Thursday, March 8, 2012

கிராமத்து தொழிற்சாலை.- செங்கல்சூளை

கிராமத்து தொழிற்சாலை.
கடந்த சனி ஞாயிறு அன்னிக்கு ஒரு விசேசம் காரணமாக எங்க ஊருக்கு போனேன் .அப்போ அங்க இருக்கிற செங்கல் தயாரிக்கிற  சூளையை பார்த்தவுடன் எனது சிறு வயது நினைவுகள் உருண்டோடியன.







.9 ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் லீவ் விடும் போது இங்க இருக்கிற சூளைக்கு வேலைக்கு போவோம்.பத்து ரூபாய் சம்பளம்...டைம் வந்து காலை 7  மணி முதல் 4  மணி வரை..இடையில் ஒருமணி நேரம் சாப்பாடு இடைவேளை. ஐந்து ஐந்து செங்கற்களாக கொண்டு செல்லனும்.சும்மாடு சுத்தி தலையில வச்சு அதுல அந்த ஐந்து கல்லை தூக்கி வைப்பாங்க...இப்படி யாக கல்லு அறுக்கிற இடத்திலிருந்து சூளைக்கு கொண்டு வரணும்.ஒவ்வொரு இடத்தில சூளை பக்கத்திலேயே இருக்கும்...ஒரு சில இடத்தில தூரமா இருக்கும்..இப்படி யாக வேலை செய்வேன்.மேலும் என்கூட படிக்கிற மத்தவங்க..அப்புறம் பொண்ணுங்க எல்லாரும் வேலைக்கு வருவாங்க...( அப்போலாம் ஏதுங்க. இந்த குழந்தை தொழில் ஒழிப்பு ).நல்லா ஜாலி யா இருக்கும் ..அந்த சனிக்கிழமை அன்னிக்கு காலையில பணம் தருவாங்க..ஐந்து நாள் சம்பளம் ஆக 50  கிடைக்கும்..இதை வாங்கினவுடன் கிடைக்கும் சந்தோசம் இருக்குமே...அதை வார்த்தையில் விவரிக்க முடியாது....அடுத்த நாள் காலையில் கரூர் கிளம்பி அமுதா ஹோட்டல் போய் புரோட்டா சாப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு வருவோம்..வீட்டுக்கு வரும்போது அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க...ஏன்னா...சம்பாதிச்சு செலவு பண்றான் அப்புறம் அவங்ககிட்ட காசு வாங்கிட்டு போகல..அதனால்....இப்படி ஒவ்வொரு வகுப்பு லீவிலும் வேலைக்கு போய் ஜாலியா இருப்போம்....



இப்போ இந்த சூளை அதிகமா எங்க ஊர் பக்கம் வர ஆரம்பிடிச்சு.காரணம் என்னன்னா....பெருகி வரும் கான்க்ரீட் காடுகளால் செங்கல்களின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது மேலும் மிக முக்கியமான காரணம் ....விவசாயம்.....விவசாயம் பண்ண ஆள் இல்லாததால் காட்டை ஏன் தரிசாய் போடணும் என்று சூளைக்கு பணம் வாங்கி கொண்டு விட்டு விடுகின்றனர்.இதனால் அங்கு விளைச்சல் இல்லாமல் விவசாயமே பாதிக்க படுகிறது.அப்புறம் வயல் வெளிகள் அனைத்தும்  நல்ல தரமான வண்டல் மண்ணை இழந்து விடுகிறது..பின்னர் அந்த இடத்தில மீண்டும் விவசாயம் பண்ணும் போது நல்ல சத்துக்கள் இல்லாமல் செடிகள் பயிர்கள் வளர்கின்றன .மேலும் பள்ளம் ஏற்பட்டு வடிகால் வசதி இல்லாமல் போய் விடுகிறது.இதெல்லாம் தெரிஞ்சும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நிறைய சூளைகள் பெருகி கொண்டிருக்கின்றன.

அடடா....என்னமோ எழுத வந்து ஏதோ விழிப்புணர்வு பதிவு மாதிரி ஆயிடிச்சே...( நாமலாம் மெசேஜ் சொன்னா விளங்கிடும்..)

சிறு வயது ஞாபகங்கள் அனைத்தும் எப்போதும் இனிமை யானவை..சுகமானவை...


அப்புறம்...இந்த மண்ணை எடுத்து கல்லு தயாரிக்கிற கட்டையில் போட்டு அதை குத்தி மட்டம் படுத்தி தண்ணீர் தெளித்து வழித்து அலுங்காமல் அந்த கட்டையை எடுக்கும்போது கல்லு அழகா வந்திருக்கும்...ஆனா நம்ம எப்படி இருப்போம்...வெய்யிலில் காஞ்சு மேலெல்லாம் களிமண் சேறு அப்பி , டவுசர்லாம் மண்ணாகி பார்க்கவே கேவலமா இருப்போம்.இதுக்காக தனியே வீட்டுல அடி வாங்கினது தனிக்கதை ...இப்பவும் நினைத்தால் இனிக்கிற நிகழ்வுகள் நம் சிறு வயது நிகழ்வுகள் 


நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. ஃபோட்டோக்களை வைத்தே நல்ல பதிவை உருவாக்கிவிடுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....