒரு காட்டு காட்டியது.
                    மிக கனத்த மழையில் வண்டியில் விரைந்தபடியே வந்தோம்.அதற்கப்புறம் மதுரை வரை மழையே இல்லை.மதுரை வந்தடைந்த பின் மிக லேசாக தூறல் போட்டது வானம்.
                           மதுரையில் பிரேமாவிலாஸ் அல்வா நன்றாக இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.அந்த நேரத்திலும் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சிலர் சுடச்சுட அல்வாவினை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
திருநெல்வேலியில் வாங்காமல் விட்ட அல்வாவினை இங்கு வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
                       இரவு நேர உணவை மதுரை நண்பருடன் முடித்துவிட்டு இரவு நேரம் கோவை வந்தடைந்தோம்.பயணம் எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்தப்பயணமும் அப்படித்தான் குறுகிய காலம் தான்.வழி நெடுக புதுப்புது மனிதர்கள், இடங்கள், உணவுகள் என அனைத்தையும் ரசித்ததால் மனமும் கொஞ்சம் இலகுவாகி நம்மை லேசாக்குகிறது.இயற்கையும் பயணமும் எப்போதும் நம்மை மகிழ்விக்க கூடியவை தான்.இந்தப் பயணமும் அப்படித்தான்.1030 கிலோமீட்டர் தொலைவினை ஒரு நாள் முழுக்க பயணம் செய்து கடந்தாலும் அலுப்பு என்பதே இல்லை.அதுதான் பயணத்தின் சிறப்பு.

முந்தைய பதிவு

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Friday, March 10, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை

                               ஒரு வேலை விஷயமாக கேரளா வரை செல்ல வேண்டியிருந்தது.காலை பத்து மணிக்கு மேல் முன்னறிவிப்பின்றி கிளம்பினோம்.கோவையில் இருந்து பாலக்காடு வரை பைபாஸ் ரோடு நன்றாக இருக்கிறது.ஒரு சில இடங்களில் இன்னமும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.பாலக்காடு தாண்டி திருச்சூர் வரை இருக்கிற மலையெல்லாம் உடைத்தும் குடைந்தும் சாலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது.இருமருங்கிலும் வறட்சியை தாங்கி மரங்கள் இருக்க, வெயிலோ பயங்கரமாய் அடித்தது.முன்பெல்லாம் கேரளா செல்லும் போது மிக பசுமையாய் இருக்கும்.பார்க்க குளிர்ச்சியாய் இருக்கும்.ஆனால் அன்றோ வெறும் வறட்சி..மழை வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக இருந்தன.
                                வடக்கன்சேரி என்கிற ஊர் கொஞ்சம் மலைப்பாதையான ஊர்.அதிகம் டிராபிக் அந்த ஏரியாவில் ஏற்படும்.குதிரைவீரன் சாமி என்கிற கோவில் செல்லும் பாதையிலேயே இருக்கிறது.வாகனங்களில் செல்பவர்கள் காசை விட்டெறிந்து விட்டு செல்வார்கள் அந்த இடத்தில்.அதை பொறுக்குவதற்கென்றே ஒரு சில பேர் அங்கு இருப்பார்கள்.

                                 அந்த கோவிலை ஒட்டி இருபுறமும் மலைகளில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும்.மிக ரம்மியமாக இருக்கும் பார்க்க.ஆனால் இன்றோ மலைகள் உடைக்கப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்து இருப்பதில் அந்த கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது.கோவிலைச்சுற்றி சாலை வேலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அரைகுறையாக நாங்களும் குதிரை வீரன் சாமியை வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
                                        திருச்சூர் தாண்டி மண்ணுத்தி என்கிற ஊரை அடைந்தவுடன் தூறல் ஆரம்பித்தது.கடும் வெயிலில் வந்த எங்களுக்கு மிக ரம்மியமாய் இருந்தது திடீர் மழை.அங்கு ஆரம்பித்த மழை கொச்சின், கொல்லம் வரை நீண்டது.கொச்சினில் மழையோடு கேரள அம்மணிகளையும் ரசிக்க வைத்தது  அங்கிருந்த சீதோஷ்ணநிலை.
                        கொச்சினில் இருந்து ஆலப்புழா வரை மழையோடு நாங்களும் பயணித்தோம்.அவ்வப்போது ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டோம்.கொல்லம் வரும்வரை ஒவ்வொரு ஊரிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
திருவிழாக்களில் கேரள ஸ்பெஷல் உடுப்பான கேரளா சாரியை கட்டிக்கொண்டு தேவதைகளாய் கைகளில் விளக்கு தீபத்தினை ஏந்திக்கொண்டு அம்மணிகள் வலம் வந்தது மனதோடு ஒரு மகிழ்வினை ஏற்படுத்தி இருந்தது.யானைகள் வேறு அம்பாரி சுமந்தபடி வரிசையாய் வந்துகொண்டிருந்தன.


கொல்லத்தில் கருநாகப்பள்ளி என்கிற ஊரில் இரவு உணவை ஆரம்பித்தோம்.அரிபத்திரி, சிக்கன் தந்தூரி, பீஃப் ஃப்ரை யுடனும் மேற்படியுடனும் இனிதாய் கழிந்தது.


                கொல்லத்தில் இரவு முழுக்க மழை பெய்து கேரளாவை குளிர வைத்தது.சனி இரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை திருவனந்தபுரம் அடைந்தோம்.

(இன்னும் கொஞ்சம் வரும்)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, January 2, 2017

கோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண்டிப்புதூர், கோவை

                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்                               ***********************************************
                      சமீபத்தில் ஒரு வேலை விசயமாக ஒண்டிப்புதூர் சென்றிருந்த போது நேரமோ மதியத்தை தொட இருக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.கூட வந்த நண்பரிடம் ஏதாவது சினேக்ஸ் மாதிரி சாப்பிடலாமான்னு கேட்க, அவரோ இங்க ஒரு கடையில் தேங்காய்ப்பால், வடை, போண்டா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என கேட்க, சரி என்று சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடைக்கு முன்னாடி வண்டியை பார்க் பண்ணியிருந்தோம்.
                              ஒண்டிப்புதூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த நெல்லை விநாயகா பலகார ஸ்டால்.ஆஸ்பெஸ்டால் கூரை வேயப்பட்டு, பழைய கால கட்டிடம் போல் இருக்கிறது.கடையினுள் பிளாஸ்டிக் டேபிள்கள் சேர்கள் போடப்பட்டு இருக்கின்றன.வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசித்துக் கொண்டிருக்க,உள்ளே தேங்காய்ப்பால் ஒரு பெரிய போவணியில் சுடுதண்ணீர் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.கடையின் உட்புறமே வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க கடைக்காரர் பலகாரங்களை சுட்டுக் கொண்டிருந்தார்.
                கடையின் ஷோகேசில் இருந்த பலகாரங்கள் வடை, போண்டா பஜ்ஜி என பல வெரைட்டிகள் பல வாடிக்கையாளர்களின் பசியை தீர்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது காலியாகிக் கொண்டிருக்கும் ஷோகேசில் சுடச்சுட சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்.
                     நண்பருக்கு கடைக்காரர் தெரிந்தபடியால்  நலம் விசாரித்து விட்டு சூடாக வடை, பஜ்ஜியை பேப்பரில் மடித்து கொடுக்க, டேபிளில் அமர்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.சிறிது நேரத்தில்  சூடாய்  ஆவி பறக்க தேங்காய்ப்பால் டேபிளுக்கு வர, எடுத்து சுவைத்ததில் தேங்காய்ப்பாலின் டேஸ்ட், நாவின் நரம்புகளை சுடச்சுட மீட்டி எடுத்தது.



        இன்னொரு மிடக்கு குடித்ததில் சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் நாக்கு வளைந்து கொடுத்தது.பாலின் இடையிடையிடையே வரும் தேங்காய்த்துருவலும், உளுந்தம்பருப்பும் இன்னும் சுவையை அதிகப்படுத்தியது.
ஒரு கடி வடை மற்றும் கொஞ்சம் தேங்காய்ப்பால் என இரண்டும் கலந்து சாப்பிட டேஸ்ட் இன்னும் அதிகமானது.சுடச்சுட தேங்காய்ப்பாலும் வடையும் சாப்பிட்டு முடிக்க வயிறும் மனதும் நிறைந்தது.

பலகாரங்களை செய்தி பேப்பரில் தான் கொடுக்கிறார்கள்.பலகாரங்களில் உள்ள எண்ணைய் பில்டர் செய்ய பயன்பட்டாலும் இது கெடுதல் என்றும், பேப்பருக்கு பதில் சில்வர் தட்டுகளை  தரும்படியும் சொல்லிவிட்டு பலகாரங்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியேறினோம்.
அந்தப்பக்கம் போனா தேங்காய்ப்பாலை ருசிக்க மறந்து விடாதீர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Friday, December 16, 2016

தகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி - ONLINE TRANSFER

பழைய ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாதவை ஆகிவிட்டதாலும், நமது அக்கவுண்டில் உள்ள பணத்தினை வங்கியில் இருந்து எடுப்பதற்க்கும் சில கட்டுப்பாடுகளை RBI விதித்து இருப்பதாலும் பணத்தினை கைகளில் கொண்டு வராமலே ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்யும் முறையினை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.ஆன்லைன் மூலம் நமது எல்லாத் தேவைகளுக்கும் பணத்தினை செலுத்தி விடலாம்.ஏடிஎம் கார்டு, கிரடிட் கார்டு இருப்பின் அதை பயன்படுத்தி கடைகளில் உள்ள ஸ்வைப்பிங் மெசின் உதவி கொண்டு பொருட்களைப் பெறலாம்.மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பர்னிச்சர், சினிமா, என எல்லாவிதமான தேவைகளையும் பெறமுடியும்.பணம் செலுத்தக்கூடிய சிறு சிறு அத்தியாவசிய இடங்களில் வங்கியில் இருந்து பெறப்படும் பணத்தினை கொண்டு செலவு செய்யலாம்.செக் எனப்படும் காசோலை மூலமும் ஒரு சில இடங்களில் கொடுத்து பரிவர்த்தனை பண்ணலாம்.
ஒருவரின் அக்கவுண்ட்க்கு நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் முறையை இப்போது பார்க்கலாம்.
ஆன்லைன் ட்ரான்ஸ்பர்  என்பது நெட் பேங்கிங் என்பதாகும்.இந்த வசதி தனியார் வங்கிகளில் தற்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.மக்கள் அதிகம் புழக்கம் உள்ள  ஸ்டேட் பேங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் பேங்க் போன்ற வங்கிகளில் ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இண்டர்நெட் மற்றும் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த வசதியினை உபயோகப்படுத்தினால் மட்டுமே இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகும்.

நான் தனியார் வங்கியினை உபயோகப்படுத்தி வருவதால் அந்த முறையினை இப்போது பார்க்கலாம்.
தனியார் வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தபின், உங்களுக்கு ஒரு கஸ்டமர் ஐடி தருவார்கள்.அந்த ஐடிக்கு ஏற்றபடி பாஸ்வேர்ட் டும் தருவார்கள்.அந்த பாஸ்வேர்டை உங்களுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியும்.வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நுழைந்து நெட்பாங்கின் ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்கள் அக்கவுண்ட்டின் கஸ்டமர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.

நுழைந்தபின் உங்கள் அக்கவுண்டின் பொதுவான மெனுக்கள் தோன்றும்.ACCOUNT SUMMARY, TRANSACT, ENQUIRE, REQUEST  போன்ற மெனுக்கள் தோன்றும்.மேலும் FUND TRANSFER, BILL PAY, CARDS மற்றும் இன்னபிற மெனுக்கள் தோன்றும்.ஒவ்வொன்றாய் கிளிக் பண்ணி தாங்களாகவே எதற்கு இந்த ஆப்சன் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

நாம் இப்பொழுது பணம் அனுப்பும் முறையினை பார்ப்போம்.FUND TRANSFER எனும் மெனுவினை கிளிக் பண்ணினால், கீழ்க்கண்ட மெனுக்கள் தோன்றும்.WITH IN BANK, INSTANT TRANSFER, NEFT, RTGS,  என இருக்கும்.

மேலும் இடது பக்கத்தில் இருக்கும் மெனுவில் REQUEST என்கிற மெனுவில் ADD BENEFICIARY என்கிற மெனுவினை கிளிக் செய்து  நமக்கு தேவையான மெனுவான NEFT ஐ கிளிக் பண்ணினால் இன்னொரு பக்கம் தோன்றும்.அதில் நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறதோ அவரின் அக்கவுண்ட் எண், பெயர், IFSC CODE, மெயில் ஐடி போன்றவற்றை எண்ட்ரி செய்யவேண்டும்.



மேற்கண்ட தகவல்களை எண்ட்ரி செய்து ஒகே செய்தவுடன், உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வரும்.அதை மீண்டும் எண்ட்ரி செய்தவுடன் உங்களின் அக்கவுண்ட்டில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படும்.வெரிஃபிகேசன் ஆன அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப முடியும்.
பின் மீண்டும் மேற்சொன்ன வழிமுறைகளை கடந்து உங்களின் அக்கவுண்டை திறந்து FUND TRANSFER இல் TRANSACT என்கிற மெனுவை கிளிக் செய்தால் ஒரு மெனு உண்டாகும்.அதில் உங்கள் அக்கவுண்ட் எண், மற்றும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பெயர் லிஸ்ட் வரும்.அதை செலக்ட் செய்து விட்டு, என்ன காரணம், எவ்வளவு தொகை, மொபைல் எண் போன்றவற்றை செலக்ட் செய்து ஓகே செய்தால் மீண்டும் ஒரு OTP பாஸ்வேர்டு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.அதை எண்டர் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.உங்கள் மொபைல் எண்ணுக்கு பணம் செலுத்திய விவரம் குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

இப்படி பல பேருக்கு சில நிமிடங்களில் பணம் அனுப்ப முடியும்.தொகைக்கு ஏற்றார்போல NEFT அல்லது RTGS ஐ தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.கிட்டத்தட்ட நூறு அக்கவுண்ட் எண்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் வங்கி கொடுத்துள்ள வசதிகளைக் கொண்டு கிரடிட் கார்டு, டெலிபோன் பில், லைப் இன்சூரன்ஸ், ரீசார்ஜ் என எல்லா சர்வீஸ்களுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.
உங்கள் அக்கவுண்ட்டின் ஸ்டேட்மெண்ட், செக் புக் போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.வங்கி கொடுத்துள்ள அத்தனை வசதிகளையும் ஆன்லைன் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது வங்கிகள் மொபைல் அப்ளிகேசன் தருகின்றன.ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இந்த வசதியை தரவிறக்கம் செய்துகொண்டு, மொபைல் மூலமும் பணத்தினை அனுப்பலாம்.
இந்த வசதிக்கு கண்டிப்பாக இண்டர்னெட் வசதி தேவை.இப்போது அனைத்து இடங்களிலும் பிராட்பேண்ட் சேவை, வை பை போன்றவை கிடைக்கின்றன.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதால் நமக்கு நேரம் மிச்சம் ஆகிறது.அதுமட்டுமல்ல பணமும் பாதுகாப்பாய் சென்று சேர்கிறது.உங்களின் ரகசிய பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.அதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புண்டு.

புதிய டிஜிட்டல் இந்தியாவிற்காக என்னால் ஆன சிறு முயற்சி இந்த பதிவு.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...